சாந்திப்பிரியா
லஷ்மி தேவியின் பூர்வ ஜென்மக் கதை
வயதுக்கு வந்து விட்டப் பெண்ணுக்கு திருமணம் செய்ய நினைத்த மன்னன் சுயம்வரம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அவள் திருமணம் செய்து கொள்வதற்கு மறுத்தாள். தன் மனதில் ராமபிரானே உள்ளதினால், அவரையே தான் மணக்க விரும்புவதாக கூறினாள் (அப்போது ராமருக்கு சீதையுடன் திருமணம் ஆகவில்லை. ராமரோ விஷ்ணுவின் அவதாரம்). ஆனால் பத்மவாசனோ அது நடக்க முடியாதக் கனவு என்றும், ராமர் மிகப் பெரிய சக்ரவத்தியான தசரதனின் மகன் என்றும், சிறிய மன்னரான தன் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து கொடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளது என்றும் தன் மகளுக்கு எடுத்துரைத்தார். ஆனால் அதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் தனது தந்தை ஏற்பாடு செய்திருந்த சுயம்வரத்தை தடுத்து நிறுத்தும் சக்தியும் அவளுக்கு இல்லை. காரணம் அந்த காலத்துப் பெண்கள் குடும்ப நியமங்களை தாண்டியது இல்லை. அவர்கள் மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல பெற்றோர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள்.
சுயம்வர நாளும் நெருங்கியது. பல இடங்களில் இருந்தும் மன்னர்களும் ராஜ குமாரர்களும் வந்திருந்தார்கள். அந்த சுயம்வரத்தில் ராவணனும் வந்து இருந்தான். அவன் பேரழகியாக இருந்த பத்மவாசனின் பெண்ணை கண்டதும் அவள் மீது ஆசைக் கொண்டு அவளை மணக்க விரும்பினான். சுயம்வரம் துவங்கியது. கையில் பூ மாலையுடன் அந்தப் பெண் வந்திருந்த அனைவரையும் சுற்றி வந்தாள். ஆனால் யார் கழுத்திலும் மாலையிடவில்லை. அப்போது ராவணனைத் தாண்டிப் போகையில் அவளிடம் ராவணன் தன்னை மணக்குமாறு கேட்டான். ஆனால் அவளுக்கு அவனை மணக்க விருப்பம் இல்லை. மறுத்தாள். ஆகவே கோபமுற்ற ராவணன் அவளை பலவந்தமாக இழுத்துச் செல்ல முயல அவள் தந்தை அதை தடுக்க ஓடி வந்தார். அவரை தனது வாளினால் ஒரே வெட்டில் வெட்டி வீழ்த்தினான் ராவணன். அனைவரும் அலறி ஓடினார்கள்.
ஆனால் அந்தப் பெண்ணும் சக்தி அற்றவள் அல்ல என்பதினால் அந்த கலவரத்தில் ஒரு மாய உருவை எடுத்தவள் காட்டிற்குள் ஓடி விட்டாள். அங்கு பெரிய யாகம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது. வேதங்களை ஓதியவாறு அங்கு பெரிய யாகம் ஒன்றை செய்து கொண்டு இருந்த ரிஷிகளின் ஆஸ்ரமங்களின் பக்கத்தில் மறைந்து கொண்டவள் பின்னர் அங்கேயே தங்கி இருந்தவாறு தவம் செய்யலானாள். அதே நேரத்தில் அவளை துரத்திக் கொண்டு ஓடி வந்த ராவணன் வானத்தில் சுற்றித் தெரிந்தவாறு வானத்தின் மீதிருந்து அவளை தேடத் துவங்கினான். சில நாட்கள் கழிந்தன. அவனும் தேடுவதை நிறுத்தவில்லை. ஆனால் அவளையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
சீதை என நினைத்து ராவணன்
வேதவதியை கவர்ந்து சென்றான்
அதே நேரத்தில் அங்கு வந்து தவம் இருக்கத் துவங்கிய அந்தப் பெண் யார் என்று யாருக்கும் தெரியாததினால், வேதங்களை ஓதும்போது அங்கு வந்திருந்த அந்தப் பெண்ணிற்கு வேதவதி என்று பெயர் சூட்டி அவளை முனிவர்கள் அழைத்தார்கள். எத்தனை நாள்தான் பதுங்கி இருக்க முடியும்? ஒருநாள் ஆகாய மார்கமாக அவளை தேடிக்கொண்டு சென்று கொண்டு இருந்த ராவணன் வனத்தில் திரிந்து கொண்டு இருந்த அவளைப் பார்த்து விட்டான். கீழே இறங்கி வந்து மீண்டும் அவளை பிடித்து தூக்கிக் கொண்டு போக முயன்றபோது அவனிடம் இருந்து மீண்டும் தப்பி ஓடியவள், வேறு வழி இன்றி அங்கு எரிந்து கொண்டு இருந்த யாகத் தீயில் விழுந்து மறைந்து விட்டாள்.
