யாழ்பாண சித்தர்
குடை ஸ்வாமிகள்
குடை ஸ்வாமிகள்
சாந்திப்பிரியா
சித்தியை கைகொண்டவர்களே சித்தர்கள் எனப்படுவோர். உண்மையான சித்தர்கள் காலத்தை வென்றவர்கள். அவர்களால் இயற்கையை மீறிய பல செயல்களையும் செய்ய இயலும். காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்தவர்களுக்கு வெயிலும், மழையும் பெரிதல்ல. சித்தர்களுக்கு மரணமும் நிர்ணயிக்கப்பட்டது அல்ல என்ற நமிபிக்கை சிலரிடம் உண்டு. ஆனால் அது சரியான கூற்றாக இருக்க முடியாது. ஏன் எனில் பிறக்கும்போதே மனிதனின் மரணமும் நிர்ணயிக்கப்பட்டே பிறக்கிறார்கள். சாதாரண மனிதர்களுக்கும், சித்தர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்றால் மனிதர்களால் விஞ்ஞான ரீதியில் இல்லாமல் நேரடியாக செய்ய இயலாத காரியங்களை சித்தர்களால் செய்ய முடியும். உதாரணமாக சித்தர்களால் வானிலே பறிக்க இயலும். கூடு விட்டு கூடு பாய முடியும். நினைத்த நேரத்தில் பல நாட்களுக்கு சமாதி நிலையில் இருக்க முடியும். பல காலத்துக்குப் பிறகு நடக்க இருப்பதை இன்றே உணர முடியும். சித்தர்கள் பிணி தீர்ப்பவர்கள்.
சித்தர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் முதன் முதலாக இந்திய துணை கண்டத்தில்தான் தோன்றியவர்கள் என்ற கருத்து உண்டு. அதற்கான காரணம் இந்தியாவில் இருந்த பூமியே தெய்வீக பூமி என்றும், அதற்கான காரணம் இங்குதான் இறைவன் வாழும் (சிவபெருமான்) இமயமலையும், தாம்பிரபரணி ஆறு, சரஸ்வதி நதி, கங்கை நதி மற்றும் பல்வேறு புனித தெய்வீக நதிகள் ஓடிய இடங்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனாலும் இந்தியாவில் தோன்றிய சித்தர்கள் பின்னர் அவர்களது சிஷ்யப் பரம்பரையினர் மூலம் பிற இடங்களில் பரவினார்கள். ஒரு காலத்தில் இலங்கை கூட இந்திய நாட்டுடன் சேர்ந்தே இருந்தப் நிலப் பகுதியாக இருந்தது என்பதினாலோ என்னவோ இந்தியாவைப் போலவே இலங்கையிலும் பல அற்புதமான சித்தர்கள் இருந்துள்ளார்கள் என்பது புரிகிறது. இலங்கையைப் பொருத்தவரை சித்தர் பரம்பரையில் உள்ளதாகக் குறிப்பிடப்படுபவர்களில் கீழ் கண்ட சித்தர்களே உள்ளார்கள்.
- கடையிற் ஸ்வாமிகள்
- பரம குரு ஸ்வாமிகள்
- குழந்தை ஸ்வாமிகள்
- நவநாத ஸ்வாமிகள்
- பெரியானைக் குட்டி ஸ்வாமிகள்
- சித்தானைக் குட்டி ஸ்வாமிகள்
- சடைவரத ஸ்வாமிகள்
- மகாதேவ ஸ்வாமிகள்
- நாகநாத சித்தர் ஸ்வாமிகள்
- நயினாதீவு ஸ்வாமிகள்
- செல்லப்பா ஸ்வாமிகள்
- குடை ஸ்வாமிகள் எனும் கந்தையா சுவாமிகள்
குடை ஸ்வாமிகள் எங்கு செல்வார், எப்போது நம் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்ப்பது தவறு. அவர் யாருக்கும் புரியாத புதிர். இவரை சிலர் பைத்தியம் என்றார்கள். வேறு சிலரோ இறை சக்தி மிக்கவர் என்று எண்ணினார்கள். திடீர் என யார் வீட்டிற்காவது சென்று தனக்கு உணவு தருமாறு கேட்பார். அவர்கள் உணவை எடுத்துவரப் போனப் பின் அங்கிருந்து அவர்களிடம் எதுவும் கூறாமல் சென்று விடுவார். தேடினாலும் கிடைக்க மாட்டார். அவர் அந்த வீட்டிற்கு வந்து விட்டுப் போனதும் அவர்கள் வீட்டில் செல்வம் தாண்டவமாடும் என்ற நம்பிக்கை இருந்தது என்பதற்கு சான்றாக பல நிகழ்ச்சிகளை அங்குள்ள மக்கள் கூறி உள்ளார்கள். சித்தர்களின் சக்திக்கு ஏற்ப அவர் பிற்காலத்தில் நடக்க இருப்பதை முதலிலேயே கூறி உள்ளார். பலரும் அவரிடம் பக்தர்கள் ஆனதின் காரணமும் அதுவே.
அவர் நுழைந்த இடத்தில் செல்வம் கொழிக்கும். வீட்டில் நுழைந்தால் அங்கு நிலவிய தரித்திரம் தொலைந்து போகும் என்பார்கள். அவர் பார்வையில் அருள் இருக்கும். அவர் அதிகம் பேசியது இல்லை. அவரிடம் சென்று பேசும் அனைவருக்கும் பதில் கூறியதில்லை. ஆனால் அவராகப் போய் பேசினால் அவர்கள் அதிருஷ்டசாலிகளாகவே இருப்பார்கள். அவரிடம் செல்பவர்கள் சிலரிடம் திடீர் என 'உன் வீட்டில் இன்று நல்லது நடக்காது' என்பார். அது போலவே அன்று அவர்கள் வீட்டில் ஏதாவது துக்கம் நேரிடும். அவர் அனைத்தையுமே வாய் வார்த்தையினால் மட்டுமே கூறியது இல்லை. ஏதாவது செய்கை மூலமோ இல்லை செயல் மூலமோ ஜாடைமாடையாகக் கூறுவார். புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவே.
ஒருமுறை இவரை கீழே தள்ளி அவமானப்படுத்திய காவல்துறையை சார்ந்த ஒரு அதிகாரி, எந்தக் கையினால் அவரை கீழே தள்ளினாரோ அதே கையில் அனைத்து உணர்ச்சிகளையும் இழக்க, அவர் சக்தியைப் புரிந்து கொண்டவர் குடை சுவாமிகளிடம் ஓடோடி வந்து மன்னிப்புக் கேட்டு தனது கையை சரி செய்து கொண்டார் என்ற கதை உண்டு. அது போலவே ஒரு விவசாயி நிலத்தில் ஒருநாள் இவர் செல்ல அந்த ஆண்டு என்றும் இல்லாமல் அந்த விவசாயியின் நிலத்தில் அபார விளைச்சல் இருந்ததானக் கதையும் உள்ளது.
இப்படியாக பல அற்புதங்களை நிகழ்திய இந்த சித்தர் 1978 ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். இவர் குறித்து பெரிய அளவில் விவரம் கிடைக்கவில்லை.