Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all 460 articles
Browse latest View live

Neelamadhava-Puri Jagannathar - 3

$
0
0
3
அடுத்த கணம் அங்கிருந்த நாரத முனிவரும் மறைந்து விட்டார். அந்த கண்ட இந்ரதைய்யுமாவும் சற்றே அதிர்ந்து போனாலும் தனக்கு அசீரி மூலம் கொடுக்கப்பட்ட கட்டளையின்படியே ஒரு ஆலயம் அமைத்து அதை சக்தியூட்ட  பிரும்மாவை வேண்டி அழைத்தார். ஆனால் பிரும்மாவோ அந்த ஸ்ரீ ஷேத்திரம் விஷ்ணு பகவான் தானே அவதரிக்கும் இடம் என்பதினால் தன்னால் அந்த காரியத்தை அங்கு செய்ய இயலாது என்றும், ஆலயம் கட்டி முடிக்கப்பட்டப் பின்னரே தான் வந்து ஆலயத்தின் மீது  ஒரு ஆலயக் கொடியை ஸ்தாபிப்பதாகவும், தூரத்தில் இருந்தே அதை எவர் தரிசித்தாலும், அவர்களுக்கு மோட்ஷம் கிட்டும் என்றும் கூறி விட்டார். ஆகவே ஆலயம் அமைக்க பிரும்மா வருவார் என நாரத முனிவர் கூறியது வெறும் பேச்சோ எனக் குழம்பிய மன்னன் தான் எப்போது ஆலயம் அமைப்பது,  அதில் எப்போது விஷ்ணு பகவான் வந்து அமர்வார், அவர் உருவை வடிவமைக்க தேவையான மரத்தை எங்கு போய் தேடுவது என மேலும் மேலும் குழம்பியவாறு மனம் உடைந்து போன இந்ரதைய்யுமாவும் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். அன்று இரவே விஷ்ணு பகவானும் மீண்டும் இந்ரதைய்யுமாவின் கனவில் தோன்றி அந்த ஊரில் உள்ள நதிக்கு சென்றால் அங்கு தன்னை வடிவமைக்க தேவையான மரத்தின் அடிப்பகுதியாக தான் மிதந்து வருவேன் என்றும், அந்த மரத்தின் அடிப் பகுதியே புனிதமான மரம் என்பதை உணர்த்தும் வகையில் அதில் சங்கு, சக்கரம், தாமரை மற்றும் கதை போன்ற உருவங்கள் ஏதாவது  இருக்கும் என்றும் கூறினார்.

மறுநாள் காலையில் எழுந்து நீராடிய பின் நதிக்கு சென்ற மன்னனும் கடலில்  எதோ ஒரு மரத்தின் ஒரு அடிப்பாகம் மிதந்து கொண்டு வந்ததைக் கண்டார். அந்த மரத்தின் அடிப்பாகமும் கரையில் வந்து ஒதுங்கி நின்றது. அது வேப்ப மரமாக இருந்தது. அந்த மரத்தின் அடிப்பாகத்தில் கனவில் விஷ்ணு பகவான் கூறிய அதே சின்னங்களும் காணப்பட்டன. ஆஹா...இதுவே இந்த ஆலயத்தில் நீல மாதவரின் உருவை வடிவமைத்து வைக்க வேண்டிய சிலைக்கான மரம் என்று மகிழ்ந்து போன மன்னன் அந்த மர அடிப்பாகத்தை எடுத்து வருமாறு தனது சேவகர்களுக்கு உத்தரவு இட்டார். ஆனால் எத்தனை பேர் வந்து  தூக்கினாலும், அதை தூக்க முடியவில்லை. என்ன செய்தும் அதை அசைக்கக் கூட முடியவில்லை.

ஆகவே என்ன செய்து அந்த மரத்தை எப்படி எடுத்துப் போகலாம் என மன்னன் துயரத்துடன் அங்கு காவலுக்கு ஆட்களை வைத்தப் பின் அரண்மனைக்கு திரும்பினார். அன்று இரவு மீண்டும் ஒரு கனவு. அதில் தோன்றிய நாரத முனிவரைக் கண்ட மன்னன் கனவிலேயே அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தப் பின்னர் தனக்கு ஏற்பட்டு வரும் சோதனைகளைக் கூறி அவற்றை எப்படி நிவர்த்திப்பது என்று கேட்டு  கதறி அழுதார். அதைக் கேட்ட நாரத முனிவர் அவரை தேற்றிய பின்னர் ஒரு மாட்டு வண்டியைக் கொண்டு வந்து அதில் அந்த மரக்கட்டையை ஏற்றிக் கொண்டு போய் தச்சர்களைக் கொண்டு நீல மாதவரின் வடிவத்தை அந்தக் கட்டையில் செதுக்குமாறும், அதை செய்து முடித்தப் பின் அதை ஆலயம் கட்டப்பட உள்ள இடத்தின் அருகில் எடுத்துச் சென்று பிரும்மாவை அழைத்தால் அவர் வந்து ஆலய  நிர்மாணிப்பை பார்த்துக் கொள்வார் என்று கூறி விட்டு மறைய கனவும் கலைந்தது. காலையில் எழுந்த மன்னனும் உடனடியாக ஒரு மாடு பூட்டிய வண்டியை எடுத்து வரச் சொல்லி அந்த மரக்கட்டையின் அருகில் அதை நிறுத்தி வைக்க முதலில் அந்த மரத்தை தூக்க முடியாமல் தவித்தவர்கள் அதை பஞ்சு மூட்டையை தூக்குவது போல தூக்கி வண்டியில் வைத்து அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்கள்.

இன்னொரு பக்கத்தில் ஆயிரம் குதிரைகளைக் கொண்டு யாகத்தையும் நடத்தி முடித்த மன்னன்  பல்லாயிரக்கணக்கான ஆட்களை ஈடுபடுத்தி  சில நாட்களிலேயே  ஆலயத்தையும் கட்டி  முடித்து விட்டார். அதே சமயத்தில் அந்த  மரத்தின்  அடிப்பகுதியை அரண்மனைக்கு எடுத்துச் சென்று அவற்றில் உருவங்களை வடிவமைக்கத் துவங்கினார்கள். ஆனால்  எத்தனை தச்சர்கள் முயன்றும் அந்த மரத்தில் சிறிய  கீரலை கூட ஏற்படுத்த முடியவில்லை.  ஆகவே அன்று இரவு வருத்தமுற்று உறங்கிய  மன்னனின் கனவில் மீண்டும் நாரத முனிவர் வந்து மறுநாள் காலையில் தேவலோகத்தில் இருந்து விஸ்வகர்மாவின் தச்சர்கள் வந்து உருவங்களை வடிவமைத்துக் கொடுப்பார்கள் என்று கூறி விட்டு மறைந்தார். காலை பொழுதும் விடிந்தது. தேவலோகத்தில் இருந்து விஸ்வகர்மாவின் ஆட்கள் வந்து அந்த அரண்மனையில் இருந்து மரத்தை எடுத்துப் போய் ஆலய சன்னதியில் வைத்து விட்டு மன்னனிடம் கூறினார்கள் 'மன்னா, எங்களுக்கு விஸ்வகர்மா கட்டளை இட்டு உள்ளபடி சன்னதியின் உள்ளே சென்று, கதவுகளை மூடிக்கொண்டு நாங்கள் விரைவில் ஜகன்னாதரின் உருவையும், அவருடன் சுபத்ரா, பாலபத்ரா  மற்றும் சுதர்சனத்தின் உருவங்களையும் இந்த மரத்தின்   கட்டையில் செய்வோம்.

ஆனால் நாங்கள் உருவங்களை செதுக்கி முடிக்கும்வரை எத்தனை நாட்கள் ஆனாலும் நாங்கள் மூடி வைக்கும்  கதவை யாரும் திறக்கக் கூடாது.  அப்படி கதவுகளை திறந்து நாங்கள் வடிவமைக்கும் சிலையை பார்க்க முயன்றால்  அத்தனையும் வீணாகி விடும்'என்று கூறி விட்டு மரத்தை சன்னதிக்குள் எடுத்துச் சென்று கதவுகளை மூடிக்கொண்டார்கள். சில நாட்கள் தொடர்ந்து அவர்கள் மரத்தில் வேலைகளை செய்து கொண்டிருந்த சப்தம்  கேட்டது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அந்த அறைக்குள் இருந்து சப்தம் வருவது நின்று விட்டது. விஸ்வகர்மாவின் ஆட்கள் வெளியிலும் வரவில்லை. வேலையும் தொடர்வதாக தெரியவில்லை என்பதினால் உள்ளே என்னதான் நடக்கிறது,  ஆட்கள் இருக்கிறார்களா இல்லை போய் விட்டார்களா எனப் பார்க்கும் ஆவலில் மன்னனும் அவரது பரிவாரங்களும்  சன்னதியை மூடி இருந்த கதவை பலவந்தமாக திறக்க அங்கிருந்த அனைவரும் மறைந்து போனார்கள்.
சன்னதிக்குள் இருந்த நான்கு தெய்வங்களின் சிலைகளும் இடுப்புப் பகுதிவரை மட்டுமே செதுக்கப்பட்டு இருந்தது.  அதே சமயத்தின் மன்னன் முன் காட்சி அளித்த நாரதரும் அவர்கள் அவசரப்பட்டு விட்டதினால், உருவங்களை முழுமையாக நிறைவு செய்வதற்கு முன்பாகவே அவற்றை வடிவமைத்த விஸ்வகர்மாவின் ஆட்கள் திரும்பிச் சென்று விட்டார்கள். இனி அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பதினால் இடுப்பு பகுதிவரை மட்டுமே செய்யப்பட்டு இருந்த சிலைகளை ஆலயத்தில் வைத்து அவற்றை பிரதிஷ்டை செய்ய தேவலோகம் சென்று பிரும்மாவை அழைத்து வருமாறு கூறினார். மன்னனும் தாம் செய்த தவறை எண்ணி வருந்தினாலும், அதுவும் நீல மாதவரின் லீலையே என்பதாக எண்ணிக் கொண்டு உடனடியாகக் கிளம்பி பிரும்மாவை அழைக்க தேவலோகத்துக்கு சென்றார். இதனால்தான் இந்த ஆலயத்தில் உள்ள மூலவர்களின் சிலைகள்  முழுமையான உருவைக் கொண்டிராமல் பாதி உருவைக் கொண்ட சிலைகளாக  உள்ளன.
........தொடரும்

Neelamadhava-Puri Jagannathar - 4

$
0
0
4
தவறோ நடந்து விட்டது. ஆனால் என்ன்ன செய்வது ? அதுவும் நீல மாதவரின் சித்தமே என எண்ணியவாறு சிலைகளை ஆலயத்தில் வைத்து அவற்றை பிரதிஷ்டை செய்ய தேவலோகம் சென்று பிரும்மாவை அழைத்து வருமாறு நாரத முனிவர் கூறியதினால் இந்ரதைய்யுமா பிரும்மலோகத்துக்கு கிளம்பிச் சென்றார். இந்ரதைய்யுமா பிரும்மலோகத்துக்கு சென்று இருந்தபோது கண்களை மூடியபடி பிரும்மா தவத்தில் அமர்ந்து இருந்தார். அவர் கண் முழிப்பதற்கு பல நூற்றாண்டு காலம் பிடித்ததினால் இந்ரதைய்யுமாவினால் திரும்பி வரமுடியவில்லை. பிரும்மலோகத்திலேயே காத்திருக்க வேண்டியதாயிற்று.  ஆகவே பல நூற்றாண்டுகள் கழிந்து விட்டதினால் அவர் பூமியிலே கட்டி இருந்த ஆலயம் திறக்கப்படாமல் இருக்க அது  அப்படியே  பூமியிலே மெல்ல மெல்ல புதைந்து போகத் துவங்கியது.

இந்ரதைய்யுமா தேவ லோகத்துக்கும் சென்று இருந்த அதே நேரத்தில் அவர் ஆண்டு வந்திருந்த ராஜ்யமும் மன்னன் இல்லாத ராஜ்யமாகி விட, ஆண்டுகளும் பலநூற்றாண்டுகளைக் கடந்து விட, அந்த ராஜ்யத்தை இந்ரதைய்யுமாவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டு மன்னர்கள் ஆண்டார்கள். அவர்களுக்கு நடந்தவை எதுவுமே தெரியாது. அதில் இரண்டாமதாக ஆட்சி செய்த கலாமாதவா எனும் மன்னன் ஆட்சியில் புதைந்து இருந்த அந்த ஆலயம் கண்டு பிடிக்கப்பட்டது.

இத்தனை அற்புதமான ஆலயம் புதைந்து கிடக்கிறதே என்று எண்ணிய கலாமாதவா அதை வெளியே எடுக்க வைத்து சிதலமடைந்த பகுதிகளை மீண்டும் பழுது பார்த்து ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்ய  இருந்த நேரத்தில் இந்ரதைய்யுமாவும் தேவலோகத்தில் இருந்து பிரும்மாவுடன் அங்கு வந்து சேர்ந்தார். நீல மாதவர் கூறி இருந்ததைப் போல அந்த ஆலயத்தில் மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து ஆலயத்தை திறந்து வைக்க பிரும்மாவை இந்ரதைய்யுமா அழைத்து வந்ததைக் கண்ட கலாமாதவா, முதலில் அவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தம் ராஜ்யத்தின் மீது படையெடுத்து வந்துள்ளவர்கள் அவர்கள் என எண்ணிக் கொண்டு அவர்களுடன் போரிடத் தயார் ஆனார். ஆனால் மீண்டும் அங்கு வந்த நாரத முனிவர் மூலம் நடந்தவை அனைத்தையும் அறிந்து கொண்டவர், தனது தவறுக்கு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டப் பின் அந்த ஆலயத்தை இந்ரதைய்யுமாவின் முன்னிலையில் பிரும்மாவே திறந்து வைக்கட்டும் என வேண்டிக் கொண்டார். வேப்ப மரத்தில் விஸ்வகர்மாவின் ஆட்களினால் வடிவமைக்கப்பட்டிருந்த ஜகன்னாதர், சுபத்ரை மற்றும் பாலபத்திரர் மூவரையும் பிரும்மாவே சன்னதியில் பிரதிஷ்டை செய்து, ஆலயத்திலும் ஹோமங்கள் போன்றவற்றை முறைப்படி செய்து அந்த ஆலயத்தை உலகுக்கு அர்பணித்தப் பின்னர் தன்னுடன் இந்ரதைய்யுமாவையும் அழைத்துக் கொண்டு தேவலோகத்துக்குச் திரும்பிச் சென்று விட்டார் . இப்படியாகத்தான்  இந்த பூமியிலே பூரி மானிலத்தில் பிரும்மாவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜகன்னாதர் ஆலயமும் எழும்பியது.  இது நடந்தது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால்.

பிரும்மா தேவலோகத்துக்கு செல்லும் முன்னால், வரும் காலத்தில் அந்த ஆலயத்தில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதையும், எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை சன்னதியில் தான் நிறுவிய மூலவரை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அப்படி மாற்றி அமைக்கப்படும் மூர்த்தியில் தான் முதலில் ஸ்தாபித்த மூர்த்தியின் சக்திகளை எப்படி உட் புகுத்தி சக்தியூட்ட வேண்டும் என்ற அனைத்தையும்  கலாமாதவா மூலம் உலகிற்கு தெரியப்படுத்தினார். மேலும் அதற்கான வழிமுறைகளை தானே அங்கு வகுத்து விட்டுப் போனார். அந்த வழிமுறையே இன்றும் பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் தொடர்கிறது.

 அந்த ஐதீகத்தின் விளைவாகவேதான் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவர்களுடைய மூர்த்திகளை மாற்றி அமைக்கும் நபகலேபரா எனும் திருவிழா 12 முதல் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.  இந்த இருபதாவது நூற்றாண்டில் மட்டும் ஆறுமுறை அதாவது 1912, 1931, 1950, 1969, 1977 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் இந்த திருவிழா நடைபெற்று உள்ளது.  அதற்கு முன் 1575 ஆம் ஆண்டுமுதல் 1996 ஆம் ஆண்டுவரை இந்த வைபவம் 23 முறை நடைபெற்று உள்ளது என்பதை ஏற்கனவே கூறி உள்ளேன். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அதாவது 2015 ஆம் ஆண்டில் இந்த திருவிழா நடைபெறத் துவங்கி உள்ளது.

புதிய சிலைகள் வடிவமைக்கப்பட்டப் பின்னர் மூலவரின் சிலையில் அமர்ந்திருக்கும் தெய்வங்கள் வெளியேறி புதிய சிலையில் சென்று புகுந்து கொள்வதினால் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்திருந்த பழைய சிலைகள் சக்தியற்ற தெய்வங்களாகி விடுகின்றன. அதாவது ஆத்மாவே இல்லாத உடல் போல அவை ஆகி விடுகின்றன  என்பதினால் அந்த சிலைகளின் உடலானது மரணம் அடைந்து விட்டதாகக் கருதி  அவற்றை ஆலயத்தின் ஒரு கொடியிலேயே பூமியிலே புதைத்து விடுவார்களாம். இந்த புனித விழாவின் பின்னணிக் கதைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் அற்புதமானவை.

நபகலேபரா திருவிழா :-

65 நாட்கள் தொடரும் இந்த  நபகலேபரா எனும் ஆலயத் திருவிழாவில்  பூரி ஜகன்னாதர், பாலபத்ரா, சுபத்ரா என்ற மூன்று தெய்வங்களின் சிலைகளும் புதிய சிலைகளினால் மாற்றி அமைக்கப்படும் திருவிழாவினை தைத்தியாபதி எனும் பிரிவினரே செய்கிறார்கள். அந்த உரிமை அவர்களுக்கு மட்டுமே உள்ளது.  பஞ்சாங்கத்தைப் பார்த்துவிட்டு இன்ன வருடத்தில் ஆஷாத மாதம் இருமுறை வருகிறது என்பதைக் கணக்கிட்டுக் கொண்டு அந்தந்த  வருடத்தில் சிலைகளை மாற்றி அமைக்கும் காலம் வந்து விட்டதாக கருதி  பண்டிகையை  துவக்குவார்கள்.  அதில் முதல் பணியே  பழைய சிலைகளை எடுத்து விட்டு புதிய சிலைகளை அங்கு வைக்கும் முன்னர் புதிய சிலைகளை வடிவமைப்பதற்கான மரங்களை ஆலயக் குழுவினர் தேடி எடுத்து வருவதுதான். அந்த சிலைகளை அனைத்து மரங்களின் கட்டையினாலும் செய்ய இயலாது. அந்த சிலைகள் வடிவமைக்க குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட வேப்ப மரக் கட்டையிலேயே வடிவமைக்க வேண்டும். ஆகவேதான் அதை வேப்ப மரம் என்று அழைக்காமல் அந்த புனித வேப்ப மரத்தை   'தாரு பிரும்மா'அதாவது பிரும்மா வாழும் இடம் என்று அழைக்கிறார்கள். ஆகவே   தாரு  பிரும்மா எனப்படும் அந்த குறிப்பிட்ட வேப்ப மரம் புனிதமான வேப்ப மரமாக கருதப்பட்டு அது உள்ள இடத்தைத் தேடி அலைவார்கள்.

இதில் ஒரு முக்கியமான செய்தியைக் குறிப்பிட வேண்டும்.  ஆலய சிலைகளை மாற்றி அமைக்க குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட வேப்ப மரத்தை திருவிழாவின்போது  மட்டுமே ஆலயக் குழுவினர் தேடுவதை விட, முதலிலேயே அங்காங்கு உள்ள அந்த தன்மைகளைக் கொண்ட வேப்ப மரங்களின் இருப்பிடங்களை ஆலயக் குழுவினர் அறிந்து வைத்து பாதுகாத்து வந்தால் அந்த மரங்களை நபகலேபரா ஆலயத் திருவிழாவின்போது  தேடி அலைவதை தவிர்க்கலாமே என்ற கேள்வி எழலாம்.

ஆனால் இங்குதான்  தெய்வ லீலை என்பது வெளிப்படுகிறது. சாதாரண நாட்களில் அந்த மரங்கள் எங்கு உள்ளன என்பதை யாராலும், அவ்வளவு ஏன், அந்த மரங்கள் உள்ள இடத்திலேயே உள்ளவர்களால் கூட  அறிந்து கொள்ள முடிவதில்லையாம். ஒருமுறை நபகலேபரா ஆலயத் திருவிழா முடிந்து விட்டால்  அடுத்த  நபகலேபரா துவங்கும்வரை அந்த மரங்கள் யாருடைய கண்களுக்கும் புலப்படுவது இல்லையாம்.  அந்த தன்மைகளைக் கொண்ட வேப்ப மரம் அருகிலேயே  இருந்தாலும், அதில் உள்ள சங்கு, சக்கரம், கண்கள் மற்றும் தாமரை சின்னங்கள் எவருடைய  கண்களுக்கும்  புலப்படாதாம். மேலும் பாம்புப்  புற்றும்,  அதில் வாழும் பாம்பும்  கூட வெளித் தெரிவதில்லையாம்.  தேடுதல் வேட்டை துவங்கியதும்  அவை திடீர் என வெளியில் தெரிகிறதாம். அதே இடத்தில் பல நாட்கள் தங்கி இருந்தவர்கள் கூட அந்த மரத்தைப் பார்த்ததே இல்லை என்பது  அதிசயமாகவே உள்ளது. அதற்கான காரணம் அந்த மரமும் தேவலோகத்தில் இருந்து இங்கு தேவலோகத்தினரால் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வரப்பட்டு புதைத்து வைக்கப்படுகிறது என்றும் அதே நேரத்தில்தான் மங்களா தேவியும் அந்த மரம் உள்ள இடத்தை அதை தேடி அலையும் குழுவினருக்கு தெரியப்படுத்துகிறாள் என்பதான நம்பிக்கையும் இங்கு உள்ளது.   ஆகவே இந்த தேவ ரகசியத்துக்கான  விளக்கத்தை இன்றுவரை  எவராலும் தர இயலவில்லை.
..........தொடரும்

Neelamadhava-Puri Jagannathar - 5

$
0
0
5
மரங்களில்  வேப்ப மரம் ஆண் வர்கத்தை சார்ந்தது என்றாலும் வேப்ப மரமே பல பெண் தெய்வங்களுக்கு விசேஷமான மரமும் ஆகும்  என்பதினால் வேப்ப மரத்தை ஜாதி பேதம் இல்லாமல், ஆண்களும் பெண்களும் வணங்குகிறார்கள்.  அதனால்தான் ஆணான  பூரி ஜகன்னாதரும், பெண்ணான சுபத்ரையின் உருவமும் இந்த மரத்தில் வடிவமைக்கப்படுகிறது. அந்த வேப்ப மரமும் சில தனித் தன்மைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்படி தேடப்படும் வேப்ப மரத்தின் தன்மைகள் என்ன ?

1) கருமையான நிறத்துடன் காட்சி தர வேண்டிய வேப்ப மரத்தில் அது வளர்ந்தது முதல் எந்த பறவையின் கூடும் கட்டப்பட்டு இருக்கக் கூடாது.
2) அந்த வேப்ப மரத்தின் பக்கத்தில் ஒரு புளிய மரம் இருக்க வேண்டும்
3) அந்த மரத்தின் அருகில் சுடுகாடு இருக்க வேண்டும்
4) அந்த மரத்தின் அடியில் பாம்புப் புற்று அல்லது பாம்புப் பொந்து இருக்க வேண்டும்.
5) அந்த அடிப்பகுதியில் உள்ள பொந்தில் கொடுமையான விஷ நாகம் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
6) மரத்தின் அடிப்பகுதி வளைந்திருக்காமல், வேர் பகுதியில் இருந்து பத்து அல்லது பன்னிரண்டு அடி உயர அளவு வரை, நேராக வளர்ந்து இருக்க வேண்டும்
7) அந்த மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, அதாவது பத்து அல்லது பன்னிரண்டு அடி உயர அளவிற்கு மேல் குறைந்தது நான்கு கிளைகள் அமைந்து மரம் படர்ந்து இருக்க வேண்டும்.
8) அந்த மரத்தின் அடிப்பகுதியிலோ அல்லது மேல் பகுதியிலோ ஏதாவது ஒரு இடத்தில் இயற்கையாகவே கண்கள், சங்கு, சக்கரம் மற்றும் தாமரை போன்ற சின்னங்கள் ஏதாவது காணப்பட வேண்டும்.

இத்தனை தன்மைகள் கொண்ட வேப்ப மரங்கள் பல இடங்களில் கிடைக்குமா என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.  இப்படிப்பட்ட தன்மைகளைக் கொண்ட மரங்கள் எங்கே உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. அப்படி என்றால் மிகவும் அபூர்வமாகவே காட்சி அளிக்கும் அந்த மரங்களை எப்படி கண்டு பிடித்து மரத்தை வெட்டி எடுத்து வந்து சிலைகளை செய்கிறார்கள்? புதிய சிலைகளை வடிவமைக்கத் தேவையான மரத்தைக் கண்டு பிடிக்கும் தேடல் எப்படித் துவங்கி முடிவுறுகிறது?  திருவிழா துவங்கியதும் முதலில்  பூரி மன்னரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு மரத்தைத் தேடும் பணிக்கென ஒரு குழு நியமிக்கப்படுகிறது.

இந்த பணியில் ஈடுபடுத்தப்படுபவர்கள் இந்த ஆலயத்தில் சேவை செய்பவர்களின் வம்சாவளியினராக உள்ளார்கள். பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் 36 பிரிவை சேர்ந்தவர்கள் சேவகர்களாக உள்ளார்கள். இந்த 36 பிரிவினரைத் தவிர வேறு எவருக்கும் அந்த ஆலயத்தில் சேவகம் செய்ய உரிமைக் கிடையாது.  இப்படியான 36 பிரிவினரை  'அனங்க பீமதேவ்'என்ற மன்னனே தனது ஆட்சியில் சட்டப்படி நியமித்ததாக வரலாற்று செய்திகள் குறிப்பிட்டு உள்ளன. இந்த 36 பிரிவினர்களில் அந்தணர்கள்தான் ஆலய சன்னதியில் பூஜை செய்ய வேண்டும் என்ற நியதியை வைத்திருக்கவில்லை என்பதினால்  அந்த பூஜைகளையும் இந்த 36 பிரிவினர்களில் உள்ள ஒரு பிரிவினரே செய்கிறார்கள். புதிய சிலையை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு 59 நாட்களுக்கு முன்  சித்ரா சுக்ல தசமி தினத்தன்று தேடுதல் யாத்திரை துவங்குகிறது.

இதில் படிமகாபத்திரா எனும் பிரிவை சார்ந்த குடும்பத்தின் உறுப்பினர் முதன்மையானவராக இருக்கிறார்கள். மகாபத்ரா என்பவர்கள் பூரி ஜகன்னாதருக்கு சகோதரர்கள் என்பதாக கூறிக் கொள்வார்கள். தேடுதல் வேட்டையில் படிமகாபத்திராவைத்  தொடர்ந்து அவருக்கு உதவியாக அவருடன் செல்பவர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் :
    •   20  தைத்யாபதிகள்(இந்தப் பிரிவினர் பூரி  ஜகன்னாதரின் வம்சாவளிகள் எனப்படுகிறார்கள். அவர் பூமியிலே வாழ்ந்திருந்த காலத்தில் அவருக்கு உறவினர்களாக இருந்த வம்சத்தினரின் வழித் தோன்றல்கள்.  இவர்கள் பழைய சிலைகளை பூமியிலே புதைத்தப் பின் இந்து தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள இறந்தவருக்கு செய்யும் பத்து நாள் காரியங்களையும் செய்பவர்கள்).
    • 1  லேங்கா*
    • மகாரனாக்கள்* (*இந்த இரண்டு பிரிவினரும், அதாவது லேங்கா மற்றும் மகரனாக்கள் ஆலயத் திருவிழாவில் ஊர்வலத்துக்கான தேர்களை வடிவமைக்கும் பிரிவை சேர்ந்த தச்சர்கள் ஆவர்.  இவர்களே ஆலய  மூர்த்திகளின் உருவத்தையும் மரத்தில் வடிவமைப்பவர்கள்).
    • 16  பிராமணாக்கள்
    • தௌலகர்னாக்கள்
    • 30  காவல் நிலைய அதிகாரிகள்மற்றும் 
    • 2  துணை இன்ஸ்பெக்டர்கள் 
      இப்படியாக மரத்தை தேடுதல் யாத்திரையில் 50 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் ஒரு குழுவாகக் கிளம்புவதற்கு முன்னதாக ஒரிஸ்ஸாவில் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டிருக்கும் பூரி மன்னரின் அனுமதியைப் பெற வேண்டும். அதன் பின் அவர்கள் அங்கிருந்து 50 மைல் தொலைவில் உள்ள ககட்பூர் எனும் கிராமத்தில் உள்ள மங்களா தேவி ஆலயத்துக்கு செல்ல வேண்டும் என்பது விதி. மங்களா தேவி ஆலயத்துக்கு எதற்காக செல்ல வேண்டும்? அங்குதான் அவர்களுக்கு அந்த நான்கு தெய்வங்களுக்கான சிலையை வடிவமைக்கத் தேவையான வேப்ப மரம் உள்ள இடம் அவர்களது கனவில் அந்த தேவியினால் கூறப்படுமாம். அந்த மங்களா தேவியின் கதை என்ன?

       மங்களா தேவியின் கதை:

      மங்களா தேவி என்பவள்  பார்வதி தேவி படைத்த துர்கையின் அம்சம். மஹிஷாசுரமர்தினியாக  பார்வதி அவதரித்தபோது அந்த  யுத்தத்தில், ஒரு கட்டத்தில் பல அபூர்வமான சக்திகளை பெற்றிருந்த  மஹிஷாசூரன் எனும் அந்த அசுரன் துர்கையின் வடிவான மஹிஷாசுரமர்தினியை சமுத்திரத்தில் தள்ளி மூச்சு விட முடியாமல் தண்ணீரில் அவளை அமுக்கி கொலை செய்ய முயன்றான்.  அப்போது நீரில் முழுகி  தவித்த துர்க்கை மேலே வந்து பெருமூச்சை விட்டபோது அந்த மூச்சில் இருந்து மங்களா தேவி  வெளி வந்தாள்.  அந்த இருவரும் சேர்ந்து மஹிஷாசுரனை அந்த யுத்தத்தில் துரத்தித் துரத்திக் கொன்றார்கள் என்ற ஒரு புராணக் கதை ஒரிசாவில் உண்டு.  அந்த சமுத்திரத்தின் கிளை நதியே ப்ராச்சி எனப்படும் நதியாகும். அந்த யுத்தத்திற்குப் பிறகு அந்த பூமியிலேயே தானும் ஒரு தெய்வமாக அவதரிக்க விரும்பிய மங்களா தேவி பல காலத்துக்கு அந்த  ப்ராச்சி நதியில்தான் மறைந்து இருந்தாள். அந்த நதியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கென பல படகுகள் ஓடும்.

      அப்போது ஒரு நாள் மாலை அந்த நதியில் ஒரு படகோட்டி படகை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டு இருந்தார். ஆனால் நடு நதியில் படகு சென்று கொண்டு இருந்தபோது திடீர் என அந்த படகு நகராமல் அப்படியே நடு நதியில் நின்று விட்டது. என்ன செய்தும் படகை நகர வைக்க முடியவில்லை. நதியில் குதித்து கரைக்கு நீந்திப்போய் யாரையாவது அழைத்து வரலாம் என எண்ணிக் கொண்டு நதியில் குதிக்க முயன்றாலும் அவனால் நகரவும் முடியவில்லை. இரவும் வந்து விட கடவுள் மீது பாரத்தைப் போட்டு விட்டு அப்படியே படகில் தூங்கி விட்டார். மறுநாள் விடியற்காலை அவன் கனவில் தோன்றிய மங்களா தேவி தான் அந்த நதியில் புதைந்து கிடப்பதாகவும், தன்னை வெளியில் எடுத்து அங்கு நதிக்கரையில் ஒரு ஆலயம் அமைப்பதாக உறுதி மொழி கொடுத்தால் தான் அந்த கிராமத்தைப் பாதுகாப்பதாகவும், மேலும் தான் வைஷ்ணவம் மற்றும் சைவத்தை இணைக்கும் பாலமாக இருப்பேன் எனவும், தன்னை வெளியில் எடுத்து ஆலயம் அமைப்பதாக சத்தியம் செய்தால் மட்டுமே அவன் படகு அங்கிருந்து செல்ல முடியும் என்று கூறி விட்டு மறைந்தாள். காலை விழித்தெழுந்த படகோட்டி சற்றும் தாமதிக்காமல் வானத்தைப் பார்த்து அந்த தேவி கூறியபடி சத்தியம் செய்தார்.  அடுத்து அவர் அப்படியே நதியில் குதிக்க அந்த நதியே இரண்டாக பிளவுபட்டு பாதை அமைத்துக் கொண்டதைப் போல அவன் நீருக்குள்ளே செல்ல பாதை அமைத்துக் கொடுத்தது. அதில் சென்று நதிக்குள் முழுகி இருந்த மங்களா தேவியில் சிலையை எடுத்து வெளியில் வந்தவுடன் நதி மீண்டும் பழையபடி ஆயிற்று.  படகும் நகர்ந்தது.

      அவனும் ஊருக்குள் சென்று நடந்த விவரங்களை ஊராருக்கு எடுத்துச் சொல்லி அங்கு நதிக் கரையில் ஆலயமும் அமைத்தான். அந்த ஆலயம் பூரியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தது. ஆலயம் அமைந்த ஆலயத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஊரார் யோசனை செய்து கொண்டு நதிக்கரையில் நின்று கொண்டு இருந்தபோது, அவர்கள் முன்னிலையில் மிகப் பெரிய ஒரு காகம் பறந்து வந்தது. நதியின் மத்திய பகுதிவரை பறந்து சென்ற காகம் அப்படியே நீருக்குள்ளே ஒரு அம்பைப் போல சர்..ர்..ர் என நுழைந்து மறைந்தது.  அங்கிருந்த படகோட்டிக்கு ஒரே ஆச்சர்யம். தான் எந்த இடத்தில் இருந்து மங்களா தேவியின் சிலையை வெளியில் எடுத்தானோ அதே இடத்தில் நீரில் காகம் மூழ்கியதைக் கண்டு வியந்து அதை கிராமத்தினருக்கும் கூறினான். அனைவரும் அந்த செயலைக் கண்டு வியந்தார்கள். அங்கு பேசப்பட்டு வந்திருந்த உள்ளூர் பாஷையில் காக்கா என்றால் காகம் என்றும், அட்கா என்றால் மூழ்கியது என்றும் புரி என்றால் இடம் என்றும் அர்த்தம் இருந்ததினால் காகம் மூழ்கிய இடம் என்பதை குறிக்கும் வகையில் அந்த இடத்தின் பெயரை காகாட்காபுரி என்று அவர்கள் வைக்க நாளடைவில் அந்த இடம் காகட்பூர் என மருவியது.

