Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all 460 articles
Browse latest View live

Ice and Ruthraksha Lingam/ அற்புத அமைப்பில் சிவலிங்கங்கள்

$
0
0

சாந்திப்பிரியா

வடநாட்டில் ஸ்ராவன் மாதங்களில் ஸ்ராவன் சோம வாரம் எனும் தினத்தில் (திங்கள் கிழமை) அமர்நாத் சிவலிங்கத்தை குறிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் சிவலிங்க உருவங்களைமுழுமையான ஐஸ் கட்டிகளினால் செய்து வைத்து இருப்பார்கள். அன்று இரவு முழுவதும் அங்கு வந்து பூஜைகளை செய்து பக்தர்கள் ஆராதிப்பார்கள். இந்த ஐஸ் லிங்கங்கள் மால்வா எனும் பகுதிகளான இந்தூர், தேவாஸ், உஜ்ஜயினி, போபால் போன்ற  நகரங்களில் பெருமளவில் நடைபெறும். சிவபெருமான் ஆலயங்களில் ஐந்து  முதல் பத்தடி உயரங்களில் கூட இப்படிப்பட்ட சிவலிங்கங்களை உருவாக்கி வைத்து வழிபடுகிறார்கள்.  இப்போது குஜராத்திலும்  இந்த பழக்கம் உள்ளதாக தெரிகிறது.  இதற்கான விசேஷ காரணங்களோ இல்லை பரம்பரைப் பழக்கமோ இல்லை என்றாலும் இது பரவலாக ஷ்ரவன் சோம வாரங்களில் கொண்டாடப்படுகிறது.  அவற்றின் சில படங்களைக் கீழே தந்துள்ளேன்.

குஜராத்தில்  ஐஸ் லிங்கம்

 ஐஸ் லிங்கம்

 ஐஸ் லிங்கம்

 ஐஸ் லிங்கம்

குஜராத் கடற்கரையில் மணலில் செய்த  லிங்கம்

தேவாஸ் நகரில் ஐஸ் லிங்கம் 

தேவாஸ் நகரில் ஐஸ் லிங்கம்

தேவாஸ் நகரில் ஐஸ் லிங்கம்

அது போலவே ருத்திராக்ஷ மாலையில் செய்யப்பட்டுள்ள  சில சிவலிங்கங்களையும் கொடுத்து உள்ளேன். இந்த 31 அடி உயர  சிவலிங்கம் பதுக்வியாஸ் என்பவரால் குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில்  தரம்பூர் தாலுக்காவில் செய்யப்பட்டு வைக்கப்பட்டது. திரு பதுக்வியாஸ் ருத்திராக்ஷ மணிகளின் அமைப்பில் ஆழ்ந்த ஞானம் உள்ளவர்.  சுமார் ஐம்பது ஆட்களின் துணையோடு நான்கு மாதங்கள் முயன்று இந்த ருத்திராக்ஷ மாலையிலான சிவலிங்கத்தை அமைத்து உள்ளார். அவர் 2000 ஆண்டு முதல் ருத்திராக்ஷ மாலையில் சிவலிங்கங்களை  அமைத்து வருகிறாராம்.

ருத்ராக்ஷ மணி மாலையிலான லிங்கம் 

ருத்ராக்ஷ மணி மாலையிலான லிங்கம்

ருத்ராக்ஷ மணி மாலையிலான லிங்கம் 

Tapkeshwar mahadev temple, Dehradun

$
0
0
மகாபாரத யுத்தம் துவங்குவதற்கு வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது.  மனதில் அமைதி இல்லாமல் துரோணாச்சாரியார் தனது மனைவி கிரிபீயுடன் ஹிமயமலை அடிவாரங்களில் இருந்த காட்டில் சுற்றி அலைந்து கொண்டு எப்படியாவது சிவபெருமானின் அருளைப் பெற்று தான் வில் வித்தையில் சிறந்தவராக விளங்க வேண்டும் என துடித்துக் கொண்டு இருந்தார். அவர்கள் அனைவருமே தேவ புருஷர்கள் என்பதினால் தெய்வங்களை வேண்டிக் கொண்டு அவர்களை நேரடியாக தரிசிக்க முடியும். அப்போது ஒருநாள் அவர் வனப் பகுதியில் ராஜ ரிஷி விஸ்வாமித்திரரை சந்தித்தார். அவரை வணங்கித் துதித்தப் பின் தனக்கு எப்படியாவது சிவபெருமானின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்றும் அதற்கு அவர் தனக்கு வழிகாட்டி உதவ வேண்டும் என்று தாழ்மையுடன் அவரிடம் கேட்டார். அதைக் கேட்ட விஸ்வாமித்திரரும் துரோணாச்சாரியாரிடம் அங்கிருந்து தொலை தூரத்தில் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ரிஷி கேசத்தில் ஒரு இடத்தில் கங்கையும் யமுனையும் கலந்து பாய்ந்தோடும் நதி இருக்கும் என்றும், அதன் பக்கத்தில்  கிளை நதியான தாம்ஸா எனும் நதி உள்ளதாகவும் (தற்போது டேராடூன் உள்ள இடம்)அதன் அருகில் ஒரு குகை உள்ளது என்றும் அதில் ஸ்வயம்புவாக சிவபெருமான் லிங்க உருவில் எழுந்து  உள்ளார் என்றும்,  தேவலோகத்தினர் அந்த குகைக்கு வந்து சிவபெருமானை வழிபட்டுச் செல்கிறார்கள் என்றும், அவர்களுக்கு சிவபெருமான் தரிசனம் தருவதாகவும், அங்கு சென்று தவத்தில் இருந்தால் சிவபெருமானின் ஆசிகள் கிடைக்கும் என்றும் அறிவுரைக் கூறினார். அதைக் கேட்டு மனம் மகிழ்ச்சி அடைந்த துரோணாச்சாரியார் தனது மனைவி கிரிபீயுடன் ராஜ ரிஷியை வணங்கித் துதித்தப் பின் உடனடியாக அங்கிருந்துக் கிளம்பி விஸ்வாமித்திரர் குறிப்பிட்ட இடத்தை அடைந்தார்கள்.

