Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Kshethrapalapuram Bairavar Temple - 1

$
0
0
சாந்திப்பிரியா 
   
-I-

 ஆலயத்து சன்னதியில் 
ஸ்ரீ ஆனந்த கால பைரவர் 

ஷேத்ரபாலபுரம் என்பது மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்துக்கு இடையில் உள்ள குற்றாலம் தாலுக்காவில் உள்ளது.   இதை கிராம காவல் தெய்வம்  என்றும் சிலர்  கூறி உள்ளார்கள். ஆனால் இந்த ஆலயத்திற்கு தனி வரலாறு உள்ளது.  சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் உள்ள பைரவர் சிலைகளில் அவருடன் நாயும் இருப்பதைக் காணலாம். அது மட்டும் அல்ல பைரவர் சாந்தமான முகத்தைக் கொண்டு  அங்கெல்லாம் காட்சி தருவது இல்லை. ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள பைரவரோ சிரித்த முகத்துடன் தன்னுடைய வாகனமான நாயும் இல்லாமல், சூலத்துடன்  காட்சி தருவதினால் இவரை ஆனந்த கால பைரவர் என்றே அழைக்கிறார்கள். இந்த ஆலயத்தில் பைரவரே பிரதான தெய்வம். அவருக்கு மட்டுமே அனைத்து முக்கிய பூஜைகளும் நடைபெறுகின்றன. முருகன், பிள்ளையார், செல்லி அம்மன்  மற்றும் ஐயப்பனுக்கு சிறு சன்னதிகள்  இருந்தாலும் அவர்களுக்கு பைரவருக்கு அடுத்த முக்கியத்துவம்தான் தரப்படுகிறது.  பைரவருக்கு அடுத்து விநாயகர் முக்கியத்துவம் பெற்றுள்ளார். மற்றவர்கள் அதன் பிறகே முக்கியத்துவம் பெற்று உள்ளார்கள்.

ஷேத்ரபாலபுரம் மிகச் சிறிய கிராமப் பகுதியாகும். ஆனால் இங்குள்ள கால பைரவர் ஆலயத்தினால் இந்த கிராமம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு உள்ளது. ஆலயம் மிகப் பெரியது அல்ல என்றாலும் அதிக சக்தி வாய்ந்த ஆலயம் ஆகும். அந்த கால சிறு கட்டிடத்தில் உள்ளது. நுழை வாயிலில் உள்ளூர்  பக்தர்கள் சிலர் நன்கொடை தந்து மேல் கூரைப் போட்ட தளம் அமைத்து உள்ளார்கள்.

காசியில் உள்ள கால பைரவருக்கு மேலானவர் இங்குள்ள கால பைரவர் என்றே பண்டிதர்களும் கூறுகிறார்கள். மயிலாடுதுறை அல்லது கும்பகோணத்தில் இருந்து பேருந்தில் சென்று ஷேத்திரபாலபுரத்து பேருந்து நிலையத்தில் இறங்கினால் அடுத்த பத்து அல்லது பதினைந்து மீட்டர் தொலைவில் உள்ள சிறு சாலை அந்த ஆலயத்துக்கு செல்லும் வழியைக் காட்டும்.

சிறிய ஆலயம்தான் . ஆனால் கீர்த்தி மிக்கது.   ஆலய நுழை வாயில் மற்றும் மேல் கூரையில்  எழுதப்பட்டு உள்ள வாசகம்

எனக்குத் தெரிந்த வரையில் ஷேத்ரபாலபுரத்தைத் தவிர காலபைரவருக்கு என தனி ஆலயம் வேறு எங்குமே கிடையாது. பல ஆலயங்களிலும் பைரவர் தனி சன்னதியில் காட்சி தருவார். ஆனால் அவருடைய வாகனமான நாய் இல்லாமல், மூலவராக பைரவர் மட்டுமே உள்ள, மூன்று  கால பூஜைகளை செய்தவாறு உள்ள தனி  ஆலயம் காசியில் கூடக் கிடையாது.  காசியில் கூட மூன்று காலமும் கால பைரவருக்கு அர்ச்சனை, பூஜைகள் செய்து வழிபடுவதாகத் தெரியவில்லை. ஷேத்ரபாலபுரத்தில்  கால பைரவருக்கு என ஏற்படுத்தப்பட்ட இந்த  தனி ஆலயம்  எழுந்தக் காலம் தெரியவில்லை. ஆனால் மிக மிகப் பழைமையான ஆலயம் என்பது மட்டும் புரிந்தது.  அந்த ஆலயத்துக்குள் நுழைந்ததுமே நம்மை அறியாமல் ஒரு சிலிர்ப்பும் ஏற்படுகிறது.