      (** மேலே காணப்படும் மூன்று படங்களும் தெய்வீக வேப்ப மரத்தில் காணப்படும் சின்னங்கள் ஆகும்)
      .....தொடரும் 

      Neelamadhava-Puri Jagannathar - 6

      $
      0
      0
      6
      காலம் ஓடியது. பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் மூலவர்களின் சிலைகளை மாற்ற வேண்டிய காலம் வந்தபோது, அந்த சிலைகளை அமைக்க தேவையான தெய்வீக வேப்ப மரம் உள்ள இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது என ஆலயத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்தபோது அவர்களில் மூத்த வயதானவர் கனவில் தோன்றிய மங்களா தேவி, திருவிழாவை துவக்கியதும், தெய்வீக வேப்ப மரத்தை தேடப் போகும் குழுவினர் தன் ஆலயத்தில் வந்து தங்கி தன்னை வழிபட்டால் தான் அந்த மரத்தை தேடிக் கண்டு பிடித்து அவர்களுக்குக் கூறுவதாக வாக்குறுதி தந்தாள். அது முதல் நபகலேபரா திருவிழா துவங்கியதும், சிலைகளுக்கான மரத்தை தேடும் குழுவினர் முதலில் மங்களா தேவியின் ஆலயத்துக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கி இருந்து அவளை ஆராதிப்பார்கள். அவர்கள் அங்கு சென்றதும், ஒரு சில நாட்களிலேயே அவர்களுக்குத் தேவையான மரங்கள் உள்ள இடங்களை மங்களா தேவி கண்டுபிடித்து, அந்தக் குழுவின் தலைவரிடமும், வேறு சிலரிடமும் அவர்கள் கனவில் தோன்றி அந்த மரங்கள் உள்ள இடத்துக்கு செல்லும் வழியை மங்களா தேவி கூறுவாளாம்.  ஒரே மரத்திலேயே ஜகன்னாதர், சுபத்ரை மற்றும் பாலபத்திரரின் சிலைகளை செய்ய மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் சிலையை வடிவமைக்கத் தேவையான தனித் தன்மைக் கொண்ட குறிப்பிட்ட மரம் வெவேறு இடங்களில் இருக்குமாம். அவற்றைக் கண்டு பிடிப்பது எளிதான காரியம் அல்ல என்பதினால் மங்களா தேவியே இதற்கு உதவுகிறாள் என்பது ஐதீகம்.   மரங்கள் உள்ள இடத்தை மங்களா தேவி கூறியதும் தம்மை நான்கு குழுக்களாக பிரித்துக் கொண்டு அந்த ஆலயத்தில் இருந்து அந்த குழுவினர் புறப்பட்டுச் செல்வார்கள்.  இன்றுவரை மங்களா தேவி கூறிய மரங்கள் உள்ள இடத்தைக் கண்டு பிடிப்பதில் எந்தவிதமான சங்கடமும் ஏற்ப்படவில்லையாம்.  ஆனால்  அவர்களுக்கு எந்த விதத்தில், எப்படி அந்த மரங்கள் உள்ள இடங்களை மங்களா தேவி துல்லியமாக எடுத்துக் கூறி  வழி காட்டுகிறாள் என்பதும் பரம ரகஸ்யமாகவே அந்தக் குழுவினர் வைத்து உள்ளார்கள்.

      மங்களா தேவி அந்த மரங்கள் உள்ள இடத்தைக் கூறிய பிறகு தேடுதல் வேட்டையில் உள்ளவர்கள் அந்த மரங்கள் உள்ள இடத்தை  சென்றடைவார்கள். அங்கு சென்று மரத்தின் தன்மைகளை நன்கு ஆராய்ந்தப் பின்  அந்த மரத்தை யாரும்  அசுத்தப்படுத்தக் கூடாது என்பதற்காக அந்த மரத்தை சுற்றி உள்ள இடத்துக்கு தடுப்பை போட்டு விட ஏற்பாடு செய்வார்கள். மரத்தை சுற்றி உள்ள பகுதிகளை மந்திரங்கள் ஓதி தண்ணீர் தெளித்து  தூய்மைப்படுத்துவார்கள். அதன் பின் அந்த மரத்துக்கு முன்னால்  யாகங்கள் மற்றும் பல விதமான பூஜைகளும், முக்கியமாக நரசிம்மருக்கும், சூரியனுக்கும்  பூஜைகள் நடைபெறும்.  யாகம் நடைபெறும் முன் ஜகன்னாதர் மற்றும் பாலபத்திரர் மரங்களின் அடிப்பகுதியை தூய வெண்மை நிற வேட்டியை போட்டு மூடுவார்கள்.  அதைப் போல சுபத்ராவின் மர அடிப்பகுதியை சிவப்பு நிற சேலையால் சுற்றிக்  கட்டி விடுவார்கள். அனைத்தும் முடியும்வரை அந்த மரத்தை தேடி வந்த குழுவினர் அங்கேயே தற்காலிக குடிசை அமைத்துக் கொண்டு தங்குவார்கள்.

      மரத்தை வெட்டத் துவங்கும் முன், முதலில் சம்பிரதாயமாக அந்த மரத்தை தங்கக் கோடாலியால் ஒருமுறை வெட்டுவார்கள். அதைத் தொடர்ந்து வெள்ளிக் கோடரியினால் ஒருமுறை வெட்டிய பின்னர் முடிவாக இரும்புக் கோடரியினால் வெட்டுவார்கள். இப்படியாக முழு மரமும் வெட்டப்பட்டு சாய்க்கப்படும் வைபவத்தில் 108 தெய்வங்களின் நாமாவளியை உச்சரித்தபடி இருப்பார்கள்.

      அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து மரம் வெட்டப்பட்டப் பின்னர் தேவையான அளவு மரத்தின் அடிப்பாகத்தை வைத்துக் கொண்டு மீதி மரத்தை அதன் கிளைகளுடன் சேர்த்து பூமியிலே குழி தோண்டி புதைத்து விடுவதற்காக அவற்றையும் தனியாக வேறு வண்டியில் வைத்து பூரி ஆலயத்துக்கே எடுத்துச் சென்று விடுவார்கள். தெய்வீக மரம் அது என்பதினால் அதை வேறு எவருமே வேறு எந்த காரியத்துக்கும் பயன்படுத்த முடியாது என்பதினால் அந்த மரத்தின் எந்தப் பகுதியையுமே அங்கு விட்டு வைக்காமல் அனைத்தையும் எடுத்துச் சென்று விடவே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. மூலவர் சிலைக்கு  தேவையான மரத்தை ஒரு மாட்டு வண்டியில் வைத்து எடுத்துச் செல்வார்கள்.
      மாட்டு வண்டி எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்றால் முதன் முதலில் நீல மாதவர் ஒரு கட்டை உருவில் மன்னன் இந்ரதைய்யுமாவிற்கு கடலில் மரத்தின் அடிப்பாகமாக காட்சி தந்து, அந்த மரத்தை கடலில் இருந்து எடுக்க முடியாமல் தவித்தபோது அதை வெளியில் எடுக்க மாட்டு வண்டியைக் கொண்டு வருமாறு நீல மாதவர் கட்டளை இட,  மாட்டு வண்டி வந்ததும் அதை எளிதில் அதில் ஏற்ற முடிந்தது என்பதினால் அதை குறிக்கும் விதத்தில் சம்பிரதாயமாக  மாட்டு வண்டியே பயன்படுத்தப்படுகிறது. வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பகுதியை பூரி ஆலயத்துக்கு எடுத்துச் செல்வார்கள்.

      பூரி ஜகன்னாதர்  சிலையின் உயரம் 5' 7'' . இரண்டு கைகளும் 12 அடி அளவில் நீண்டு இருக்கும். பாலபத்திரரின்  உயரம் 5' 5''மற்றும் சுபத்திராவின் உயரம் 5 அடிக்கும் குறைவானதாம். சுதர்சனம் மட்டும் 5' 10''த்துக்கும் உயர நீண்ட தடி போல அமைந்து உள்ளது.

      ஆலயத்துக்குள் மரங்களை எடுத்துச் சென்ற பின், அந்த சிலைகளை வடிவமைக்கும் தச்சர்களைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படாத  தனி அறையில் அவற்றை வைத்தப்  பின் அறையின்  கதவை மூடி வைத்து விடுவார்கள்.  உள்ளே உள்ள தச்சர்கள் சிலை வடிவமைக்கப்பட்டு முடியும்வரை ஆலயத்தை விட்டு வெளியில் செல்லக் கூடாது. ஆலயத்துக்குள்ளேயேதான்  படுத்து உறங்க வேண்டும்.  ஆலய பிரசாததைத் தவிர வேறு எந்த உணவையும் உண்ணக் கூடாது போன்ற கடுமையான நியதிகள் உள்ளன. 21 நாட்களுக்குள் சிலை தயாராகி விடும். அவை தயார் ஆனதும் ஆலயம் முற்றிலும் மூடப்பட்டு விடும். பக்தர்களுக்குக் கூட ஆலயத்துக்குள் செல்ல அனுமதி கிடையாது.

      சிலைகள் தயார் ஆனதும் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலைகள் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டு பழைய சிலைகளின் முன் நேருக்கு நேர் நிறுத்தி வைக்கப்படுமாம்.   அந்த சிலைகளை தைத்தியாபதிகள் மட்டுமே எடுத்துக் கொண்டு செல்ல அனுமதிக்கிறார்கள். அன்று இரவு விளக்குகள் அணைக்கப்பட்டு முற்றிலும் இருட்டு மயமாக்கப்படும் ஆலயம் மற்றும் ஆலய கருவறையில் பழைய சிலைகளில் உள்ள பிரும்ம சக்தியை புதிய சிலைக்குள் புகுத்த மூத்த தைத்தியாபதி  மட்டுமே கருவறையில் அனுமதிக்கப்படுகிறார். அவரைத் தவிர அங்கு வேறு யாருமே நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.   அவரும் தனது கண்களைக் கட்டிக் கொண்டு 'பிரும்மபதார்த்தா'எனப்படும் ரகஸ்ய நூலில் கூறப்பட்டுள்ள விதிமுறையின்படி  இந்த சடங்கை  செய்து முடிக்கிறார். அனைத்தும் செய்யப்பட்டப் பின் மரணம் அடைந்து விட்டதாக கருதப்படும் பழைய சிலைகள் ஆலய வளாகத்தின் பின்புறத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்  மரணம் அடைந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்குகளைப் போல சடங்குகளை செய்து  பூமிக்குள் புதைத்து விடுவார்கள். அன்றில் இருந்து மூன்றாவது நாளில் பூரி ஜகன்னாதர் ஆலய தேரோட்டம்  புதிய சிலைகளுடன் நடைபெறுகிறது.

      பூரி ஆலயத்தின் பண்டிகை இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்கி விட்டது.   தெய்வங்களுக்கான நான்கு மரங்களும் தேடப்பட்டு கிடைத்து விட்டன. அவை வடிவமைக்கப்பட்டு சக்தியூட்டப்பின் ஜூலை 27 ஆம் தேதி தேரோட்டத்துடன் அந்த திருவிழா நிறைவு பெற உள்ளன. 

      --முற்றும் --

      Krishna worship

      $
      0
      0
      கிருஷ் ழிபாடு

      சாந்திப்பிரியா

      கிருஷ்ணர் இந்து சமயத்தில் முக்கியமான ஒரு கடவுளாக கருதப்படுபவர். இவர் பத்து அவதாரங்களை அதாவது தசாவதாரம் எடுத்த விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். கிருஷ்ண அவதாரத்தை எடுக்க அவர் பூமியிலே வாசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக பிறக்க வேண்டி இருந்தது. கிருஷ்ணா என்ற சமஸ்கிருத சொல்லிற்கு கருமை அல்லது அடர்ந்த நிறம் என்ற அர்த்தம் தரும். அதனால்தான் கரும் நீல நிறத்தவரான கிருஷ்ணரை கருநீல தெய்வம் என்று கூறுவார்கள்.

      கிருஷ்ணரின் காலம் குறித்து பல சர்ச்சைகள் உள்ளன என்றாலும் புராண நூல்கள் மற்றும் ஜோதிட கணிப்புக்களின்  அடிப்படையில் கிருஷ்ணரின் பிறப்பில் இருந்து இறப்பின் காலம் கி.மு 3228 ஆம் முதல் கி.மு. 3102 வரையிலும் இருக்கலாம் என்பதாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுளாஷ்டமி, தேய்பிறை திதியில் ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது.  வேதங்கள் இயற்றப்பட்டது அதற்கும் முற்பட்ட காலத்தில், அதாவது கி.மு.5000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலம் என்பதினால் வேதங்களில் கிருஷ்ணரைப் பற்றிய குறிப்புக்கள் இல்லை, மாறாக கிருஷ்ணரின் முந்தைய அவதாரமான மகாவிஷ்ணுவைப் பற்றியே அவற்றில் கூறப்பட்டு உள்ளது. ஆகவேதான் வேதங்களில் கிருஷ்ணருக்கு புகழ் சேர்க்கும் பகவத் கீதைப் பற்றிய குறிப்புக்கள் இல்லை. கிருஷ்ணரின் காலமும் வேத காலத்துக்கு பின்னரே நிகழ்ந்துள்ளது என நினைக்கத் தோன்றுகிறது.

      கிருஷ்ணரைப் பற்றிய தகவல்கள் நமக்கு மூன்று மூல நூல்களிலிருந்து கிடைக்கின்றன. அவை:-

      (1) மகாபாரதம்
      (2) ஹரி வம்சம்
      (3) பல்வேறு புராணங்கள்.

      புராணங்கள் என்பது பதினெட்டு வகைகளாகும். ஒவ்வொரு புராணமும் ஒவ்வொரு சமயப் பிரிவிற்கு முக்கியத்துவம் தந்து பல பண்டிதர்களினால் பல்வேறு கால கட்டத்தில் எழுதப்பட்டு உள்ளன என்பதினால் அத்தனை புராணங்களையும் இயற்றியவர் ஒருவரே என்பதாக இருக்க முடியாது. ஒரே கருத்தைக் கொண்ட புராணமே பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பண்டிதர்களாலும் பல்வேறு வடிவங்களில் எழுதப்பட்டு உள்ளன. முன் காலங்களில் நமது இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் என அனைத்துமே வாய் மொழி மூலமே அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்பட்டன என்பதினால்தான் அவற்றில் காணப்படும் செய்திகள் வாய்மொழி செய்தியாக பரப்பப்பட்டபோது அவரவர் கற்பனைகள் சிலவற்றை சேர்த்தே அதை பரப்பி இருக்கிறார்கள் என்பது ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக ஏற்றுக் கொண்டுள்ள நம்பிக்கை ஆகும். அனைத்துப் புராணங்களிலும்  கிருஷ்ணரைப் பற்றிய குறிப்பு இல்லை. ஒரு சிலவற்றில் மட்டும் அவரைக் குறித்த செய்திகள் உள்ளன. பிரம்ம புராணம், விஷ்ணு புராணம், வாயு புராணம், ஸ்ரீமத் பாகவதம், பிரம்ம வைவத்ர புராணம், ஸ்கந்த புராணம், வாமன புராணம், கூர்ம புராணம் போன்ற சிலவற்றில் கிருஷ்ணரைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்க இன்னும் சில புராணங்களில் அவரைக் குறித்த எந்த குறிப்புமே காணப்படவில்லை.

      கிருஷ்ணரைக் குறித்த செய்திகள் அதிகம் தெரியத்  துவங்கியது மகாபாரத காலத்தில்தான். கிருஷ்ணரைப் பற்றிய முக்கியமான குறிப்புக்கள் மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் பெருமளவில் காணப்படுகிறது. மகாபாரதத்தில் முதன் முதலாக திரௌபதி துரியோதனனின் சபையில் அவமானப்பட்டபோதுதான் கிருஷ்ணரைப் பற்றிய செய்தியே முதன் முதலாக வெளித் தெரியத் துவங்கியது எனலாம். இப்படியாக கிருஷ்ணர் முதலில் ஒரு முக்கியமான பாத்திரமாக அறிமுகம் ஆவது மகாபாரதத்தில்தான். அதற்குப் பின்னரே பகவத் கீதை மூலம் பிரபலம் அடைந்த கிருஷ்ணரின் போதனைகள் வெளிவரத் துவங்க அவருடைய பிறப்பும் இளமைக் கால லீலைகளும் பரவலாக வெளிவரத் துவங்கின.

      ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணரின் கடந்த கால குழந்தைப் பருவத்தைப் பற்றி அதிகம் விவரிக்கப்பட்டு இருக்கையில் மகாபாரதத்தில் கிருஷ்ணரின் சக்தியையும், அவருடைய திருவிளையாடல்களையும் அதிகம் விவரித்துள்ளார்கள். அது போலவே ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஹரிவம்சம் எனும் நூலிலும் கிருஷ்ணருடைய இளமைக் கால வீர தீர செயல்களை விவரித்து, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட வந்த ஒரு கடவுளாக அவரைக் காட்டி உள்ளார்கள். மகாபாரதத்தில் கூறப்படாத செய்திகளை சொல்வதற்காகவே எழுதப்பட்ட புராணம்தான் ஹரிவம்சம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


      இந்தியாவைப் பொருத்தவரை இந்துக்கள் மத்தியில் தற்போது பரவலாக கிருஷ்ண வழிபாடு காணப்படுகிறது என்றாலும் இந்தியாவின் வடபகுதிகளில் சிலவற்றில்தான் முதன் முதலில் கிருஷ்ண வழிபாடு துவங்கி இருந்தது.  அதன் காரணம் இந்தியாவின் வடபகுதிகளில் அதிகம் காணப்படும் யாதவ குலத்தில் கிருஷ்ணர் பிறந்தது ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். கிருஷ்ணர் வாழ்ந்திருந்த இடமும், அவருடைய வீர தீர செயல்கள் வெளித் தெரிந்த இடங்களும், அவர் கட்டிய அரண்மணை,  த்வாரகை நதியில் மூழ்கி விட்ட அவர் வாழ்ந்திருந்த அரண்மணை போன்ற அனைத்துமே வட மானிலத்தின் பகுதிகளில்தான் இருந்துள்ளன என்பதினால் அவரை கன்னையா என்று அழைத்து வடநாட்டின் சில பகுதிகளில் அவரை பூஜித்துள்ளர்கள். முன் காலத்தில் யாதவ குலத்தவர் பசு மாடுகளை ஓட்டி ஜீவனம் செய்து வந்தவர்கள் என்பதினால் யாதவர்களை ஆயர் குலத்தினர் என்று அழைத்தார்கள். யாதவ குலத்தவர் இந்தியாவில் வடநாட்டில் உள்ள மதுராவில் ஜமுனா நதிக்கரையில் பெருமளவில் வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள். ஆரியர்கள் இந்தியாவுக்கு வருகைத் தருவதற்கு முன்னரே யாதவர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்றும், அவர்களே ஆரியர்களை எதிர்த்தவர்களில் முதன்மையானவர்கள் என்ற கருத்துக்களும் உள்ளது. ஏன் எனில் ஆரியர்கள் அந்தணர்கள் எனக் கருதப்பட்டவர்கள். அதனால்தான் ஆரியர்கள் எனப்பட்ட அந்தணர்கள் முதலில் யாதவ குலத்தை சார்ந்த கிருஷ்ணரை கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை.

      ஆனால் பின்னர் ஆரியர்கள் இந்த நாட்டில் வந்து ஆதிக்கம் செலுத்தத் துவங்கியதும் தமக்கு ஸ்திரமான இடம் அமைய வேண்டும் என்பதற்காக கிருஷ்ணர் அவதரித்த யாதவ குலத்தவரையும் அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி கிருஷ்ணரின் மூத்த அவதாரமான விஷ்ணுவை இளம் நீல நிறத்தவராக ஏற்றுக் கொண்டு, கிருஷ்ணரை கரிய நீல நிறத்தவர் என்றும், அவர் ஆரியர்கள் அல்லாதோர், அதாவது திராவிடர்களின் கடவுள் என்ற ஒரு பிரமையையும் பரப்ப முயன்றுள்ளார்கள்.

      கிருஷ்ணர் பூமியிலே மனித ரூபமாக வாழ்ந்திருந்த காலத்திலே வைதீக வழிபாட்டு முறை மற்றும், வைதீகம் அல்லாத வழிபாட்டு முறைகள் என இரு வகைகளிலான வழிபாட்டு முறைகள் அமைந்து இருந்தன. அதன் காரணம் வேதங்களின் தாக்கமேயாகும். வேத வழிமுறையிலான வழிபாடு தோன்றுவதற்கு முன்னால் மக்கள் இயற்கையை எளிதாக வழிபட்டு வந்திருந்தார்கள். இயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், நெருப்பு போன்றவற்றினைக் கண்டு பயந்த ஆதி மனிதர்கள் அவற்றைக் கடவுள்களாக வழிபடத் தொடங்கினார்கள். சூரியன், சந்திரன், அக்னி,  வருணன் என இயற்கையே முதல் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது. இவை சிந்து நதிக்கரையில் நிகழ்ந்ததாகவும், இவர்களில் ஒரு பிரிவினரையே ஆரிய இனத்தவர் என்றும் நம்புகிறார்கள். வேத முறையிலான வழிபாடு சிக்கல் நிறைந்தது. அது அந்தணர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. வேத வழிபாட்டு முறை மந்திரங்களை உள்ளடக்கியது என்பதினால் ஆரியர்களைத் தவிர பிற சாமான்யர்களால் அவற்றைக் கடைபிடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட வழிபாட்டு முறையை ஒரு குறிப்பிட்ட இனத்தவரே கடைப் பிடித்து வந்துள்ளார்கள்.

      இதை எதற்காக குறிப்பிடுகின்றேன் என்றால் கிருஷ்ணர் வாழ்ந்திருந்ததாக கூறப்படும் காலமான கி.மு 3228 ஆம் முதல் கி.மு. 3102 எனும் காலகட்டம் சிந்துவெளி நாகரீகம் தழைத்திருந்தக் காலம் ஆகும். சிந்துவெளிப் பகுதியில் கி.மு 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும் இருந்தததாகக் கூறப்படுகின்றது.  சிந்து வெளிப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றி உறுதியாக அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், ஆய்வாளர்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற கருத்துக்களை முன் வைத்து  சிந்து வெளி பண்பாட்டுக்கு உரியவர்கள் திராவிட இனத்தவர்களே என்றும்  இல்லை ஆரியரே என இன்னொரு பகுதியினரும் கூறிக்கொண்டு இருந்தாலும், புதைப் பொருள் ஆராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிறிய உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும், அவற்றிலே உருவகப்படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்து அந்த காலகட்டத்தில் சமய தொடர்ப்பு இருந்திருக்கலாம் என்பதாக ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.  இந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பலி பீடங்கள் போன்றவை இருந்துள்ளதற்கான  சான்றுகள் கிடைத்துள்ளன. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இந்து சமய கடவுளில் ஒருவரான சிவனின் உருவ அமைப்பு கொண்ட சிலைகள், ஓவியங்களின் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து அந்த காலத்து மக்கள் மும்மூர்த்திகளை அடையாளம் கண்டு கொண்டிருக்கலாம் என்பது தெரிகிறது. எனவேதான் விஷ்ணுவின் தசாவதாரத்தின் சில நிகழ்வுகளும் நடந்திருக்கலாம்  என்பது நம்பக் கூடியதாக உள்ளது.

       http://upload.wikimedia.org/wikipedia/ta/2/2b/Pashupati.gif
       சிந்துவெளி நாகரீக காலத்தை சேர்ந்த 
      பசுபதி எனும் குறியீடு அல்லது முத்திரை 

      இந்த பின்னணியைக் கொண்டுதான் ஆரியர்கள் வருகை தருவதற்கு முன்னரே, இந்தியாவில் வட பகுதிகளில் கிருஷ்ணர் வாழ்ந்திருந்த காலத்திலேயே அந்தணர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்ற செய்திகளை நம்ப இடம் உள்ளது.  இதை மகாபாரத யுத்த காலத்து செய்திகள் மூலம் அறிய முடியும். ஆகவே ஆரியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தப் பின்னரே அந்தணர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்ற கூற்று பொய்யானது. அந்த காலத்திலே வாழ்ந்திருந்த அந்தணர்கள் நடத்திய அனைத்து யாகங்கள் மற்றும் யக்யங்களில் சிவன், விஷ்ணு, பார்வதி, லஷ்மி, சந்திரன், சூரியன் போன்ற பிற தெய்வங்களின் ஆராதனைகளைப் போலவே தேவேந்திரன் எனப்பட்ட இந்திரனை வைதீக தெய்வம் எனக் கருதி யாகங்களில் இந்திர ஆராதனையை முக்கியமானதாக செய்து வந்திருந்தார்கள்.

      வேத காலத்தில் வைதீகங்கள் ஏற்றுக் கொள்ளாத தெய்வங்களை அவைதீக தெய்வம் என்பார்கள். அந்த அவைதீக தெய்வங்கள் முதலில் மானிட ரூபத்தில் அவதரித்து இருந்த தெய்வங்கள் ஆகும். இதனால்தான் ராமர், ஹனுமார், பரசுராமர், பலராமன், கிருஷ்ணர், சீதை மற்றும் தத்தாத்திரேயர் போன்றவர்களை எவரும் முதலில் தெய்வமாக கருதவில்லை. அவர்களை அவதூதர்கள் மற்றும் இராமாயண, மகாபாரத நாயகர்களாகவே பார்த்தார்கள். பிற்காலத்தில் கூட அவைதீக தெய்வங்கள் பட்டியலில் ஒரு நிலைவரை பல அம்மன்கள் அதாவது காளியம்மன், கருமாரி அம்மன், ஐயனார், காளி போன்ற தெய்வங்கள் இருந்துள்ளன. அவர்களையும் பல காலம் பொறுத்தே வைதீக தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட நிலைமை ஆரியர்களின் வருகைக்குப் பின்னர் இன்னும் அதிகரித்தது. இதனால்தானோ என்னவோ மானிடராகப் பிறந்திருந்த தெய்வங்களின் பட்டியலில் முதலில் அவைதீக தெய்வம் எனக் கருதப்பட்டு வந்திருந்த கிருஷ்ண வழிபாடு அவர் அவதரித்த உடனேயே துவங்காமல், பல காலம் பொறுத்து துவங்கியது.

      கிருஷ்ணர் வேத வழிபாட்டு முறைகளை ஊக்குவிக்கவில்லை என்பதினால்தான் அவரை வைதீக வழிபாட்டை மேற்கொண்டவர்கள் தெய்வமாக ஏற்றுக் கொள்ளாமல் சாமான்ய மாநிடராகவே கருதி உள்ளார்கள். இந்த பின்னணிக்குக்  காரணம் வைதீக தெய்வம் எனக் கருதப்பட்ட இந்திரனை ஒரு கட்டத்தில் அவமானப்படுத்தி இந்திர வழிபாடு தேவை அற்றது என்ற கருத்தை கிருஷ்ணன் வெளிப்படுத்தினார். அதனால் இந்திரனுக்கும் கிருஷ்ணருக்கும் பகை ஏற்பட்டு விடுகிறது.

      புராணத்தில் காணப்படும் அந்தக் கதையின்படி ஒரு முறை கோவர்த்தன மலையின் அடிவாரத்தில் பிருந்தாவனப் பகுதியில் இருந்த பராஜ் எனும் கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்கு நிலவிய பஞ்சத்தைப் போக்க மழையை பொழிய வைக்குமாறு இந்திரனை வேண்டிக் கொண்டு வருண ஜெபம் செய்யத் துவங்கினார்கள். அதில் வேத வேள்விகள் செய்யப்பட்டன. அந்த யாகத்தில் பங்கெடுத்தவர்களில் முக்கியமானவராக கிருஷ்ணரை வளர்த்த தந்தையும் இருந்தார். பஞ்சத்தினால் ஏற்கனவே துயறுற்று இருந்த மக்கள் ஏன் இன்னும் அதிக துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் தம்மிடம் உள்ள பொருட்களை யாகத்தில் அழிக்க வேண்டும் என்று கருதிய கிருஷ்ணர் அவர்கள் செய்த யாகத்தில் இந்திரனுக்கு தர இருந்த ஆஹூதியை தடுத்து நிறுத்தி அங்கிருந்த மக்களிடம் கூறினார் 'மழையை பொழிய வைப்பது இந்திரன் அல்ல, மாறாக, நமக்கு இடம் தரும் கோவர்த்தன மலையே ஆகும். இந்த மலையில் இருந்தல்லவா நதிகளும், ஆறுகளும் ஓடி வருகின்றன. நாம் துயருற்று உள்ளபோது இங்கு ஓடி வந்து வந்து நமக்கு ஆறுதல் தராத இந்திரனை நாம் ஏன் வழிபட வேண்டும். பயன் கருதி செய்யும் பலி மற்றும் பூசைகள் நமக்கு தேவை இல்லை, அவரவர் செய்யும் செயல்களின் விளைவுகளைத்தான் அவரவர் அனுபவிக்கிறார்கள். நாமோ எந்தக் கவலையும் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருப்பவர்கள். நாம் வணங்க வேண்டிய தெய்வங்களோ மலைகளும் இயற்கையையும்தான். ஆகவே நமக்கெல்லாம் தங்கும் இடமும், நமது கால்நடைகளுக்கான உணவான புற்களைக் கொடுக்கும் மலைகளும், பால் கொடுக்கும் பசுக்கள் மட்டுமே நாம் ஆராதிக்க வேண்டியவை. இந்த உண்மைகளை உணராமல் யாகம் செய்து, இந்திரனுக்கு அர்க்கியம் தருவது பிராமணர்கள் மட்டுமே. ஆகவே அதைத் தவிர்த்து நமக்கு வாழ்வு தரும், இயற்கை தந்துள்ள பூமியையே முதலில் வழிபடுவோம்'என்று கூறிய கிருஷ்ணர், யாகத்தில் இந்திரனுக்கு தர வேண்டிய அஹூதியை தடுத்து நிறுத்தி இந்திரனை அவமானப்படுத்தினார். இப்படியாக  இந்திரனுக்கும் கிருஷ்ணருக்கும் பகை எழுந்தது .

      கிருஷ்ணர் சிறு வயதில் இருந்தபோது நடந்த இந்த சம்பவத்தில் அவர் கூறிய பகவத் கீதைக்கு இணையான அதே தத்துவத்தை அவர் தெய்வ நிலையில் இருந்து கூறியதாக எவருக்கும் நினைத்திருக்கவில்லை . தம்மில் உள்ள எதோ ஒரு புத்திசாலி மனிதர் தமக்கு நியாய நிலையை எடுத்துக் காட்டுவதாகவே அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள். அதே நேரத்தில் இந்திரனோ அந்தணன் அல்லாத ஒரு யாதவ மானிடன் தன்னை அவமானப்படுத்தி தனக்கு கிடைக்க வேண்டிய யாக பாகத்தை தடுத்தி நிறுத்தி விட்டாரே என கோபம் அடைந்தார்.


      கிருஷ்ணரின் அந்த போதனையினால் கவரப்பட்ட மக்கள் காலம் காலமாக பழக்கத்தில் இருந்த மரபு வழிபாட்டு முறைகளை ஏற்றுக் கொள்ளத் தயங்கி மாறுதலான எண்ணம் கொள்ளத் துவங்கினார்கள். அதனால் கோபமுற்ற இந்திரன் தன்னுடைய சக்தியை எடுத்துக் காட்டவும், தன்னை ஆராதிக்காதவர்களை தாம் கடுமையாக தண்டிப்பேன் என்பதை நிலை நாட்டவும் அந்தப் பகுதி முழுவதும் மூழ்கி விடும் அளவிற்கு திடீர் என கடும் மழையை பொழிவிக்க வைத்தார். காட்டாறு போல சீறிக்கொண்டு வந்த மழை ஊரையே அழித்து விடுமோ என்ற அச்சத்தை தரும் வகையில் தொடர்ந்து பெய்யத் துவங்க அதனால் அச்சமுற்ற மக்களை சாந்தப்படுத்தினார் கிருஷ்ணர். கோவர்த்தன மலையை அடியோடு பெயர்த்து எடுத்தார். அதை அந்த முழு பூமியின் மீது குடைப் போல தூக்கிப் பிடித்தார். பெய்த அனைத்து மழையும் வாய்க்காலில் வழிந்தோடிய வெள்ளம் போல அங்காங்கே இருந்த நதிகளிலும் கடலிலும் சென்று கலந்தன. பிருந்தாவனத்துக்கு எந்த குறையுமே ஏற்படவில்லை. பல காலம் தொடர்ந்து பொழிந்த மழை பெய்ய, அந்த மழை நிற்கும் வரை கிருஷ்ணர் கோவர்த்தன மலையை கீழே வைக்கவே இல்லை.

      கோபத்தில் கொந்தளித்து போயிருந்த இந்திரன் இதையெல்லாம் பார்த்தான். கோபம் ஒருவனின் கண்களை மறைக்கும்போது அவனது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய மனமும் சிந்தனைகளை செய்யாது. அந்த இயல்பின்படி பெரும் மழையை பொழிவித்து அதன் மூலம் கோர தாண்டவம் ஆடிக் காட்டிய இந்திரன், எந்த ஒரு சலனமும் இன்றி மக்கள் பாதுகாப்பாக காக்கப்படுவதை கண்டான். இது சாமான்யமான ஒரு மனிதனால், அதுவும் ஒரு சிறு வயது பாலகனால் செய்யக்௬டிய செயலல்ல என்பதினால் இதை செய்துள்ள பாலகன் தெய்வீக அம்சமாகவே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தான். அந்த தெய்வீக அம்சத்தின் கோபத்திற்கு மேலும் ஆளாகாமல் இருக்க முடிவு செய்த இந்திரன் வேறு வழி இன்றி மழைப் பொழிவதை நிறுத்தினார். கிருஷ்ண அவதாரம் யார் என்பதை கண்டறிந்தார். மகாவிஷ்ணுவிடம் சென்று மன்னிப்புக் கேட்டு அவர் அவதாரமான கிருஷ்ணரை அரவணைத்துக் கொண்டார்.இந்த சம்பவத்தின் மூலமே முதன் முதலில் கிருஷ்ணர் ஒரு தெய்வீக அவதாரம் என்ற உண்மை வெளித்  தெரியலாயிற்று என்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

      இந்திரனுடனான கிருஷ்ணரின் பகைக் குறித்து இலங்கையில் பேராதனைப் பல்கழகத்தை சேர்ந்த பேராசிரியரான தில்லைநாதன் என்பவர் கிருஷ்ண வழிபாடு என்பதில் புராணங்களில் காணப்படும் ஒரு முக்கியமான குறிப்பை எடுத்துக் காட்டி உள்ளார். அதில் அவர் எழுதி  உள்ளார் ''கிருஷ்ண என்ற பெயர் முதலில் குறிப்பிடுவது இந்திரனைப் போற்றும் இருக்வேத வாக்கியமொன்றிலாகும். கிருஷ்ணனின் மனைவியரை இந்திரன் கொன்றோழித்ததாகவும், அதன் பின் 50,000 கிருஷ்ணர்களை இந்திரன் கொன்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அந்த கிருஷ்ணர்கள் இருக்வேதப்படி ராக்ஷசர்கள் ஆவர். ஆரியர்கள் இந்திரனை பிரியத்தோடு தம் தலைவராக கொண்டாடியமையும், தங்களது ஆதிக்கத்தை எதிர்த்து நின்றவர்களை ராட்ஷசர் என்றும் அசுரர் என்றும் அவர்கள் கருதினார்கள்''.

      இந்தக் கூற்று எந்த அளவில் உண்மையாக இருக்க முடியும்?  இந்த யுகத்தில் இருந்தது ஒரே ஒரு கிருஷ்ணர் மட்டுமே.  ஒருவேளை அவருக்குப் பிறந்த வாரிசுகள் கிருஷ்ணர்கள் எனக் கூறப்பட்டு இருந்தனவோ என்றால் அதுவும் இருக்க முடியாது. கிருஷ்ணருக்கு இருந்தது 16108 மனைவிகள் மட்டுமே. சிவபெருமானின் அருளினால் கிருஷ்ணருக்கு இருபதுக்கும் குறைவாக வாரிசுகள் பிறந்தன. அவர்கள் அனைவருமே எட்டு அஷ்டபார்யா என அழைக்கப்பட்ட எட்டு மனைவிகள் மூலமே பிறந்தன எனும்போது எப்படி இந்திரனால் 50,000 கிருஷ்ணர்களைக் கொன்று இருக்க முடியும்? சிவபெருமானின் அருளினால் கிருஷ்ணருக்கு பிறந்த ஒரு மகன் மூலமே அவர்  அவதரித்த யாதவ வம்சத்தையும்  கிருஷ்ணரே அழித்துக் கொண்டக் கதை தனிக் கதை.