அற்புதமான சூழ்நிலையில் தாம்ஸா நதி ஓடிக் கொண்டு இருக்க அதன் அருகில் இருந்த குகையைக் கண்டு பிடித்து அதில் சென்று சிவலிங்கத்தை  பூஜித்து வணங்கிய பின் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் கடுமையான தவத்தை மேற்கொண்டார்கள். அந்த குகையை சுற்றி பல குகைகள் இருந்தன. அவற்றில் பல ரிஷி முனிவர்கள் அமைதியாக கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தார்கள். துரோணாச்சாரியார் பக்தியினால் மனம் மகிழ்ந்து போன சிவபெருமானும் அவருக்கு  காட்சி தந்து  அவர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். துரோணாச்சாரியார் தான் வில் வித்தை பயில ஆசைக் கொண்டு உள்ளதினால், இந்த பூமியிலேயே மாபெரும் வில் வித்தையாளராக  ஆகவேண்டும் என்று வரம் கேட்டார். அதனால் தனக்கு வில் வித்தையை கற்றுக் கொடுக்க யாராவது தக்க ஆசானை அடையாளம் காட்டி  சிவபெருமான் அருள்  புரிய வேண்டும் என்றும் வேண்டினார்.

துரோணாச்சாரியார் வேண்டிக் கொண்டதை கேட்ட சிவபெருமானோ தானே துரோணாச்சாரியாருக்கு வில் வித்தை பயிற்சி தருவதாக வாக்கு தந்தப் பின் தினமும் அங்கு மனித உருவில் வந்து துரோணாச்சாரியாருக்கு வில் வித்தைப் பயிற்சி தந்தார். அதனால்தான் சிவபெருமானே ஆசானாக வந்து வில்வித்தையில் துரோணாச்சாரியாருக்கு பயிற்சி தந்ததினால் துரோணாச்சாரியாருக்கு இணையான வில் வித்தையாளர் யாருமே இந்த பூமியில் இல்லை என்பதாயிற்று.

 துரோணாச்சாரியார் வில் வித்தை பயிற்சி பெறச் செல்கையில் அவருடைய மனைவி   தனிமையில்  அமர்ந்து கொண்டு இருப்பார்.  சில நாட்கள் கழிந்ததும் அவளுக்கும் மனதில் சோகம் ஏற்பட்டது. இன்னும் எத்தனைக் காலம்தான் தனிமையில் இருக்க வேண்டும், நமக்கு என வாரிசு எதுவுமே இல்லையே  என வருந்தி  தனக்கு உள்ள துயரத்தை சிவபெருமானிடம் கூறி அழுதாள். அவள் மன நிலையை புரிந்து கொண்ட சிவபெருமானும் அவளுக்கு விரைவில் மகன் ஒருவன் பிறப்பான் எனவும், அதன் மூலம் அவளது  தனிமை விலகி விடும் என்றும் ஆறுதல் கூறினார். காலப்போக்கில் துரோணாச்சாரியார் தம்பதியினருக்கு அழகிய ஒரு ஆண்   குழந்தைப் பிறந்தது. அது பிறக்கும்போதே  குதிரைப் போலக் கனைத்துக் கொண்டே பிறந்ததினால் அதன் பெயரை அஸ்வத்தாமா என வைத்தார்கள். அஸ்வம் என்றால் குதிரை என்று அர்த்தம்.

அஸ்வத்தாமா சிறுவனாக இருந்தபோது அவன் வனத்தில் சென்று நண்பர்களுடன் விளையாடுவது உண்டு.  ஒருநாள் அவனுடைய நண்பன் (சிறுவன்) விளையாட தாமதமாக வந்தான். அதற்கான காரணத்தை அஸ்வத்தாமா அவனிடம் கேட்டபோது அந்த சிறுவனும், தனது தாயார் வீட்டில் சாணம் பூசிக் கொண்டு இருந்ததினால் அதை செய்து முடித்தப் பிறகுதான் தனக்கு அவளால் பாலைக் கொடுக்க முடிந்தது என்பதினால் பாலைக் குடித்து விட்டு வர தாமதமாகி விட்டது என்றான்.