போகும் முன் ராவணனுக்கு சாபம் ஒன்றைக் கொடுத்தாள். 'ராவணா, நீ பெண் இனத்தையே அவமானப்படுத்த நினைத்தாய். ஆனால் ஒன்றை புரிந்து கொள். எந்த பெண் இனத்தை நீ அவமதித்தையோ, அதே பெண் இனத்தினால்தான் உனக்கும் மரணம் வரும் என்பது சத்தியம்' என்று கூறி விட்டு தீயில் குதித்தாள். அதனால்தான் ராவணனுக்கு சீதையினால் மரணம் வந்தது.
அக்னிக்குள் விழுந்த அவளை அக்னி பகவான் காப்பற்றி தன்னுடன் வைத்துக் கொண்டு பாதுகாத்து வரலானார். அது முதல் அவள் அக்னிக்குள் வாசம் செய்யத் துவங்கினாள். அவளை ஏன் அக்னி பகவான் தீயிலேயே மறைந்து இருக்குமாறுக் கூறி இருந்தார்? அதற்குக் காரணம் அக்னி பகவானுக்கு மட்டுமே தெரியும். ராவணன் சும்மா இருக்க மாட்டான், அவன் அனைத்துக் கலைகளிலும் சிறந்தவான். ஆகவே ஒரு வேளை அக்னியில் குதித்தது போல நாடகமாடி விட்டு அவள் மறைந்து வாழ்ந்தால் அவளைக் கண்டு பிடித்து விடலாம் என்று நினைத்தவாறு அவ்வப்போது அங்கு வந்து அவளைத் தேடி அலைவான். ஆகவே அவன் கண்களில் இருந்து அவளை காப்பாற்றி வைத்து இருக்க வேண்டும் என்பதற்காகவே சில காலம் அவளை அக்னிக்குள் மறைந்து வாழுமாறு கூறி இருந்தார். அதுவும் நல்லதற்காகவே அமைந்து விட்டது. அப்படி அவர் வேதவதியை அக்னிக்குள் மறைத்து வைத்து இருந்ததினால்தான் அவரால் சீதையைக் காப்பாற்ற முடிந்தது. சீதையை அவர் எப்படி காப்பாற்றினார் என்று யோசிக்கிறீர்களா? மேலே படியுங்கள்.
வேதவதியை அக்னி பகவான் காப்பாற்றி
அவளை அக்னியிலேயே மறைந்து
இருக்குமாறு கூறி இருந்தார்
அக்னி பகவான் படைத்த சீதையின் மாய உருவம்
ராமன் காட்டில் இருந்தபோது சீதையைக் கவர ராவணன் போட்டுக் இருந்த வஞ்சக திட்டத்தை தன் சகோதரர்களுடன் இலங்கையில் ராவணன் விவாதித்துக் கொண்டு இருந்தபோது அதை அக்னி பகவான் ஒட்டுக் கேட்டு விட்டார். அக்னி இல்லாத இடம்தான் எது? ஆகவே அக்னியினால் ராவணனின் வஞ்சக திட்டம் அறிந்து கொள்ளப்பட, ஓடோடி வந்தவர், ராமன் மானை தேடிக் கொண்டு சென்றிருந்த நேரத்தில் ராவணன் வந்து சீதையைக் கவரும் முன்னரே, சீதையிடம் வந்து ராவணனின் வஞ்சக நாடகத்தை எடுத்துக் கூறி அவளை தன் இடத்துக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு கூறி விட்டார். அதே நேரத்தில் அக்னியில் இருந்த வேதவதியை சீதையின் மாய உருவை எடுக்கச் சொல்லி அந்த பர்ணசாலையில் இருக்குமாறு கூறி அனுப்பினார். வேதவதியும் அக்னி பகவானின் ஆணையை ஏற்று அங்கு சீதையின் மாய உருவில் இருக்க, அதை அறியாத ராவணன் சீதை என நினைத்து வேதவதியை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்துக் கொண்டான். அந்த விஷயம் வெளியில் தெரிந்தால் ராவணன் வேதவதியைக் கொன்று விடுவான் என்பதினால், ராமர் வேதவதியை உயிருடன் மீட்கும்வரை சீதையை தன் வீட்டிலேயே சீதையை மறைந்து இருக்குமாறும், அந்த விஷயம் வெளியில் தெரியக் கூடாது என்றும் அக்னி பகவான் சீதையிடமும், தன் மனைவியிடமும் கூறி இருந்தார். சீதையும் அதற்கு உடன்பட்டாள்.
ராமன் முன்னிலையில் தீயில் இருந்து
சீதையும், வேதவதியும் ஒன்றாக வெளி வந்தார்கள்
ஆமாம் லஷ்மி தேவி எப்படி பத்மாவதியாக பிறப்பு எடுத்தாள்? அது ஒரு பெரிய கதை. பல பின்னணிகளைக் கொண்டக் கதை.
..........தொடரும்