      ஆகவே இதைப் பார்க்கும்போது இந்திரன் கொன்றதாக கூறப்படுவது கிருஷ்ணரை அல்ல என்பது விளங்கும்.  அப்படி என்றால் இந்திரன் கொன்றதாக கூறப்படும் கிருஷ்ணர்கள் யாராக இருக்க முடியும்? இந்த பூமியிலும், தேவ லோகத்திலும் கூட யாதவ குலத்தினரைத் தவிர வேறு குலங்களை சார்ந்த பல அசுரர்களும், அரக்கர்களும் கூட கிருஷ்ணரின் வழிவந்தவர்கள் எனக் கூறிக் கொண்டு இருந்துள்ளவர்கள். அவர்கள் தம்மை கிருஷ்ணர்கள் என அழைத்துக் கொண்டு உள்ளதான சில குறிப்புக்களும் கிராமியக் கதைகளில் காணப்படுகின்றன. பல கட்டங்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நிகழ்ந்துள்ளன. பல தேவலோக யுத்தங்களில் அசுரர்கள் மற்றும் அரக்கர்களுக்கு எதிராக இந்திரன் தேவர்களுக்காக போரிட்டு உள்ளார். அந்த யுத்தங்களில் பெருமளவில் அசுரர்களும், அரக்கர்களும் மரணம் அடைந்துள்ளார்கள். அந்த யுத்தங்களில் கிருஷ்ணர்கள் எனக் கூறிக் கொண்டிருந்த அசுர கும்பலும் அடக்கம் ஆகும். ஆகவே இந்திரன் கொன்றதாக கூறப்படும் 50,000 கிருஷ்ணர்கள் என்பது கிருஷ்ணர் தங்கி இருந்த பூமியில் கிருஷ்ணர்கள் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருந்த அரக்கர்களே என்பதில் சந்தேகம் இருக்காது.


      கிருஷ்ணர் எப்படி 16,100 மனைவிகளை மணந்தார் ? இது முறையா என்ற கேள்வி எழலாம். கிருஷ்ணரும் இந்திரனும் நேருக்கு நேர் போரிடவில்லை. கோவர்த்தன மலையைத் தூக்கி நின்றவாறு இந்திரனின் கர்வ பங்கத்தை கிருஷ்ணர் அடக்கியதால் எழுந்த கோபம் சில காலமே நீடித்தது. அதன் பின்னர் அதே இந்திரன் நரகாசுரனை அழிக்க கிருஷ்ணரின் துணையை நாடினார். கிருஷ்ணரும் நரகாசுரனை அழித்து விட்டு அவன் சிறை பிடித்து வைத்திருந்த 16,100 பெண்களை சிறை மீட்டார். அவர்கள் வெகு காலம் சிறையில் இருந்ததினால் அவர்களை மீண்டும் மரியாதை தந்து ஏற்க சமூகம் விரும்பவில்லை என்பதினால் அஷ்டபார்யா என அழைக்கப்பட்ட எட்டு மனைவிகளான ருக்மணி, சத்‌தியபாமா, சம்பவதி, நாக்னஜிதி, காலிந்தி, மித்ரவிந்தா, பத்ரா, லக்ஷ்மணா என்பவர்களைத் தவிர தான் விடுதலை செய்த அந்த 16,100 பெண்களையும் கிருஷ்ணர் சுதேசி மனைவிகளாக மணந்து கொண்டார். கிருஷ்ணர் நரகாசுரனை கொன்ற பிறகு அப்பெண்களை அவர்களின் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அனைவரையும் கிருஷ்ணர் மணக்கவில்லை என்றால் அவர்களை சமுதாயம் ஒதுக்கி வைத்து விடும். அவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக நரகாசுரனின் மாளிகையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள். அவர்கள் சரீரத்தினால் வேறெந்த விதங்களிலும் துன்புறுத்தப்படவில்லை என்றாலும் கூட அதை உணராமல் அவர்களது தூய்மையான கற்பை சமுதாயம் ஏற்காமல் அவர்களை தள்ளி வைத்து விடும் என்ற உணர்வு கிருஷ்ணருக்கு இருந்தது. ஆகவேதான் இந்த முடிவை எடுத்த கிருஷ்ணர் அவர்களை பெயரளவுக்கு மணந்து கொண்டார் .

      அதே சமயத்தில் கிருஷ்ணரோ அந்த மனைவிகளுடன் வேறெந்த தொடர்பையும் வைத்துக் கொள்ளாமல் அவர்களுக்கு புதிய அரண்மனை கட்டி ஒரு மரியாதையான இடத்தில் அவர்களை வாழ வைத்து வழி காட்டினார். நாதியற்று, சமூகத்தினரால் விலக்கி வைத்திருந்த நிலை தோன்றியபோது அந்தப் பெண்களை கிருஷ்ணர் தானே மணந்து கொண்டு அவர்களுக்கு தங்க மாளிகை கட்டிக் கொடுத்து அதில் தங்க வைத்து அவர்கள் வாழ்விற்கு ஒரு அர்த்தமும், சமூகத்தில் மரியாதையையும் கொடுத்தார். அதன் பின் அவர்களைக் குறித்த வேறு எந்த குறிப்புக்களுமே புராணங்களில் காணப்படவில்லை. ஆகவே கிருஷ்ணருக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள் இருந்ததின் காரணம்  இதுதான்.


      கிருஷ்ணரின் திருமண வாழ்க்கை குறித்தும் சில முரண்பாடுகள் இருந்துள்ளன. கிருஷ்ணர் மணந்து கொண்ட மனைவிகளில் முக்கியமானவர்கள் ருக்மணி மற்றும் சத்யபாமா என்பவர்களே என்றாலும் ராதை என்பவரும் கிருஷ்ணரின் வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகித்து உள்ளார். ராதையை கிருஷ்ணர் மணந்து கொண்டதான விளக்கம் இல்லை என்றாலும் ராதை என்பவர் கிருஷ்ணரின் அந்தரங்க ஆலோசகர் என்றும், நல்ல நண்பர் என்றும், ராதையே கிருஷ்ணரின் உண்மையான சக்தி என்றும் வைஷ்ணவ சமுதாயத்தின் ஒரு பிரிவினர் ஏற்றுக் கொண்டார்கள்.

      கிருஷ்ணரின் அந்தரங்க சக்தியாக ராதா இருக்கலாம் என்று கருதும் நிம்பர்கர் எனும் சம்பிரதாயம் மற்றும் அதைப் பின் தொடர்ந்து வந்த கௌடிய வைஷ்ணவப் பாரம்பரியத்தின் அங்கமான சைதன்ய மஹாபிரபு என்ற இரு பிரிவினரின் நம்பிக்கையிலும்  ராதா மிகப் பெரிய பெண் தெய்வமாகக் கருதப்படுகிறார். கௌடிய வைஷ்ணவப் பிரிவினர் ராதாவை பெண் தெய்வம் என்றும், கிருஷ்ணரும் ராதாவும் ஒரே தெய்வம் என்றும், அந்த இருவரும் இணை பிரிக்க முடியாத ஒரே சக்தி என்றும் நம்புகிறார்கள்.

      வைஷ்ணவர்களை பொருத்தவரை அவர்கள் கிருஷ்ணருடைய திருமணம் குறித்து இரண்டு விதமான கருத்துக்களைக் கூறி உள்ளார்கள். அந்த உறவு இரண்டு வகைகளிலானது. முதலாவது 'ஸ்வாக்ய-ரஸா'அதாவது திருமண நிலை. இரண்டாவது 'பராகியா-ரஸா'அதாவது அன்பைக் குறிப்பிடும் உறவு முறை.

      நிம்பர்க்கர் சம்பிரதாயத்தில் கிருஷ்ணருடனான ராதாவின் உறவு முறையை ஸ்வாக்கிய-ரஸா நிலை என்று கருத, கௌடிய பாரம்பரியம் ராதா மற்றும் கிருஷ்ணரின் உறவை பராகியா-ரஸா எனவும்  கருதுகிறார்கள்.

      பாகவத புராணத்தில், ராதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அந்த நூலின் பத்தாவது அத்தியாயத்தில் கிருஷ்ணரின் இளம் பருவத்தில் கோபியர்களுள் குறிப்பிட்ட ஒருவருடன் மனதார விளையாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் வெளி வந்த கீத கோவிந்தம் என்ற நூலில் ராதாவைப் பற்றிய செய்தி சற்று விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.

      கீத கோவிந்தம் எனும் கோபியர் பாடல் பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்ட காவியம் ஆகும். இதனை கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் என்பவர் இயற்றி உள்ளார். பக்தி இலக்கியத்தின் சமஸ்கிருத காவியங்கள் இரண்டு வகைப்படும். அவை சாதாரண காவியம், மற்றும் மஹா காவியம் என்பன ஆகும். இந்த இரு வகை காவியங்களில் கீத கோவிந்தம் என்பது மஹா காவியம் வகையைச் சார்ந்ததாகும். இந்தக் காவியத்தில் ராதை, கிருஷ்ணன், சகி ஆகிய மூவரே முக்கியமான கதாபாத்திரங்களாக காட்டப்பட்டு உள்ளார்கள். இந்த காவியத்தில் கிருஷ்ணனை பரமாத்மாவாகவும், ராதையை ஜீவாத்மாவாகவும், சகியை ஞான குருவாகவும் வெளிப்படுத்தி, ஜீவாத்மாவானது பரமாத்மாவை அடைய முயலும் நிலையை அந்த பாத்திரங்கள் மூலம் விளக்கிக் காட்டி உள்ளதாக நம்புகிறார்கள்.

      சத்தியபாமா கிருஷ்ணரின் அஷ்ட மனைவியருள் ஒருவர். இவரே பூமாதேவியின் அம்சமாக கருதப்படுபவர். கிருஷ்ணருக்கும் நரகாசுரனுக்கும் நடந்த போரில் ஒரு பெண்ணால்தான் தனக்கு மரணம் நேரவேண்டும் என்று நரகாசுரன் வரம் பெற்று இருந்ததினால் சத்தியபாமா கிருஷ்ணனின் தேரோட்டியாக சென்று நரகாசுரரை வதம் செய்தார் என்ற நம்பிக்கையை சில வைணவ நூல்களில் காணலாம்.

      அதே போல விதர்ப்ப நாட்டு மன்னரின் மகளும், தன்னுடைய விருப்பம் இன்றி சிசுபாலனுடன் நிச்சயிக்கப்பட்டு இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி தன்னைக் காப்பாற்றி மணந்து கொள்ளுமாறு கிருஷ்ணரை வேண்டிக் கொண்டு கிருஷ்ணரை மணந்து கொண்ட ருக்மணியே கிருஷ்ணரின் முதன்மை மனைவி என்றும் அவர் லட்சுமி தேவியின் அம்சமானவர்  எனவும் வைஷ்ணவர்களினால் கருதப்படுகிறார்.

      கிருஷ்ணனுக்கு ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரவிந்தா, நக்னாஜிதா, பத்ரா மற்றும் லக்ஷ்மணா என்று அஷ்ட மனைவிகள் இருந்தாலும், ஆலயங்களில் கிருஷ்ணர், ருக்மிணி-சத்யபாமா சமேதராகவே எழுந்தருளியிருப்பது வைஷ்ணவ  மரபாகும். ஆனால் பல வடநாட்டு வைஷ்ணவ சம்பிரதாயங்களில் கிருஷ்ணரை ராதாவுடன் இணைத்தே பூஜிக்கிறார்கள்.

      அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பூமியிலே அவதரித்து வருவேன் என்பதாக கிருஷ்ணர் கூறியது கிருஷ்ணருடைய வாக்கல்ல. கிருஷ்ணருடைய வாய் மூலம் விஷ்ணுவே கூறினார். பகவான் விஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுக்க முடிவெடுத்ததின் முக்கியமான காரணம் கீழ் காணும்  புராணக் கதையில் கூறப்பட்டு உள்ளது.


      ஒரு முறை மஹா விஷ்ணுவிடம் சென்ற பூமாதேவி  குறைப்பட்டுக் கொண்டாள் 'அனைத்தையும் அறிந்தும், அறியாதவர் போல சயனித்து இருக்கும் பரமாத்மனே, நான் சுமக்கும் பூமியின் மீது நடைபெறும் பாவ சம்பவங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு என்னால் இருக்க முடியவில்லை. தினம் தினம் தொடர்கதை போல தொடர்ந்து கொண்டு உச்ச கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் அந்த அக்கிரம நிகழ்வுகளை நீங்கள்தான் தடுத்து நிறுத்தி என் மனபாரத்தைக் குறைக்க வேண்டும்'.

      அவள் குறையைக் கேட்ட நாராயணனும் பூமாதேவியை சில காலம் பொறுமையாக இருக்குமாறும், தக்க நேரத்தில் தான் பூமியிலே தோன்றி அவற்றை தடுத்து நிறுத்த  தேவையான நடவடிக்கை எடுப்பதாக அவளுக்கு உறுதி கூறினார்.

      அதன் பின்னரும், பல காலம் கடந்தும், பூமியிலே நிகழ்ந்து வந்த அக்கிரமங்களுக்கும், பாவச் செயல்களுக்கும் குறைவே இல்லை. ஆகவே பல காலம் பொறுமையாக இருந்த பூமாதேவி மீண்டும் விஷ்ணுவை சந்தித்து அவரிடம் கேட்டாள், 'நாராயணா, நீங்கள் கூறியதைப் போல இன்று வரை பொறுமை காத்து நிற்கிறேன். ஆனால் இனியும் பாவாத்மாக்கள் செய்யும் கொடுமைகளை தாங்கிக் கொண்டு நிற்கும் சக்தி எனக்கில்லை. நான் சுமக்கும் பூமி மீது பாவாத்மாக்கள் மட்டுமா உள்ளார்கள்? அவர்களைத் தவிர நல்லவர்களும், புண்ணியாத்மாக்களும் எத்தனைக் கோடி உள்ளார்கள். அவர்களைக் காக்கும் பொறுப்பும் எனக்கில்லையா? ஒன்று தீயவர்களை அழிக்க தக்க உபாயம் செய்யுங்கள்....இல்லை என்றால் நானே என்னை அழித்துக் கொண்டு அனைவரையும் அழிக்க வகு வகுத்து விடுவேன்'எனக் கோபமாகக் கூறினாள். அதைக் கேட்ட நாரதர் பயந்து போனார். பூமித் தாய் தன்னை அழித்துக் கொண்டால் மீண்டும் பிரும்மன் படைத்த உலகமே அல்லவா அழிந்து விடும் என்பதினால் ஓடோடிச் சென்று பரமாத்மனிடம் அந்த செய்தியைக் கூற சிவனும் கொதித்தெழுந்தார்.

      சிவனும், பிரம்மனும் முன்னே செல்ல அவர்களை பின் தொடர்ந்து சென்ற மற்ற தேவர்களும் பூமாதேவியை சந்தித்து அவளை தம்முடன் அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் சென்றார்கள். அதற்கு முன்னதாக விஷ்ணுவும் ராமாவதாரத்தை எடுத்து முடித்துக் கொண்ட களைப்புடன் சயனத்தில் இருந்திருந்தார் என்பதினால் பல காலம்வரை அவரை யாருமே தொந்தரவு செய்யாமல் களைப்பு ஆறும்வரை சயனித்து இருக்கட்டும் என்று எண்ணி இருந்தார்கள். இந்த நிலையில் பூமாதேவியின் நிலையைக் கூற அவர்கள் அனைவரும் விஷ்ணுவிடம் செல்லவும்  அங்கு விஷ்ணு காணப்படவில்லை. அவர் பூலோகம் சென்று பாலராமராக அவதரித்து விட்டார் என்ற செய்தி கிடைத்தது. அனைவரும் அதிர்ந்து நின்றார்கள்.


      அந்த நேரத்தில் ஒரு குரல் ஒலித்தது. 'நீங்கள் யாரும் கிருஷ்ண அவதாரம் எடுக்க வேண்டிய நான் ஏன் முதலில் பலராமர் அவதாரம் எடுத்தேன் என்பதைக் குறித்து யோசனை செய்ய வேண்டாம். அதற்கு சின்ன காரணம் ஒன்று உள்ளது. பலராமர் வேறு யாரும் இல்லை. என் அனைத்து அவதாரங்களிலும் எனக்கு யாராவது உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய சக்தியைக் கொடுத்து நானே படைத்து வைத்துள்ள ஆதிசேஷனின் மறு உருவாகும். நான் எடுக்கும் ஒவ்வொரு அவதாரத்திலும் எனக்கு துணையாக இருக்க ஆதிசேஷனை ஏதாவது ஒரு உருவில் படைக்க வைத்து, என்னுடன் அழைத்துச் செல்வது என் பழக்கம். அதனால்தான் முதலில் நான் என் சக்தியுடன் கூடிய ஆதிசேஷன் மூலம் பலராமனாக அவதரித்தேன். அதன் பின் அவருடைய சகோதரனான கிருஷ்ணராக அவதரிக்க எண்ணியே அப்படி செய்தேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் என்னுடைய சக்தியைக் கொண்டு நான் ஒரே நேரத்தில் பல அவதாரங்களை எடுக்க முடியும். ஆகவே கவலை இன்றி அனைவரும் செல்லுங்கள். நான் விரைவில் கிருஷ்ணராக அவதரிக்க உள்ளேன்'. அதைக் கேட்ட அனைவரும் திருப்தி அடைந்து திரும்பிச் சென்றார்கள். விரைவில் தான் கூறியபடியே பூமியிலே வாசுதேவர்- தேவகிக்கு குழந்தையாக விஷ்ணுவும் கிருஷ்ணராக அவதரித்தார்.

      இப்படியாக பூமியிலே அவதரித்த கிருஷ்ணரே மகாபாரத யுத்தத்தின் முக்கிய நாயகராக காட்டப்பட்டார். இதனால்தான் வேதங்களுக்கு பிற்பட்ட காலத்தில்தான் கிருஷ்ணர் அவதரித்து உள்ளார் என்ற கூற்று வலுப்படுகிறது. பகவத் கீதையில் யாகங்களுக்கும், ஹோமங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படாமல், அவரவர் செய்ய வேண்டிய கடமைகளை கிருஷ்ணர் எடுத்துரைத்தார். ஒருவர் தன் மீது நம்பிக்கைக் கொண்டு தாம் ஆற்ற வேண்டிய கடமையை செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை எடுத்துரைக்க, தாம் அவதரித்ததின் காரண காரியத்தை வெளிப்படுத்த, கண்ணன் என அழைக்கப்பட்ட சிறு வயதிலேயே இந்திரனுக்கான ஆஹூதியை தடுத்து நிறுத்தி யாதவர்களுக்கு போதனை செய்ததின் மூலம் பகவத் கீதையின் சாராம்சத்தை வெளிப்படுத்தி வைத்தார்.

      கிருஷ்ண வழிபாடு பரவலாக இந்தியாவில் எப்போது துவங்கியது ?

      ராதா கிருஷ்ணா ஆலயம்,  டேராடூன் 
       
      நிம்பர்க்கர் என்பவர் ராதாவைப் பற்றிய கொள்கைகளை எங்கும் பரவச் செய்த முதல் வைஷ்ணவ ஆச்சார்யர் ஆவார். அவரும் வடநாட்டை சேர்ந்தவரே. பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில்தான் பக்தி இயக்கங்கள் மூலம் கிருஷ்ணர் வழிபாடு உச்சத்தை அடைந்தது. இந்தியாவில் வடபகுதியில் இருந்த ஒரிசாவில் ஜெகன்னாதர், ராஜஸ்தான், மஹாராஷ்டிராவில் விதோபா மற்றும் விட்டலா என கிருஷ்ண உருவங்கள் பல வடிவங்களில் உருவாக்கப்பட்டு வழிபடப்பட்டன.  தென் இந்தியப் பகுதியில் சற்றே குறைந்த அளவில் கர்நாடகப் பகுதி, கேரளா மற்றும் இலங்கை போன்ற இடங்களிலும், வடநாட்டின் பல பகுதிகளிலும் கிருஷ்ண வழிபாட்டில் பல ஆலயங்கள் எழுந்தன.
      ஸ்வாமி நாராயணன் ஆலயம், குஜராத் 

      ஆனால் தென் நாட்டைப் பொருத்தவரை  தமிழகத்திலும்,ஆந்திராவிலும் சைவம் என்றால் சிவன் என்றும், வைஷ்ணவர்கள் என்றால் விஷ்ணு என்ற பேதத்திலேயே தெய்வ வழிபாடுகள் இருந்து சிவனும், விஷ்ணுவும் வழிபடப்பட்டார்களே தவிர பண்டைக் காலம் தொட்டு பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை கிருஷ்ணர் வழிபாடு அதிகமாக காணப்படவில்லை. இரண்டாயிரம் அல்லது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டுள்ள அல்லது வழிபடப்பட்டுள்ள எந்த ஒரு ஆலயத்திலும் கிருஷ்ண வழிபாடோ அல்லது கிருஷ்ணருக்கான சன்னதியோ இல்லை என்பதில் இருந்து இந்த உண்மை விளங்கும். பதினைந்தாம் நூற்றாண்டுவரை கிருஷ்ணருக்கென்ற தனி ஆலயமே நகர்புறத்திலோ இல்லை கிராமப்புறத்திலோ கூட இல்லாமல் இருந்தது. அப்படி கிருஷ்ணர் ஆலயம் இருந்தாலும் அவை முதன் முதலில் விஷ்ணுவின் ஆலயமாகவே காணப்பட்டன. அதன் பின்னரே கிருஷ்ணருக்கு சில மன்னர்கள் காலத்தில் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன.  ஆனால் தென் பகுதியில் தமிழ்நாட்டை ஒட்டி இருந்திருந்த அன்றைய இலங்கை தீவில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கிருஷ்ணர் ஆலயம் இருந்துள்ளது என்கிறார்கள்.

      உடுப்பி கிருஷ்ணர் ஆலயம்

      பிற்காலத்தில் அதாவது கடந்த 2000 ஆண்டுகளுக்குள் தென் பகுதியில் தமிழ்நாட்டில் கிருஷ்ண பரமாத்மாவுக்கு பல ஆலயங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் அற்புதமான பரிகார தலங்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ண மங்கை, கபிஸ்தலம் ஆகிய ஐந்து தலங்களும் பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்ற சிறப்புப் பெற்றவை என்றாலும் வட இந்தியாவில் காணப்படும்  பரவலான கிருஷ்ண வழிபாடு தென் இந்தியப் பகுதிகளில் இல்லை என்பது தவிர்க்க முடியாத உண்மை  ஆகும்.

      Raghuvamsam - 1

      $
      0
      0
      ரகுவம்சம்-1
      - சாந்திப்பிரியா -
      காலம் மாறிக் கொண்டே இருந்தாலும், எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் தமிழ் மற்றும் சமிஸ்கிருத மொழிகளில் அற்புதமாக எழுதப்பட்டு உள்ள சில காவியங்கள் மட்டும் பெருமையுடன் இன்றும் பேசப்படுகின்றன. அவற்றில் தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி மற்றும் வடமொழியில் காளிதாசன் இயற்றிய குமார சம்பவம், ரகுவம்சம், பாரவியின் கிராதார்ஜுனீயம், மாகரின் சிசுபாலவதம், மற்றும் ஸ்ரீ ஹர்ஷரின் நைஷத சரிதம் ஆகியவை முக்கியமானவை ஆகும். தமிழ் மற்றும் வடமொழியில் உள்ள அந்த ஐந்து நூல்களும் ஐம்பெருங் காப்பியங்கள் என போற்றப்படுகின்றன.

      ரகுவம்ச காவியம் என்பது என்ன? ராமாயணத்தில் கூறப்படும் ராமபிரானின் வம்சாவளியினரே ரகுவம்சத்தின் கதாநாயகர்கள். சூரியனிடம் இருந்தே இந்த வம்சம் தோன்றியது என்றும் ராமபிரானுடைய மூதையோர் யார், அவர்கள் எப்படி ராமபிரானுடைய வம்சத்தை உருவாக்கி வளர்த்தார்கள், ராமருடைய மறைவுக்குப் பின்னர் அவர் வம்சம் தழைத்ததா, அவர்கள் சிறப்புக்கள் என்பதெல்லாம் என்ன என்பதை விளக்குபவையே ரகுவம்சக் காவியம் ஆகும். ரகுவம்சத்தின் மூலம் ராமபிரானுக்கு முன் காலத்திலேயே வசிஷ்ட முனிவர், கௌஷக முனிவர் போன்றவர்கள் இருந்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

      வடநாட்டில் பெரும் புகழ் பெற்றவர் காளிதாசர். அவர் பிறப்பும், வாழ்கையும் குறித்த செய்திகள் சரிவரத் தெரியவில்லை என்றாலும், அவர் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தவர் என்பது புலனாகிறது. கல்வி அறிவே இல்லாமலிருந்த காளிதாசர் ஒருநாள் உஜ்ஜயினி காளி தேவியின் கருணை பெற்று முறையாகக் கல்வி கற்றவர்களையும் மீறிய அளவில் சமிஸ்கிருத மொழியில் பாண்டித்தியம் பெற்று, நிரரில்லாத அறிவாற்றல் பெற்று, பல அற்புதமான காவியங்களை இயற்றினார். அவை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தன.  ரகுவம்சக் காவியத்தை எதற்காக காளிதாசர் எழுதினர் என்பது குறித்த செய்தி இல்லை. சமிஸ்கிருத மொழியில் காளிதாசரால் எழுதப்பட்டிருந்த ரகுவம்சம் எனும் மூல நூலில் 25 காண்டங்கள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் 19 காண்டங்களே புலவர்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. மற்ற ஆறு காண்டங்களில் கூறப்பட்டுள்ள மன்னர்கள் யார் என்பதோ, இல்லை அவை எதை வெளிப்படுத்தின என்பதோ தெரியவில்லை. இதில் இரண்டு ஆச்சர்யமான செய்திகள்  என்னவென்றால் முதலாவதாக காளிதாசர் எழுதியதற்கு முன்னர் இருந்திருந்த ராமபிரானின் வம்சாவளியினர் யார், யார் என்பதைக்  குறித்து  எவருமே எழுதியதாக தெரியவில்லை.  இரண்டாவதாக காளிதாசருக்கு எப்படி ராமபிரானின் வம்சாவளியினர் யார், யார் என்பதும், அவர்களது வரலாறும் தெரிந்திருந்தது என்றும் விளங்கவில்லை. 

      இதில் இன்னொரு ஆச்சர்யமான செய்தி என்னவென்றால் பத்தாம் நூற்றாண்டில் சமிஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டு உள்ள ரகுவம்சம் எனும் அந்த அற்புதமான காவியத்தை 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக தமிழில் மொழிபெயர்த்து எழுதி உள்ளார்கள் என்பதும், அதை முதன் முதலில் தமிழில் எழுதியவர் இலங்கையை சேர்ந்த மன்னனான அரசகேசி என்பதைக் கேட்கும்போதும் சற்று வியப்பை தரும். அந்த காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராஜசேகர சிங்கையாரிய சக்கரவர்த்தி எனும் பரராஜசேகரன் என்பவரே இந்த நூலை தமிழில் இயற்ற துணையாக இருந்து அதை எழுதியவரை ஊக்குவித்தார் என்றும் கூறுகிறார்கள்.  அது மட்டும் அல்ல தமிழில் அரசகேசரி எழுதிய ரகுவம்சக் காவியம் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூரை ஆண்டு வந்திருந்த ரகுநாத நாயக்கர் எனும் அரசரின் சபையில்தான் முதன் முதலாக படிக்கப்பட்டு அரங்கேறியது என்றும் ஒரு செய்தி உண்டு.  இதில் இருந்து இன்னொரு விஷயமும் நமக்கு தெளிவாகிறது. இந்தியாவும், இலங்கையும் ஒரு காலகட்டத்தில் ஒன்றாக இருந்துள்ளன. தென் பகுதியில், இலங்கையையும் சேர்த்தே தமிழ் மொழி சிறப்புற்றுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக தமிழில் எழுதப்பட்டு உள்ள பல  நூல்களைக்  காணும்போது தமிழ்நாட்டை விட இலங்கையில் அதிக தமிழ் படைப்புக்கள் படைக்கப்பட்டு உள்ளன, தமிழ்நாட்டை சேர்ந்த பகுதிகள் மற்றும் இலங்கையின் பகுதிகள் இரண்டையுமே தமிழர்கள் ஆட்சி செய்து வந்துள்ளார்கள் என்பதெல்லாம் கண்ணாடி பிம்பம் போல தெரிகிறது.

      ரகுவம்சம் என்பதின் சாரம் என்ன என்றால் பிரபஞ்சம் படைக்கப்பட்டபோதே முதலில் அவதரித்த மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணு பத்து அவதாரங்களை பூலோகத்தில் எடுத்து தீய சக்திகளை அழிக்க வேண்டும் என்பது விதியாக வைக்கப்பட்டு இருந்துள்ளது.  அந்த பத்து அவதாரத்தில் ஆறாவது அவதாரத்தில் பிராமணப் பிரிவை சேர்ந்த பரசுராமனாக அவதரித்து ஷத்திரியர்களைக் கொல்வதும், ஏழாவது அவதாரத்தில் ஷத்திரியப் பிரிவை சேர்ந்த ராமனாக அவதாரம் எடுத்து பிராமணப் பிரிவை சார்ந்த ராவணனைக் கொல்வது,  மற்றும் கௌதம புத்தராக அவதரித்து தாழ்ந்த பிரிவினரையும் மற்ற பிரிவினருக்கு சமனானவர்களாக மாற்றுவது போன்றவை முக்கியமானவை. இதன் மூலம் பிரும்மா படைத்திருந்த நான்கு வர்ணங்களான பிராமணன், ஷத்ரியன், வைசியர், சூத்திரர் என்பதில் எந்தப் பிரிவினருமே உயர்ந்தவர் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. அனைவருமே தெய்வ நாடகத்தின் அங்கங்களே என்பதைக் காட்டும் நாடகம் ஆகும் .

      நிற்க, மகாவிஷ்ணு அவதரித்த ராமாவதாரத்தை விளக்குவதே ரகுவம்சம் ஆகும். மகாவிஷ்ணு பூலோகத்தில் மானிடப் பிறவியான ராமராக அவதரிக்க எத்தனைப் பிறவிகள் காத்திருக்க வேண்டி இருந்தது, அதற்க்கு முன்னர் என்ன பிரிவுகளை அவர் உருவாக்க வேண்டி இருந்தது என்பதையெல்லாம் மறைமுகமாக விளக்குகிறது ரகுவம்சம். இதில் காளிதாசர் எழுதிய ரகுவம்சம் கதை அல்ல, அதற்கும் மேற்பட்டக் காவியம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தெய்வ அருளைப் பெற்று இருந்த காளிதாசர் அந்த தெய்வங்களின் அவதாரங்களை மனதார அறிந்திருக்கிறார், அதனால்தான் அவரால் ராமருடைய முன்னோர் மற்றும் சந்ததியினரின் வரலாற்றை காவியமாக எழுத முடிந்துள்ளது. காளிதாசர் இல்லை என்றால் ராமருடைய வம்சத்தைப் பற்றியும், அவருடைய அம்சத்தையும் குறித்து யாரால் அறிந்திருக்க முடியும்?

      ராமபிரானின் பரம்பரையை அறிந்து கொள்ள ரகுவம்ச காவியத்தைப் படிக்க வேண்டும். ஆனால் ராமாவதாரத்தைப்  படிக்கும் முன்னர் ராமருடைய பரம்பரை அதாவது இஷ்வாகு பரம்பரை  தோன்றிய  துவக்கத்தையும் அறிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் ஒவ்வொரு மனித அவதாரத்தையும் தெய்வங்கள் எடுத்தபோது என்னென்ன செய்து ஒரு குறிப்பிட்ட வம்சத்தில் அவர்கள் அவதரித்தார்கள் என்பதின் அர்த்தம் புரியும்.

      விஷ்ணு புராணத்தின்படி  இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பிரும்மாவின் கட்டை விரலில் இருந்து தோன்றியவர் தக்ஷபிரஜாபதி   ஆவார்.   அவருடைய மகள்  அதிதி என்பவளின் மகனே சூரிய பகவான் ஆவார். சூரியனாருக்குப் பிறந்த மகன் மனு எனும் அரசன்.  அவர் தழைத்த வம்சம் சூரியவம்சம் என அழைக்கப்பட்டது. சூரிய வம்சத்தின் பிரபலமானவர்கள் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதன், வசிஷ்ட முனிவர், சத்தியத்தை காத்த ஹரிச்சந்திரன், முல்லைக்கு தேர் கொடுத்த  சிபி மன்னன் மற்றும்  சாகரா போன்றவர்கள் ஆவர். சூரியனின் மகன் மனுவிற்கு அறுபது மகன்கள் பிறந்து இருந்தாலும் அவர்களுக்குள்ளேயே  எழுந்த பகையினால் அவர்களில் ஐம்பது மகன்கள் மாண்டார்கள். மீதி வாழ்ந்திருந்த பத்து மகன்களில் ஒருவரே இஷ்வாகு என்பவர்.   இப்படியாக சூரிய வம்சத்தின் முதல் மன்னனாக பூமியிலே த்ரேதா யுகத்தில் சூரியனின் பேரரான இஷ்வாகு  எனப்பட்டவர் ஆட்சியில் அமர்ந்தார்.  அது முதல் இஷ்வாகுவை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்களை  இஷ்வாகு பரம்பரை என்று அழைத்தார்கள்.  அவர்கள் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள் என்றாலும்  இஷ்வாகுவை தொடர்ந்து அடுத்தடுத்து பதவிக்கு வந்த பரம்பரையை  அவர் பெயரிலேயே அமைந்த இஷ்வாகு ராஜவம்சம் என்றே அழைத்தார்கள். சராயு நதிக்கரையை ஒட்டி இருந்த கோசல நாட்டை ஸ்தாபனம் செய்து  அயோத்தியாவை அதன் தலைநகராகக் கொண்டு  ஆண்டார்  சூரிய வம்சத்தின் முதல் மன்னனான  இஷ்வாகு . 

      ராமபிரான் தோன்றுவதற்கு முன்னர்  ஆட்சி செய்த இஷ்வாகு வம்சத்தை சார்ந்த  மன்னர்கள் 118 பேர் ஆவர். அந்த 118 மன்னர்களுக்கு இடையில் ராமனுக்கு முன்னர் ஆண்டு வந்திருந்த, இஷ்வாகு வம்சத்தின் 58 ஆவது மன்னனாக முடிசூட்டிக் கொண்ட  திலீபன் என்ற மன்னனின் காலத்துக்குப் பின்னரே இஷ்வாகு என்ற வம்ச ஆட்சி  மறைந்து  அந்த இஷ்வாகு வம்சத்தின் ஒரு பிரிவாக ரகுவம்சம் என்ற புது வம்சம் துவங்கியது.

      ரகுவம்சத் துவக்கம்: திலீபன் தோன்றிய வரலாறு

      ஆதியிலே மனு வம்சத்தை சேர்ந்த ஆதித்தியன் என்பவர் மகனும் அரசர்களுக்கெல்லாம் அரசராக விளங்கியவனுமான  வைவச்சுதன் எனும் அரசன் பூவுலகில் ஆட்சி செய்து கொண்டு இருந்தான். அது  இஷ்வாகு வம்சம் எனப்பட்டது.  இஷ்வாகு வழி வந்த மன்னர்கள் ஒரு சிலர் மட்டுமே இருந்தாலும், அவர்களில் ஒருவர் பின் ஒருவராக மரணம் அடைந்ததும், ஆட்சி செய்த அந்த சிலரில் ஒருவராக ஆட்சிக்கு வந்தவர்களில் முக்கியமானவர் திலீபன் எனும் மன்னன் ஆவார்.  காளிதாசர் தனது 30 ஆம் பாடலில்  கூறுகிறார் ''மனு வம்சத்தில் திடீரென பால் கடலில் இருந்து எழும் பூரண சந்திரனைப் போல திலீபன் என்றொரு மன்னன் பிறந்து ஆட்சிக்கு வந்தார்''. திலீபன் பெற்றிருந்த பெருமையைப் போல வேறெந்த அரசரும் பெறவில்லை. அவரைப் படைத்தவர் அவர் தனித்தன்மைக் கொண்ட பெருமை வாய்ந்தவராக விளங்க வேண்டும் என நினைத்தே அவரை தனிப் பிறவியாக படைத்தாரோ என்னவோ! அவருடைய மனைவியின் பெயர் சுடாக்ஷிணா என்பதாகும். அவர்களுக்கு குழந்தை பேறு கிடையாது. இத்தனைக்கும் திலீபன் உன்னதமான புருஷர், சாஸ்திரங்களிலும் புலமை, சாஸ்திர உணர்வுகளுக்கு மரியாதை, இரக்க குணம் , பகைவரானாலும் அதிலும் நல்லவர்கள் இருந்தால் அவர்களையும் மதிப்பவர் போன்ற பெருமைகளை உள்ளடக்கியவர். மகா பராக்கிரமசாலி, அவரைக் கண்டாலே எதிரிகளும் அடங்குவர் என்பதெல்லாம் அவர் பெற்று இருந்த பெருமைகளாகும். அவருக்கு குல குரு வசிஷ்ட முனிவர் ஆவார்.