 ஆனால் அஸ்வாதாமாவின் தாயாருக்கு மார்பில் பால் சுரக்கவில்லை என்பதினால் அவளால் அவனுக்குப் பால் கொடுக்க முடியவில்லை. (அந்த காலங்களில் சிறுவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு வயதுவரைக் கூட தாய்மார்கள் தனது மார்பில் இருந்து பாலைக் கொடுப்பது பழக்கம்). அதைக் கேட்ட அஸ்வத்தாமா ஆச்சர்யம் அடைந்தான். இன்னொரு நாள் அச்வதாமாவின் இன்னொரு நண்பன் தனது வீட்டில் இருந்து சூடான பாலைக் கொண்டு வந்தான். அதை அவன் அஸ்வதாமாவுக்கும் தர அதைக் குடித்தவன் அதன் சுவையில் மயங்கினான். அன்று வீடு திரும்பிய அஸ்வத்தாமா தனது தாயாரிடம் தனக்கும் பால் தருமாறு கேட்க அவளால் ஒன்றும் கூற முடியாமல் போய் அவனிடம் உண்மையைக் கூறி அழுதாள். அவர்கள் வீட்டில் பசுவும் கிடையாது என்பதினால் பசுவின் பாலைக் கூட தர முடியாமல்  சங்கடப்பட்டாள்.

அவர்கள் பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்ட அவனுடைய  தந்தையான துரோணாச்சாரியார் ஹஸ்தினாபுரத்துக்குச் சென்று அரசனிடம் இருந்து ஒரு பசுவை தானமாக பெற்றுக் கொண்டு வரச் சென்றார். ஆனால் அவருடைய அதிருஷ்டமோ வேறாக இருந்தது.  அரசன் அவருக்கு ஒரு பசுவை தானமாகத் தர மறுத்து விட மனம் ஒடிந்து போன துரோணாச்சாரியார் வனத்துக்கு திரும்பினார். அவர்க் கூறியதைக் கேட்ட அஸ்வத்தாமா துக்கம் அடைந்து  இனி தனக்கு தெய்வம் மட்டுமே உதவ வேண்டும் என்பதை புரிந்து கொண்டு  குகைக்குள் ஓடிச் சென்று அங்கு சிவலிங்கம் முன்னால் ஒற்றைக் காலில் நின்று அவர் அருளை வேண்டி தவம் இருக்கலானான். தன்னிடம் வந்து வேண்டிக் கொள்பவன் ஆறு வயது   கூட ஆகாத சிறுவன் என்றாலும் அவனுடைய மன உறுதி மற்றும் பக்தியைக் கண்டு வியந்து போன சிவபெருமானும் பார்வதியும் அவனுக்கு கருணைக் காட்ட   அந்த குகையின் மேல் கூரையில் இருந்து  லிங்கத்தின் மீது பால் வழிந்து ஓட விட்டார்கள். அஸ்வத்தாமா ஆனந்தத்துடன் அந்த பாலை எடுத்து வயிறு நிறைய குடித்தான்.  அது முதல் அந்த லிங்கம் மீது இருந்த மேல் கூரையில் இருந்து  பால் கொட்டி ஓடலாயிற்று. ஆகவே அது முதல் அந்த சிவபெருமானை (சிவலிங்கம்) தூதேஸ்வரர் அதாவது பாலை கொடுப்பவர் என்ற பெயரால் அழைக்கலானார்கள்.

இப்படியாக சில காலம் அந்த மூவரும் அங்கு இருந்தபோது ஒருநாள்  துரோணாச்சாரியார்  தங்களுக்கு மீண்டும் சிவபெருமான் காட்சி தர வேண்டும் என்று சிவபெருமானையே  துதித்து  வேண்டினார். அவர்களுடைய  வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அவர்கள் முன் காட்சி தர துரோணாச்சாரியார் அவரிடம் கூறினார் 'பெருமானே, எங்களுக்கு நீங்கள் இத்தனை நாட்கள் பலவாறு அருள் புரிந்து வந்துள்ளீர்கள். எனக்கு வில் வித்தையை கற்றுக் கொடுத்தீர்கள்.  எங்களுக்கு நல்ல மகனையும் பிறக்க வைத்தீர்கள். என் பிள்ளைக்கு அவன் விரும்பிய பாலைக் கொடுத்து  அவனுடைய மனதுக்கும் மகிழ்ச்சி தந்தீர்கள். எங்களுக்கு நீங்கள் இப்படியே நீங்காத அன்பை செலுத்தி வர வேண்டும்'  என்று கூறி அவருக்கு பால் அபிஷேகம் செய்து பூஜிக்க சிவபெருமான் கூறினார் 'துரோணாச்சாரியாரே, உங்களுடைய மனது புரிகிறது. ஆனால்  இனி  கலிகாலம் வெகு வேகமாக வந்து கொண்டு  இருக்கிறது.  ஆகவே நான் இனியும் இது  அபிஷேகத்தை இங்கு ஏற்கப்போவது இல்லை. இங்கு வந்து என்னை துதிக்கும் மக்கள் என் மீது  தண்ணீரை ஊற்றி அபிஷேகித்து பூஜிப்பார்கள். உங்களுக்கு என்னுடைய  ஆசிகள்  நிறைய இருக்கும்'என்று கூறி விட்டு மறைந்து போனார்.

 
அதற்கு சில காலத்துக்கு பிறகு துரோணாச்சாரியார் தன்  மனைவி மற்றும் மகனுடன் ஹஸ்தினாபுரத்துக்கு திரும்பிச் சென்று விட்டார். அந்த குகையின் மேல் பகுதியில் இருந்து லிங்கத்தின் மீது பால் ஊற்றிக் கொண்டே இருந்தது. ஆனால் அங்கு வந்த மக்கள் அந்தப் பாலை எடுத்துப் போய்  விற்கத் துவங்கினார்கள். ஒருநாள் பார்வதி இதைப் பார்த்துவிட்டு  சிவபெருமானிடம் அவசரம் அவசரமாகப் போய்  மக்கள் செய்யும் தவறை எடுத்துக் காட்ட அடுத்த வினாடியே பால் ஊற்று நின்று நீர் மட்டுமே விழலாயிற்று.  இப்படியாக அந்த குகையில் உள்ள சிவலிங்கத்தின் மீது மேல் கூரையில் இருந்து நீர் ஊற்றிக் கொண்டு உள்ளது.