பைரவரின் தோற்றத்தைப் பற்றிக் கூறப்படும் கதைகளில் இருந்து விலகி வித்தியாசமான ஸ்தலபுராணத்துடன் உள்ளது இந்த ஆலயம். இந்த ஆலயத்தின் பின்னணிக் கதையை இப்படியாகக் கூறுகிறார்கள். இந்தக் கதை பைரவரின் பிறப்புப் பற்றியக் கதையில் பெரும் மாறுதலானக் கதையாக உள்ளது. அதன் கதை இது:-

''ஒருமுறை பிரும்மா பூலோகத்துக்கு வந்திருந்தார். அப்போது  ஐந்து தலையுடன் இருந்த  பிரும்மா பூலோகத்துக்கு வந்து  செருக்குக் கொண்டு அனைத்து கடவுட்களையும் விட தானே சக்தி வாய்ந்தவர் என்று அனைவரிடமும் கூறிக் கொண்டு திரிந்தார்.  விஷ்ணுவைப் பழித்தார். சிவபெருமானையும் பழித்தார். இப்படி அவர் இருக்கையில் ஒருநாள் பூமிக்கு சிவபெருமானும் தனது மனைவி பார்வதியுடன்  வந்திருந்தார். அவர்களுடன் ருத்திரரும் துணைக்கு வந்திருந்தார். அவர்கள் மூவரையும் கண்ட பிரும்மா தன் நிலையை மறந்து தனது ஐந்தாவது தலையின் மூலம் சிவபெருமானை நிந்திக்கத் துவங்க, கோபமுற்ற சிவபெருமான் தன்னை நிந்தித்துக் கொண்டு இருந்த பிரும்மாவின் அந்த குறிப்பிட்ட தலையைக் கிள்ளி எறியுமாறு ருத்திரனுக்கு ஆணையிட்டார். உண்மையில் ருத்திரரும் சிவபெருமானின் ஒரு துணை கடவுளேயாவார்.

சிவபெருமானின் ஆணையை ஏற்றுக் கொண்ட ருத்திரரும் உடனடியாக தன்னை பைரவராக உருமாற்றிக் கொண்டு பிரும்மாவின் ஐந்தாவது தலையை தனது விரல் நகத்தினால்  கிள்ளி எறிந்தார்.  தனது தலையை இழந்த  பிரும்மாவும் தன தவறை உணர்ந்தார்.  தன்னை விட்டு விடுமாறு பைரவரிடம் வேண்டிக் கொண்டு அவரை துதிக்கத் துவங்கினார். பிரும்மாவை உயிருடன் விட்டு விட்ட பைரவர் அங்கிருந்து கிளம்பி சிவபெருமானுடன் சென்றார். ஆனால் பிரும்மாவின் தலையைக் கிள்ளி எறிந்ததினால்  பைரவருக்கு பிரும்மஹத்தி தோஷம் தொற்றிக் கொண்டது. அவர் கையில் வைத்திருந்த சூலமும் உடனடியாக மறைந்து போனது. பிரும்மாவின் ஐந்தாவது தலையும் ஒரு கபாலமாக உருமாறி அவர் கையில் ஒட்டிக் கொண்டது.

ரத்த பிட்ஷை எடுத்த ஆனந்த கால பைரவர் 

ஆகவே அந்த சாப விமோசனம் விலக வேண்டும், சூலமும் மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால்  உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து ரத்த பிட்ஷை எடுத்து   கையில் உள்ள கமண்டலம் நிறையும் அளவிற்கு  ரத்தத்தை நிறப்பிக் கொண்டால் மட்டுமே அந்த சாபம் விலகும் என்று சிவபெருமான் அவருக்கு சாப விமோசனத்துக்கான வழியைக் கூறினார்.