      தமக்குப் பிறகு இந்த பூமியை ஆள்வதற்கு இஷ்வாகு வம்சத்தினர் யாருமே இல்லாமல் போய் விடுவார்களே என்ற கவலை கொண்ட திலீபன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு ராஜகுரு வசிஷ்டரை சந்தித்தார்.  மனைவி அருந்ததியுடன் ஆஸ்ரமத்தில் இருந்த வசிஷ்டர் திலீபனை வாழ்த்தி விட்டு அவர் தன்னைத் தேடி வந்ததின் காரணத்தைக் கேட்க திலீபன் கூறினார் 'ஸ்வாமி, நீங்களே எமது ராஜகுருவாக இருந்து எமக்கு ஏற்படும் அனைத்து தடைகளையும் விலக்கி வருகிறீர்கள். அதனால் என்னால் நிம்மதியாக நாட்டை ஆள முடிகிறது. இந்த நாட்டிலே திருடரால் பயமில்லை. தக்க நேரத்திலே பெய்யும் மழையினால் பயிர்களும் சேதம் அடைவதில்லை, அதனால் உணவுப் பஞ்சமும் இல்லை. ஆனால் ஸ்வாமி எனக்கு புத்திர பாக்கியம் இல்லை என்பதினால் எனக்குப் பின்னர் மூதையோருக்கும், எங்களுக்கும் பிண்டம் கொடுக்க நாதி இல்லை. பிண்டம் கிடைக்காத முன்னோர் கொடுக்கும் சாபம் எம்மை தேவலோகத்திலே கூட வாட்டி வதைக்கும். இஷ்வாகுவின் குலத்தவருக்கு பிண்டம் கொடுக்க முடியாத நிலையை என்மூலம் ஏற்பட  வைக்காதீர்கள். குருவே நாங்கள் அப்படி என்ன பாபம் செய்து விட்டோம்? தானங்கள் தரவில்லையா, தர்மம் செய்யவில்லையா? இல்லை எம் குடியினர் எந்த கஷ்டமும் அடையலாகாது என்பதற்காக நான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவில்லையா? நீங்கள்தான் தக்க உபாயம் கொடுத்து எம் சந்ததியினர் வளர உதவ வேண்டும்'என அழுது புலம்பினார்கள்.

      அதைக் கேட்ட வசிஷ்ட முனிவர் அவர்களிடம் கூறினார் 'திலீபா, உனக்கு இந்த நிலை ஏற்படக் காரணம் உனக்கு முன் ஒரு காலத்தில் காமதேனுப் பசுவினால் கிடைத்த சாபம்தான். ஒரு முறை நீ இந்திரலோகத்துக்குப் போய் விட்டு திரும்பும் வழியில் கற்பக மரத்தடியில் காமதேனுப் பசு படுத்திருந்ததைப் பார்த்தாய். ஆனால் எப்போது காமதேனுப் பசுவைப் பார்த்தாலும் அதற்கு வந்தனம் செய்து விட்டுப் சென்ற  நீ  அன்றைய தினம் அதைப் பார்த்தும் கூட அதற்கு வந்தனம் செய்யாமல் அதை அலட்சியப்படுத்துவது போல அவசரம் அவசரமாக கருத்தரிக்க இருந்த உனது  மனைவியைப் பார்க்க சென்றாய். அவள் உனக்கு ஒரு அற்புதமான புத்திரனைப் பெற்றுத் தருவாள் என்ற கனவுடனும் அவசரம் அவசரமாக நீ அரண்மனைக்கு சென்று கொண்டு இருந்தாய்.  தன்னை அவமரியாதை செய்து விட்டுப் போன திலீபனைக் கண்ட காமதேனுப் பசு வருத்தம் அடைந்து 'அரசனே, என்னை அவமதித்து விட்டு உன் மனைவியைக் காண ஓடிக்கொண்டிருக்கும் உனக்கு என் சந்ததியை நீ வந்தனம் செய்யாதவரை,  எந்த சந்ததியும் கிடைக்காது'என மனதார ஒரு சாபம் கொடுத்தது.  உன்மனைவி கருத்தரிக்க உள்ளால் என்பதாக எண்ணிக் கொண்டு நீ சென்றாலும், அவள் கருத்தரிக்கவில்லை என்பதைக் கண்டாய். காமதேனுப் பசு கொடுத்த சாபத்தின் விளைவே இன்றுவரை உன் மனைவி கருத்தரிக்கவில்லை’ என்று கூறினார்.
      தொடரும்......2 

      Raghuvamsam- 2

      $
      0
      0
      ரகுவம்சம்-2
      - சாந்திப்பிரியா - 
      அதைக் கேட்ட திலீபனும் தான் தெரியாமல் செய்து விட்ட தவறை எண்ணி வருந்தினார். 'குருவே, அந்த சாபம் விலக நான் இப்போது என்ன செய்ய வேண்டும். எனக்கு நீங்கள்தான் வழிகாட்டி உதவ வேண்டும்'என்று கேட்க வசிஷ்ட முனிவர் கூறினார் 'திலீபா, அந்த சாபம் விலக வேண்டும் எனில் நீ செய்ய வேண்டியது அந்த காமதேனு பசுவின் கோபத்தைக் குறைப்பதுதான். ஆனால் இப்போது அந்த காமதேனுப் பசுவும் தேவலோகத்தில் இல்லை. அது வருண பகவான் செய்யும் ஒரு யாகத்தில் கலந்து கொள்ள பாதாளத்துக்கு சென்றுள்ளது. இப்போது அதன் மகளான,  சின்னக் கன்றுக் குட்டியாக உள்ள நந்தி எனும்  பசு தாய் காவல் இன்றி அங்கும் இங்கும் அலைந்தவாறு தனியாக தேவலோகத்தில் தவித்தபடி உள்ளது.  ஆகவே நீ தேவலோகத்துக்கு கிளம்பிச் சென்று காமதேனுப் பசு திரும்பி வரும்வரை அதன் கன்றான நந்தினிக்கு  சேவை செய்து கொண்டு அதற்கு பாதுகாப்பாக இருந்து வரவேண்டும். அப்போது காமதேனு பசு வந்து அந்தக் காட்சியை கண்டு மனம் மகிழ்ந்து உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரியும். ஆகவே உடனடியாக நீ தேவலோகத்துக்கு சென்று நந்தினிக்கு சேவை செய்ய வேண்டும். இதில் இன்னொரு நிபந்தனையும் உள்ளது. நீ அங்கிருக்கும்வரை தினம் தினம் நந்தினியை வனத்துக்கு அழைத்துச் சென்று அங்கு புல்லை மேய விட வேண்டும். அதற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். காமதேனு திரும்பி வந்ததும் அதை உன் மனைவி வரவேற்று வழிபட வேண்டும். மற்றபடி நீ பரிபூரண சுத்தத்துடன் இருக்க வேண்டும். நல்ல உணவை அருந்தாமல் வனங்களில் கிடைக்கும் காய், கனிவகைகளை உண்டபடி தர்பை பாயில் படுத்துக் கிடக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்தால் உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்'என்றார்.

      அதைக் கேட்ட திலீபனும் அவரை வணங்கி துதித்து விட்டு, அவரது ஆசிகளையும் பெற்றுக் கொண்டு சற்றும் தயங்காமல் மறுநாள் விடியற்காலை எழுந்து குளித்தப் பின் தனது மனைவியுடன் தேவலோகத்துக்கு கிளம்பிச் சென்றார். தேவலோகத்தை அடைந்த திலீபன் அங்கு நந்தினி இருந்த இடத்தை அடைந்து அதற்கு பணிவிடை செய்யலானார். வனத்துக்கு அழைத்துச் சென்று புல் மேயவிட்டு மாலை திரும்ப அழைத்து வந்தார். வனத்தில் புல் மேய்ந்தப் பின்னர் மாலையில் அந்த கன்று வந்ததும் அதை அன்புடன் வரவேற்ற திலீபனின் மனைவி சுடாக்ஷிணா அதற்கு தண்ணீர்க் கொடுத்து, தடவிக் கொடுத்து அதை வணங்கி துதித்தாள். இப்படியாக சில நாட்கள் சென்றது. தெய்வப் பசு காமதேனுவின் கன்றான நந்தினிக்கு தெய்வீக சக்தியினால் அவர்கள் அங்கு வந்து தமக்கு சேவை செய்வதின் காரணமும் தெரிந்திருந்தது. ஆகவே அது திலீபனின் உண்மையான பக்தியை சோதனை செய்து பார்க்க எண்ணியது.

      ஒருநாள் நந்தினியை வனத்துக்கு   ஓட்டிக் கொண்டு சென்ற திலீபன் அதை புல் மேய விட்டப்பின்  சற்றே திரும்பி இயற்கையின் அழகை ரசிக்கலானார். அப்போது நந்தினி ஒரு குகைக்குள் நுழைந்தது.  அது குகைக்குள் நுழைவதை திலீபனும் சற்று தொலைவில் இருந்து பார்த்தார். அப்போது திடீர் என எங்கிருந்தோ பாய்ந்து வந்த சிங்கம் ஒன்று குகைக்குள் புகுந்து நந்தினியை தனது வாயில் கௌவ நந்தினி அப்படியே சுருண்டு விழுந்தது.  ஒருகணம் அதைக் கண்டு திகைத்துப் போன திலீபன்  அடுத்த வினாடியே அந்த சிங்கத்தைக் கொல்வதற்கு  தனது வில்லையும் அம்பையும் எடுக்க கைகளை  உயர்த்தினார். ஆனால் இரண்டு கைகளும் அசைக்க முடியாமல் அந்தரத்தில் அப்படியே நின்றன. எத்தனை முயன்றும்   வில்லையோ அல்லது அம்பையோ அவரால்  எடுக்க முடியவில்லை. என்ன செய்வதென திகைத்து நின்ற அரசனை நோக்கி அந்த சிங்கம் பேசத் துவங்கியது.  சிங்கம் ஒரு மிருகம் எனும்போது மனித பாஷையில் எப்படி பேசுகிறது என அந்த மன்னன் இன்னும் திகைத்து நின்றான். 

      சிங்கம் கூறியது  'மன்னா, நான் உண்மையில் சிங்கம் இல்லை. நான் சிவபெருமானுக்கு சேவை செய்து வரும் கும்போதரன் எனும் பூதத் தலைவனாகும். சிவபெருமானின் சேவகர்களில் ஒருவரான நிகும்பாவின் நண்பன் நான். இதோ என் அருகில் உள்ள தேவதாரு எனும் இந்த மரத்தைப் பார். இது சிவபெருமானின் பத்தினியான உமா தேவி ஆசையுடன் வளர்த்து வந்த மரமாகும்.  ஆனால் ஒருநாள் இந்த மரத்தருகில்  காட்டு யானைகள் வந்து இதன் பட்டைகள் மீது தமது உடலை தேய்த்து தேய்த்து சொறிந்து கொள்ள இந்த மரத்தின்  மரப்பட்டைகள் அங்காங்கே வெட்டுப்பட்டு காயமுற்றன. அந்த வேதனையினால் இந்த மரம் முனகிக் கொண்டு  கிடக்க, அந்த சப்தத்தைக் கேட்ட உமா தேவி அங்கு ஓடோடி வந்து யானைகளை துரத்திய பின்னர் மரத்தைத் தடவிக் கொடுத்து ஆறுதல் கூறினாள்.  தன் பிள்ளையைப்  போல வளர்த்து வந்திருந்த மரத்தின் மரப்பட்டைகள் பெயர்ந்து கிடந்ததைக் கண்டு,   மதம் பிடித்த யானைகள் அந்த மரத்தை படுகாயப்படுத்தி விட்டனவே  என வருந்திய  பார்வதிதேவி அழுது கொண்டே சிவபெருமானிடம் ஓடினாள்.  

      சிவபெருமானிடம் சென்ற உமா தேவி அவரிடம் நடந்த அந்த சம்பவத்தைக் கூறி தான் ஆசையுடன் வளர்த்து  வரும் அந்த மரத்தைப் பாதுகாக்க தக்க ஏற்பாடுகளை செய்யுமாறு வேண்டிக் கொண்டாள். ஆகவே சிவபெருமானும் என்னை ஒரு சிங்கத்தின் உருவில் இந்த வனத்தில்  இருந்தவாறு இந்த மரத்தைக் காப்பாற்றுமாறு ஆணையிட்டதினால்  நான் இங்கு சிங்கமாக வந்திருந்து இரவு பகலாக இந்த மரத்துக்குக் காவலாக இருக்கிறேன். ஆனால் என் நிலையைப் பாருங்கள்.  இந்த வனத்தில் தொலைதூரம்வரை எந்த பிராணியுமே வருவதில்லை.  எப்போதாவது அத்தி பூத்தாற்போல வரும் பிராணிகளே எனக்கு இரையாகக் கிடைக்கிறது.  மற்றபடி எனக்கு உணவு சரிவரக் கிடைப்பது இல்லை. எத்தனை நாட்கள்தான் இங்கிருந்தபடியே புல்லையும் காயையும், கனியையும் உண்டு இருந்தபடி வாழ்வது? அதனால்தான் என் பலமும் குறைந்து கொண்டே போகிறது. ஆகவேதான் இன்று எனக்கு எதேற்சையாக   கிடைத்துள்ள இந்த பிராணியை உண்ணலாம் என்று பார்த்தால் என்னைக் கொல்ல வில்லையும் அம்பையும் நீ எடுத்தால் அதை நான் அனுமதிக்க முடியுமா?  ஆகவே மீண்டும் உன் கைகள் சாதாரண நிலையை அடைய வேண்டும் என்றால், இங்கிருந்துக் கிளம்பிச் சென்றுவிடு. நான் இந்த பிராணியை உண்டு விட்டு ஒய்வு எடுக்க வேண்டும்.'என்று கூற, திலீபனும் அதனிடம் வேண்டலானார்.

      'சிங்கமே, நான் சொல்வதைக் கேள்.  இப்போது வேண்டுமானால் நான் உன்னை ஒன்றும் செய்ய முடியாதவனாக உனக்கு தோன்றலாம்.  ஆனால் என் குருநாதர் வணங்கித் துதிக்கும் தெய்வம் இந்த உலகையே உருவாக்கி அழிக்கும் வல்லமையும் படைத்த சக்தி கொண்டது. அவரை வணங்கும்  என் குருநாதருக்கு எந்த இடைஞ்சலையும் நான் ஏற்படுத்தக் கூடாது என்பதினால் உன்னிடம் வேண்டுகிறேன், சிங்கமே, என்னுடைய குருநாதரின் ஆஸ்ரமத்துக்கு பால் தரும்  இந்த பசுவை விட்டு விடு.  அதனால் உனக்கும் பங்கம் ஏற்படாது.  என் குருநாதருக்கும் இடைஞ்சல் இராது.  அந்தப் பசுவை விட்டு விட்டு அதற்கு பதிலாக என்னை உணவாக ஏற்றுக் கொள். பசு இங்கிருந்து போகட்டும்'என்று கூறினார்.

      அதைக் கேட்ட சிங்கம்   சிரித்தது.  மன்னனிடம் கூறிற்று 'மன்னா, நீ ஏன் அறிவை இழந்து பேசுகிறாய் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த பசு இறந்தால்  உன் குரு ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் இழப்பு இல்லை.  அவருக்கு அந்த பசுவிற்கு பதிலாக நீ ஆயிரம் பசுக்களை தானமாகக் கொடுத்து அவர் துயரை தீர்க்க முடியும்.  ஆனால் ஒருகணம் சிந்தித்துப் பார். நீ இறந்தால் உன்னால் பாதுகாக்கப்படும் உன் நாட்டின் அனைத்து மக்களும் அல்லவா சங்கடத்துக்கு ஆளாவார்கள். அவர்களுக்கு அதன் பின் பதவிக்கு வருபவர் பாதுகாப்பு  கொடுப்பார் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கும்?  நன்கு யோசனை செய்து பார்.  ஆகவே இந்த பசுவை உண்ணுவதற்கு  என்னை  அனுமதித்து விட்டு  உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீ  திரும்பிச் சென்று விடு'.

      அதைக் கேட்ட திலீபன் அதனிடம் கூறினார் 'சிங்கமே , நீ என்னை தவறாக நினைத்து விட்டாய்.  இந்த உலகில்  ஒரு முதுமொழி உண்டு.  எவன் ஒருவன் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளவருக்கு  துரோகம் செய்வானோ, அவன் மரியாதை இழந்து  நம்பிக்கை துரோகி ஆகி விடுவான்.  உன்னை நம்பி இந்த மரத்தைப் பாதுகாக்க  உன்னை இங்கு அனுப்பி உள்ள சிவபெருமானை  ஏமாற்றி விட்டு மரத்தைப்  பாதுகாக்காமல் எங்காவது அலைந்து திரிந்து கொண்டு மீண்டும் அதன் மரப்பட்டைகளை விலங்குகள் நாசப்படுத்துவதை  தடுக்காமல் இருப்பாயா?  அது போலத்தான்  என்னை நம்பி இந்தப் பசுவை ஒப்படைத்து உள்ள என் குருநாதரும் இந்த பசுவிற்கு பதிலாக நான் எத்தனை ஆயிரம் பசுக்களை தந்தாலும் அதை நிராகரித்து விடுவார். அவருக்கே உரித்தான பசுவிற்கு பதிலாக அவர் ஏன் வேறு பசுக்களை  ஏற்க சம்மதிப்பார்?  மற்ற பசுக்கள் இந்த பசுவிற்கு ஈடாகிவிடுமா?   இந்தப் பசு இல்லாமல் அவர் முன் நான் சென்று எப்படி நிற்பேன் ? ஆகவே என் நண்பன் சிங்கமே என்னைப் பற்றிக் நீ  கவலைப்படாதே. உனக்கு பசிக்கிறதென்றால் என்னை உணவாக்கிக் கொண்டு இந்தப் பசுவை விட்டு விடு.  சிவபெருமானின் சேவகனே உன்னை என்னுடைய நல்ல நண்பனாகக் கருதி உன்னிடம் இதை நான் வேண்டுகிறேன். அந்தப் பசுவை விட்டு விடு'.  

      அதைக் கேட்ட சிங்கமும் 'சரி, அப்படி என்றால் உன் ஆயுதங்கள் அனைத்தையும் பூமியிலே போட்டுவிட்டு, நிராயுதபாணியாக நீ என் அருகில் வந்து நில், இந்தப் பசுவை விட்டு விடுகிறேன்'என்று கூற   திலீபனின் கைகள்  சுய இயக்கத்தைப் பெற்றது. திலீபனும் சற்றும் தயங்காமல் தனது ஆயுதங்கள் அனைத்தையும்  எடுத்து பூமியிலே போட்டு விட்டு சிங்கத்தின் முன்னால் சென்று 'என்னை உணவாக்கிக் கொள்'  என்று கூறிவிட்டு அதன் காலடியில் நமஸ்கரிப்பது போல படுத்தார்.

      அடுத்தகணம் தேவலோகத்தில் இருந்து அவர் மீது பூமாரி பொழிந்தது. 'திலீபா எழுந்திரு'என்றக் குரலைக் கேட்ட திலீபன் திகைத்துப் போய் எழுந்திருக்க அவன் முன் சிங்கம் காணப்படவில்லை. மாறாக அங்கே  நின்று கொண்டு இருந்த நந்தினி கூறியது 'மன்னா, உன்னுடைய குருபக்தியை சோதிக்கவே  இந்த நாடகம் அனைத்தையும் நான் நடத்தினேன். உன்னுடைய குரு பக்தியும், என்னிடம் நீ காட்டிய சிரத்தையும் எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது.  உனக்கு என்ன வேண்டும் என என்னிடம் கேள். என்னை சாதாரண பசு என்று யோசிக்காதே. காமதேனுப் பசுவின் சந்ததி நான். உனக்கு என்ன வரம் வேண்டும், அதைக்  கேள் 'என்றதும் மன்னன் கூறினான் 'அம்மா, எனக்கு என் குலம் தழைக்க, எனக்கு வாரிசாக உருவாக எனக்கு  ஒரு மகன் வேண்டும்'.

      அதைக் கேட்ட நந்தினி கூறியது 'நீ கேட்ட வரத்தை உனக்கு தருகிறேன் மன்னா, உனக்கு நல்லதொரு மகன் பிறப்பான். கவலைப்படாதே.  அதை  அடைய என் மடியில் இருந்து சுரக்கும் பாலை ஒரு தொன்னையில் கொண்டு சென்று அதை நீயும் உன் மனைவியும் குடிக்க வேண்டும்'என்று கூறியதும் நந்தினியின் மடியில் இருந்த  பால் சுரக்கும் சுரப்பியில் இருந்து பால் கொட்டத் துவங்கியது. நந்தினி  கூறியது போல திலீபனும் சற்றும் தயங்காமல் இலையால் அவசரவசரமாக ஒரு தொன்னை செய்து அதில் அந்தப் பாலைப் பிடித்துக் கொண்டான். அவன் பாலை தொன்னையில் பிடித்துக் கொண்டதும் பால் சுரப்பது நின்றது.  திலீபன் நந்தினியை வணங்கித் துதித்தார்.  அதன் பின் திலீபனும் நந்தினியும் வசிஷ்ட முனிவரின் ஆஸ்ரமத்துக்கு திரும்பினார்கள்.  தனது மனைவியை அழைத்துக் கொண்டு முனிவரை வணங்கிய திலீபன்  நடந்தது அனைத்தையும் அவரிடம் கூறி விட்டு அந்தப் பாலை அருந்த அவரிடம் அனுமதி கேட்டார்.  அவரும் திலீபனது குரு பக்தியை மெச்சி அவர்களை ஆசிர்வதித்தப் பின் அவர்கள் அரண்மனைக்கும் திரும்பிச் செல்ல அனுமதி தந்தார்.  அரண்மனைக்கு திரும்பிய திலீபனும் அவரது மனைவி  சுடாக்ஷிணாவும் மகிழ்ச்சியோடு அந்தப் பாலைக் குடித்தார்கள்.
      தொடரும்......3 

      Raghuvamsam - 3

      $
      0
      0
      ரகுவம்சம் - 3
      - சாந்திப்பிரியா - 
      ரகுவின்பிறப்பும் , 
      இந்திரனுடன் யுத்தமும்

      அடுத்த சில நாட்களிலேயே சுடாக்ஷிணா கர்பமுற்று நல்ல மகனைப் பெற்றெடுத்தாள். நாடே அந்த நல்ல செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. அனைவருக்கும் மன்னன் தாராளமாக நன்கொடைகளை தந்து தானங்களும் செய்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினார்.  புத்திரன்  பிறந்ததும் நடைபெறும் அனைத்து சடங்குகளும் நடந்து முடிந்த பல காலத்துக்குப் பிறகு பிறந்த பிள்ளைக்கு ரகு என்ற பெயரை சூட்டினார்கள்.

      வயதுக்கு வந்த பிள்ளைக்கு சடங்குகள் முறைப்படி நடந்தேறியன. ரகுவும் கடலைப் போல கல்வி ஆற்றலையும் அறிவையும்  பெற்றுக் கொண்டான். தக்ஷனின்  மகள்கள் எப்படி சந்திரனை மணந்தனவோ அதைப் போல அழகும் ஆற்றலும் பெற்றிருந்த மணப் பெண்களை தனது மகனுக்கு மனைவியாக்கி அழகு பார்த்தார். தன்னைப் போலவே அறிவையும் ஆற்றலையும்  பெற்ற மகனிடம் ராஜ்ய பரிபாலனத்தை தருவதற்கு முன்னர் அஸ்வமேத யாகம் செய்யுமாறு வசிஷ்டர் திலீபனுக்கு  அறிவுறுத்தினார்.

      அஸ்வமேத யாகமும் துவங்கியது.  அஸ்வமேத யாகக் குதிரைக்குக் காவலாக செல்ல  திலீபன் தன் மகன் ரகுவை நியமித்தார். அந்த யாகத்தைக் கண்டு பொறாமை கொண்ட தேவலோக அதிபதியான இந்திரனும் ரகுவின் கண்களை மாயையால் கட்டி விட்டு அந்த யாகக் குதிரையை கவர்ந்து சென்று விட்டார்.  யாகம் துவங்கி99 குதிரைகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு யாகம் நடந்து முடிந்த நிலையில் நூறாவது குதிரையை அழைத்து வர ரகுவை அழைத்தபோது தாம் காவலுக்கு வந்திருந்த யாகக் குதிரையைக் காணோம் என்கின்ற உண்மையை ரகுவும் உணர்ந்தார். ஐயோ மோசம் போய் விட்டோமே, யாகக் குதிரை எங்கே, எங்கே என அலறித் துடித்த ரகுவின் குரலைக் கேட்ட நந்தினி தேவலோகத்தில் இருந்து கீழிறங்கி அங்கே வந்தது. அங்கு வந்து  நின்ற நந்தினி தான் பொழிந்த சிறுநீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளுமாறு  கூற ரகுவும் அதன் சிறுநீரால் தனது முகத்தைக் கழுவிக் கொண்ட அடுத்த வினாடியே  அவனால்  இந்திரன்  யாகக் குதிரையைக் கவர்ந்து கொண்டு சென்று கொண்டிருக்கும் காட்சியை அப்படியே நேரடியாக காண  முடிந்தது.  அவ்வளவுதான் அங்கிருந்தபடியே ரகு குரல் கொடுத்தார்.

      இந்திரனைப் பார்த்து ரகு  கூறினார் 'இந்திரனே யாகங்கள் எங்கு நடந்தாலும் அதன் அவிர்பாகத்தில் முதல் பாகத்தை பெற்றுக் கொள்பவராக உள்ளவர் நீங்கள் என்றல்லவா முனிவர்கள் கூறுவார்கள். அப்படி இருக்கையில் என்னுடைய தந்தை செய்யும் யாகத்துக்கு இடையூறாக இருக்கும் வகையில் நீங்கள் குதிரையைக் களவாடிக் கொண்டு போகலாமோ?  யாகங்களைக் காப்பவரே யாகத்தை தடுத்து நிறுத்துபவராக இருக்கலாமா?  யாகம் நிற்க நீரே காரணம் ஆயின் உலகத்தினர் உம்மை இகழ மாட்டார்களா?  ஆகவே தேவனே நீர் களவாடிச் சென்றுள்ள குதிரையை விட்டு விட்டு யாகம்  நல்ல முறையில் நடைபெற உதவுங்கள். அப்படி நீங்கள் செய்யாவிடில் நீங்கள் பாபம் செய்தவர் ஆகி விடுவீர்'

      ரகு உரக்கக்  கூறியதை கேட்டபடி சென்று கொண்டு இருந்த இந்திரன் திகைத்து நின்றார். இதென்ன  திலீபனின் மகன் இப்படி தீர்கமாகப் பேசுகிறான். இவனுக்கு பதில் கூறியே ஆக வேண்டும் என்றெண்ணிய இந்திரன் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு திரும்பி நின்று கூறலானார் 'ஷத்ரிய வம்ச ராஜகுமாரனே , நீ கூறுவது அனைத்துமே உண்மைதான். ஆனால் ஒரு அரசனுக்கு அழகு என்பது என்ன தெரியுமா?  அவரவர் புகழையே அவரவர் தமது செல்வமாகக் கருதுகிறார்கள். அதை இழக்கும்போது அதைக் காப்பாற்றிக் கொள்ள அவரவர் தக்க நடவடிக்கையை எடுத்துக் கொள்ளாவிடில் அதன் பின் அவர்கள் ஆண்டால் என்ன ஆட்சியில் இல்லாவிட்டால் என்ன? உன்னுடைய தந்தை செய்யும் இந்த யாகமானது நடந்து முடிந்தால் என்னுடைய செல்வாக்கை மறைத்து விடும். ஆகவே நான் என்னுடைய  நிலைமையில் இருந்து இதை தடுத்தேன்.

      மகனே, மஹாவிஷ்ணுவை மட்டுமே புருஷோத்தமா என்பார்கள், சிவபெருமானை திரயம்பகா என்பார்கள். அதை போலவேதான் என்னை சடக்ருதா என்பார்கள். சடக்ருதாவான என்னை அழிக்கும் விதத்தில்  இந்த  யாகம் நடப்பதை நான் எப்படி அனுமதிக்க முடியும்?  ஆகவே மைந்தனே மீண்டும் கூறுகிறேன், காது கொடுத்துக் கேள்.  வசிஷ்டரின் பசுவை கவர்ந்து சென்ற கபில மகரிஷியைப் போல  நான்  குதிரையை கவர்ந்து செல்கிறேன். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் உள்ளது. என் புகழ் அழிவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதை  தடுக்கவே இந்த காரியத்தை செய்தேன். ஆகவே கபில மகரிஷியை பின் தொடர்ந்து சென்று அழிந்துபோன சாகராவின் மகன்களைப் போல  நீயும் என் பின்னே வந்து அழிந்து விடாதே'என்று கூற சற்றும் பயமில்லாத ரகு கூறினார்  'இந்திரனே, நீ அந்த குதிரையைக் கவர்ந்து செல்ல உன்னை அனுமதிக்க மாட்டேன். நீ வீரனாக இருந்தால் எடு உன் ஆயுதங்களை. என்னுடன் போரிட்டு என்னை வீழ்த்தி விட்டு  குதிரையைக்  கொண்டு செல்'என்று கூறியபடி தன்னுடைய  உறையில் இருந்து அம்பை எடுத்து இந்திரனை நோக்கி வீசத் தயாரானார்.  இந்திரனும் ரகுவுடன் போர் புரிய தயாரானார். இருவரின் படைகளும் சளைக்காமல் கடுமையாக யுத்தம் செய்து கொண்டார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாகத்  தாக்கிக் கொண்டார்கள்.  ரகு மீண்டும் மீண்டும் வித விதமான அம்புகளை ஏவி இந்திரனை நிலைகுலைய வைத்தார். இந்திரன் பவனி வந்த ஐராவத யானையே கதிகலங்கும் வண்ணம்  போர் தொடர்ந்தது. இந்திரனும் ரகுவை ரத்தமயமாக்கி கீழே விழ வைத்தார்.  ஆனாலும் சளைக்காத ரகு யுத்தத்தைத் தொடர்ந்தவண்ணம் இருக்க யார் வெற்றி பெறுவார்கள் என்பதே தெரியாத நிலை ஏற்பட்டது.  இந்திரனும் களைத்துப் போனார்.

      அதைக் கண்ட ரகு இந்திரனை நோக்கிக் கூறினார் 'தேவலோக அதிபதியே, இன்னும்  உன்னால் என் குதிரையை கவர்ந்து கொண்டு செல்ல   முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா ? என்னைக் கொன்றால் ஒழிய உன்னால் குதிரையை எடுத்துச் செல்ல முடியாது.   எனக்குத் தேவை ஒன்றே ஒன்றுதான். என் தந்தை செய்யும் யாகத்தின் பலனை அவர் அடைய வேண்டும்.  அதற்கு அந்தக் குதிரை தேவை. அதை கொடுக்காமல் உன்னை தேவலோகத்துக்கு செல்ல விடமாட்டேன். ஆனால் அதற்கு மாற்றாக இதற்கொரு உபாயம் உள்ளது. அந்த குதிரையை விட மனமில்லை என்றால் என்னுடைய தந்தை செய்யும் யாகத்தின் முழுப் பலனையும் அவர் அடையட்டும்   என சத்தியம் செய்து வாக்கு கொடுத்து  விட்டுச் செல். நானும் திரும்பிச் சென்று விடுவேன். நீயும் யுத்தம் செய்யத் தேவை இல்லை'.

      அதைக் கேட்ட இந்திரனும் இனிமேலும் தன்னால் சண்டையைத் தொடர்ந்து  கொண்டு  ரகுவை தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்ததினால் அவன் கேட்ட வரத்தை அப்படியே தருவதாக வாக்குறுதி தந்து சத்தியமும்  செய்தபின் தேவலோகத்துக்கு திரும்பிச் சென்று விட, ரகுவும் தனது அரண்மனைக்குத் திரும்பிச் சென்றார்.  ரணகளத்தோடு வந்த மகனை ஆரத் தழுவி வரவேற்ற திலீபன் நடந்த அனைத்தையும் கேட்டறிந்ததும் ஆனந்தக் கண்ணீர் விட்டு  அழுதார்.  மீதி இருந்த யாகத்தைத் தொடர்ந்தார். யாகம் நல்லமுறையில் நடந்து முடிந்ததும் சில நாட்கள் பொறுத்து ரகுவிடம் தனது ராஜ்யத்தை தந்து விட்டு தன்னுடைய கடமை முடிந்து விட்டதாக எண்ணி இந்த உலகை விட்டு மறைந்தார்.
       
      ரகு எனும் ரகுராமன் ராஜ்ய பதவியை ஏற்றுக் கொண்டு அரச பதவியில் அமர்ந்ததும் அவர் மன்னன் ஆக வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களும் மற்றவர்களும் மனதார மகிழ்ச்சி அடைந்தாலும் அக்கம்பக்கத்தில் இருந்த அரசர்கள் பொறாமை கொண்டார்கள்.  ரகுவின் ஆட்சியில் நேர்மை இருந்தது,  பட்சபாதம் இல்லை.  அவருடைய தந்தையை விட ஒரு படி மேலாகவே அவர் நியாயத்துடன் ஆட்சி புரிந்ததினால் அவர் புகழ் நான்கு திசைகளிலும் பரவியது.  சூரிய சந்திரன்களுக்கு இணையானவராகவே அவர்  போற்றப்பட்டார். விரிந்த கண்களும், திறந்திருந்த காதும் இருக்க வேண்டும் என்பது போல அவர் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்திருந்தார். கடல் எத்தனைதான் விரிந்துப் படர்ந்திருந்தாலும்   தன்னை  நோக்கி  வரும் ஆற்று  நீரையும்  கடல் ஒதுக்குவதில்லை.  அது  போலவேதான்  நாட்டு  நலனுக்கு தேவை நிதி என்பதினால் சின்ன  அரசனோ,  பெரிய  அரசனோ, யாராக இருந்தாலும் அனைவர் மீதும் படையெடுத்துச் சென்று அனைவரையும் வென்று  அந்த நாட்டில் இருந்து  தேவையான செல்வத்தை கொண்டு வந்து தன் நாட்டுக்கு நிதி  சேர்த்தான். அடுத்த வேலையாக அரண்மனை காவலை அதிகரித்தான்.  நாட்டு எல்லைகளை பலப்படுத்தினான். வசந்த காலம் துவங்க, தந்தையின் காலத்தில் நடந்து முடிந்திருந்த யாகத்தினால் கிடைத்த சக்தியையும் கொண்டு  நான்கு திசைகளையும் நோக்கி பெரும் படையுடன் சென்றான். வானமும் பூமியும் ஒன்று சேர்ந்து அதிர்கிறதோ எனும் அளவுக்கு அவன் படையில் இருந்த யானைகளும், குதிரைகளும் பூமி அதிர்ந்தபடி முன்னே செல்ல, அவற்றின் கால் அழுத்தங்களினால்   பூமியில் இருந்த  மண் புழுதி  மேலெழுந்து  சென்றது.  பகீரதனின் முயற்சியால் சிவபெருமானின் தலையில்  இருந்து கங்கை நீர் சீறிப் பாய்ந்து பூமியை நோக்கி வந்தது போல அவரது சேனை அனைத்து திசைகளையும் நோக்கி சீறிப் பாய்ந்தபடி நாட்டை விரிவாக்கிக் கொண்டே செல்லத் துவங்கியது.

      வங்க மன்னர்கள் வீழ்ந்தார்கள், கலிங்க மன்னர்கள் சாய்ந்தார்கள். மன்னனின் படையினர் மகேந்திர மலையைத் தாண்டி செல்ல, அங்கிருந்த மன்னர்களும் ஒருவர் பின் ஒருவராக வீழ்ந்தார்கள்.  ஆனால் மன்னர்களை சிறை பிடித்தப் பின் அந்தந்த மன்னர்கள் தாமே தமது செல்வங்களை ரகுராமனுக்கு தந்து விட அந்த மன்னன்களை விடுவித்து  விட்டு அவர்கள்  தந்த  செல்வத்தை மட்டுமே தன் நாட்டுக்கு கொண்டு வந்தார். தென் பகுதியில் காவேரிக் கரைத் தாண்டி அனைவரையும் வென்று வந்தார் மன்னன் ரகுராமன்.
       