இப்படிப்பட்ட வரலாற்றை கொண்டுள்ள  அந்த குகைதான் தப்கேஸ்வரர் எனும் சிவன் ஆலயம் ஆகும்.  உத்திராகண்ட்  மானிலத்தில் டேராடூன் நகரில் உள்ள  தப்கேஸ்வரர் ஆலயத்தின் குகையை  துரோண  குகை என்கிறார்கள். இந்த ஆலயம் நகர மையத்தில் இருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர்  தொலைவில்தான் உள்ளது.  சிவராத்திரி பண்டிகையில் இந்த ஆலயத்துக்கு  செல்வது கடினம் எனும் அளவிற்கு கூட்டம் கூடுகிறது. மகாபாரத யுத்தம் நடைப்பெற்ற காலத்துக்கும் முற்பட்ட காலத்தை சார்ந்த  இந்த ஆலயம் துரோணாச்சாரியார் வில் வித்தை பயின்ற இடம். அஸ்வதாம பிறந்த இடம் . அவர்களுக்கு அருளிய ஸ்வயம்பு சிவலிங்கத்தின் காலத்தை  யாராலும் கணிக்க முடியவில்லை. குகையில் உள்ள சிவலிங்கத்தின் மீது தொடர்ந்து விழுந்து கொண்டே இருக்கும்   நீர் உடனடியாக பூமியில் ஊடுருவி மறைந்தும் விடுகிறதாம். 

Slide 4

Slide 6

Slide 5

Slide 7
படங்கள் நன்றிதப்கேஸ்வரர் ஆலயஇணைத்தளம் 

ஆலய விலாசம்
Jangam Shivalaya
Paltan Bazar , 
Dehradun - 248001 

Contact Persons

( 1 ) Digambar Krishana Giri Ji
Telephone - +91-135-2650466
Mobile : +91-9412053466 

( 2 ) Bharat Giri Ji
Telephone - +91-135-2557837
Mobile : +91-9719141214

Moral Story- 6

$
0
0
திக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை -6
சாந்திப்பிரியா



பத்மபுராணத்தில் உத்தர காண்டத்தில் இருந்த ஒரு கதையைக் கூறி  நீதி வாக்கு சொன்னார் திக்குவாய் முனிவர். முன்னொரு காலத்தில் காஞ்சிபுரத்தை சோழ மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான் . அவன் விஷ்ணுவிடம் மிக்க பக்தி கொண்டவன் .அடிக்கடி ஆலயத்துக்குச் சென்று பூஜைகளை செய்துவிட்டு வருவான்.அப்படி பூஜைகளை செய்யும்போது அவன் நிறைய தங்க மற்றும்  வெள்ளி அணிகலன்களையும்  பூக்களைப் போலவே போட்டு அர்ச்சனை செய்வான்.  வந்துள்ள பக்தர்களுக்கு  அவற்றை  பிரசாதமாக வினியோகித்து விடுவான். ஆகவே அவன் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி இருந்தது.

அவன் நாட்டில் விஷ்ணுசர்மா என்ற பண்டிதர் இருந்தார். அவர் ஏழை. ஆனால் அவரும் பெரும் விஷ்ணு பக்தரே. அவரும் ஆலயத்துக்கு வந்து பூஜை செய்வது உண்டு. ஒரு நாள் அவர் மன்னன் ஆலயத்தில் பூஜைகளை செய்யும்போது வந்தார். மன்னனின் பூஜை முடிந்ததும் தாம் கமண்டலத்தில் கொண்டு வந்த தண்ணீர் மற்றும் துளசிச் செடி இலைகளைப் போட்டே பூஜித்தார். அன்று என்னவோ தெரியவில்லை மன்னனின் பூஜைகளை எவரும் ரசித்துக் கூறவில்லை. விஷ்ணு சர்மாவின் பூஜை முடிந்ததும் அவரிடம் சென்று பிரசாதமாக தீர்த்தம் பெற்றுக் கொண்டு துளசி இலைகளை வாங்கிக் கொண்டு சென்றனர். அரசன் நினைத்தான் 'என்ன இது நான் எத்தனை அணிகலன்களை போட்டு பூசித்தேன். ஆனாலும் அனைவரும் விஷ்ணு சர்மாவிடம் அல்லவா சென்று பிரசாதம் பெற்றுக் கொண்டு சென்றனர். அவர் செய்யும் பூஜை நான் செய்வதை விடவா   உயர்ந்தது?'. எப்படியாக மனதில் கோபம் அடைந்தவர் என்னும் சில தினங்களில் அதே நிலை இருப்பதைக் கண்டார்  . கோபம் ஆத்திரமாக மாறிவிட்டது. அரசவையைக் கூட்டி அதற்கு ஒரு முடிவு கேட்டார். அரசவை பண்டிதர்  அரசன் செய்யும் பூஜை சிறந்ததா இல்லை அந்த ஏழைப் பண்டிதர் செய்யும் பூஜை சிறந்ததா எனப் பார்த்து விடலாம் என முடிவு செய்ய அரசரும் அந்த பண்டிதரும் ஒரு மண்டலம்  தினமும் அந்த ஆலயத்துக்குச் சென்று   பூஜை செய்ய வேண்டும். ஒரு   மண்டலத்துக்குப் பின் விஷ்ணு பகவான்  எவர் முன் பிரசன்னம் ஆவாரோ அவருடைய பூஜையே சிறந்தது என தெரிந்து கொள்ளலாம் என யோசனைக் கூற அதன்படி இருவரும் விஷ்ணுவின் முன் சென்று சங்கல்பம் செய்து கொண்டு அவரிடம் போட்டிக்கான பிராத்தனைகளையும் வைத்தப் பின்  பூஜைகளை மறுநாள் முதல் துவக்கினார்கள்.