ஆகவே பைரவரும் ஒரு கையில் கபாலம், மறு கையில் கமண்டலம்  என இரண்டையும் ஏந்திக் கொண்டு பன்னிரண்டு ஆண்டுகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு ரத்த பிட்ஷை எடுத்து வரலானார். பல்வேறு இடங்களுக்கும் சென்று ரத்த பிட்ஷை எடுத்து வந்தாலும் கமண்டலத்தில் ரத்தம் நிறையவில்லை என்பதினால் வருத்தமுற்று விஷ்ணுவிடம் சென்றார்.

விஷ்ணுவும் அவரிடம் தான் இந்த பூலோகத்தில் பத்து அவதாரங்கள் எடுக்க உள்ளதாகவும், அப்போது எதிரிகளைக் கொன்று  அவர்களது  ரத்தத்தை அவருக்கு அளித்து கமண்டலத்தை நிரப்புவதாக உறுதிக்  கூறினார். அதன் பின்  விஷ்ணுவானவர் பத்து அவதாரங்களை எடுத்தப் பின் அவர் தங்கி இருந்த இடத்துக்கு பைரவர் சென்றார்.   அங்கு விஷ்ணு அவருக்கு அளித்த ரத்த பிட்ஷையினால் கமண்டலம் நிறைய, பைரவரின் பிரும்மஹத்தி தோஷம் விலகியது.  பைரவர் எந்த இடத்தில் நின்று கொண்டு  சாப விமோசனத்தைப்  பெற்றாரோ அந்த இடமே ஷேத்திரபாலபுரம்  என ஆகியது.

தோஷம் விலகிய பைரவரும் அங்கிருந்த ஒரு தாடகத்தில் குளித்தவுடன் அந்த தாடகத்தில் மறைந்திருந்த சூலமும் அவருடன் வந்து சேர்ந்து கொண்டது. அதனால்தான் அந்த தாடகத்தின் பெயரும் சூலதீர்த்தம் என்றாகியது.  தாடகத்தில் குளித்தப் பின் பைரவர் வெளியில் வந்ததும் அங்கு பால உருவில் விநாயகர் தோன்றினார். ஆகவேதான் அந்த ஷேத்திரத்திரமும் அவரது பாலகனைப் போலவே வினைகளை தீர்க்கும் இடமாக அமையும் என்று பைரவர் விநாயகருக்கு அருள் புரிந்து அந்த ஷேத்திரத்தின் பெயரை அவருடன் இணைத்து ஷேத்திரபாலபுரம் என அமைத்தார்''.  இதுதான் இந்த ஆலயத்தின் தல புராணம் ஆகும்.

இந்த ஆலயத்தை சுற்றி சூல  தீர்த்தம், காவேரி தீர்த்தம், கணேஷ தீர்த்தம், சக்கர தீர்த்தம் மற்றும் ஸ்கந்த தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. ஆலயத்தின் வடக்குப் புறத்தில் உள்ள காவேரி தீர்த்தத்தை சங்கு முக தீர்த்தம் என்று அழைக்கிறார்கள். அதற்குக் காரணம் அது சங்கு வடிவில் அமைந்து இருந்ததே.  அதில் குளிப்பது காசியில் குளித்தப் புண்ணியத்தை தரும் என்பது இந்த ஆலய தல வரலாறு. ஆலயத்தின் இடதுபுறத்தில் உள்ளது சூல தீர்த்தம் ஆகும்.

காசிக்குச் சென்றுவிட்டு திரும்பிய கால பைரவரை இந்த தலத்தில் வந்து பிரும்மா, இந்திரன், நவகிரகங்கள் போன்றவர்கள் பூஜித்து துதித்ததான கதை  உள்ளது. நவக்கிரகங்களின் சக்தி வாய்ந்த ஆலயங்கள் இந்த பூமியை சுற்றி (கும்பகோணம்) அமைந்துள்ளதின் ஒரு காரணமும் இதுதான் என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஆரம்ப காலத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த கிராமத்தில் இருந்த இந்த ஆலயத்தின் மகிமை பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் சனாதன முனிவர்கள் போன்ற பெருமை வாய்ந்த ரிஷி முனிவர்கள்  இங்கு வந்து பைரவரை வழிபட்ட காலத்துக்குப் பிறகே இந்த ஆலயத்தின் பின்னணி தெரிய வந்ததாக புராணக் கதை கிராமத்தில் கூறப்படுகிறது. அது மட்டும் அல்ல பஞ்சபாண்டவர்களும் இங்கு வந்து பைரவரை பூஜித்து உள்ளார்கள்.
.........தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>