      பாரசீகம் முதல் காஷ்மீர் வரை அனைத்து மன்னர்கள் மற்றும்  நான்கு திசைகளிலும் இருந்த அனைத்து  மன்னர்களையும்  தோற்கடித்தப் பின்னர் நாடு திரும்பியவர் விஸ்வஜித் யாகத்தையும் செய்து தாராளமாக தானங்களையும்  கொடுத்தார். இப்படியாக  நான்கு திசைகளிலும் சென்று அனைத்து மன்னர்களையும்  வென்று தாம் கொண்டு வந்திருந்த திரவியங்கள் அனைத்தையும் மக்களுக்கு அவ்வப்போது தானமாகவே தந்து விட்ட மன்னனுக்கு யாக முடிவில் மண் பாத்திரம் மட்டுமே மிஞ்சியது.  இனியும் தன்னால் யாருக்கும் எந்த தானமும்  தர முடியாது எனும் அளவிற்கு அரச கஜானாவின் செல்வம் குறைந்தது.  இனி யார் வந்து கேட்டாலும் தானம் தர இயலாதவகையில் அவர் நிலைமை மோசம் ஆயிற்று. யாகத்தை நடத்தி முடித்த களைப்பிலும்,   தானங்கள் கொடுத்து அனைத்து திரவியங்களையும் இழந்து விட்டு ஏதுமற்றவனாய் கலங்கி நின்ற மனதோடும் இருந்த நிலையில்   அவனைத் தேடி கௌட்ச முனிவர் வந்தார். 
      தொடரும்......4

      Raguvamsam - 4

      $
      0
      0
      ரகுவம்சம் - 4
      - சாந்திப்பிரியா - 
      கெளட்ச முனிவர் யாசகம் 
      கேட்டு வந்த  கதை

      வரதந்து எனும் மாமுனிவரின் சிஷ்யர் கௌட்ச முனிவர் ஆவார். அவருக்கு அவரது குருவிடம் இருந்து கிடைத்த கல்வி அறிவுக்கு ஈடாக குரு தட்க்ஷணை  கொடுக்க வேண்டும் என்ற நிலை தோன்றியபோது  கௌட்ச முனிவர் அதற்குத் தேவையான செல்வத்தை மன்னனிடம் இருந்து யாசகமாக பெற்றுக் கொண்டு செல்லலாம் என வந்திருந்தார். ஆனால் அனைத்து செல்வத்தையும் தானங்களைத் தந்தே இழந்து விட்டு, இனி யார் வந்து தானம் கேட்டாலும் கொடுக்க கையில் எந்த செல்வமும் இல்லாமல் நின்றிருந்த வேளையில்  முனிவர் மன்னனிடம் யாசகம் பெற வந்தார். அந்த முனிவர் வந்த நேரத்திலோ ரகுராமனிடம் மண் பாண்டத்தைத் தவிர வேறு எதுவுமே கொடுப்பதற்கு இல்லை. இருந்த அனைத்து தங்கக் குடங்களையும் தானமாக தந்தாகி விட்டது.  இவருக்கு எதைக் கொடுப்பது என மனம் தடுமாறினாலும், தன்னிடம் யாசகம் கேட்டு வந்தவருக்கு ஒன்றும் கொடுக்காமல் அனுப்ப விருப்பம் இன்றி அவரை அமரச் சொல்லி அர்கியம் கொடுத்து அன்புடன் நலம் விசாரிக்கலானார். 'முனிவர் பெருமானே, தங்களுடைய குருநாதர் வரதந்து முனிவர் நலமாக இருக்கிறாரா. அவருக்கும் என் வந்தனங்கள்'. என்று கூறியவாறு வந்தவரை உபசரித்தார்.  பேச்சை வளர்த்தபடி 'ஆஸ்ரமத்தில் மரங்கள் வாடாமல் உள்ளனவா? மாடுகளும் மான்களும் அவற்றின் கன்றுகளும்  இடையூறு இல்லாமல் உலாவுகின்றனவா?'என்றெல்லாம் எதை எதையோ கேட்டு வந்த முனிவரை அன்புடன் உபசரித்தார்.

      அதைக் கேட்ட கௌட்ச முனிவர் கூறினார் 'மன்னா, உனது ஆட்சியிலே என் குருநாதர் இருப்பிடத்தில் மட்டும் அல்ல அனைத்து இடங்களிலும்  உள்ள மக்கள் எந்த ஒரு குறையும் இல்லாமல்தான் வாழ்கிறார்கள். அரசனே, முன்னோர்களிடம் இருந்துதான் ஒருவர்  வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கத்தையும், பக்தியையும்  கற்றறிய வேண்டும்.  அப்படிக் கற்ற பின் அதை பிழறாமல்தமது வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும். ஆனால் நீயோ உன் முன்னோர்களை அனைத்து விதத்திலும் மிஞ்சி விட்டாய் என்பதைக் காணவே ஆனந்தமாக உள்ளது.  அதே சமயத்தில் எனக்கு  போதாத காலமோ என்னவோ நான் உன்னிடம் வந்துள்ள நேரம் காலம் கடந்து விட்ட நேரமாக உள்ளதாகவே உணர்கிறேன். வேள்வி செய்து, அதில்  உன்னிடம் இருந்த அனைத்தையுமே அனைவருக்கும் தானம் செய்து விட்டு இப்போது நொடிந்து விட்டாய். அதைக் கேட்க  எனக்கு வருத்தமாக உள்ளது. ஆனாலும் நீ நலமாக இருக்க வேண்டும். உனக்கு மங்களம் உண்டாகட்டும்'.

      இப்படியாக கூறி விட்டு மன்னரிடம் விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பிய  முனிவரை தடுத்து நிறுத்தி ரகுராமன் கேட்டார் 'மரியாதைக்குரிய முனிவரே நான் மனம் நொடிந்து இருந்ததினால் நீங்கள் வந்த விவரத்தைக் கேட்காமல்  ஏதேதோ பேசிக் கொண்டு இருந்து விட்டேன். என்னை தாயைக் கூர்ந்து மன்னித்து விடுங்கள். நீங்கள் வந்த காரியம் யாது? அதை கூறுவீர்களா?'என்று கேட்க, சற்றே சங்கடத்தில் ஆழ்ந்த முனிவர்  கௌட்ச முனிவர் கூறினார் 'மன்னா எனக்கே நான் வந்த விவரத்தைக் கூற சங்கடமாக உள்ளது.  நான் வரந்து எனும் முனிவரின் சீடராக இருந்தேன். அவரிடம் இருந்து பதினான்கு வித்தைகள், நான்கு வேதங்கள், அனைத்து புராணங்கள், மிமிம்சை, தருமசாஸ்திரம்  என அனைத்தையும்  கற்றறிந்தேன். நான் அவரிடம் கல்வி கற்கத் துவங்கி சில காலமானதுமே அவருக்கான  குரு தட்க்ஷணை என்ன தர வேண்டும் என்று கேட்டபோது நான் அவருக்கு செய்யும் பணிவிடையும், அவரிடம் காட்டும் அன்பும் பக்தியும்  மட்டுமே குரு தட்க்ஷணையாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதுவே தனக்குப் போதுமானது என்றார்.

      ஆனாலும் நான் அவரிடம் இருந்து அனைத்தையும் கற்றரிந்தப் பின்னர் அவர் ஆஸ்ரமத்தில் இருந்து போகும் முன் மீண்டும் அவருக்கு நான் என்ன தட்ஷணைத் தர வேண்டும் என்று கேட்க அவரும் என் ஏழ்மை நிலையையும் பார்க்காமல் 'நீ எனக்கு இதுவரை குரு தட்க்ஷணை தரவில்லை என்பதினால் ஒரு வித்தைக்கு ஒரு கோடி என  பதினான்கு வித்தைகளுக்கு தட்க்ஷணையாக பதினான்கு கோடி தங்க நாணயங்கள் கொண்டு வா'என்று கூறி என்னை அனுப்பி விட்டார். நான் அதற்கு எங்கு போவது எனத் தெரியாமல் உம்மிடம் வந்து உம்மைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு செல்லலாம் என இங்கு வந்ததும்தான் உன்னுடைய அனைத்துச் செல்வத்தையும் நீயும் துறந்து விட்டு மண் பாண்டத்தைக் கொண்டு  எனக்கு அர்க்கியம் தரும் நிலையில் உள்ளதைக் காண நேரிட்டது. ஆகவே மன்னா,  இதை எண்ணி நீ யோசனை செய்ய வேண்டாம்.  இங்கு வந்து உன் நிலையைக் கண்டதும் நாம் வேறு யாரிடமாவது சென்று யாசகம் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என என் மனதில் யோசனை தோன்றியது. ஆகவே வேறு யாரிடமாவது சென்று யாசகம் கேட்கலாம் எனக் கிளம்பினேன்'என்று கூறி விட்டு கிளம்பிய  முனிவரை மீண்டும்  தடுத்து நிறுத்தினார்  ரகுராமன். அவரிடம் கூறினார் 'மகா முனிவரே, என்னிடம் வந்து தானம் கேட்டப்பின் அதை பெற்றுக் கொள்ளாமல் வெறும் கையோடு  போக என்னால் எப்படி அனுமதிக்க முடியும்? ஆகவே தயை கூர்ந்து நீங்கள் இங்கு இன்னும் இரண்டு நாள் தங்கி விட்டுச் செல்லுங்கள். நான் எங்கிருந்தாவது நீங்கள் கேட்ட தானத்தை  கொண்டு வந்து தருகிறேன்'என்று கூறிவிட்டு  அவரை  ஒய்வு எடுக்குமாறு கூறினார்.

      இரவு முழுவதும் தூக்கம் இன்றி தவித்த மன்னன் மறுநாள் காலை விழித்தெழுந்ததும் குபேரனிடம் சென்று செல்வம் கேட்கலாம், அவர் கொடுக்க மறுத்தால் போர் தொடுத்தாவது திரவியத்தைக் கொண்டு வரலாம் என்ற நினைப்புடன், காலைப் பொழுதை எதிர்பார்த்தபடி  பல ஆயுதங்களையும் இரவிலேயே எடுத்து வைத்துக் கொண்டு தனது தேரில் அமர்ந்திருந்தவர் அப்படியே தன்னை மறந்து  உறங்கி விட்டார். மறுநாள் பொழுது விடிந்தது. அவரது அரண்மனையின் பொக்கிஷங்களைக் காப்பவர் விடியற்காலை ஓடோடி வந்து மன்னனை எழுப்பி 'மன்னா நமது பொக்கிஷ அறையில் இடமில்லாமல் பொன்னும் பொருளும் நிரம்பிக் கிடக்கின்றன'என்ற சேதியைக் கூற மன்னனும் அதிசயப்பட்டு அங்கு சென்று பார்க்க அவர் முன் வந்த குபேரன்  'மன்னா இது போதுமா, இல்லை இன்னும் வேண்டுமா?'எனக் கேட்க மன்னனும்  'நன்றி குபேரா, நன்றி'எனக் கூறி அவருக்கு விடை கொடுத்து அனுப்பிய பின் அந்த பொக்கிஷங்களை அப்படியே தன்னிடம் யாசகம் கேட்டு வந்திருந்த  கௌட்ச முனிவருக்குக் கொடுத்தார். அந்த முனிவரும் 'மன்னா நான் கேட்டுப் பெற வேண்டிய அளவைக் காட்டிலும் அதிகமாக பெற்றுக் கொண்டு சென்று அவற்றை எடுத்துச் சென்று எங்கு வைக்க முடியும்?  நீ வாக்கு தவறாதவன் என்பதை உணர்கிறேன். ஆகவே எனக்கு குரு தட்ஷணைத் தருவதற்கு பதினான்கு கோடி தங்க நாணயங்கள் மட்டும் போதும். அதற்கு மேல் ஒரு நாணயம் கூட வேண்டாம்.   நீ நீடூழி வாழ்ந்தவண்ணம் இருந்து கொண்டும், உன் ராஜ்யத்தை தொடர்ந்து  ஆள்வதற்கு நல்ல மகன் பேறு பெற்றுக் கொண்டும்   வாழ உனக்கு  என் ஆசிகள்'என மன்னனை வாழ்த்தி விட்டுச் சென்று விட்டார்' . நாளடைவில்  ரகுராமனுக்கும்  ஒரு மகன் பிறக்க அவனுக்கு அயன் என்ற நாமதேயம் சூட்டினார்கள்.

      அயன் சாபம் தீர்த்த கதை 

      அயனும் வயதுக்கு வந்தபோது பல கலைகளையும் கற்றறிந்தவனாக இருந்தான்.  அப்போது விதர்ப தேசத்தை சேர்ந்த பேரரசன் ஒருவன் தனது தங்கையான இந்துமதிக்கு திருமணம் செய்ய முடிவு செய்து ஸ்யம்வரத்தை நடத்த முடிவு செய்து இருந்தார். அதில் பங்கேற்பதற்கு பல நாட்டு ராஜகுமாரர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.  அதில் கலந்து கொள்ள ரகுராமனின் மகன் அயனுக்கும் அழைப்பு  விடுத்திருந்தார்.

      அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட அயனும் அந்த ஸ்யம்வரத்தில் கலந்து கொள்ள நான்கு வகைப் படைகளுடன் விதர்ப தேசத்துக்கு கிளம்பிச் சென்றார். அவர்கள் சென்ற வழியிலே நர்மதை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடியவண்ணம் இருந்தது.  நதிக்கரையை அவர்கள் அடைய இன்னும் சில கஜ தூரமே இருந்தது. அந்த நேரத்தில் நதியின் அடுத்த பக்கத்தில் இருந்து மதம் பிடித்த மிகப் பெரிய யானை ஒன்று நதியிலே நீந்தி இந்தப் பக்கம் வந்து கரையில் இறங்கி  ஆக்ரோஷமாக கோஷமிட்டபடி அவர்களை நோக்கி ஓடி வந்தது.  அது கிட்டே வந்து விட்டால் ஒரு சிலருக்காவது காவு நிச்சயம் என்பதை உணர்ந்த மன்னன் அயனும் சற்றும் தயங்காமல் தனது வில்லை எடுத்து அம்பு தொடுத்து அதன் நெற்றிப் பொட்டில் அதை செலுத்தினார். அந்த அம்பும் அந்த யானையின் நெற்றியை துளைத்துக் கொண்டு அதன் உடலில் புகுந்ததும், அந்த யானை மறைந்து போனது. யானைக்கு பதில் அங்கு ஒரு அழகிய மனிதர் நின்று இருந்தார்.  அடுத்த வினாடி அவர் மன்னரை நோக்கி நடந்து வந்தார். அப்படியே மன்னனின் கால்களில் விழுந்து வணங்கினார்.

      மன்னர் காலில் விழுந்து வணங்கியவர் அவரிடம் கூறினார் 'மன்னா, நான் பிரியம்வதன் எனும் கந்தர்வ புருஷன் ஆவேன். முன் ஒரு காலத்தில் என்னுடைய தந்தையான பிரியதர்சனன் என்பவர் மாதங்க முனிவரின் சாபத்தைப் பெற்றார். அதன் காரணமாக நான் யானை உருவில் இத்தனைக் காலமும் வாழ வேண்டியதாயிற்று. மாதங்க முனிவரிடம் இருந்து சாபத்தைப் பெற்று யானை உருவை அடைந்த எனக்கு ஆறுதலாக மாதங்க முனிவர் என்னிடம் கூறினார் 'பின் காலத்தில் இங்கு வர உள்ள அயன் எனும் மன்னன் மூலமே சாப விமோசனம் கிடைக்கும். அவர் உன் மீது அம்பை  எய்தும் அளவுக்கு நீ அவரைக் கோபப்பட வைக்க வேண்டும். அப்போது அவர் விடுக்கும் அம்பு  உன் உடலில் புகுந்ததும் உனக்கு சாப விமோசனம் கிடைத்து நீ பழைய உருவை அடைவாய்'.

      பிரியம்வதன் தொடர்ந்து கூறலானார் 'மன்னா, நானும் இத்தனைக் காலமும் உன் வரவுக்காக இங்கே காத்துக் கிடந்தேன்.  மாதங்க முனிவர் கூறியது போல இன்று உன்னால் எனக்கு சாப விமோசனம் கிடைத்து விட்டது. அதற்கு மிக்க நன்றி.  மன்னா, என்னிடம் சில சக்திகள் உள்ளன. அவற்றை உனக்குத் தருகிறேன். அவை உனக்கு தக்க நேரத்தில் உதவிடும்'  என்று கூறிய பின் அவருக்கு ஒரு பாணத்தை தந்து விட்டுக் கூறினார் 'மன்னா, நான் கொடுக்கும் சம்மோகனம் எனும் இந்த பாணமானது பல சக்திகளை உள்ளடக்கிக் கொண்ட ஒரு பெரிய படையைப் போன்றது. அது இரண்டு மந்திரங்களைக் கொண்டது. இதை எய்யும்போது ஒரு மந்திரத்தையும், அதை திரும்ப அழைக்கும்போது இன்னொரு மந்திரத்தையும் ஓத வேண்டும். இதற்கு அழிவே கிடையாது.  இதை பயன்படுத்தினால் எதிரிகளை இந்த பாணம்  முற்றிலும் அழிக்கும். உனக்கும் வெற்றியைக்  கொடுக்கும்'. அயனும் அந்த கந்தர்வ புருஷன் கொடுத்த சம்மோகனம் எனும் படையை உள்ளடக்கிய பாணத்தை மனதார பெற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறிய பின் அங்கிருந்து கிளம்பி விதர்பாவை நோக்கிச் சென்றார்.

      நகர் பகுதியை அயன் வந்தடைந்து விட்ட செய்தியைக் கேட்ட விதர்ப அரசனும் நகர் எல்லைக்கே வந்து அவரை வரவேற்று சபைக்கு அழைத்துச் சென்றார். அங்கோ அரண்மனையில் ஸ்வயம்வரத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்திருந்த நிலையில் பல மன்னர்களும், ராஜ குமாரர்களும் ஏற்கனவே அங்கு வந்து கூடி அவரவர் ஆசனங்களில் அமர்ந்து கொண்டு இருக்க, அங்கு போய் சேர்ந்த அயனும் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.
      தொடரும்......5

      Raghuvamsam - 5

      $
      0
      0
      ரகுவம்சம்-5
      - சாந்திப்பிரியா - 

      அயனுடன் இந்துமதியின் ஸ்யம்வரம் 

      ஸ்வயம்வரம் துவங்கியது. விதர்ப நாட்டு மன்னனின் அழகிய மகளான இந்துமதியும்  தனது கையில் மாலையுடன் ஒவ்வொரு வரிசையாக சென்று அங்கிருந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் தனது உடலையும், முகத்தையும் முழுமையாக மூடி இருந்த  சேலை வழியே பார்த்துக் கொண்டே நடந்து செல்கையில் அவள் கூட இருந்த அவளது தோழியோ அந்தந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் குறித்த அருமைப் பெருமைகளைக் கூறியவாறு அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தபடி ஆவலுடன் கூடவே சென்றவண்ணம் இருந்தாள்.  அந்த மன்னர்களும், ராஜ குமாரர்களும்   இந்துமதி தம் அருகில் வரும்போது தமக்கே உரிய தோரணைகளை  வெளிப்படுத்தியவாறு இருந்து கொண்டு அவள் கவனத்தைக் கவர முயற்சி செய்தார்கள்.

      ஒரு அரசன் தனது கையில் வைத்திருந்த ரோஜா மலரை சுற்றி சுற்றி சுயற்றியவண்ணம் அழகு சேட்டை செய்தபடி இருக்க, இன்னொருவன் தான் எத்தனை செல்வந்தன் என்பதைக் காட்ட தங்க இழைகளினால் நெய்யப்பட்ட தனது அங்கவஸ்திரத்தை   (ஒரு பக்க சட்டை மீது போர்த்திக்  கொள்ளும் துணி)  அவ்வபோது கையில் எடுத்தெடுத்து மீண்டும்  தன்னுடைய தோள் மீது போர்த்திக் கொண்டான்.  அதே போல தனது செல்வத்தைக்  கட்ட எண்ணிய இன்னொருவனோ தனது மார்பிலே கிடந்த மின்னும் வைர வைடூரிய மாலையை அலட்சியமாக வெளியில் எடுத்து தனது தோள்  மீது போட்டுக் கொண்டார். அவர்களை எல்லாம் கடந்து சென்றபோது இந்துமதியுடன் சென்ற தோழியோ சலிப்படையாமல் மீண்டும் மீண்டும் அவரவர் அருமை பெருமைகளை அவளுக்கு கூறிக் கொண்டே சென்றாள்.  இப்படியாக அவரவர்   இந்துமதியின் கவனத்தைக் கவர பல்வேறு சேஷ்டைகளை   செய்தபடி இருந்தாலும், அவர்களில் மாறுபட்டு அயன் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் அருகில் சென்ற இந்துமதியின் கண்களும், அயனுடைய கண்களும் நேருக்கு நேர் மோதின.  அவரது அமைதியான, அடக்கமான முகமே அவர் குணத்தை எடுத்துக் காட்டுவதாக இருக்க அவள் கூடச் சென்ற தோழியோ,  'ராஜகுமாரி அவர்களே மேலே செல்லலாமா'என இந்துமதியை கேட்க அயன் முன் நின்று கொண்டிருந்த இந்துமதியோ  சற்றும் தயங்காமல் தனது கையில் இருந்த மாலையை அவர் கழுத்திலே போட பெரும் கரக ஒலி எழுப்பி அனைவரும் அதை வரவேற்றனர்.

      தனது மகள் தேர்வு செய்த ராஜகுமாரனை நோக்கி ஓடோடி வந்த அரசரும், அவரை ஆரத் தழுவி, தன்னுடன் தனது இருக்கைக்கு அழைத்துச் சென்று அவரைக் குறித்த அனைத்து விவரத்தையும் விலாவாரியாக சபையில்  எடுத்துரைத்தப் பின் அனைவர் முன்னிலையிலும் தனது மகளுடன் அயனுக்கு திருமண நிச்சயம் செய்வித்தார். அங்கு அந்த சடங்கை செய்ய தயாராக அமர்ந்திருந்த புரோகிதர்கள் ஹோமக்கிரியை மூட்டி, அக்னி  சாட்சியாக அவர்களுக்கு திருமணம் செய்வித்தார்.  தனது சுற்றார்களுடன் விரைவில் மீண்டும் அங்கு வருவதாக உறுதி கொடுத்து விட்டு இந்துமதியை அழைத்துக் கொண்டு அயன் தனது நாட்டுக்கு திரும்பலானார்.

      இந்துமதியின் தந்தையும் அயனுக்கு அநேக பொருட்களையும், பொன்னையும் தந்து அவருடன் மூன்று நாட்கள் அதாவது பாதி தூரம்வரை அவருடன் பயணித்தப் பின்னர் நாடு திரும்பினார். அதே நேரத்தில் இந்துமதி தமக்கு கிடைக்காத கோபத்தில் வழியில் படையினரோடு பதுங்கி இருந்த பல நாட்டு ராஜகுமாரர்களும் அயனை வழிமறித்து அவனுடன் போர் புரியத் துவங்கினார்கள்.  நான்குபுறமும் படைகள் சூழ்ந்து தம்மை தாக்கினாலும் அவர்கள் அனைவரையும் மூர்கத்தனமாக  அயன் தாக்கத் துவங்கினான். ஒரு கட்ட யுத்தத்தில் பிரியதர்சன் தனக்கு பாதுகாப்பாக இருக்கக் கொடுத்த  விசேஷ பாணம் நினைவுக்கு வர அதை அவன் எதிரிகள் மீது பிரயோகித்தான். அவ்வளவுதான் அந்த பாணம் பல மன்னர்களையும் அவர்களது படையினரையும் கொன்று குவிக்க அயனும் பாதுகாப்பாக இந்துமதியை அழைத்துக் கொண்டு நாடு திரும்பினார்.

      அதற்கு இடையில் தனது மகன் அயன் வெற்றிகரமாக நாடு திரும்பி வந்து கொண்டிருந்த செய்தியைக் கேட்ட மன்னன் ரகுராமனும் மனம் மகிழ்ந்து அவர் வரவை எதிர்நோக்கி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்.  அயனும் இந்துமதியுடன் சென்று தாய் தந்தையரைக் வணங்கித் துதிக்க அவர்களும் அவனுக்கு அளவற்ற ஆசிர்வாதம்  .செய்தார்கள். அடுத்த நாளே அயனிடம் தனது ராஜ்ய பரிபாலனத்தைத் தந்துவிட்டு ரகுராமனும் முக்தி தேடி வனத்துக்கு சென்று விட்டார்.  அயனும் தனது தந்தை வழியிலேயே திறமையாக நாட்டையும் ஆண்டு வந்தார். மக்களும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்க அயனும் அவ்வப்போது தமது பகைவர்களை ஒடுக்கி வந்தார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த அயனும் பிராணனை அடக்கி, யோகங்கள் செய்து  சித்திகள் பலவற்றையும் பெற்றார். தந்தை வழி பிழறாமல் நல்ல ஆட்சி தந்து கொண்டு இருக்கையில் ஒருநாள் அவரது தந்தை ரகுராமனும் தமது யோக சக்தியைக் கொண்டு மூச்சை அடக்கி முக்தி தேடிக் கொண்டார் என்ற செய்தி கேட்டு மிக்க துக்கம் அடைந்தார். தனது தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் காரியங்களை செய்து முடித்தப் பின் மீண்டும் ஆட்சியிலே கவனத்தை செலுத்தலானார். இடையிலே அவருக்கு சூரியனை ஒத்த புத்திரன் ஒருவன் பிறந்தார்.  பத்து திக்குகளும் போற்றும் அளவில் அழகுற இருந்த மைந்தனுக்கு தசரதன் என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
      தொடரும்..........6

      Raghuvamsam - 6

      $
      0
      0
      ரகுவம்சம்-6
      - சாந்திப்பிரியா - 
      அயன்  மரணமும்,  தசரதன் பதவி ஏற்றதும் 

      அயன் பல விஷயங்களிலும் சிறந்து விளங்கினான்.  பெரும் பலமும் வீரமும் மிக்கவனாக இருந்தார். எந்த நாட்டு அரசனுக்கும் எந்த விதமான தொல்லையும் கொடுத்ததில்லை.  அமைதியாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கையில் ஒருநாள் அவன் தனது மனைவி  இந்துமதியுடன் சோலையில் அமர்ந்திருந்தபடி பூக்களைப் பறித்தபடி ஓடியாடிக் கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தார். இருவரும் ஒரு மரத்தடியில் படுத்திருந்தவாறு பேசிக் கொண்டு இருக்கையில் வானத்து வழியே சென்று கொண்டு இருந்த நாரத முனிவருடைய வீணையில் இருந்து ஒரு மாலை கீழே விழுந்தது. விழுந்த மாலை இந்துமதியின் மார் மீது வந்து விழ அவள் ஒரு கணம் பரவசம் அடைந்து மகிழ்ந்த பின் அப்படியே பூமியிலே வீழ்ந்து மாண்டாள். அதைக் கண்ட அயனும் அப்படியே மூர்ச்சை அடைந்து விழுந்தார். அவருடைய பரிவாரங்கள் அனைவரும் அழுது புலம்பினார்கள். அன்னமும், ஆகாயத்திலே பறந்து சென்ற கிளிகளும் கூட அழுது புலம்பின. சற்று நேரத்தில் அயன் மட்டும் கண் விழித்தார். இறந்து கிடந்த தனது மனைவியின் உடலைக் கண்டு திக்கிட்டுப் போய் துக்கம் தீராமல் அழுது புலம்பலானார். 

      'தேவி, என்னே விதி என்பது? ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்த மாலையினால் உன் உயிர் போனதின் காரணம் என்னவோ .....தெரியவில்லையே....உன் மெல்லிய உடலை அந்த மெல்லிய மலர் மாலை பறித்ததின் காரணமும் தெரியவில்லையே......பிரியமானவளே ..... நாம்  எந்த பாவமும் செய்யவில்லையே... அனைவருக்கும் நல்லதையல்லவா செய்து வந்தோம்...இப்படி என்னை தனியே தவிக்க விட்டுச் சென்று விட்டாயே...இது நீதியாகுமா. இது நியாயமா......உனக்கே இது தகுமா? தேவி....உயிர் பிழைத்து எழுந்து வந்து அந்த காரணத்தைக் கூற மாட்டாயா? இனி நான் எப்படி உறங்குவேன்? உன் அழகிய வதனம்   மீது   உன்னைப் பொசுக்க போடப்படும்  கட்டைகளை எப்படியம்மா உன் உடம்பு தாங்கும்?'  என்றெல்லாம் கூறிக் கூறி கதறி அழுதவண்ணம் இருந்தார். அவரை உற்றாரும் உறவினரும், சுற்றத்தாரும் தேற்றி அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். இந்துமதியின் உடலையும் எடுத்துச் சென்று பத்து நாட்கள் இறுதிக் காரியங்களை  முறையோடு செய்து முடித்தார்கள்.

      இறுதிக் காரியங்கள் நடந்து முடிந்தேறிய பின் அங்கு வந்திருந்த வசிஷ்ட முனிவருடைய சீடர்கள்  மன்னர் அயனிடம் சென்று கூறினார்கள் 'மன்னா அனைத்து முக்கால சம்பவங்களை ஞானக் கண் கொண்டு நோக்கும் எம்முடைய மா முனிவரான வசிஷ்ட முனிவர் உமக்கு சில உண்மைகளைக் கூற எம்மை இங்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இறந்து போன உன்னுடைய மனைவி பூர்வ ஜென்மத்தில் அருணை என்பவளாக  இருந்தாள். அவள் இந்திரனின் சபையில்  ஒரு அப்ஸரை ஆவாள். ஒருமுறை திருணவின்து எனும் மாமுனிவர் தவத்தில் இருந்தார். அவர் தவம் வெற்றிகரமாக நடந்து  முடிந்து விட்டால் அவர் இந்திரனையும் மிஞ்சிய சக்தி கொண்டவர் ஆகிவிடுவார் என்ற பயத்தில் இந்திரன் ஒரு சூழ்ச்சி செய்து அருணை எனும் தனது ராஜசபை அப்ஸரையை அந்த முனிவரின் தவத்தைக் கலைக்க அனுப்பினார். அவளும் திருணவின்து எனும் அந்த முனிவர் தவம் இருந்த இடத்தை அடைந்து நடன நாட்டிய ஓசை எழுப்பி அவர் தவத்தைக் கலைத்தாள். தவம் கலைந்த முனிவரும் கோபம் கொண்டு அவளை மானிடப் பெண்ணாக பிறவி எடுத்து பூமியிலேயே சென்று  வாழுமாறு சாபமிட்டார். அழுது புலம்பியவாறு தான் அறியாமையினால் செய்து விட்ட தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கோரினாள்.  தான் வேண்டும் என்றே எந்த தவறையும் செய்யவில்லை, இந்திரனின் கட்டளைப்படியே வேறு வழி இன்றி அங்கு வந்து அவர் தவத்தைக் கலைக்க வேண்டியதாயிற்று என்று கூறி தனக்கு சாப விமோசனம் தருமாறு வேண்டினாள். முனிவர் திருணவின்துவும் அவள் மீது இரக்கப்பட்டு  'அவள் பூமியிலே பிறந்து அயனுக்கு மனைவியாக வாழ்ந்து கொண்டு இருக்கையில் நாரதர் வீணையில் இருந்து எப்போது அவள் மார்பின் மீது  கற்பக மாலை விழுமோ அப்போது அவளுக்கு  மரணம் சம்பவித்து அவள் மீண்டும் இந்திர லோகத்துக்கு சென்று விடுவாள். அதுவரை அவள் பூமியிலே மானிடப் பிறவியில் இருந்து அவதியுற வேண்டும்'என்று அவளுக்கு தான் முதலில் கொடுத்த சாபத்தின் தன்மையை மாற்றினார்.

      வசிஷ்ட முனிவருடைய சீடர்கள் மேலும் தொடர்ந்தார்கள் 'மன்னா இதனால்தான் பூர்வ  ஜென்மத்தில் அருணையாக இருந்த உன்னுடைய மனைவியான இந்துமதியும் சாப விமோசனம் அடைந்து தேவலோகத்துக்கு திரும்பச் சென்று விட்டாள். ஆகவே நீ எத்தனைதான் அழுது புலம்பினாலும் அவள் மீண்டும் உயிர் பிழைத்து வரமாட்டாள் எனும் உண்மையை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எங்களை வசிஷ்ட முனிவர் இங்கு அனுப்பினார். ஆகவே மனதை தேற்றிக் கொண்டு உன் கடமையை வழுவாமல் செய்து வா. அதுவே நீ பிறந்த இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் செயலாக இருக்கும்'என்று கூறி விட்டு சென்று விட்டார்கள். 

      ஆனாலும் அயனினால்  தனது மனைவியாக இருந்த இந்துமதியை மறக்க முடியவில்லை. அவர்  மனதில் ஏற்பட்டு இருந்த துக்கம் ஆற முடியாத பெரிய ரணமாகவே  உருமாறிக்  கொண்டு  இருந்தது. காலம் கடந்தது. துக்கத்தினால் தன் நிலை இழந்த மன்னன் தனது மகன் தசரதன் எட்டு வயதாகும்வரைக் காத்திருந்தார்.   தசரதன் இளம் வயதுக்கு வந்து முடி சூட்டிக் கொள்ளும் நிலைக்கு வந்ததும், அவரை அரியணையில் அமர்த்திவிட்டு  ராஜ்ய பரிபாலனத்தையும் அவரிடத்திலே தந்து விட்டு  பல காலம் உபவாசம் இருந்து ஒருநாள் சராயு நதிக்கரைக்குச் சென்று சராயு நதியில் விழுந்து உயிரைத் துறந்து கொண்டார்.
      தொடரும்..........7

      Raghuvamsam - 7

      $
      0
      0
      ரகுவம்சம்-7
      - சாந்திப்பிரியா - 
      மன்னன்தசரதன் 
      பெற்ற சாபம்   

      அயன் மரணம் அடைந்த பிறகு ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றுக் கொண்ட தசரதனும் தன் தந்தையைப் போலவே நல்லாட்சி நடத்தி வந்தார். தீய செயல்களோ அல்லது தீய குணங்களோ அவரிடம் சிறிதும் காணப்படவில்லை. அவரும் தனது தந்தையைப் போல பல நாடுகள் மீதும் படையெடுத்து சென்று தனது நாட்டை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார். ஜனங்கள் அவர் மீது பெரும்  மதிப்பு வைத்து இருந்தார்கள். பல விஷயங்களிலும் அவர்  சிறந்து விளங்கினார். அமைதியாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கையில் அவர் கோசலநாட்டு மன்னனின் மகளான கௌசல்யயையும், கேயதேசத்து அரசனின் மகளான கைகேயி மற்றும் மகர தேசத்து மன்னனின் மகளான சுமித்திரையும் மணந்து கொண்டார்.  இப்படியாக மூன்று மனைவிகளுடனும் ஆனந்தமான வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கையில் அவருக்கும் ஒரு சோதனை வந்தது.

      வசந்த காலத்தில் பொதுவாக மன்னர்கள் வன வேட்டைக்குச் செல்வார்கள். அப்போதுதான் காட்டில்  வனவிலங்குகள் ஓடியாடித் திரியும். உணவுக்கு இறை தேடி அங்கும் இங்கும் அலையும். செடி கொடிகள் அற்புத பச்சை நிறத்தில் மனதுக்கு இனிமையாக காட்சி தரும். அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்படியான வசந்த காலம் வந்தபோது தசரத மன்னனும் தனது சிறு சேனையுடன், வன நாய்கள், மிருகத்தைக் கட்டும் கயிறு என அனைத்தையும் எடுத்துக் கொண்டு வனத்துக்கு வேட்டையாடச் சென்றார். வன தேவதை தசரதனை மனதார வரவேற்றாள். வனத்துக்கு வேட்டைக்கு சென்ற தசரதன் பல மிருகங்களைக் கொன்றார். மறைந்து இருந்த மிருகங்களை தூரத்ததில் இருந்தே பாணம் விட்டு அழித்தார். மதியம் வேட்டையாடி களைப்புற்றவர்கள் ஒரு அரத்தடியில் அமர்ந்து கொண்டார்கள். அப்போது காத தூரத்தில் இருந்த நதி ஒன்றில் மிருகம்  ஒன்று களுக், களுக் என்று நீர் அருந்துவது போல சப்தம் கேட்டது. ஆனால் அது யானை அல்ல. ஒரு குருட்டு பெற்றோர்களின் புதல்வர் அவர்களுக்காக தனது குடத்தில் நீரை மொண்டு கொண்டு இருந்தபோது எழுந்த சப்தமே ஆகும்.