தினமும் பூஜைகள் நடந்தன. மன்னன் விஷ்ணுவிற்கு பிடித்தமான விதவிதமான ஹோமங்களையும், பூஜைகளையும் செய்து பூஜைக்கு வந்த அனைவருக்கும் வேண்டிய அளவு பிரசாதம் கொடுத்து உணவும் போட்டு அனுப்பினார். மன்னன் பூஜைகள் செய்வத்தில் எந்த குறையும் வைக்கவில்லை. மனம் லயித்து, முழு மனதுடன் பூஜைகளை செய்தார். வந்தவர்கள் அனைவரும் திருப்தியுடன் உண்டப் பின்   மன்னனை வாழ்த்தி விட்டுச் செல்லலாயினர்.  ஆனால் மிகவும் கந்தலான அழுக்கான உடைகளை உடுத்தி நாட்ற்றமடித்துக் கொண்டு வந்தவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. விஷ்ணு சர்மாவோ வீட்டில் தான் சமைத்து விட்டு அங்கு வந்து எப்போதும் போல பூஜையை செய்தது விட்டுச்  தன் வீட்டுக்குத்தான் சாப்பிடச் சென்றார். ஆனால் அவருடைய பிரசாதத்தை வாங்கிக் கொள்ள நன்கு உணவு அருந்திய பின் எவர் காத்து இருப்பார்கள்?  ஆனால் அதுவரை மன்னன் காத்திருந்து அந்த நிலையை பார்த்தப் பின் மனதில் திருப்தியுடன் வீடு செல்வார்.  விஷ்ணு சர்மா வீட்டில் சென்றதும் தினமும் தான் செய்தது வைத்திருந்த உணவை  எவரோ அருந்தி விட்டுச் சென்று இருந்ததைக் கண்டார். ஆகவே காலை பூஜை முடிந்ததும் பட்டினி, இரவு மட்டுமே சமைத்து சாப்பிட்டார். அந்த நிகழ்ச்சி தினமும் தொடர்ந்தது. ஒரு மண்டலம் ஆயிற்று. கடைசி நாள் பூஜை முடிந்தது.  அனைவரும் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். கடைசி நாள் என்பதினால் மன்னனும் அனைத்தும் முடியும்வரை அங்கயே தங்கி இருந்தார். விஷ்ணு சர்மாவும் சற்று முன்னதாகவே பூஜைகளை முடித்து விட்டார். தன் வீட்டுக்கு சென்றவர் யாரோ ஒரு  தீண்டத்தகாதவன் போல இருந்தவன் வீட்டுக்குள் நுழைந்து  சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போவதைக் கண்டு அவரை நிற்குமாறு  கூவி அழைத்தார். வந்தவர் ஓடினார். விஷ்ணு சர்மா அவரை துரத்தினார். வந்தவன் ஆலயத்தின் முன்னாள் சென்று விழுந்தான். மன்னனோ மற்ற எவருமோ அவனிடம் சென்று என்ன ஆயிற்று எனக் கேட்கவில்லை. தூரத்தில் நின்றபடி விழுந்தவனை பார்த்தார்கள். துரத்தி வந்த விஷ்ணு சர்மாவோ ஓடிச் சென்று அவனை தூக்கி உட்கார வைத்தார். என்னும் பசிக்கின்றது என்றால் வீட்டுக்கு வா இன்னும் உணவு தருகிறேன் என்றார்.

அடுத்தகணம் அங்கு திருமால் அவர் முன் ஜொலித்தபடி  நின்று இருந்தார். அவரைக் கண்டதும் விஷ்ணு சர்மா அவர் முன் விழுந்து வணங்கினார்.  மன்னரும் மற்றவர்களும்  ஓடி வந்தனர். விஷ்ணுவை வணங்கினார்கள். விஷ்ணு கூறினார் 'மன்னா உன் பூஜையில் எந்தக் குறையும் இல்லை. அவற்றை நான் மனதார நிறைவாகவே ஏற்றுக் கொண்டேன். ஆனால் இங்கிருந்து சென்றதும் மற்ற வேளைகளில் அதை மறந்து விட்டேன்.  ஆனால் விஷ்ணு சர்மா செய்த பூஜை என் மனதில் அமைதியை ஏற்படுத்தியது, மனதில் என்னை மீறிய மகிழ்ச்சியை தந்தது. நாள் முழுவதும் அவர் செய்த பூஜையின் ரீங்காரம் என்னை தொடர்ந்தது. ஆகவே இருவரின் பூஜைகளுமே என்னை வந்தடைந்தாலும்,  அவற்ற்றை நான் ஏற்ற்றுக் கொண்டாலும் விஷ்ணு சர்மாவின் மந்திர ரீங்காரம் என்னை விட்டு அகல மறுக்கின்றது என்பதே உண்மை'எனக் கூறி அனைவரையும் ஆசிர்வதித்து விட்டுச் சென்றார்.  மன்னன் வெட்கமடைந்தான். உண்மையை புரிந்து கொண்டான். விஷ்ணு சர்மாவுக்கு நிறைய பொருள் தந்து  தன் நாட்டு ஆலயங்களின் முதன்மை பண்டிதராக நியமித்துக் கொண்டான்.
நீதி  :    ஆண்டவனுக்கு ஆண்டியும் அரசனும் ஒன்றேதான்