      தசரதர் வில் வித்தையில் சிறந்தவர். ஓசை வரும் திசையைக் கண்டே துல்லியமாக அந்த ஓசை வரும் இடத்திற்கு அம்பை ஏவும் வல்லமைக் கொண்டவர். ஆகவே ஓசை வந்த திசையில் அம்பை ஏத்தினார்.....அந்தோ பரிதாபம். அந்த அம்பும் அங்கிருந்த குருட்டு பெற்றோர்களின் புதல்வர் உடலிலே தைத்து அவரை கீழே வீழ்த்த, ஐயோ என அலறினான் அந்த சிறுவன். ஒ ....மனிதக் குரல் ஒலிக்கிறதே...ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டதோ ....வந்த குரல்  மனித ஒலியாக இருக்குமா என திடுக்கிட்ட தசரதர் ஓசை வந்த இடத்துக்கு ஓடோடிச் சென்று பார்க்க அங்கே தான் எய்த அம்பினால் கீழே விழுந்து கிடந்த சிறுவனைக் கண்டார். தசரதரைக் கண்ட சிறுவனோ இருகரமும் கூப்பி 'மன்னா சற்று தூரத்தில் தோள் கூடையில் சுமந்து வந்துள்ள கண் பார்வை அற்ற என்னுடைய பெற்றோர்களை விட்டு விட்டு வந்திருக்கிறேன். அவர்கள் தாகத்தினால் தவித்தபடி இருப்பார்கள். ஆகவே தயவு செய்து உடனடியாக இந்த குடத்தில் உள்ள நீரைக் கொண்டு சென்று அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் தாகத்தைத் தணிக்க உதவுங்கள்'என்று கூறி விட்டு அப்படியே மரணம் அடைந்து விழுந்தான்.

      என்ன செய்வதென்று தெரியாத தசரதனும் இறந்து கிடந்த சிறுவனையும், குடத்து நீரையும் எடுத்துக் கொண்டு போய் கண் பார்வை அற்ற கிழவர்களின் அருகில் சென்று முதலில் நடந்த எதைப் பற்றியும் கூறாமல் நீர் குடத்தைக் கொடுத்து அதை அருந்துமாறு கூறினார். ஆனால் அந்த கண்பார்வை அற்ற பெற்றோர்களோ தமது புதல்வன் வராமல் வேறு யாரோ வந்தல்லவா தண்ணீரைத் தருகிறார் ....நமது புதல்வனுக்கு என்ன ஆயிற்று என தவித்தபடி தமது புதல்வனின் பெயரைக் கூறி அவனை அழைத்தார்கள். அவன் வந்து விடுவான் என்றும், அதற்குள் நீரை அருந்துமாறு தசரதன் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் சந்தேகம் கொண்ட அவர்கள் தமது புதல்வன் குரலைக் கேட்காமல் அந்த நீரை அருந்த மாட்டோம் என்று உறுதியாகக் கூறினார்கள்.

      சில கணம் யோசனை செய்தபின் வேறு வழி இன்றி தசரதனும் நடந்த அனைத்தையும் கூறி, தான் யார் என்பதையும் கூறி அவர்களிடம் தான் அறியாமல் செய்து விட்ட பிழைக்காக மன்னிப்பைக் கோரினார். 'பெரியோர்களே, நான் தெரியாமல் செய்து விட்ட பிழையை மன்னித்து என்னையே உங்கள் மகனாக ஏற்றுக் கொண்டு என்னுடன் அரண்மனைக்கு வந்து விடுங்கள். நான் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்'என்று கூறியதும் அந்த கண்பார்வை அற்ற பெற்றோர்கள் கதறி அழுதார்கள். தாம் ஆசையுடன், அன்புடன் வளர்த்து வந்த தமது ஒரே மகனை இழந்து விட்டவர்களினால் மகனின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சற்றே கோபமுற்ற கிழவர் தசரதனுக்கு சாபமிட்டார். 'மன்னா, எங்களை நீ எப்படி புத்திர சோகத்தினால் வருத்தமடையச் செய்து விட்டாயோ அதைப் போலவே உன் வாழ்விலும் உனக்கு புத்திர சோகம் ஏற்படட்டும்'என்று கூறிய பின் அப்படியே கீழே விழுந்து இருவரும் மரணம் அடைய, பெரும் துயரம் அடைந்த தசரதனும் வேறு வழி இன்றி அந்த மூவருக்கும் அங்கேயே கிரியைகளை செய்து அவர்களை தகனமும் செய்து விட்டு நாடு திரும்பினார்.

      காலம் விரைவாக ஓடிற்று. மரணம் அடைந்து விட்ட, கண்பார்வை அற்ற கிழவர்களின் சாபமோ என்னவோ, பதினாறாயிரம் வருடம் கழிந்தும் தசரதனுக்கு புத்திர பாக்கியமே கிடைக்கவில்லை. அதனால் தனது மூதையோரான திலீபனைப் போலவே 'தமக்கு பிறகு ஸ்ரார்தங்கள் செய்து பித்ருக் கடன்களை தீர்க்க மகன் பிறக்கவில்லையே'என மனம் வருந்திய தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்யலானார்.

      இது நடைபெற்றுக் கொண்டு இருந்த நேரத்திலே பாற்கடலில் சயனித்திருந்த மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் சென்று இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தமக்கு தேவலோகத்திலும், பூலோகத்திலும் ராவணன் எனும் அசுரனின் மூலம் பல தொல்லைகள் நேரிடுவதாகவும், ராவணனின் ஆட்களினால் தாம் எந்த ஒரு யாகத்தையும் பூஜை புனஸ்காரங்களையும் செய்ய முடியாமல் தவித்துக் கிடப்பதையும் கூறி தம் அனைவருக்கும் ராவணனின் அட்டகாசத்தில் இருந்து விடுதலை பெற்றுத் தர வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்கள். அதைக் கேட்ட நாராயணரும் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அமைதிப்படுத்தி  'தேவர்களே நீங்கள் அஞ்ச வேண்டாம். நடப்பதை நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த ராவணன் பிரும்மாவிடம் இருந்து பல அறிய வரங்களை பெற்றுக் கொண்டு உள்ளான். அதில் ஒன்றாக அவன் தனக்கு தேவர்களால் மரணம் சம்பவிக்கக் கூடாது என்ற வரத்தையும் பெற்று இருக்கிறான். ஆகவே அவனுக்கு தேவர்களால் மரணம் சம்பவிக்காது. ஒரு மானிடப் பிறவியினால் மட்டுமே மரணம் கிடைக்கும்.  அந்த மரணமும் நான் மானிடப் பிறவி எடுத்தப் பின் என்னால் மட்டுமே மரணம் சம்பவிக்கும் என்பது விதியாக உள்ளது. தற்போது தசரதன் தனக்கு மகன் வேண்டும் என புத்ர காமேஷ்டி யாகம் ஒன்றை நடத்திக் கொண்டு இருக்கிறார். ஆகவே நானே தசரதனின் மகனாக பிறந்து  பூமியிலே மானிடனாக வாழ்ந்து  அந்தப் பிறவியிலே ராவணனுடன் யுத்தம் செய்து அவனை அழிப்பேன். கவலைப்படாதீர்கள்'என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

      அதே நேரத்தில் தசரதன் செய்த யாகமும் நிறைவேறும் கட்டத்தை எட்டியபோது அந்த யாகத் தீயில் இருந்து தோன்றிய பூதம் ஒன்று தனது கையில் ஒரு மண்பாண்டத்தை எடுத்து வந்து அதில் இருந்த பிரசாதத்தை தசரதனுக்கு கொடுத்து அதை அவருடைய மனைவிகள் உண்டால் அவர்கள் கருதரிப்பார்கள் என்று கூறி விட்டு மறைந்தது.   தசரதரும் அதைக் கொண்டு போய்  தனது மூன்று மனைவிகளுக்கும் கொடுத்தார். அதை அருந்திய கோசலை நல்ல நாளில் நாராயணருடைய அவதாரமான ஒரு புத்திரனைப் பெற்று எடுத்தாள்.  அவனுக்கு ராமன் எனப் பெயர்  சூட்டினார்கள். பிரசாதத்தை உண்ட கைகேயி பரதனைப் பெற்று எடுக்க, பிரசாதத்தை உண்ட சுமித்திரைக்கு லஷ்மணர் மற்றும் சத்ருக்னன் பிறந்தார்கள். நான்கு புதல்வர்களில் ராமரும், லஷ்மணரும்  ஒன்றாக வளர, பரதனும் சத்ருக்னனும் ஒன்றாக வளர்ந்தார்கள். அவர்கள் நால்வரும்  நல்லொழுக்கம் நிறைந்தவர்களாக கல்வி அறிவு மிக்கவர்களாக  வளர்ந்து வந்தார்கள்.
      தொடரும்.........8

      Raghuvamsam - 8

      $
      0
      0
      ரகுவம்சம்-8
      - சாந்திப்பிரியா - 

      விஸ்வாமித்திர முனிவர் நடத்திய யாகமும்   சீதையின் ஸ்வயம்வரமும்

      நால்வரும் வளர்ந்து பெரியவர்களானவுடன் ஒருநாள் ராஜகுரு விஸ்வாமித்திரர் தசரதரின் அரண்மனைக்கு வந்து தசரதனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். தான் செய்யும் ஒருயாகம் அசுரர்களால் இடையூறு செய்யப்பட்டு தடுக்கப்பட்டுக் கொண்டே இருப்பதினால் தன்னால் யாகத்தை சரிவர செய்ய இயலவில்லை என்றும், அதனால் யாகம் நடந்து முடியும்வரை யாகத்துக்கு காவலாக இருக்க ராமனையும் லஷ்மணரையும் தன்னுடன் அனுப்புமாறு கேட்க தசரதர் தயங்கினார். தனக்கே வெகு காலத்துக்குப் பிறகே புத்திர பாக்கியம் கிடைத்திருக்கையில் யாகத்துக்கு காவலாக இருக்கும் நேரத்தில் அந்த அசுரர்களின் மூலம் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என பயந்து போன தசரதன் விஸ்வாமித்திரர் வேண்டுகோளை ஏற்கத் தயங்கினார். ஆனாலும் சற்றே சுதாகரித்துக் கொண்டு ராம லஷ்மணர்களுக்கு பதில் தனது படைகளை யாகத்துக்கு  காவலாக இருக்க அனுப்புவதாக கூற,  அதை ஏற்க விஸ்வாமித்திரர் மறுத்து விட்டதுடன், தான் கேட்டபடி ராம லஷ்மணரை தனது யாகத்துக்கு காவலாக இருக்க அனுப்ப முடியவில்லை என்றால்  தனக்கு வேறு எந்தப் படையும் தேவை இல்லை என கோபமாகக் கூறி விட்டு கிளம்பிச் செல்லத் துவங்கியதும் அங்கிருந்த வசிஷ்ட முனிவர் அவர்களை சாந்தப்படுத்தி  விஸ்வாமித்திரர் கேட்டபடியே அவர் யாகத்துக்கு காவலாக இருக்க ராமனையும் லஷ்மணரையும் அனுப்புமாறும், அது நன்மைக்கே என்றும் தசரதனுக்கு எடுத்துரைக்க, வேறு வழி இன்றி தசரதனும்  தனது இரண்டு புத்திரர்களான ராமனையும் லஷ்மணரையும்  விஸ்வாமித்திரர் நடத்தும் யாகத்துக்கு காவலாக இருக்க அவருடன் அனுப்பி வைக்க சம்மதித்தார்.

      ராம லஷ்மணர்கள் விஸ்வாமித்திரருடன் கிளம்பிச் சென்று கொண்டு இருந்தபோது வழியில் தாடகை எனும் அரக்கி இருந்த வனப்பகுதி வந்தது. அவள் கொடூரமான குணத்தையும் முகத்தையும் கொண்ட அரக்கியாவாள். அவள் பலத்தையும், பயங்கரத்தையும் விஸ்வாமித்திரர் ராம லஷ்மணர்களுக்கு  எடுத்துரைத்தார். அவர்கள் விஸ்வாமித்திரருடன் வந்து கொண்டிருந்ததைப் பார்த்து விட்ட அரக்கியோ அவர்களைக் கொல்ல ஆவேசமாக அவர்களை நோக்கி வந்தபோது  பெண் என்பதினால் அவளுடன் சண்டைப் போட முதலில் ராமன் சற்றே  தயங்க, விஸ்வாமித்திரர் பல கதைகளை எடுத்துக் கூறி அவளைக் கொல்லாவிடில் தமது யாகம் நடைபெறாது என்ற காரணத்தையும்  கூற, ராமனும் சற்றும் தயங்காமல் அவள் மீது பாணம்  ஒன்றை விட, அந்த அம்பும் அவளது மார்பை துளைத்துக் கொண்டு வெளியேறிச் செல்ல அவள் மலையைப் போல அப்படியே சாய்ந்து வீழ்ந்தாள். அவள் கொல்லப்பட்டதைப் பார்த்த மாரீசனும், சுவாகு எனும் அரக்கர்களும்  பெரும் சேனையுடன் வந்து ராம-லஷ்மணருடன் யுத்தம் செய்யலானார்கள்.  அவர்களது சேனையையும் மாரீசன் மற்றும் சுவாகு இருவரையும் ராம லஷ்மணர்கள் பல பாணங்களை வீசி கொன்று தீர்த்தார்கள். அந்த அரக்கர்கள் அனைவரும் அழிந்தப் பின் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்ற விஸ்வாமித்திரர் தாம் பாதியில் நிறுத்தி வைத்திருந்த தமது யாகத்தைத் மீண்டும் துவக்கி  முடித்துக் கொண்டார். யாகம் நடந்து முடியும்வரை யாகசாலையின் அனைத்துப் பக்கங்களிலும் நடந்து கொண்டே இருந்தவாறு கண் அயராமல் யாகத்துக்கு காவலாக நின்றார்கள் ராம லஷ்மண சகோதரர்கள்.

      அந்த யாகம் நல்ல முறையில் நடந்து முடிந்ததும் மனம் மகிழ்ந்து போன விஸ்வாமித்திர முனிவர் அவர்களுக்கு தமது பரிபூரண ஆசிகளை வழங்கினார்.  அந்த நேரத்தில் அவருக்கு மிதிலை மன்னன் ஜனகரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது.  அந்த அழைப்பில் அவர் தனது நாட்டில் தனதி எனும் யாகத்தை நடத்த உள்ளதாகவும் அதில் பங்கேற்று அங்குள்ள சிவதனுஷ் எனும் வில்லை தூக்கி அம்பை எய்பவர்களுக்கு தனது மகளை விவாஹம் செய்து கொடுப்பதாக முடிவு செய்து உள்ளதினால், அந்த நிகழ்ச்சி நல்ல முறையில் நடைந்து முடிந்திட அவர் தன்  நாட்டுக்கு வந்து தம்மை ஆசிர்வதிக்க வேண்டும் எனவும்  அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக் கொண்ட விஸ்வாமித்திரரும் தம்முடன்  ராம லஷ்மணர்களையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

      அவர்களும் செல்லும்போது வழியிலே கௌதம முனிவரின் சாபத்தினால் கல்லாகிக் கிடந்த அவரது மனைவியான அகலிகை மீது ராமனின் கால்கள் எதேற்சையாகப் பட்டு விட கல்லாகிக் கிடந்த அவள் உயிர் பெற்று எழுந்தார். ராமரின் கால் பட்டதும்  அவள் சாபம் நீங்கி உயிர் பிழைத்து எழுந்த காரணத்துக்கான சாபம் குறித்து ராமனுக்கு விஸ்வாமித்திரர் எடுத்துரைத்தார்.  விஸ்வாமித்திரர்  'கல்லாகிக் கிடந்த  அகலிகை கௌதம முனிவரின் தர்ம பத்தினியாக இருந்தவள். ஆனால் அவள் தேவலோக அதிபதியான இந்திரனின் அழகில் ஒரு நாள் சற்றே மயங்கி விட்டதால் அவளைக் கல்லாகப் போவது என அந்த முனிவர் சபித்து விட்டாலும்  எப்போது  ராமனின் கால் சிலையாக கிடக்கும் அவள் மீது  படுமோ அப்போது அவள் உயிர் பெற்று எழுவாள் என்று தெய்வ நியதி உள்ளது'என்றுக் கூறினார். அந்த நிலையிலும் ராமர் தெய்வ அவதாரமே என்பதை அவரும் உணரவில்லை, ராமனுக்கும் தெரியவில்லை. உயிர் பிழைத்து எழுந்த அகலிகையை ராம லஷ்மணர்கள் வணங்கி  எழுந்தப் பின், அவளை அழைத்துக் கொண்டு அவளுடன் துணையாகச் சென்று  கௌதம  முனிவரிடம் அவளை பத்திரமாக ஒப்படைத்தப் பின் அங்கிருந்து மீண்டும் கிளம்பி விஸ்வாமித்திரருடன் மிதிலைக்கு செல்லத் துவங்கினார்கள்.

      விஸ்வாமித்திரர் மிதிலைக்கு வந்து கொண்டிருந்த செய்தியைக் கேட்ட ஜனகர் பெரும் மகிழ்ச்சி அடைந்து  அவர் வந்து கொண்டிருந்த வழியை நோக்கிச் சென்று வழியிலேயே அவரை சந்தித்து, அவரை விழுந்து வணங்கி அவருக்கு அர்க்கியமும் தந்து அவர்களை தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் அவருடன் இருந்த இரண்டு இளைஞர்களான ராம லஷ்மணர்களைக்  குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். ராமனின் வீரம், தீரம் மற்றும் பல்வேறு மேன்மையான குணங்களைக் கேட்டறிந்த ஜனகரும் ராமனையும் அந்த யாக முடிவில் நடைபெற இருந்த வில் போட்டியில் பங்கேற்குமாறு அழைப்பு  விடுத்தார்.

      ராமன் எதுவும் கூறும் முன்னரே அவர் சார்பில் விஸ்வாமித்திரர் அந்த அழைப்பை ராமர் சார்ப்பில் தானே ஏற்றதாகக் கூறி விட்டு மறுநாள் அந்த போட்டியில் பங்கேற்க ராம லஷ்மணர்களை அரச சபைக்கு அழைத்துச் சென்றார். போட்டி துவங்கும் முன்னர் மன்னன் அனைவருக்கும்  கூறினார்  'இங்கு கூடி உள்ள அனைவருக்கும் வந்தனம். இந்த வில்லும் அம்பும் சிவபெருமான் கொடுத்ததாகும்.  ஏர்  உழும்போது பூமியில் இருந்து எனது மகளான சீதை கிடைத்ததால் இந்த வில்லையும் அம்பையும் யார் தூக்குவார்களோ அவர்களுக்கே சீதையை மணமுடித்துக் கொடுப்பதாக  முடிவு செய்திருந்தேன். அதன்படி இந்த வில்லையும், அம்பையும் யார் தூக்குவார்களோ அவர்களில் ஒருவரே சீதைக்கு கணவராக தேர்வு செய்யப்படுவார்'. இப்படியாகக் கூறி விட்டு, அங்கு கூடி இருந்த அனைவருக்கும் சபை நடுவே வைக்கப்பட்டு இருந்த வில்லையும் அம்பையும் காட்டினார்.
      தொடரும்...........9

      Raghuvamsam - 9

      $
      0
      0
      ரகுவம்சம்-9
      - சாந்திப்பிரியா - 

      ராமர் சீதையை மணந்ததும் 
      பரசுராமர் கர்வ பங்கத்தை அடக்கிய கதையும்
       
      சீதையை மணக்க வேண்டும் என மனதார விரும்பி ஆசை ஆசையாக அங்கு வந்திருந்த அனைத்து ராஜ குமாரர்களும் நான் முந்தி, நீ முந்தி என அடுத்தடுத்து சபை நடுவே வந்து வில்லையும், அம்பையும் தூக்க முயன்று தோல்வி அடைந்து முகம் சோர்ந்து போய் அவரவர் ஆசனங்களில் சென்று அமர்ந்தார்கள். நடந்தவற்றைக் கண்ட ஜனகரும் சோர்ந்து போய் அமர்ந்து கொண்டார். சீதைக்கு இனி மணமாகாது என்றே நினைத்து வேதனையில் ஆழ்ந்தார். அப்போது விஸ்வாமித்திரர் ராமனை நோக்கி 'நீ சென்று முயன்று பார்'என்று கூறி ராமனை அனுப்ப ராமனும் விஸ்வாமித்திரரை வணங்கி விட்டு அந்த வில்லையும் அம்பையும் தூக்க எழுந்து சென்றார். இத்தனைப் பேர் முயன்றும், அனைவரும் தோற்றுப் போய் விட்ட நிலையில் அவர்களை விட இளம் வயதினராக தோன்றும் இந்த ராமன் எங்கே இதை தூக்கி வெற்றி கொள்ளப் போகிறான் என முகத்தில் எந்த சலனமே இன்றி அமர்ந்திருந்த ஜனகருக்கு ராமர் வணக்கத்தை தெரிவித்தப் பின்  எளிதாக அந்த வில்லைத் தூக்கி வளைத்து உடைத்தார். அனைவரும் அதைக் கண்டு மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தார்கள்.  ஜனகரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

      அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் வேகமாக நடந்தேறியன.  தசரத மன்னன் தமது பரிவாரங்களுடனும், ராஜ குருவான  வசிஷ்டருடனும் மிதிலைக்கு வந்து சேர ஜனக மன்னரும் சீதையை ராமனுக்கு திருமணம் செய்து தந்தார்.   ஊர்மிளை எனும் கன்னிகையை லஷ்மணர் மணந்து கொள்ள, மாண்டவி மற்றும் சுதகீர்த்தி என்பவர்களை முறையே பரதரும் சத்ருக்னனும் மணந்து கொண்டார்கள்.   மணம்  முடிந்ததும் அனைவரும் ஊருக்கு திரும்பும் வழியில் பரசுராமர் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

      அவர்களை தடுத்து நிறுத்திய பரசுராமர்  'ஷத்ரிய வீரனே, எனது பிதாவின் மரணத்துக்குக் காரணமான ஷத்ரியர்களை அழித்து விட்டு இங்கு வந்துள்ளேன். இனி நான் அழிக்க வேண்டிய ஷத்ரியர்களில் நீயும், காத்தவீர்யனும்தான் மீதம் உள்ளீர்கள். உனக்கும் எனக்கும் ராமன் எனும் நாமகரணமே உள்ளது என்பதினால் உன்னைக் கொல்ல யோசனையாக உள்ளது.   நீ ஜனகனிடம் இருந்த  வலிமையற்ற  சிவ தனுஷை உடைத்து விட்டு சீதையை மணந்து கொண்டாலும், அது உன் உண்மையான வலிமையை எடுத்துக் காட்டாது.  இதோ  என்னிடம் உள்ள இந்த  விஷ்ணுவின் வில்லைப் பார். இதை நீ எடுத்து வளைத்து நாணேற்றினால்  என்னை வெற்றிக் கொண்ட உண்மையான வீரன் என்று உன்னை ஒப்புக் கொள்வேன். அதன் பின் நீ மேலே செல்லலாம்'என்று கூறினார்.

      அந்த சவாலை ஏற்றுக் கொண்ட ராமன் பரசுராமரிடம் கூறினார் 'முனிவரே, நீங்கள் என்னை விட மூத்தவர் என்பதினால் இந்த வில்லை வளைத்து நாணேற்றி வெற்றி கொண்டால் அதன் பிறகு   உம்மைக்  கொல்வது குற்றம் ஆகும். ஆகவே இந்த பாணத்தை  தூக்குவதற்கு முன்னரே தயவு செய்து இந்த  பாணத்துக்கு  என்ன இலக்கு என்பதைக் கூறுவீர்களேயானால்  நான் அதை செய்வேன். ஆனால் நீங்கள் விரும்பினால் கூட நான் உங்களைக் கொல்ல  மாட்டேன். அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. நீங்கள் ஒரு பிராமணர் என்பதைத் தவிர விஸ்வாமித்திரருக்கும் உறவினர் ஆவீர்கள். விஸ்வாமித்திரர் என்னுடைய குரு ஆவார்.  ஆகவே என்னால் என் குருவுடன் சம்மந்தம் உள்ளவர்களைக் கொல்ல முடியாது. அது குரு துரோகம்  ஆகிவிடும். அதனால்  இந்த  பாணத்துக்கு இலக்கு உங்கள் 'பாத கதியா'அல்லது நீங்கள் 'ஜெயித்து உள்ள பூமியா'  என்று கேட்டார்.  

      விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர்  சாந்தமான முனிவராக இருந்தவர். ஆனால் தன்னுடைய தந்தையைக் கொன்ற ஷத்ரியர்களை பழிவாங்க புறப்பட்டு சென்றபோது விஷ்ணுவின் கோப குணாதிசயங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு ஆவேசமானவர். அவரது அவதாரத்திலே அவருக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. அந்த சக்தியைக் கொண்டு  ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடையே எவ்வளவு இடைவெளி இருந்தாலும்  ஷண நேரத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அவரால் சென்று விட முடியும்.  அந்த சக்தியையே 'பாத கதி'  என்பார்கள்.

      பரசுராமானின் குரு காஷ்யப முனிவர் என்பவர் ஆவார். பரசுராமர்  அவருடைய குருவான காஷ்யபருக்கு குருதட்ஷணையாக  தான் தபஸ் மூலம் வெற்றிக் கொண்டிருந்த  அனைத்து பூமியையும் தானமாக தந்திருந்தார்.  அப்போது அதைப் பெற்றுக்  கொண்ட காஷ்யபர் பரசுராமரிடம் கூறினாராம்  'பரசுராமா, எப்போது உனக்கு தபஸ் மூலம் கிடைத்த அனைத்து பூமியையும் எனக்கு நீ  தானம் தந்து விட்டாயோ, அந்த தானம் தந்த பூமியில் நீ  வசிக்கலாகாது,  அங்கு  நீ விஜயம் மட்டுமே செய்யலாம். இரவிலே தங்கலாகாது.

      அதனால் பரசுராமர் காலை வேளையில் அந்த பூமியில் எங்கு விஜயம் செய்தவாறு இருந்தாலும், இரவு துவங்கியதுமே தனது பாத கதி எனும் சக்தியை பயன்படுத்தி வெகு தொலைவில் அந்த இடத்தின் எல்லையாக இருந்த மகேந்திர மலைக்கு அப்பால் சென்று விடுவாராம்.  ஆகவே அப்படிப்பட்ட சக்தியைத் தரும் பாத கதியையோ, அல்லது தான் ஏற்க்கனவே தானம் தந்து விட்ட பூமியையோ இலக்காக்கி அவற்றை இழக்க விரும்பவில்லை என்பதினால், ராமர் வில்லில் நாணேற்றி வெற்றி பெற்றால்  ஒன்று தன்னை கொன்று விடலாம், அப்படி தன்னைக் கொல்ல   விருப்பம் இல்லை எனில் அவர் அதற்கு மாறாக தான் யாகம் செய்து பெற்றுக் கொண்ட ஸ்வர்க கதியை இலக்காகக் கொள்ளலாம்  என்று கூறி விட்டார். அதாவது பரசுராமர் என்ற அந்த மானிடப் பிறவி முடிந்து விட்டதும்  அவர் ஸ்வர்கத்துக்கு  செல்ல இருந்த அந்தப் பாதையை* அழித்து  விடலாம் என்ற அர்த்தம் ஆகும்.

      அதைக் கேட்டதும் ராமர் பரசுராமரிடம் இருந்த வில்லை வாங்கி அதை தூக்கி அதில் நாணேற்றி பரசுராமரை வெற்றிக் கொள்ள பரசுராமரின் கர்வ பங்கமும் அடங்கியது. அது நடந்து முடிந்ததும் பரசுராமர் தன் முன் உள்ள ராமனே தனக்கு பின் வந்துள்ள விஷ்ணுவின் அவதாரம் என்பதை புரிந்து கொண்டு அதை ராமனிடமே எடுத்துக் கூறி கைகளைத் தூக்கி ராமனை ஆசிர்வதித்து வழி அனுப்பினார். தனக்கு முடிவு வந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்ட பரசுராமனே தம்முடைய தவ வலிமை முழுவதையும் ராமர் தூக்கி நிறுத்திய தமது பாணத்திற்கு இரையாக்கி விட்டு, பிராமணர் என்ற நிலையில் இருந்து கொண்டு  'நீ அவதரித்தக் காரணம் அனைத்தும் இனிதாக முடியட்டும் என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்ய, ராமனும் தனது மனைவி மற்றும் பரிவாரங்களுடன் பரசுராமரின் கால்களில் விழுந்து வணங்கிய பின் அவர் ஆசிகளை ஏற்றுக் கொண்டு தனது நாட்டுக்குத் திரும்பினார்.

      -----------------------------
      * ஒரு  சிறு விளக்கம் :-​  

      ஸ்வர்க கதியை அழிப்பது என்றால் பரசுராமர் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு விட்டால் ஸ்வர்கத்துக்கு செல்லவே முடியாது என்பதல்ல இதன் சாரம். ஸ்வர்க பாதையை அழித்து விட்டால் பரசுராமர் அவதாரம் முடிந்தவுடன் முதலில்  அவர் எண்ணி இருந்தபடி நேரடியாக ஸ்வர்கத்துக்கு செல்ல முடியாமல் வேறு வழியில் ஸ்வர்கத்துக்கு செல்ல வேண்டி வரும்.  அதற்கு மேலும் சில ஷணங்கள் தேவைப்படும்.  நாம் கணக்கிடும் ஒவ்வொரு ஷணமும்  தெய்வங்களைப் பொருத்தவரை பல்லாண்டு காலம் ஆகும்.  ஆகவே வீணாகும் ஒவ்வொரு ஷணமும் தெய்வங்களைப் பொருத்தவரை பொன்னானவை. அப்படி  வீணாகும் ஒவ்வொரு ஷணமும்  ஒரு அவதாரத்தை முடித்து விட்டு அடுத்த அவதாரம் எடுப்பதற்கு  இடையே பல்லாயிரம் ஆண்டுகள்   இடைவெளியை ஏற்படுத்தி விடும்.  அப்படி என்றால் அனைத்தையும் இயக்கும் எனப்படும் தெய்வங்களால் அவற்றை முன்னரே அனுமானித்து இருக்க முடியாதா, இப்படிப்பட்ட சங்கடங்களை தவிர்க்க முடியாதா என்ற கேள்வி எழலாம்? புராண விளக்கங்களின்படி தெய்வங்களை மையமாகக் கொண்டு நடப்பது அனைத்துமே  தெய்வ லீலைகள் ஆகும்.  இப்படி செய்வதின் மூலம் இப்படி நடக்கும் என்ற விதியை மானிடப் பிறவிகளுக்கு உணர்த்திடவே அப்படிப்பட்ட லீலைகளை வேண்டும் என்றே தெய்வங்கள்  நடத்திக் காட்டுகிறார்கள்.

      விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் தனது அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய கட்டத்தை அடைந்ததும், தனது சக்தியை ராமருக்கு செலுத்த வேண்டிய தருமணம் வந்து விட்டதை உணர்ந்து கொண்டார். அதனால் தன்னிடம் இருந்த வில்லை ராமன் வாங்கிக் கொண்டு, அதை தூக்கி நாணேற்றி  தன்னை  வெற்றிக் கொண்டவுடன்  தன்னை  வணங்கி நின்ற ராமருக்கு தனது கைகளைத் தூக்கி பரசுராமர் ஆசிர்வதிக்கிறார். பரசுராமர் உருவில் இருந்த விஷ்ணு பகவான் அப்படி கைகளை தூக்கி ஆசிர்வதிக்கும்போதே அதன் மூலம் தனது சக்திகள் அனைத்தையும் ராமாவதாரத்துக்கு மாற்றி விடுகிறார்.  ஏன் என்றால் ஒரே நேரத்தில் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இரண்டு வெவ்வேறு மானிட அவதாரங்களில் வைத்திருந்து  தமது கடமைகளை செய்ய முடியாது. 

      'நீ அவதரித்ததின் காரணம் அனைத்தும் இனிதே முடியட்டும்'என்று பரசுராமர் ஆசிர்வதித்தபோதும் கூட தான் விஷ்ணுவின் அவதாரம் எனும் உண்மையை ராமர் புரிந்து கொள்ளவில்லை. அது போலவே மற்றவர்களும் விஷ்ணுவைப் போல சக்தி கொண்ட மானிடர் என்றே ராமரைக் குறித்து நினைத்திருந்தார்களே தவிர அவரை தெய்வம் என்று கருதவில்லை. தானே விஷ்ணுவின் அவதாரம் என்பது ராமருக்குப் புரிந்து இருந்திருந்தால் விஷ்ணுவின் அவதாரமாக, தமக்கு மூத்த அவதாரமாக இருந்த பரசுராமரை தம்மிடம் தோற்றுப் போக வேண்டும் என ராமர் எண்ணி இருப்பாரா? இந்த காட்சி கூட பரசுராம அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும், தனது சக்திகளை ராமாவதாரத்துக்கு செலுத்திவிட வேண்டும் என விஷ்ணு எண்ணியதினால் நடைபெற்ற நிகழ்ச்சியாகும். 

      தொடரும்............10

      Raghuvamsam - 10

      $
      0
      0
      ரகுவம்சம்-10
      - சாந்திப்பிரியா - 

      ராமரின் வனவாசம் 
      ஜடாயுவின் மரணம் மற்றும் ராவண வதம் 

      பரசுராமருடன்  ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டறிந்த  அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து ராம லஷ்மணர்களை வரவேற்று உபசரித்தார்கள். அவர்களது வீர, தீர மற்றும் பெருமையை எடுத்துக் காட்டிய சம்பவங்களை நிகழ்த்தியதற்கும்,  சீதையை ராமன் திருமணம்  செய்து கொள்ளக் காரணமாக இருந்தவருமான   விஸ்வாமித்திர  முனிவருக்கும்  பெரிய வரவேற்பு அளித்து, அவரை பல விதமாக கௌரவித்து,  வணங்கித் துதித்து தமது ஆனந்ததை வெளிப்படுத்தினார்கள்.

      அடுத்து நிகழ்ச்சிகள் மீண்டும் வேக வேகமாக நடந்தேறின. தசரதன் தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்தவுடன் ராமனை பட்டதில் அமர்த்தி விட்டு தான் ஆன்மீக வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்தபோது, மீண்டும் ஒரு சங்கடம் கூனியின்  உருவிலே வந்தது.  கூனியின் போதனையினால் ஈர்க்கப்பட்ட கைகேயி தசரதனிடம் இருந்து முன்னொரு காலத்தில் தான் பெற்று இருந்த வாரத்தை நினைவூட்டி  ராமனை தனது மனைவியுடன் பதினான்கு வருட காலம் வனவாசம் செல்லவும்,  பரதனை ராஜ்ய பரிபாலனத்தை ஏற்கவும் வழி செய்து கொண்டாள் .  அதன்படி ராம லஷ்மணர்கள் வனவாசத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று.

      அதனால் மனமுடைந்து போன தசரதனும், ராமன் அவரது மனைவி சீதை மற்றும் என்றும் தன்னை விட்டுப் பிரியாமல் இருந்த சகோதரன் லஷ்மணரையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றதும் பாசத்தினால் கட்டுண்டு  தனது உயிரை விட்டார். தன்னுடைய தாயாரின் சூழ்ச்சியை அறிந்த பரதனும் ராஜ்யபரிபாலனத்தை ஏற்க மறுத்து வனத்துக்கு சென்று தமது தந்தை தசரதனுக்கு கட்டாயத்தினால் ஏற்பட்ட சங்கடங்கள் அனைத்தையும் ராமனிடம் எடுத்துக் கூறி, ராமனை  நாடு திரும்பி  ராஜ்ய பரிபாலனத்தை ஏற்குமாறு வேண்டிக் கொண்டான். ஆனால் மரணம் அடைந்து விட்ட தனது தந்தைக்கு தான் கொடுத்த வாக்கை மீற  முடியாது என்பதில் உறுதியாக இருந்தார் ராமபிரான். ஆனால் ராமர் தன்னுடன் வந்து ராஜ்ய பரிபாலனத்தை ஏற்காவிடில் அங்கிருந்து செல்ல முடியாது என அடம் பிடித்து நின்ற இளைய சகோதரன் பரதனிடம் ராமர் அதன் விளைவுகளை எடுத்துக் கூறினார். பரதன் அயோத்தியாவுக்கு  திரும்பிச் சென்று ராஜ்ய பரிபாலனம் செய்யாவிடில்  நாடு நலிவுறும், மக்கள் அவதியுறுவார்கள் என்பதை புரிந்து கொள்ளுமாறு அறிவுரைக் கொடுத்தார்.  அதன் பின் பரதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தான் அணிந்திருந்த பாதுகையை பரதனிடம் தந்து தன்னுடைய அந்த பாதுகையை எடுத்துக் கொண்டு போய் தனக்கு பதிலாக அதை தனது துணையாக  வைத்துக் கொண்டு ராஜ்யத்தை தான் திரும்பி வரும்வரை நிர்வாகம் செய்யுமாறு கூறினார். பரதனோ அந்த பாதுகைகளை கொண்டு போய் அதுவே தனது சகோதரன் ராமன் என்பதாக அறிவித்து,   சிம்மாசனத்தில் தான் அமராமல் தனக்கு பதிலாக ராமருடைய பாதுகையை வைத்து  ஆட்சி செலுத்தி வரலானார்.

      நிற்க, அங்கோ  வனத்திலே இருந்த ராமனோ தனது மனைவி சீதை மற்றும் சகோதரன் லஷ்மணருடன் அங்கிருந்த காய் கனிகள் மற்றும் மூலிகைகளை உண்டபடி காலத்தைக் கழித்து வந்தார்கள். அங்கிருந்த  நாட்களிலே அத்ரி முனிவர் ஆஸ்ரமத்திலும்  தங்கி பணிவிடை செய்தார்கள். அவர்கள் பஞ்சவடி எனுமிடத்திலே இருந்தபோது  ராமரின் அழகில் மயங்கிய ராவணனின் தங்கை சூர்ப்பனகை ராமனைக் காதலித்து அவரை நாயகனாக அடைய முயன்றாள். ஆனால் அவளது வார்த்தைகளைத் உதறித் தள்ளிய புனித குணம் கொண்ட ராமரோ அவளை துரத்தி அடிக்க, அவருக்கு தொல்லைத் தர முயன்ற சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும் அறுத்து லஷ்மணர் அவளைத் துரத்தி அடித்தார். அவளும் ஓடோடிச் சென்று சகோதரன் ராவணனிடம் முறையிட, அதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ராவணனும் பெரும் சேனையை அனுப்ப அந்த சேனையையும் நிர்மூலமாக்கி அனுப்பினார்கள்  ராம லஷ்மண சகோதரர்கள். சூர்ப்பனகை விவரித்திருந்த சீதையின் அழகை மனதிலே கொண்ட ராவணனும் சீதையை தான் அடைய எண்ணம் கொண்டான். அதுவே முன் ஒரு காலத்திலே நாராயணன் தேவர்களுக்கு தான் ராமனாக அவதரித்து தேவர்களுக்கு தொல்லைத் தந்து வந்த ராவணனை அழிப்பேன் என்ற வாக்கு கொடுத்ததற்கு போடப்பட்ட முதல் அஸ்திவாரம் ஆயிற்று. பூர்வ ஜென்மத்தில் சீதையும் 'ராவணனை தான் அழிப்பேன்'எனப் போட்டு இருந்த சபதத்துக்கு அஸ்திவாரமாயிற்று.

      ராம லஷ்மணர்களின் பலத்தை தவறாக எடைபோட்டு இருந்த ராவணனும் தனது மாமன் மாரீசனின் மாய மான் வேஷ உதவியோடு ராம லஷ்மணர்களின் கவனத்தை திசை திருப்பி தனியே இருந்த  சீதையை கவர்ந்து வந்தான். வழியிலே தன்னை தடுக்க வந்த ஜடாயுவையும் கொன்று சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்தான். சீதையிடம் தன் பராக்கிரமங்களையும், பலத்தையும், தான் கொண்டிருந்த சக்திகளையும் செல்வத்தையும் பலவாறு எடுத்துரைத்து தன்னை திருமணம் செய்து கொள்ள எத்தனையோ வற்புறுத்தியும் அவள் மறுத்ததினால் அவளை அசோக வனத்திலே தனிமை சிறையில் வைத்தான்.  ஏமாற்றப்பட்டு வீடு திரும்பிய ராம லஷ்மணர்கள் சீதையை தேடி அலைந்தபோது, வழியிலே இறக்கும் தருவாயில் கிடந்த ஜடாயு மூலம் ராவணன் சீதையை கவர்ந்து சென்ற உண்மையை அறிந்து கொண்டார்கள். அந்த செய்தியை கூறிய உடனேயே மரணம் அடைந்துவிட்ட ஜடாயுவுக்கும் அங்கேயே இறுதிக் கிரியைகள் செய்து முடித்தப்பின் வானரங்களின் உதவியோடு சீதை உள்ள இடத்தைத் தேடலானார்கள்.

      கிஷ்கிந்த  மலையில் இருந்த வாலி-சுக்ரீக சகோதரர்களின்  சண்டையில் ராமர் சுக்ரீவனுக்கு உதவி செய்து, வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு அவர் இழந்த ராஜ்யத்தை மீட்டுத் தந்ததின் மூலம் குரங்குப் படையின் துணையும் கிடைத்தது. ஹனுமானும் ராமருக்கு கிடைத்தார். அந்த ஹனுமானைக் கொண்டுதான் சீதையின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, இலங்கைக்குப் போய் ராவணனுடன் யுத்தம் புரிந்து கும்பகர்ணன், இந்திரஜித் போன்ற மகா அசுரர்களையும் கொன்று, முடிவில் ராவணனின் தம்பி விபீஷணனின் துணையோடு ராவணனையும் கொன்று சீதையை மீட்டு வந்தார்.
      தொடரும்................11

      Raghuvamsam - 11

      $
      0
      0
      ரகுவம்சம்-11
      - சாந்திப்பிரியா - 
      லவ குசர் பிறப்பும் 
      ராமருக்கு வந்த சோதனையும்

      ராவணனை வதம் செய்த பின் ராமரும் தனது மனைவி சீதையோடு புஷ்பக விமானத்தில் ஏறி  அயோத்திக்கு திரும்பலானார். வழி எங்கும் தான் எப்படி இலங்கையை அடைந்தேன் என்ற விவரங்களை சீதைக்கு ஆனந்தமாக கூறிக் கொண்டே வந்தார். வனத்தில்  தாம் வசித்த இடம், சீதையை ராவணன் கடத்திய இடம், மாய மான் உருவில் இருந்த மாரீசன் கொல்லப்பட்ட இடம், ஜடாயு  யுத்தம் செய்து மடிந்த இடம், சுக்ரீவரின் நட்பைப் பெற்ற இடம், வாலியை வதம் புரிந்த இடம், ஹனுமான் தன்னிடம் வந்து சரண் அடைந்த இடம்,  கங்கை, சரஸ்வதி, சராயு போன்ற நதிகள் என அனைத்தையும் குறித்து கூறிக் கொண்டே வந்தவர் அயோத்தியாவை அடைந்ததும்  பட்டாபிஷேகம் செய்து கொண்டு நாட்டின் அரச பதவியை தனது  சகோதரன் பரதனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.  ராஜ்யத்தை ஆளத் துவங்கிய ராமரின் மனைவி சீதையும் கர்பவதியானாள். அனைவரும் ஆனந்தத்துடன் அந்த செய்தியைக் கொண்டாடினார்கள்.  நாட்கள் ஓடின.  நாடும் நல்லபடியாக ராமரின் ஆட்சியில் அமைந்து இருந்தது. 

      ஒருநாள் ராமபிரான் தனது ஒற்றன் ஒருவனை அழைத்து நாட்டில் உள்ளவர்கள் தம்மைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அந்த ஒற்றன் கூறினான்  'மன்னா, இந்த நாட்டில் அனைவர் மனதிலும் பரவலாக ஒரு எண்ணம் சுற்றிக் கொண்டு உள்ளது. உமது மனைவியை மாற்றான் ராவணன் கவர்ந்து கொண்டு போய் அத்தனைக் காலமும் தம் இருப்பிடத்தில் வைத்துக் கொண்டிருந்தான். திரும்பி வந்து சில காலத்திலேயே அவள் கர்பவதியாகவும் ஆகி விட்டாள். மாற்றானிடத்தில் அத்தனைக் காலம் தங்கிய பத்தினியை எப்படி ராமர் சந்தேகப்படாமல் ஏற்றுக் கொண்டார் என  மக்கள் உம்மை தூற்றுகிறார்கள்'என்று கூற அதைக் கேட்ட ராமரும் திடுக்கிட்டார்.

      உடனடியாக தனது சகோதரர்களை அழைத்து அது குறித்து ஆலோசனை செய்த பின் சீதையை தன்  வாழ்க்கையில் இருந்து நீக்கி விட தீர்மானம் செய்து விட்டு கர்பவதியான அவளை  வனத்தில் இருந்த வான்மீகி ஆஸ்ரமத்தில் கொண்டு போய் விட்டு வரச் சொல்லி விட்டார். ஆனாலும் ராமருக்கு சீதையின் பிரிவு மன வருத்தத்தை தந்தது. அதை அடக்கிக் கொண்டு நாடாண்டு வந்தார்.

      சில காலம் சென்றதும் ராவணனுடைய தங்கை கும்பேசினி என்பவளின் புதல்வன் இலவணன் என்பவன் தமக்கு பெரும் துயரங்களையும் துன்பத்தையும்  அளிக்கிறான் என ராமரிடம் முனிவர்கள் சென்று முறையிட்டபோது ராமரும் தனது சகோதரன் சத்ருக்னனை அனுப்பி அந்த அசுரனை அழிக்கச் சொன்னார்.  சத்ருக்னனும்  இலவணனை அழிக்கச் சென்றபோது வனத்தில் இருந்த வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சென்று இருந்தபோது அங்கிருந்த சீதைக்கு இரண்டு புதல்வர்கள் பிறந்த செய்தியைக் கேட்டு மனம் மகிழ்ந்தார். அதன் பின் அவர் இலவணனை அழித்து விட்டு  நாடு திரும்பும் வழியில் நதிக்கரையில் இருந்த தம்முடைய ராஜ்யத்தை தமது புதல்வர்களான ஸ்வாகு மற்றும் வெகுசறுகு  என்பவர்களிடம் ஒப்படைத்தப் பின்னர் ராஜ்ய பரிபாலனத்தில் இருந்து தம்மை விலகிக் கொண்டார்.  அதன் பின் அயோத்தியாவுக்கு திரும்பியவர் இலவணன் வதத்தைக் குறித்துக் கூற அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தில் சீதை பிரசவித்ததையோ, அல்லது லவ குசா பிறந்த செய்தியையோ அவர் யாரிடமும் கூறவில்லை. அதன் காரணம்  தக்க நேரத்தில் தன்னால் லவ குசா யார் என்பதை  வெளிப்படுத்தப்படும்வரை சத்ருக்கனன் அவர்களைப் பற்றிய எந்த செய்தியையும் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்பதான வால்மீகியின் கட்டளையை அவரால் மீற முடியவில்லை.

      வால்மீகி முனிவரும் சீதையின் இரு புதல்வர்களுக்கும் வேதங்களையும், வேதாந்தங்களையும் கற்றுக் கொடுத்தப் பின் ராமாயணத்தையும்* பாடலாக கற்றுக் கொடுத்தார். இந்த நிலையில் அயோத்தியில் சில குறிப்பிடத்தக்க  சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒரு நாள் ராமரின் அரண்மனைக்கு முன்னால்  ஒரு அந்தணர் தனது இறந்து கிடந்த குழந்தையை எடுத்து  வந்து நின்று கொண்டு பூமியை நோக்கி  'ஓ ...பூமா தேவியே  தசரத மகாராஜா ஆண்டு வந்திருந்த பூமியில் அவர் ஆட்சி இருந்த காலத்தில் எந்த ஒரு அகால மரணமும் நிகழ்ந்தது இல்லை. ஆனால் இன்றோ அதே மகாராஜனின் புதல்வர்  ஆட்சியில் நடந்துள்ள இந்த அகால மரணத்தை தாங்கிக் கொண்டு எப்படி  உன்னால் அமைதியாக இருக்க முடிகிறது?'என்று கூறி ஒப்பாரியிட்டு அழுது கொண்டு இருந்தார்.

      அந்த செய்தியைக் கேட்ட ராமனும் ஓடோடி  வெளியில் வந்து இறந்து கிடந்த பச்சிளம் குழந்தையையும், ஒப்பாரி வைத்தபடி இருந்த அந்தணரையும் பார்த்துக் கூறினார்'அந்தணரே, நீங்கள் கவலைப்பட வேண்டாம்.  இந்தக் குழந்தைக்கு அகால மரணம் ஏற்பட்டு இருந்தால் அதன் உயிரை நான் மீட்டுக் கொண்டு வருவேன். அதற்கு நான் பொறுப்பு'என் சூளுரைத்து விட்டு ஆக்ரோஷத்துடன் பல ஆயுதங்களையும்  எடுத்துக் கொண்டு புஷ்ப விமானத்தில் ஏறி  யமலோகத்தை நோக்கிச்  செல்லத் துவங்கியபோது ஒரு அசரீரி  குரல் கொடுத்தது 'மன்னனே, உங்கள் ஜனங்களில் சிலர்  தர்ம நெறிக்கு மாறாக குற்றம் செய்துள்ளார்கள். அவர்களைக் கண்டு பிடித்து அவற்றைக் களைந்தாலே உன் நாட்டுக்கு  விமோசனம் கிடைக்கும். வேறெங்கும் போவதை தவிர்த்து உன் நாட்டிலேயே நடைபெறும் இந்த தர்மநெறிக்கு எதிரான குற்றத்தை தடுத்து நிறுத்து'என்று கூறிவிட்டு  மௌனமாயிற்று.

      அதைக் கேட்ட ராமரும் பல திக்குக்களிலும் சென்று தகாத குற்றத்தை செய்பவர்களைத் தேடி அலைந்தபோது ஒரு இடத்தில் தர்ம நெறி முறைக்கு மாறாக ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கியபடி  அந்தணர் அல்லாத ஒருவன் தவத்தில் இருந்ததைக் கண்டார்.  உடனே அவன் அருகில் சென்று அவன் தலையை தனது வாளினால் சீவி எறிய  அகால மரணம் அடைந்த குழந்தையும் பிழைத்து எழுந்த செய்தியும் கிடைத்தது. அரண்மனைக்கு சென்றவரை வாயிலிலே நின்று வரவேற்ற அந்தக் குழந்தையின் தந்தையும் அவரை பல்வேறு வகைகளிலும்  துதி செய்து வாழ்த்திய பின் அங்கிருந்துக் கிளம்பிச் சென்றார்.
       
      (*சிறு  குறிப்பு:- 
      வால்மீகி முனிவருக்கு ராமாயணம் எழுதத் தூண்டிய சம்பவமாக கீழ் காணும் கதையை கூறுகிறார்கள். ஒரு நாள் எப்போது போல  குளிப்பதற்காக தமஸா நதிக்கரைக்கு  வந்த வால்மீகி முனிவர் அங்கே ஆண் மற்றும் பெண் புறாக்கள் இரண்டும் கலவியில் இருந்தபோது வேடன் ஒருவன் எய்த அம்பினால் ஆண் புறா இறந்து விழுந்ததைக் கண்டு பெண் புறா பரிதவித்து அழுததைக் கண்டு கருணையும் கோபமும் ஒருங்கே எழும்ப அந்த வேடனைக் சபிக்கும் விதத்தில் அவரை அறியாது  அவர் வாயில் இருந்து   ஒரு ஸ்லோகம்  எழுகிறது. இப்படி ஒரு ஸ்லோகம் தன்னையறியாது தன் வாயில் இருந்து எப்படி வெளிவந்தது வந்துள்ளது யோசிக்கையில் அவர் முன் பிரும்மா தோன்றுகிறார்.  அவர் முன் தோன்றிய பிரும்மா ராம கதையை எழுதுமாறு வால்மீகி முனிவருக்கு கட்டளை இடுகிறார். அப்படி அவரால் எழுதப்படும் ராமனின் கதை பூவுலகில் மலைகளும் நதிகளும் இருக்கும் வரை மனித இனத்தவரால்  கொண்டாடப்படும் என ஆசீர்வதிக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட வால்மீகி முனிவரும் தியானத்தில் ஆழ்கையில் ராமரின்  பிறப்பிலிருந்து  பட்டாபிஷேகம் மற்றும் சீதாவை துறக்கும் வரையிலான ராம கதையின் அனைத்து நிகழ்வுகளும் அவர் மனதில் ஒன்றன் பின் ஒன்றான  வெளிப்பட அதை மனதிலே ஆழமாக உருவேற்றிக் கொண்டார். இப்படியாக மனதில் தன்னால் இயற்றப்பட்ட இராமாயண மகா காவியத்தை வால்மீகி முனிவர் தன் சிஷ்யர்களான குச லவர்களுக்கு முதன் முதலில் போதிக்கிறார்.  முதலில் வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணம் ராமரின் பிறப்பில் இருந்து ராமர் அயோத்தியா திரும்பி பட்டாபிஷேகம் செய்து கொண்டு சீதையை வனத்துக்கு அனுப்பியவரைதான் இயற்றப்பட்டு உள்ளது என்று நம்புகிறார்கள். அதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சிகளாக வால்மீகி ராமாயணத்தில் காணப்படுபவை வேறு யாராலோ எழுதப்பட்டு  பிற காலத்தில் வால்மீகி ராமாயணத்துடன் சேர்க்கப்பட்டவை என்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் லவ குசர்கள் அயோத்தி நகரிலும் ராமபிரானின் ராஜ சபையிலும் பாடிய ராமாயணம் ராமர் பிறப்பில் இருந்து  பட்டாபிஷேகம் வரையில் மட்டுமே இருந்ததென்றும் கூறுகிறார்கள். ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.  அனைத்துமே வாய்வழி செய்தியாகவே  காலம் காலமாக வந்து உள்ளது. )
      தொடரும்..........12

      Raghuvamsam - 12

      $
      0
      0
      ரகுவம்சம்-12
      - சாந்திப்பிரியா - 

      ராமர், லஷ்மணர் மற்றும் சீதையின் மறைவும் ரகுவம்சத்தினர் ஆட்சி தொடரவும்

      இப்படியாக பல்வேறு விதங்களிலும் இடையூறுகள் ஏற்பட்டு வந்தாலும் திறமையுடன் தனது வம்சத்தினர் ஆட்சியை தொடர்ந்து கொண்டு இருந்த ராமருடைய ராஜ்ய எல்லைகளும் விரிவடைந்து கொண்டே சென்றன. ஒரு நாள் யாத்திரையில் இருந்த ராமனை வழியிலே அகஸ்திய முனிவர் சந்தித்தார். அவருடைய ஆலோசனையின் பேரில் தனது ராஜ்ஜியம் ஸ்திரமாக அமைந்திருக்க ராமரும் அஸ்வமேத யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்தார். பல திசைகளில் இருந்தும் மன்னர்கள் பொன்னும் பொருளும் அனுப்பி யாகத்துக்கு பெருமை சூட்ட,  யாக முறைப்படி தனது ராஜ்ய குதிரையை திக் விஜயம் செய்ய அனுப்பி வைத்தார். அந்த யாக  குதிரையை வால்மீகி  ஆஸ்ரமத்தில் இருந்த லவ குசர்கள் அடக்கி வைத்துக் கொண்டார்கள்.

      அஸ்வமேத யாகத்தைச் செய்யும் மன்னர்கள்  தமது சார்பிலே ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவார்கள். மன்னனது படையினருடன் போரிட பலமில்லாத அரசர்கள் அந்த யாகக் குதிரையைத் தமது நாட்டின் வழியே இடையூறு இன்றி செல்ல  அனுமதிப்பதின் மூலம் அந்த குதிரையை அனுப்பிய மன்னருக்கு தாம் தமது ராஜ்யத்தோடு கட்டுப்படுவதாக  கூறப்படும் செய்தியாகும்.  அப்படி   அடிபணிய விரும்பாத மன்னர்கள் அந்த யாகக் குதிரையைப் பிடித்துக் கட்டி  குதிரையை அனுப்பிய அரசப் படையினருடன்  போர் புரிந்து தோற்பார்கள் அல்லது ஜெயித்து அவர்களை அடித்து விரட்டுவார்கள். அதன் மூலம் தாமும் தமது ராஜ்யமும் அஸ்வமேத யாகத்தை செய்த அரசர்களுக்கு அடி பணிய மாட்டோம் என்ற செய்தியை அளிப்பார்கள்.  இப்படிப்பட்ட நிலையில்தான் இராமன் அனுப்பிய யாகக் குதிரையை ராமரது  மகன்களான  லவனும், குசனும்  பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர். அதைக் கண்டு வியந்து போன ராமர் வால்மீகி முனிவரை அழைத்து அவர்களை குறித்து விசாரிக்க முனிவரோ அவர்கள் ராமனது சபையில் வந்து இராமாயண கானத்தைப் பாடிய பின்னர் அவர்களைக் குறித்த விவரத்தைக் கூறுவதாக  செய்தி அனுப்பினார்.

      ராமரை சந்தித்தப் பின் வனத்துக்கு வந்த வால்மீகி முனிவரும் லவ குசர்களை அந்த யாகத்துக்கு சென்று ராமாயணக் காவியத்தைப் பாடுமாறு  அனுப்பி வைத்தார். லவ குசர்கள் யார் என்பதை அறிந்திடாத ராமரும் சபைக்கு வந்து அற்புதமான ராம காவியத்தைப் பாடிய லவ குசர்களை அதைக் கற்பித்தது யார் என்பதைக் கேட்டறிந்த பின்னர் வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்துக்கு சென்று அவரை வணங்கித் துதித்து அந்த சிறுவர்களை சபைக்கு அனுப்பி இராமாயண காவியத்தை  பாட ஏற்பாடு செய்ததற்கு நன்றி கூறிய பின் அந்த சிறுவர்கள் யார் என்பதைக் கேட்க அவர்களே  ராமருக்கும் சீதைக்கும் பிறந்த  இரட்டை மகன்களான லவ குசர்  என்பது  வால்மீகி முனிவர் மூலம் ராமருக்கு தெரிய வந்தது.  அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த ராமரும் அந்த முனிவரிடம் தனது மனைவி சீதையை அழைத்து வந்து தம்மிடம் சேர்க்குமாறு வேண்டினார்.  முனிவரின் ஆலோசனையின் பேரில் தனது மனைவி சீதையை யாக முடிவில் அழைத்து வந்து அனைவர் முன் நிலையிலும் கற்புக்கரசி என நிரூபித்தப் பின்னர் அவளை மக்களறிய  மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அவருக்கு உறுதி கூறி விட்டு யாகத்தை தொடர்ந்தார். ஆனால் யாகம் நடைபெறுவதற்கு அதை செய்பவருடைய  மனைவியும் உடனிருக்க வேண்டும் என்பது விதியாக இருந்ததினால், அந்த யாகசாலையில் சீதையின் ஒரு பதுமையை வைத்திருந்து, அதேயே தனது மனைவியாகக் கருதி யாகத்தை ராமன் செய்தார்.

      யாகம் முடியும் தருவாயில் இருந்தபோது மனைவி சகிதம் ஒரு கணவர் செய்ய வேண்டிய சடங்கை செய்ய  வேண்டிய தருமணம் வந்தபோது வால்மீகி முனிவரும் சீதையை அழைத்து வந்தார். அந்த நிலையில் அனைவர் முன்னிலையிலும் முனிவர் சீதையைப் பார்த்துக் கூறினார் 'மகளே உன்னுடைய கற்பையும், நீ யார் என்பதையும் நிரூபிக்க வேண்டிய தருமணம் வந்து விட்டது. முதலில் நீ ராவணனின் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டு பல காலம் இருந்திட்டாலும் ராமனை மட்டுமே நினைவில் கொண்டு வேறெந்த நினைவும் இல்லாத நிலையில் இருந்த கற்புக்கரசி என்பதை  அனைவர் முன்னிலையிலும் நிலை நாட்டு 'என்று கட்டளை இட்டார்.

      அதைக் கேட்ட சீதையும்  அனைவர் முன்னிலையிலும் பெரும் தீ மூட்டச் சொல்லிய பின்னர் அனைவர்  முன்னிலையிலும் பூமா தேவியை நோக்கிக் வேண்டினாள்  'தாயே, நான் எந்த விதமான களங்கமும் இல்லாதவள்.  நான் களங்கமற்றவள், தூய்மையான  கற்புக்கரசி என்பது உண்மை என்றால் என்னை உன்னுள் அழைத்துக் கொண்டு விடு'என்று கூறி விட்டு யாரும் எதிர்பாராத நிலையில் அப்படியே தீயில் குதிக்க, அந்த தீயின் அடியில் இருந்த பூமி  இரண்டாகப் பிளக்க, தீயோடு எந்த சலனமும் இன்றி சீதையும் பூமிக்குள் சென்று மறைந்து விட பூமி மூடிக் கொண்டது. அவளது வரவுக்காக பாதாளத்தில் காத்திருந்த பூமா தேவியும் அவளை தன்னுடன் இணைத்துக் கொண்டாள் .

      ஷண நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திட அதை சற்றும் எதிர்பாராத ராமரும் கற்புக்கரசியான தனது மனைவி சீதையை இழந்த கோபத்தில் 'என் மனைவி சீதையை மீண்டும் என்னிடம் திருப்பிக் கொடுக்காவிடில் பூமாதேவியை அழித்திடுவேன்'என ஆவேசத்துடன் கூறியவாறு தனது உறையில்  இருந்த வாளினை வெளியில் எடுக்க அங்கு தோன்றிய பிரும்ம தேவர் ராமரின் கோபத்தை அடக்கினார்.  'சீதை பூமியிலே மனித குலத்தில் அவதரித்ததின் காரண காரியமும் காலமும் முடிந்து விட்டதென்றும், அதனால்தான் அவர் முன்னிலையில் அவள் தன்னை பூமாதேவியுடன் இணைத்துக் கொண்டு விட்டாள் என்றும் அதனால் இனிமேலும் அது குறித்து வருந்துவதோ இல்லை அழுது புலம்புவதோ தவறு. ஆகவே அழுது புலம்புவதை விடுத்து யாகத்தில் பங்கேற்க வந்துள்ளவர்களுக்கு தக்க சன்மானம் கொடுத்து,  மரியாதை செலுத்தி அனுப்புவதே முறையாகும்'என்று அறிவுறுத்த தன்  நிலையை அறிந்திட்ட ராமனும் வந்திருந்த அனைவருக்கும்  தக்க சன்மானங்களையும் வெகுமதியையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

      அதன் பின் சீதையின் பிரிவால் மன அமைதி இழந்த ராமர் தனது மாமனாகிய யதாசித்து என்பவரின் ஆலோசனையை நாடி அவர் கூறியபடி தனது ஆட்சியில் இருந்த சிந்து எனும் தேசத்தை  பரதனுக்குக் கொடுத்தார். ஆனால் சில காலம் ஆண்டதும்  பரதனோ அந்த நாட்டை தமது புதல்வர்களான தக்கன் மற்றும் புர்கலன் என்பவர்களுக்குக் கொடுத்து விட்டு ராஜ்ய பரிபாலனத்தில் இருந்து விலகிக் கொண்டார்.  அது போலவே லஷ்மணரும் தனது நாட்டை தனது புதல்வர்களான அங்கதன் மற்றும் சந்தரகேது என்பவர்களுக்கு கொடுத்து விட ராமரும் தனது ராஜ்யத்தை தனது புதல்வர்களிடம் ஒப்படைத்து விட்டார்.

      இப்படியாக ராம லஷ்மணர் மற்றும் அவர்களது சகோதரர்களான பரதனும், சத்ருக்னனும் தமது ஆட்சிப் பொறுப்புக்களை தத்தம் மகன்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். சில காலம் கடந்ததும் ராமாவதாரம் முடிவுற வேண்டிய நிலை வந்தது.  அந்த நிலையில் ராமரைக் காண ஒருநாள் துர்வாச முனிவர் வந்தார். வந்தவர் தான் ராமனிடம் தனியாக  பேச வேண்டும் என்று கூறிவிட்டு உள்ளே  சென்று ராமாவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய தருமணம் குறித்து ராமருடன் பேசிக் கொண்டிருக்கையில் அதன் இடையில் உள்ளே சென்று அவர்கள் பேசியதைக் கேட்டுவிட்ட லஷ்மணர் மனம் தளர்ந்து போனார்.  தன்னை அழைக்காத நிலையில் தான் உள்ளே சென்று அவர்கள் உரையாடலைக் கேட்டதினால் ஏற்பட்ட பாவத்திற்காக  தாம் மனப்பூர்வமாக  அவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக கூறிவிட்டு, இனி தனக்கும் வாழ்வு தேவை இல்லை என்பதை உணர்ந்து  கொண்ட பின் அங்கிருந்து நேராக சராயு நதிக்கரைக்குச்  சென்று யோக வழியை பயன்படுத்தி தன்  ஆத்மாவை உடலில் இருந்து விலக்கிக் கொண்டார்.

      அதைக் கண்ணுற்ற ராமரும் மேலும் வருத்தம் அடைந்து கலங்கினார். எப்போது தன் இணை பிரியாத சகோதரன் தன்னை விட்டு விலகி விட்டாரோ, அப்போதே தமக்கும் தன்னுடைய அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய தருமணம் வந்து விட்டதை உணர்ந்தார். தனது அனைத்து ராஜ்ய பொறுப்புக்களையும் லவ குசலர்களுக்கு தந்த பின் தனது சகோதரர்களான பரதன், சத்ருக்னன் போன்றவர்களை அழைத்துக் கொண்டு சராயு நதிக்கரைக்கு சென்றார். அங்கு சென்றதும் ராமர் முன்னே செல்ல, மற்றவர்கள் அவர் பின்னால் செல்ல சராயு நதியில் புகுந்த அனைவரும் தமது மானிட வாழ்வை முடித்துக் கொண்டு மேலுலகத்துக்குச் சென்றார்கள்*. இப்படியாக சீதையின் மறைவை  தொடர்ந்து ராம லஷ்மண, பரத மற்றும் சத்ருக்னனின் அவதாரங்கள் மறைந்தன. அவரவர் கொடுத்துச் சென்ற ராஜ்யத்தை அந்தந்தவர்களின் புதல்வர்கள் ஆளத் துவங்கினார்கள்.  ரகுவம்ச ஆட்சி  முடிவுக்கு வர மேலும் சில காலம் இருந்ததினால் அந்த புத்திரர்களின் ஆட்சியுடன் ரகு வம்ச ஆட்சியும்  தொடரலாயிற்று.

      ------------------
      *சிறு குறிப்பு :- 

      வால்மீகி ராமாயணத்தை அவர் எப்போது இயற்றினார் என்பதைக் குறித்து சில சர்ச்சைகள் உள்ளன. ராமாயணம் என்பது ராமனின் பிறப்பு முதல் ராவணனைக் கொன்ற பின் அயோத்தியாவுக்குத் திரும்பி அந்த நாட்டை ஆண்டவரையிலான பாடல்கள் எனக் கூறப்படுகிறது. அவற்றை வால்மீகி முனிவர் தனது மனக்கண்ணால் அறிந்து கொண்டு இயற்றியதாக கூறுகிறார்கள்.  

      ஆனால் வால்மீகி வட மொழியில் எழுதியதாக கூறப்படும் உண்மையான ராமாயண காவியத்தை 1941 ஆம் ஆண்டில் 'காஞ்சீபுரம் உபய வேதாந்த மகாவித்வான் ஸ்ரீமத் பிரதிவாதி பயங்கரம் அண்ணன்கராசாரிய ஸ்வாமிகள்'என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதில்  முதல்  ஸர்கமான ம்ஷேப ராமாயணம் எனும் அத்தியாயத்தில்  நாரத முனிவர்தான் வால்மீகி முனிவருக்கு ராமாயணக் கதையை சுருக்கமாக உபதேசித்ததாகவும், அதற்குப் பிறகுதான்  அவர் தாம்ஸா  நதிக்கரையில் ஏற்பட்ட நிகழ்ச்சியினால் நாரதர் உபதேசித்த ராமாயணத்தை பாடல்களாக இயற்றியதாகவும்,  அதைப் பாடவல்லவர்கள் எவரேனும் கிடைப்பார்களா என எண்ணிக் கொண்டு இருந்தபோதுதான்  லவ குசர்கள் அங்கு வந்து அவரிடம் தாம்  இருவரும் அந்தப் பாடல்களை பாட ஆவலுள்ளவர்களாக இருப்பதாகக் கூறி இராமாயண கானத்தைக் கற்றரிந்தார்கள் எனக்  எழுதப்பட்டு உள்ளது.

      அந்த ராமாயணம் ராமர் அயோத்தியாவை ஆண்டு கொண்டிருந்த காலத்திலேயே இயற்றப்பட்டு உள்ளதினால்தான் ராமர் சபையில் லவ மற்றும் குசா இருவரும் அதைப் பாடலாகப் பாடி உள்ளார்கள்.  அவர்கள் பாடிய பாடல் ராமாயணயத்தில் ராமரின் சாசங்களை  எடுத்துரைத்துள்ளது.  ஆனால் ராமரை  அதில் தெய்வீக அவதாரமாக காட்டவில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இரண்டாவதாக ராமாயணத்தின் கதாபாத்திரங்கள் பூமியிலும், தேவலோகத்தோடும் சம்மந்தம் கொண்டுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் அதில்  காணப்படுகின்றன.  

      வால்மீகி சமிஸ்கிருத மொழியில் இயற்றியதாக  கூறப்படும் இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது என்றும் அவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த ராமாயணம் இராமரின் பிறப்பில் இருந்து ராமர் பட்டாபிஷேகம் மற்றும் சீதை வனத்துக்கு சென்ற சம்பவங்களை  மட்டுமே  விளக்குகின்றன என்றும் கூறுகிறார்கள். ராமர் செய்த யாகத்தில் வால்மீகி  கற்றுக் கொடுத்து லவ மற்றும் குசா பாடியதாக கூறப்படும் ராமாயணத்தில் சீதை மற்றும் ராமர் இறப்பு குறித்து  குறிப்பு இருந்திருக்குமா என்பது  விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.  அதன் காரணம் வால்மீகி சமிஸ்கிருத மொழியில் இயற்றியதாக  கூறப்படும் இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்ட காவியம் ஆகும்  என ஆய்வாளர்கள் கருதினாலும்  அவற்றில் பெரும் பகுதி கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.

      இன்னும் சில  விடை தெரியாத கேள்வியும் உள்ளது. காளிதாசர் எழுதிய ரகுவம்சத்தில் ராமனுடைய முன்னோர்கள் குறித்தும், ராமர் வம்சம் தோன்றிய வரலாறும் கூறப்பட்டு உள்ளபோது வால்மீகி முனிவருக்கு அவை  தெரியாமல் இருந்திருக்குமா? ஆகவே அப்படி கிடைக்காத பெரும் பகுதியான  பாடல்கள் ராமருடைய முன்னோர்களின் வரலாறாக இருந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்கள். காளிதாசரின் ரகுவம்சத்தில் வால்மீகி இயற்றிய ராமாயணத்தை லவ குசர்கள் ராமன் நடத்திய யாகத்தில்  பாடியதாக  எழுதி உள்ளத்தில் இருந்து காளிதாசர் வால்மீகி முனிவர் எழுதி இருந்ததாக கூறப்படும் ராமாயணத்தைப்  முழுவதும் படித்திருக்கலாம் என நம்ப இடம் உள்ளது.  