Angamma Devi- Her history

$
0
0
தேவி அங்கம்மாவின் தோற்றம்
சாந்திப்பிரியா


தேவி அங்கம்மாவை பார்வதியின் அவதாரம் எனவும் சப்த கன்னிகளில் அவளும் ஒருவள் எனவும் நம்புகிறார்கள். சிவன் புஜையே பூமியில் பெருகிக் கிடந்தபோது அதைக் கண்டு மனம் வருந்திய பார்வதியே சக்தி பூஜைக்கு பூமியில் முக்கியத்துவம் கொடுக்க அங்கம்மா என்ற அவதாரத்தை பூமியில் படைத்தாளாம்.அங்கம்மாவின் தோற்றம் பற்றி இரண்டு  விதமான கதைகள் நிலவுகின்றன.


அவற்றில் முதல் கதை இது.

முன்னொரு காலத்தில் கல்யாணா என்ற இராஜ்ஜியம் இருந்தது. அந்த நாட்டை ஆண்டு வந்தவர்கள் சாளுக்கிய மன்னர்களின் வழிவந்தவர்களாம். சாளுக்கியர்களை மராட்டிய மற்றும் கள்னட தேசத்து ஷத்ரியர்கள் என கருதுகிறார்கள். அந்த நாட்டு மன்னனும் மக்களும் சிவ பக்தர்கள். சிவனைத் தவிற வேறு தெய்வங்களை வணங்காதவர்கள். ஆகவே அவர்கள் சிவனைத் தவிற விஷணுவிற்கோ பார்வதிக்கோ முக்கியத்துவம் தராததினால் சக்தி வழிபாடே அழிந்து போயிருந்தது.

நாரத முனிவர் நாராயணர் பக்தர் என்பதினால் அவர் ஒரு முறை அந்த இராஜ்யத்திற்குப் போய் இருந்தபோது அவரை மன்னன் அவமதித்து திருப்பி அனுப்பி விட்டான். அதைக் கேட்ட பார்வதி வருத்தமும் கோபமும் அடைந்தாள். பார்வதியை விஷ்ணுவின் சகோதரி என்பார்கள். பார்வதிக்கு ஏற்பட்ட கோபத்தினால் அவள் உடல் உஷ்ணமடைந்து வேர்கத் துவங்கியது. நாகலோகத்தில் சென்று விழுந்த அந்த வியர்வைத் துளிகளில் இருந்து ஒன்பது கோடி சித்தர்களும் 101 சக்திகளும் உருவாயினர். அவர்களை முன்னணியில் இருந்தவர்கள் அங்கம்மாவும் அவளுடைய சகோதரர் போத்தராஜுவுமே. அகோர உருவைக் கொண்டு தோன்றியவர்களை கல்யாண நாட்டை சேர்ந்த மன்னனுக்கு பாடம் கற்பித்து வருமாறு பார்வதி அனுப்பினாள். அதே நேரத்தில் அங்கிருந்த மக்கள் அவளை வணங்கித் துதித்தால் அவர்களை காத்தருளுமாறு கூறி இருந்தாள்.

அங்கம்மாவும் அத்தனை சக்திகளும் சித்தர்களும் கல்யாண இராஜ்யத்தில் நுழைந்து தம்தை தடுத்து நிறுத்த முயன்ற மன்னனையும் மற்றவர்களையும் கொன்று தீர்த்தனர். அதன் பின் மெல்ல மெல்ல சாந்தம் அடைந்தவள் தன்னிடம் சரணடைந்த மற்றவர்களின் வேண்டுகோளை ஏற்று தான் கொன்று குவித்தவர்களுக்கு உயிர் பிச்சைத் தந்து எழுப்பினாள். அதன் பின் அவள் அருகில் இருந்த மகேந்திர கிரி என்ற ஊரில் சென்று தங்கினாள். அடிக்கடி பழம் விற்கும் பெண்மணிப் போல அந்த ஊருக்கு வருவாள். தம்மை தாக்குபவர்களை அழித்தாள். அந்த இராஜ்ஜியத்தில் பயத்தையும் நோயையும் பெருக்கி வந்தாள். மக்களை துன்புறுத்தி வந்த ஏழு அரசர்களை சிறை பிடித்து வந்து சில நாள் வைத்திருந்தப் பின் விடுதலை செய்தாள். பின்னர் தான் ஒரு குறி சொல்பவள் போல அந்த அரசர்களின் மனைவிகளிடம் போய் மஹேந்திர கிரியில் உள்ள அங்கம்மாவுக்கு விளக்கு ஏற்றி அவளை பூஜித்தால் அவர்களது துயரம் நீங்கும் எனக் கூறிவிட்டு வந்தாள். அவர்கள் அதை ஏற்றனர்.