      தொடரும்..........13

      Raghuvamsam - 13

      $
      0
      0
      ரகுவம்சம்-13
      - சாந்திப்பிரியா - 
      குசன் நாக கன்னிகையை 
      மணந்த கதை  

      இப்படியாக ராமனும் தனது அவதாரத்தை முடித்துக் கொண்ட பின்னர் ராம லஷ்மண, பரத மற்றும்  சத்ருக்னனின் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து  கொண்டு அந்த எட்டு  சகோதரர்களில் அனைத்திலும் மேன்மையாக இருந்த குசனின் தலைமையின் கீழ்  ஏழுபேரும் ஆட்சி செய்து  கொண்டு வந்த வேளையில் ஒருநாள் குசன் தனது மந்திரிமார்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது 'அரசனே, உனக்கு மங்களம் உண்டாகட்டும்'என்று கூறியபடி அந்த அறைக்குள்  ஒரு பெண் திடீர் என நுழைந்தாள்.  அவளைக் கண்டு திடுக்கிட்ட குசனும் அவளிடம் கேட்டார் 'பெண்மணி, நீங்கள் யார்?, உங்கள் கணவர் யார்?  அனைத்து காவலையும் மீறி என் அறைக்குள் எங்ஙனம் நுழைந்தீர்கள்?. உங்களுக்கு என்ன வேண்டும்? 'என அதிசயப்பட்டுக் கேட்டார். 

      அதைக் கேட்ட பரதேசி போல தோற்றம் தந்த அந்தப் பெண்மணியோ 'அரசனே, உன்னுடைய தந்தையார் பூத உடலைத் துறந்து வைகுண்டம் போய் விட்டப் பின் தக்க தலைவன் இன்றி அவதிப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் அயோத்தியா பட்டிணத்தின் தெய்வ மகள்  என என்னை அறிந்து கொள். ரகுவின் வம்சத்திலே நீ தோன்றி பிற ராஜ்யங்களை திறமையாக ஆண்டு கொண்டிருக்கையில் உன்னுடைய முன்னோர்களின் நகரமான அயோத்தியாவின் நிலை என்னவென  என்றாவது எண்ணிப் பார்த்தாயா? அந்த நகரமே பாழ்பட்டு, சீரழிந்து கிடக்கிறது. சாலைகள் பழுதடைந்து கிடக்க வீடுகள் பலவும் இடிந்து கிடக்கின்றன.  பஞ்சு போன்ற புற்கள் நிறைந்த பாதையில் உள்ள புல்லும் வாடி அந்த பூமியே வறண்ட நிலமாக காணப்படுகிறது. பெண்களின் முகத்தை மூடிக் கொண்டிருக்கும் திரைகள் கிழிந்து சிலந்தி வலைப் போல ஆகி உள்ளன.  அத்தனை ஏழ்மை நிலை. நகரெங்கும்  ஏழைகள் நிறைந்துள்ள நிலை. இரவிலே பெண்கள் அஞ்சாது சென்று கொண்டு இருந்த சாலைகளில் நரிகளும், பேய்களும் சுற்றித் திரிகின்றன. ஆகவே அவர்களால் பயமின்றி வெளியில் வர முடியவில்லை. பூஜைகள் செய்யப்பட்டு வந்திருந்த சராயு நதிக்கரை ஓநாய்களும், நரிகளும், நாய்களும் கொன்று தின்று போட்டுள்ள மிச்சம் உள்ள மான்களின், முயல்களின்  மாமிச பிண்டங்களினால்  நிறைந்து கிடக்கின்றன. ஆகவே அரசே, நீர் சற்றும் தாமதியாது அயோத்திக்கு வந்து அந்த பட்டிணத்தை  சீர்படுத்த வேண்டும் என்பதை வேண்டிக் கொளவே இங்கு வந்தேன்'என்று கூறிவிட்டு அப்படியே மறைந்தும் போனாள் .

      அதைக் கேட்டு மனம் வருந்திய குசாவும் மனக் கலக்கம் அடைந்தார். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியாமல் சற்றே பிரமித்து நின்றாலும் உடனடியாக  பெரும் படையுடன் கிளம்பி விந்திய மலை, கங்கை நதி என அனைத்து இடங்களையும் கடந்து  அயோத்தியை அடைந்து  ஆட்சியை தன் கையில் எடுத்துக் கொண்டான். அந்த ஊரிலேயே தங்கி மெல்ல மெல்ல ஒவ்வொரு சீர்கேட்டையும் களைந்து சென்றவாறு நகருக்கே புதுப் பொலிவை  தந்தான். இடிந்து கிடந்த சாலைகளும் கட்டிடங்களும் புதுப்பிக்கப்பட்டன. வறண்டு கிடந்த ஏரிகளும், நதிகளும் தூர் வாரப்பட்டன. நீர் நிறைந்திருந்த நதிகளில் எல்லாம் மறைந்து இருந்த முதலைகளை, கொடிய பாம்புகளை விரட்டி அடிக்கப்பட்டன. இப்படியாக அயோத்தி புதுப் பொலிவைப் பெற ஜனங்கள் மீண்டும் மன மகிழ்வோடு வாழத் துவங்கினார்கள். ரகுவம்சம் மீண்டும் பொலிவு பெற்றுள்ளதே என எண்ணி எண்ணி மகிழ்ந்தார்கள்.

      எப்போது வேண்டுமானாலும் மக்கள் தம்மை வந்து சந்தித்து குறைகளைக் கூறலாம் என்று அறிவித்ததும் அல்லாமல், தம்மை வந்து சந்தித்தவர்களை தவறாமல் சந்தித்து அவர்களது நிறை குறைகளைக் கேட்டறிந்து தேவையானவற்றை செய்தார்.  குறைகளைக் கேட்டு நீதி வழுவாமல் முடிவு செய்தார். பலமான ஒற்றர் படைகளை வைத்திருந்து நாட்டு நடப்புக்களை உன்னிப்பாக கவனித்து தக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தார். எந்த பிரச்சனைகளிலும் மூத்த மந்திரிமார்களின் ஆலோசனைகளைக் கேட்டடறிந்த பின், அனைத்தையும் நன்கு விவாதித்த பின்னரே    நடவடிக்கையையும்  எடுத்தார்.  அஸ்வமேத யாகம் செய்தார்.

      இப்படியாக காலம் கடந்து கொண்டு இருக்கையில் ஒருநாள் குசன் தனது மனைவிகளுடன் நதியில் ஜலக்ரீடை செய்தவாறு குளித்துக் கொண்டிருக்கையில் அவரது அரண்மனையின் ஒரு ராஜகுமாரியின் நகை நதிக்குள் விழுந்து விட்டது.  அதை தேடி எடுத்து வருமாறு மன்னன் ஆணையிட நதிக்குள் மூழ்கி ஆபரணத்தை தேடிய நீர்முழ்கி பணி  செய்பவர்கள் அந்த நகை நதியில் பாதாளத்தில் வாழும் நாகராஜனின்  தங்கையின் கழுத்தில் உள்ளது என்று கூற அதை திருப்பித் தருமாறு மன்னன் அவர்களை கேட்கச் சொல்லி அனுப்பினார். ஆனால்  அந்த ஆபரணத்தை தனது சகோதரி ஆசையாக கழுத்தில் போட்டுக் கொண்டு உள்ளதினால் அதை திருப்பிக் கொடுக்க இயலாது என அதைக் கொடுக்க மறுத்த நாக மன்னன் அவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பி  விட்டார்.

      அதைக் கேட்டு கோபமுற்ற குசன்  அந்த நதிக்குள் மறைந்திருந்த விஷ ஜந்துக்களையும், மறைந்திருந்த முதலைகளையும் விரட்டி அடிக்கவும், நாக மன்னனின் சேனையை ஒடுக்கவும் தனது பாணத்தை நதிக்குள் செலுத்தினார். அதே நேரத்தில் விஷ்ணுவின் வாகனமான பெரும் கருடனை அழைத்து  நாகங்களை அழித்து விட்டு ஆபரணங்களை மீட்டு வருமாறு கூறினார். கருடனும் அந்த காரியத்தை செய்ய அங்கு வந்து  நதியின் மீது வட்டமடிக்கத் துவங்க, அதைக் கண்டு பயந்து போன நாகராஜனும் வெளியில் வந்து  குசனை சந்தித்து அவருடைய ஆட்சியை பெரிய அளவில் பெருமையாகப் பேசி  அந்த ஆபரணத்தை எடுத்துக் கொண்டது தன்னுடைய தங்கையான குமுதவதி என்று கூறி அவளை மணம் செய்து கொள்ளுமாறு குசனிடம் வேண்டுதல் வைக்க, குசனும் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு நாகராஜனின்  சகோதரியான குமுதவதியை மணந்து கொண்டார். அதன் பின் பல காலம் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தபோது குசன் மற்றும் குமுதவதிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தைப் பிறந்தது.  அதற்கு  அதீதி என்ற பெயரிட்டு வளர்த்து வரலானார்கள்.
      தொடரும்................14

      Raghuvamsam - 14

      $
      0
      0
      ரகுவம்சம்-14
      - சாந்திப்பிரியா - 
      ரகுவம்ச அழிவின் துவக்கம்

      இப்படியாக நாக மன்னனின் சகோதரி குமுதவதியும் அவளை மணந்து கொண்ட ராமனின் மகன் குசனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அவர்களுக்குப் பிறந்த மகனுக்கு அதீதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். குசன் பல இடங்களுக்கும் திக்விஜயம் செய்து பல நாடுகளைக் கைப்பற்றி ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டார். அவர் ராஜ்யத்தில் மக்களும் மன மகிழ்வோடு வாழ்ந்து வந்தார்கள். எந்தக் குறையும் அவர்களுக்கு இருந்திடவில்லை. அப்படிப்பட்ட நேரத்திலே ஒருமுறை இந்திரன் தைத்தியாக்கள் என்பவர்களுடன் போருக்கு சென்றபோது அவர் தனக்கு துணையாக குசனையும் அழைத்துச் சென்றார்.  அந்த யுத்தத்தில் தைத்தியாக்கள் கடுமையான தோல்வி கண்டு ஓடினார்கள். கடுமையாக நடந்த யுத்தத்தில் தைத்தியா மன்னன் துர்ஜயா  மரணம் அடைந்தார். ஆனால் அது போலவே அந்த  கடுமையான யுத்தத்தில் துர்ஜயாவினால் குசனும் கொல்லப்பட்டு மரணம் அடைந்தார். குசன் மரணம் அடைந்த சில காலத்திலேயே அந்த மன வருத்தத்தினால் உந்தப்பட்ட குமுதவதியும் மரணம் அடைந்தாள். தந்தை குசாவின் மரணத்துக்குப் பின்னர் அதீதி அரச தலைமைப் பொறுப்பை ஏற்று நாடாண்டார்.

      அதீதியைத் தொடர்ந்து அவரது புத்திரன் நிதடராஜன் பதவியை அடைய அதீதியும் மரணம் அடைந்தார். அவரைத் தொடர்ந்து  நளன்,நளனைத்  தொடர்ந்து  நப்பஹா,  நப்பஹாவைத் தொடர்ந்து புண்டரிக்கா, புண்டரிக்காவைத் தொடர்ந்து ஷேமாதவ் என்ற மன்னர்  போன்றவர்கள் ஆட்சியில் தொடர்ந்தார்கள்.  ஷேமாதவ் ஆட்சியும் முந்தைய ரகு மன்னர்கள் ஆட்சிக்கு சற்றும் சளைத்தது அல்ல என்ற அளவிலே புகழ் பெற்று வளர்ந்தது. மக்களுக்கும் எந்தக் குறையும் இல்லை. சில காலம் வாழ்ந்து வந்த ஷேமாதவ் தனது புத்திரனான தேவனிகனிடம்ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தேவலோகம் சென்றான். தேவனிகனுக்கு அக்னிஹு என்ற புத்திரன் பிறக்க அவனோ நான்கு திசைகளிலும் இருந்த அனைத்து  நாடுகளையும் வென்று அவற்றை ஆண்டு  வந்தான்.

      அக்னிஹுவைத்  தொடர்ந்து அவனது மகன் பரியாத்திரா ஆட்சிப் பொறுப்பை ஏற்க, சிலா, குசா (லவ குசாவில் உள்ள குசா அல்ல), மற்றும்  உன் நாபா எனும் மன்னர்கள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். அடுத்து ஆட்சிக்கு  வந்த  வஜ்ர நாபா என்பவன் தேவலோக அதிபதியான இந்திரனுக்கு ஒப்பான வலிமையைக் கொண்டவனாக இருந்து அற்புதமான ஆட்சியைத் தந்தான். வஜ்ர நாபா மறைவுக்குப் பிறகு அவன் புத்திரன் சங்கணா என்பவர் ஆட்சிக்கு வர  சங்கணாவின் மறைவுக்குப் பிறகு அவனது மகன் வியூஷி தாசா என்பவர் ஆட்சிக்கு வந்தார். அவர் சிவபெருமானிடம் இருந்து பல அறிய வரங்களைப் பெற்று இருந்தவர். வியூஷி தாசாவோ பல அறிய வரங்களைப் பெற்றுக் கொண்டு தானே விசுவசகா  என்ற பெயரில் தனக்கே மகனாகப் பிறந்து ஆட்சிப் பொறுப்பை தன்னுடைய தந்தையின் காலத்துக்கு பிறகு ஏற்றுக் கொண்டார். நல்ல ஆட்சி கொடுத்து வந்தவரும் காசி விஸ்வநாதரின் பெரும் பக்தனுமான அந்த விசுவசகா துறவறத்தை மேற் கொண்ட  பின்னர் தன்  மகனான ஹிரண்ய நாபா என்பவரை  ஆட்சியில் அமர்த்தினர்.  மாமுனிவரான யாக்யவால்யகர் அத்யாத்ம யோகக் கலையை ஹிரண்ய நாபாவிடம் இருந்தே கற்றறிந்தார்.

      ஹிரண்ய நாபாவைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் ஹிரண்ய நாபாவின் மகனான  கௌசல்யன்என்பவர் ஆவார்.  விரைவில் கௌசல்யரும் ஆட்சி பொறுப்பை தனது மகனான பிரமிஷ்டர்என்பவரிடம் தந்து விட்டு மறைந்து போனார்.  பிரமிஷ்டர் ஆட்சியில் மக்கள் அனைவரும் பெரும் சுகத்தோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்தார்கள். விஷ்ணு பகவானின் வாகனமான கருடன் கூட இவருக்கு சேவகம் செய்ததாக கருதினார்கள். பிரமிஷ்டர் தனக்குப் பிறகு பூச நட்ஷத்திரத்தில் பிறந்தபுஷ்யன்எனும் பெயரைக் கொண்ட தனது  புத்திரனை ஆட்சியில் அமர்த்தி அவருக்கு நல்லாட்சி தர வழி காட்டினார்.  பூஷ்யனும் ஜைனிமி முனிவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு யோகக் கலைகள் பலவற்றையும் கற்றறிந்த பின்னர் தனது புத்திரனாகிய துருவசாந்திஎன்பவரை ஆட்சியில் அமர்த்தி விட்டு மரணம் அடைந்தார்.

      துருவசாந்தி மன்னனானதும் தனது மூதையர்கள் போல வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டு இருந்தார்.  அப்போது ஒருநாள் அவர் வேட்டை ஆடிக்கொண்டு இருக்கையில் அவர் ஒரு சிங்கத்தினால் அடித்துக் கொல்லப்பட்டு  மரணம் எய்தினார். அவர் மரணம் அடைந்த தருவாயில் அவருக்கு சுதர்சனன்  எனும் குழந்தை இருந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு அவர் முடி சூட்டவில்லை, தமது வாரிசாக நியமிக்கவும் இல்லை. துருவசாந்தி மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட மந்திரிமார்கள் உடனடியாக ஆறு வயதுக் குழந்தைப் பருவத்தில் இருந்தாலும் அவரது மகனான சுதர்சனுக்கு அயோத்தியாவின் மன்னனாக முடி சூட்டினார்கள்.

      இந்த நிலையில்தான் ரகுவம்சத்தின் அழிவும் துவங்க உள்ளது என்ற விதி செயல்பட்டத் துவங்கியது. சுதர்சனன் எனும் அந்தக் குழந்தையும் அனைத்தையும் முறையாகக் கற்றறிந்து கொள்ளத் துவங்கி அறிவில் சிறந்தவனாக விளங்கிற்று.  இருட்டில் ஜொலிக்கும் ஒரே ஒரு சந்திரன் போலவும், வனத்தில் தனிக்காட்டு ராஜாவான சிங்கம் போலவும் தனித்தன்மைக் கொண்டவராக விளங்கினார்.  நவரத்தினங்களில் நீல வண்ணத்தில் காணப்படும் ரத்தினக்கல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதை மகாநீலம் என்றே அழைப்பார்கள். அதைப் போலவேதான் மன்னன் சிறுவனாக இருந்தாலும் மகாராஜன் என்றே அழைக்கப்பட்டார். இவர் வாழ்க்கையில் இருந்தே மீண்டும் அவருக்கு மன்னர்களுக்கே உரிய பரம்பரைக் குணங்கள் தோன்றலாயிற்று. அவரது அழகிய வதனம் பெண்களைக் கவர்ந்தது. காம புருஷார்த்தங்கள் அனைத்தையும் கற்றிருந்த  அவரைப் பலப் பெண்கள்  மோகிக்கலாயினர்.
      தொடரும்....15

      Raghuvamsam - 15

      $
      0
      0
      ரகுவம்சம்-15
      - சாந்திப்பிரியா - 
      ரகுவம்ச ஆட்சி தொடர்வு  
      முறிந்தது

      பல காலம் ஆட்சி செய்து வாழ்க்கையை சுகபோகமாக அனுபவித்து வந்த சுதர்சனுக்கு  ஒரு கட்டத்தில் வாழ்க்கையே அலுத்துப் போய் சலிப்பு ஏற்பட, தனது மகனான அக்னி வருணனை ஆட்சியில் அமர்த்தி விட்டு நைமிசாரண்ய வனத்துக்குச் சென்று தவத்தில் அமர்ந்து கொண்டார்.அக்னி வருணன்ஆட்சிக்கு வந்த நேரத்திலே நாட்டில் அவருக்கு எந்த விதமான சங்கடமும் இல்லாமல் இருந்தது. அக்கம்பக்கத்து மன்னர்கள் அடங்கிக் கிடந்தார்கள். நாட்டில் செல்வம் கொழித்துக் கிடந்தது. அரசாள்மை விதிமுறைகள் என்பதெல்லாம் வறைமுறையோடு வழி வகுக்கப்பட்டு நடைமுறையில்  இருந்தன என்பதினால் அந்தந்த அதிகாரிகள் முறையோடு அரசர் சார்பிலே ஆதிக்கம் செய்து வந்தார்கள். மக்களுக்கு எந்தக் குறையுமில்லை. ஆகவே அக்னி வருணன் நாட்டு நடப்பின் எதைக் குறித்தும் கவலைக் கொள்ளாமல் சிற்றின்ப வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்தான். காமம் தலைக்கேற பெண்கள் விஷயத்தில் துர் நடத்தைக் கொண்டவனாக மாறிக் கொண்டே வந்தான். காமுகனாக மாறிக் கொண்டே இருந்த அவனுக்கு எந்த அமைச்சரும் முன் வந்து அறிவுரைக் கூற முடியாமல் பயந்தார்கள். ஏன் என்றால் அவர்கள் எத்தனை எடுத்துக் கூறியும் அவன் தனது நடத்தையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அளவுக்கு மீறி சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டதினால் அக்னி வருணனுக்கு  மெல்ல மெல்ல உடலில் தீர்க்க முடியாத தேக வியாதி பிடித்துக் கொண்டது.  சில நாட்களிலேயே அவனால் நடக்கக் கூட முடியாமல் போயிற்று. 

       
      அதனால் அக்னி வருணனுக்கு குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை என்பதினால் வியாதி பிடித்து கிடந்த அக்னி வருணனுக்குப் பிறகு அடுத்து ராஜ்யத்தை யார் ஆளப்போகிறார்கள் என்ற கவலையும் மந்திரிமார்களுக்கு எழுந்தது. பல ஆண்டுகளாக அரசனோ மக்கள் யாரையுமே சந்திக்கவில்லை. எப்போதாவது, எதற்கேனும் அரசனை சந்திக்க விரும்பிய மக்களுக்கு அரசன் புத்திர பாக்கியம் பெறுவதற்காக தபத்தில் அமர்ந்துள்ளதாகவும், ஆகவே அவரை தொந்தரவு செய்ய இயலாது என்று பொய் கூறி,  அரசனுக்கு வந்திருந்த வியாதி குறித்த விஷயத்தை அடியோடு மறைத்து வைத்திருந்தார்கள். அரண்மனையில் கூட அரசனைக் குறித்த எந்த செய்தியுமே யாருக்கும் தெரியவில்லை. அரண்மனையின் அறையிலேயே முடங்கிக் கிடந்த அரசனும் ஒரு நாள் மரணம் அடைந்தான்.

      அரசன் மரணமும் அடைந்த பின் அதை வெளியில் தெரியாமல் மறைத்து வைத்து அமைச்சர்கள் கூடி ஆலோசனை செய்த பின் கைதேர்ந்த பண்டிதரை அழைத்து  அவரைக் கொண்டு யாகாக்கினி  எனும் யாகம் செய்வதைப் போல போலி நாடகம் நடத்தி, அந்த அக்னிக்குள் அரசனை மறைத்து வைத்து அவர் உடலை எரித்தார்கள். அனைத்து காரியங்களும் முடிந்ததும் அரசனுக்கு பிள்ளை ஏதும் இல்லை என்றாலும் அவனுடைய மனைவி  அரசாள்வதற்கு தேவையான அனைத்து சத்குணங்களையும் பெற்று இருந்தாள் என்பதை அறிந்து கொண்ட மந்திரிகள் அவளையே  நாட்டை ஆளுமாறு கோரினார்கள்.  ராஜ்யத்தை ஆள்வதற்கு அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்றாலும்,  ரகுவம்ச ஆட்சி தழைத்திட வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவளும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பல காலம் நல்லாட்சி தந்து வந்தாள்.

      காளிதாசரின் ரகுவம்ச காவியம்   முடிந்தது 
      --------------------------

       ரகுவம்சம்: ஒரு பார்வை  
      அக்னி வருணனுக்கு முன்பாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்து கொண்டிருந்த ரகுவம்ச பரம்பரையினர் துறவறம் மேற்கொண்டோ, தத்தம் ஆயுளை தாமே முடித்துக் கொண்டோ தமது வாரிசுகளுக்கு ராஜ்ய பதவியை தந்துவிட்டு தேவலோகம் போய்  சேர்ந்து விட்டார்கள். அக்னி வருணனின் மனைவி ஆண்டபோதும் அவளது ஆட்சியில் எந்தக் குறையும் இல்லை. அவள் தனது முன்னோர்களின் ஆட்சியைப் போலவே திறமையாக ஆண்டு வந்தாள் என்றாலும் வம்சாவளியாக ஆண்டு வந்த ரகு பரம்பரை ஆட்சியின் பின்னலில் ஒரு இழை அறுந்து விட்டது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.  ஏன் என்றால் பிள்ளைகளை இல்லாத அவளுக்கு பிறகு நாட்டை யார் ஆண்டார்கள் என்பது தெரியவில்லை. ஆகவே அக்னி வருணனின் மறைவே ரகுவம்ச ஆட்சியின் முடிவு என்றே கருத வேண்டி உள்ளது.  

      சில குறிப்பேட்டுக்களில் அக்னி வருணனுக்குப் பிறகு சூரிய வம்சத்தின் இஷ்வாகு பரம்பரையை சேர்ந்த 35 அரசர்கள் ஆண்டு வந்துள்ளதாகவும் அதில் கடைசியாக ஆண்ட மன்னன் கிழக்கு சூரத் நகரை ஆண்டு வந்த  சுமித்ரா எனும் மன்னன் என்றும் காணப்படுகிறது.  அந்த மன்னனே அயோத்தியாவை ஆண்ட கடைசி சூரிய வம்சத்து மன்னன்  என்றும் காணப்படுகிறது என்றாலும் அது பற்றிய மேல் விவரங்கள் தெரியவில்லை. மேலும்  அக்னி வருணனின் மறைவுக்குப்  பிறகு பதவி ஏற்ற ஷிக்ராகு எனும் மன்னனின் மகனான மாரு  என்ற மன்னன் யோகக் கலைகளில் சிறந்தவராக விளங்கினார் என்றும் அவரே கலியுகத்தில் பிறந்து மீண்டும் ரகு வம்சத்தை ஸ்தாபிக்க உள்ளார் என்ற செய்தி  சிலரிடம் காணப்படுகிறது. ஆனால் அவர்கள் அக்னி வருணனின் மனைவியின் வழித் தோன்றல்களா அல்லது எந்த விதத்தில் இஷ்வாகு பரம்பரையை சேர்ந்தவர்களாக கருதப்பட்டார்கள் என்பதெல்லாம் வரலாற்றில் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் அக்னி வருணனுடைய முந்தைய மன்னர்களின் மகன் வழியினராக இருந்திருக்கலாம் என்றும் வல்லுனர்கள் கருதுகிறார்கள். அதே போலவே மன்னன் மாருவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மன்னர்களில் எட்டாவது மன்னனாக இருந்த பிரஹத்பால் எனும் மன்னன் மகாபாரதப் போரில் பங்கேற்றவர் என்றும், அவர் மகாபாரதப் போரில் கௌரவர்கள் சேனையில் பங்கேற்று அபிமன்யுவினால் மரணம் அடைந்தவர் என்றும் சில செய்திகள் உள்ளன. ஆனால் அவை எதுவுமே காளிதாசனின் ரகுவம்சத்திலோ அல்லது வால்மீகியின் ராமாயணத்திலோ காணப்படவில்லை. 
       
      காளிதாசன் எழுதிய ரகுவம்சம் அக்னி வருணன் ஆட்சியைக் குறித்து எழுதியதும் மேலே தொடராமல் முடிந்து விட்டது. அக்னி வருணனுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அவரது மனைவிக்குப் பின்னர் ராஜ்யத்தை ஆண்ட ரகுவம்சத்தினர் யார், யார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே கூறியபடி காளிதாசன் எழுதிய காவியத்தில் பல பகுதிகள் கிடைக்கவில்லை என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதைக் குறித்த இன்னொரு செய்தியும் உள்ளது.

      உஜ்ஜயினியை ஆண்ட மன்னன் போஜராஜன் காளிதாசரிடம் பெரும் மதிப்பு கொண்டவர். காளிதாசன் போஜராஜனின் அரசவையை அலங்கரித்து வந்திருந்த நவரத்தினங்களில் ஒருவர். போஜனுக்கும் காளிதாசனுக்கும் இடையே ஒரு அற்புதமான உறவு உண்டு. இருவரும் இணை பிரியவே மாட்டார்கள், இணைப் பிரியாத நண்பர்களாக இருந்தவர்கள்.

      ஆயினும், சில சமயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்து விடும். அந்த நேரங்களில் காளிதாசர் போஜ ராஜனை விட்டு விலகி எங்கேயேனும் சென்று தான் காளிதாசன் என்பதை எவருக்கும் தெரிவிக்காமல் வாழ்ந்து வருவதுண்டு. ஒரு முறை வழக்கம் போல போஜ ராஜனுக்கும் காளிதாசனுக்கும் கருத்து வேறுபாடு வந்து இருவரும் பிரிந்தனர்.

      காளிதாசனும் ஒரு தாசியின் வீட்டில் சென்று தான் யார் என்பதைக் காட்டிக் கொள்ளாமல், தன்னை புலவர் என்று கூறிக் கொண்டு வாழ்ந்து வந்தார். காளிதாசனை ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள். அத்தனை ஏன், ஒற்றர்கள் உட்பட மன்னனின் படை வீரர்கள் பெரும்பான்மையானவர்களுக்கு கூட காளிதாசன் யார் என்ற அடையாளமே தெரியாதாம். ஆகவே அவர் நாட்டில் எங்காவது சென்று வாழ்ந்து வந்தால் அவரை மீண்டும் கண்டு பிடிப்பது கடினமான காரியமாக இருந்தது.

      நல்ல நண்பனின் பிரிவுத் துயர் தாங்க முடியாத போஜராஜன் அவரைக் கண்டுபிடிக்க, தான் எழுதிய புதிருக்கு விடைக் கூறும் மக்களுக்கு பரிசுகள் உண்டு என அறிவித்தார். போஜன் மற்றும் காளிதாசனின் மனநிலை ஒரே நிலையில் இருந்ததினால் அவர்கள் போடும் எந்த புதிருக்கும் மற்றவர்களால் எளிதில் அர்த்தம் கூற முடியாது. போஜனின் புதிர்களுக்கு காளிதாசரும், காளிதாசரின் புதிர்களுக்கு போஜனும் மட்டுமே தக்க விடையைக் கொடுக்க முடியும். ஆகவே தனது புதிருக்கு நிச்சயமாக காளிதாசன் மட்டுமே பதில் கூற இயலும் என்பதை அறிந்திட்ட மன்னன் காளிதாசனின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க அந்த புதிருக்கான விடை தருபவர்களுக்கு மிகப் பெரிய அளவில் சன்மானங்கள் தருவதாக அறிவித்து இருந்தார்.

      காளிதாசன் தங்கி இருந்த வீட்டில் இருந்த தாசியும் இந்த செய்தியைக் கேட்டு, காளிதாசனிடம் வந்து, 'நீங்கள் ஏதோ புலவர் என்றீர்களே, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்'என்றாள். சற்றே ஏமார்ந்து போன காளிதாசனும் உடனடியாக, அந்த புதிருக்கான பதிலை ஒரு சமிஸ்கிருத ஸ்லோக வடிவில் தாசிக்கு கூறிவிட்டார்.

      அந்த பதிலைக் கேட்ட தாசிக்கு சந்தேகம் வந்து விட்டது. ஒருவேளை காளிதாசனே அரசனிடம் சென்று அந்த பதிலைக் கூறிவிட்டு பரிசைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டால் தன் கதி என்ன ஆகும் என எண்ணியவள் நயவஞ்சகமாக, காளிதாசன் உறங்கிக் கொண்டு இருந்தபோது அவர் கழுத்தை வெட்டி அவரைக் கொலை செய்து விடுகின்றாள். காளிதாசனின் உயிர் பிரிகின்றது.

      அதற்குப் பிரு அந்த தாசியும் அரண்மனைக்குச் சென்று அவர் விடுத்த புதிருக்கான பதிலைக் கூறி பரிசைக் கேட்க, அந்த பதிலைக் கேட்ட மன்னனும் அதை காளிதாசன் மட்டுமே கூறி இருக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டு, பரிசை தாசிக்கு கொடுத்தாலும், அவளை விட்டு விடாமல் தாசியை மிரட்டி நடந்த உண்மையை அறிந்து கொண்டார். காளிதாசனை அவள் கொலை செய்து விட்டாள் என்பதை தெரிந்து கொண்டவுடன் அவளை அழைத்துக் கொண்டு ஓடோடி அவள் வீட்டுக்கு சென்றார். போஜனுக்கு ஒரு சக்தி இருந்தது. கற்றறிந்திருந்த அந்த சக்தியினால் தமது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை இறந்தவர் யாராக இருந்தாலும் அவரை ஒரு முகூர்த்த நேரம் அவரால் உயிர் பிழைத்து வைக்க முடியும். ஆகவே அந்த சக்தியை போஜன் பிரயோகித்து காளிதாசரை உயிர் பிழைத்து எழ வைக்கிறார்.

      காளிதாசனும் உயிர் பிழைத்து எழுந்திட இருவரும் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்கள். காளிதாசர் போஜரிடம் கூறினார் 'மன்னா, நேரம் மிகக் குறைவாக இருக்கின்றது. நான் எழுதிய ரகுவம்சம் முடிக்கப்படாமல் இருக்கின்றது. ஆகவே முடிக்காமல் நான் மிச்சம் வைத்துள்ள குறிப்புகளைத் உனக்குத் தருகின்றேன். அதைக் கொண்டு நீங்கள் மீதம் உள்ள ரகுவம்சத்தை பாடி முடுஇக்க வேண்டும்'என்று கூறிய பின் அதன் குறிப்புக்களையும் அவரிடம் தந்தப் பின் மரணம் அடைந்து விடுகிறார். அதைக் கொண்டு போஜராஜன், ரகுவம்சத்தின் முழு பகுதியையும் மீண்டும் எழுதி முடிக்க துவங்கினாலும் முழுமையாக அவரால் அதை எழுதி முடிக்கவில்லை என்றும் அதுவே போஜசம்பு எனும் இராமாயண காவியமாகி விட்டது என்றும் கூறுகிறார்கள். போஜ சம்புவிலும் அக்னி வர்ணன் என்பவனின் கதையோடு ராமாயணம் முடிவதினால் காளிதாசன் எழுதிய மீதி பாகம் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

      காளிதாசன் எழுதிய ரகுவம்ச காவியத்தில் ராமருடைய மூதையோர் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்தவர்களின் சிறிய வாழ்க்கைக் குறிப்புக்களே காணப்படுகின்றன. ராமருடைய தந்தையின் முந்தைய வம்ச சாபம் போன்றவை கூறப்பட்டு இருந்தாலும் அவர் எழுதி உள்ள ராமருடைய கதையில் அவர்கள் அவதாரம் குறித்த அதிக விவரங்களைக் கொடுக்காமல் பொதுவாக கூறிவிட்டு விட்டுள்ளார்.

      காளிதாசன் எழுதிய ரகுவம்ச காவியத்தில் வால்மீகி முனிவரின் இராமாயண பாடலைப் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளதினால் காளிதாசர் வால்மீகியின் ராமாயணத்தை அறிந்து கொண்டோ அல்லது படித்தோ இருக்கலாம் என்று நம்ப இடமுள்ளது. வால்மீகி எழுதியதாக கூறப்படும் உண்மையான ராமாயணம் 24000 த்துக்கும் அதிகமான பாடலைக் கொண்டது என்றும், அவற்றில் ராமர் பிறப்பில் இருந்து இறப்பு வரை விவரமாக விவரிக்கப்பட்டு இருந்துள்ளது என்றும், அவர் எழுதிய ராமாயணம் ராமனின் வாழ்க்கை வரலாற்றையும் பெருமைகளைப் பற்றி மட்டுமே என்பதினால் ராமருடைய முன் வழி சந்ததியினரையோ அல்லது ராமருக்குப் பிறகு ஆண்டவர்களையோ குறித்த செய்திகளை வால்மீகி ராமாயணம் கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள். அதே சமயத்தில் வால்மீகி ராமாயணத்தின் முதல் சில பாகங்களும் இறுதி பாகமான ராமர் இறப்பும், அவர் வம்சத் தொடர்ச்சி குறித்த பாடல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

      ஒருவேளை வால்மீகியின் முதல் சில பாகத்தில் அவர் ராமர் சந்ததியினர் குறித்து கூறி இருக்கலாம் என்றும், அதுவே காளிதாசரின் ரகுவம்ச காவியத்தின் கருவாக அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் ஆய்வாளர்களுக்கு உள்ளது. நான் முன்னரே எழுதியது போல காளிதாசரால் எழுதப்பட்டிருந்த ரகுவம்சம் எனும் மூல நூலில் 25 காண்டங்கள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் 19 காண்டங்களே புலவர்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. மற்ற ஆறு காண்டங்களில் கூறப்பட்டுள்ள மன்னர்கள் யார் என்பதோ, இல்லை அவை எதை வெளிப்படுத்தின என்பதோ தெரியவில்லை. ஆனால் வால்மீகி ராமாயணத்தைப் போலவே காளிதாசரின் கதைக்குப் பின்னர் காவியம் மீண்டும் தொடராமல் அந்தரங்கத்தில் ரகுவம்சக் காவியம் நின்று விட்டு உள்ளதைக் காணும்போது காளிதாசரின் கண்டெடுக்கப்படாத பாடல்களில் பிந்தைய வம்சத்து செய்திகள் இருந்திருக்கலாம் என்பதாக நம்ப இடமுள்ளது.  எது எப்படியோ, காளிதாசரின் ரகுவம்சக் காவியத்தை முடிக்கப்படாத காவியமாகவே கருத வேண்டி உள்ளது.
      Viewing all 460 articles
      Browse latest View live


      <script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>