அதன்படி அவர்களுடைய ஒரே மகனான கொம்மராஜு என்பவரை தானிய மாவினால் செய்த ஆட்டை தானிய வாளினால் செய்த வாளினால் வெட்டி சக்தி பூஜை செய்யுமாறு கூற அவர்களும் அதை செய்தனர். ஆனால் ஆட்டை வெட்டும்போது அது நிஜ ஆடாக மாறி வாளும் நிஜமாக மாற வெட்டப்பட்ட ஆட்டின் உடப்பில் இருந்து இரத்தம் பிறிட்டு வந்தது. அனைவரும் பயந்து நடுங்கினர். அந்த ஏழு மன்னர்களும் சிவபெருமானை துதித்து தம்தைக் காக்குமாறு ஓலம் எழுப்ப அவரும் வந்து அவர்களை தன்னுடன் கைலாயத்திற்கு அழைத்துச் சென்றார். அதை அங்கம்மா தடுத்து நிறுததினாள். கொம்மராஜு அவள் கால்களில் விழுந்து தம்மை மன்னித்து அருளுமாறும் அவளை தானே தூக்கிக் கொண்டு போய் இராஜ்யத்தில் சக்தி பூஜை செய்வதாக சத்தியம் செய்து அவளை தன் தோளில் தூக்கிப் போய் பூமியில் வைத்து பூஜைகள் செய்தாராம். அதனால்;தான் அங்கம்மாவின் சக்தி பூஜை பூமியில் தோன்றியதாம்.

அங்கம்மா பற்றி கூறப்படும் மற்றொரு கதை இது.

கல்யாண இராஜ்ஜியத்தை ஆண்டு வந்த ஏழு அரசர்களும் முதிராஜ் சகோதரர்கள். அவர்களும் முதலில் வால்மீகியைப் போலவே வழிப்பறிக் கொள்ளைகள் செய்து வந்தவர்களாம். அவர்ளுக்கு அந்த தொழில் அலுத்துப் போய்விட கடைசியாக ஒரு முறை பெரிய கொள்ளையை நடத்தி பணத்தை கொண்டு சென்று வாழலாம்; என எண்ணி பக்கத்து நாட்டின் அரசனின் கஜானாவை கொள்ளையடித்து தூக்கி வந்தனர். ஒரு காட்டுக்குள் சென்று அந்தப் பெட்டியை திறந்தபோது அதனுள் ஆபரணங்களுக்குப் பதில் சக்தியின் பூஜைப் பொருட்கள் மட்டுமே இருந்தனவாம். ஆகவே அதை தூக்கி எறிந்துவிட்டு செல்ல முயன்றபோது அவர்கள் கண்கள் குருடாகி விட்டன. அப்போது அவர்களுக்கு அங்கம்மா தேவியின் குரல் கேட்டதாம். தம்மை எடுத்துச் சென்று வழிபட்டால் அவர்கள் கண் பார்வை திரும்பவரும் என அந்தக் குரல் கூற அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டு அந்த சாமான்களை எடுத்துப் போய் அங்கம்மாவிற்கு பூஜைகள் செய்யத் துவங்க வெகு விரைவில் அவர்கள் பெரும் பதவிகளையும் பொருட்களையும் பெற்றனர். ஆனால் அதன் பின் அவர்கள் செருக்குற்று தான்தோன்றித் தனமாகி சிவலிங்கத்தை மட்டுமே வழிபடத் துவங்கினர். தம் வாழ் நாளில் இனி ஒரு பெண்ணை வணங்க மாட்டோம் என முடிவு செய்தனர். தமக்குத் தந்த வாக்குறுதியை மீறினவர்களை பழி வாங்க எண்ணிய அங்கம்மா அவர்களை பக்கத்து நாட்டு மன்னன் மூலம் சிறை பிடிக்க வைத்தாள். அந்த ஏழு பேரில் ஒருவரான தர்ம சோட்டா சாரி என்பவருடைய மனைவிக்குப் பிறந்த இரவதேவராஜு என்ற பிள்ளை வளர்ந்து பெரியவனாகிய பின் புத்திசாலித்தனமாக அங்கம்மா மீது அபார பக்தி செலுத்தி அவளை துதித்து வணங்கி சிறை பிடிக்கப்பட்ட தந்தைகளை திரும்ப அழைத்து வந்தான். அதன் பின் அங்கம்மா அவர்களுக்கு தன் சுய உருவைக் காட்டினாள். அவர்கள் தம் தவறை உணர்ந்து இனி தம் இராஜ்ஜியத்தில் சக்தி வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தந்து அதை செய்வதாகக் கூறிய பின் தமது இராஜ்ஜியத்தில் அதை நிறைவேற்றினர். அங்கம்மாவும் அந்த இராஜ்ஜியத்திலேயே தங்கினாளாம்.


அங்கம்மாவும் அவள் ஆலயங்களும்

பார்வதியின் ரூபமான அங்காள பரமேஸ்வரியும் அங்கம்மாவின் ஒரு ரூபமாம். அவனைத் தவிற அங்கம்மா கன்காளி, எல்லம்மா, ஜக்கம்மா, காகட்டி தேவி, மும்பா தேவி, அங்காளி, மஹான்கால் அம்மா போன்ற ரூபங்களிலும் பல இடங்களில் உள்ள ஆலயங்களில் அங்கம்மா காட்சி தருகின்றாள். அங்கம்மாவை அங்காளம்மா எனவும் அழைக்கின்றனர். 


அங்கம்மாவிற்கு சேலத்தில் அதமன்கோட்டை, கேரளத்தில் எரட்டுப்பேட்டை, கர்னாடகத்தில் ஹோஸ்பெட், பெல்லாரியில் கரம்புடி, கூடூர், ஸ்ரீசைலம், தமிழ் நாட்டில் பஞ்சம்மதேவி, ஆந்திராவில் கமலாபூர், நந்திமண்டலம் மற்றும் கர்னூல் போன்ற இடங்களில் ஆலயங்கள் உள்ளன.

(இந்த கட்டுரையின் கருத்து முத்திராஜாவின் இணையதளத்தில் அவர்களது அனுமதியுடன் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. அங்கம்மாவின் முழு விவரங்களையும் அவளைப் பற்றிய பிற செய்திகளையும் படிக்க அவர்கள் இணையதளமான http://mudiraja.com/mudirajuமீது கிளிக் செய்து படிக்கவும்)

Ashtavakara Geethai

$
0
0
அஷ்டவாக்கர கீதை

சாந்திப்பிரியா

(1931 ஆம் ஆண்டு பீகார் மானிலத்தில் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து 1953 ஆம் ஆண்டு சன்யாச தீட்சை பெற்றவர் ஸ்வாமி ஜோதிர்மயா நந்தா அவர்கள். அமெரிக்காவில் மியாமி என்ற மானிலத்தில் 1969 ஆம் ஆண்டு யோக ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஆசிரமம் ஒன்றை நிறுவி யோக வழி முறைகளைக் கற்றுக் கொடுக்கும் அவர் பல்வேறு புத்தகங்கள் எழுதி உள்ளார். அவர் எழுதிய சிறு கதைகள் மனதை சிந்திக்க வைப்பவை. அதில் ஒன்றுதான் செப்டம்பர் 2009 ஆண்டில் வெளியான இந்தக் கதை. அவர் எழுதி உள்ள அனைத்தையும் பிரசுரித்துக் கொள்ள எனக்கு முழு அனுமதி தந்துள்ளார்)

அஷ்டவாக்கர கீதை என்பது பகவத் கீதையைப் போன்ற கீதை. ஆனால் இது மன்னன் ஜனகருக்கு எழுந்த சந்தேகங்களுக்கு முனிவர் அஷ்டவாக்கரர் விளக்கம் அளித்தது. இந்த உலகமே மாயையானது. ஏவன் ஆத்ம ஞானம் பெறுகின்றானோ அவனே கடவுளுடைய முழுமையான அருளைப் பெற்றவன்ää அவன் பேரானந்த நிலையை அடைகின்றான். அறியாமையினால்தான் இந்த உலக பந்தத்தில் அகப்பட்டுக் கொண்டவன் அவதிப்படுகின்றான் என்பதை விளக்குவதே அஷ்டவாக்கர கீதை.

அஷ்டவாக்கரர் யார்? முன்னொரு காலத்தில் உதலாக்கா என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மகள் சுஜாதா என்பவளை கஹோட் என்ற முனிவருக்கு மணம் செய்து வைத்தார். அப்பொழுது அவள் கர்பவதியான பொழுது அவள் வயிற்றில் இருந்த குழந்தையான அஷ்டவாக்கரா தன்னுடைய தந்தை வேதம் ஓதும் பொழுது செய்யும் பிழைகளை எடுத்துரைக்குமாம். ஆனால் அந்த புத்திசாலித்தனத்தை விரும்பாத முனிவர் அந்த குழந்தைக்கு சாபமிட்டார். அது அங்ககீனமாக, உடம்பு எட்டு கோணலாக பிறக்கட்டும் என சாபமிட்டு விட அந்த குழந்தையும் எட்டு கோணலான உடம்புடன் பிறந்ததினால் அதற்கு அஷ்ட(எட்டு) வாக்கரா (உடல் கோணல்கள்) எனப் பெயர் ஏற்பட்டது.

அந்த குழந்தை பிறக்கும் முன் தன்னுடைய குடும்பம் செழிப்பாக இருக்க வேண்டும் என நினைத்த முனிவர் தன்னுடைய வாதத் திறமையை சபையில் காட்டி சன்மானம் பெற்று வர வேண்டும் என ஜனக மன்னனிடம் சென்றதும் அங்கு நடைபெற்ற வாதப் போட்டியில் அரச பண்டிதரிடம் தோற்றுப் போனார். ஆந்த அரசவை பண்டிதரின் நிபந்தனைப்படி தோற்பவர்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு மரணத்தை அடைவார்கள். அதனால் கஹோட் முனிவரும் அந்த தண்டனைப் பெற்று மரணம் அடைய வேண்டி இருந்தது.

குழந்தை அஷ்டவாக்கரா வளரத் துவங்கிதும் கூட அவனுடைய தாய் அவனுக்கு தந்தை மரணம் அடைந்த செய்தியை கூறவில்லை. ஆனால் பின்னர் எப்படியோ அதைத் தெரிந்து கொண்ட அஷ்டவாக்கரா தன்னுடைய தாய் மாமனான சிறுவன் ஸ்வேதகேது என்பவருடன் ஜனகர் அரண்மணைக்குச் சென்று அரச பண்டிதர் பாண்டியை சந்திக்க அனுமதி கோரினார். போகும் வழி நெடுக அந்த இரண்டு சிறுவர்களும் காட்டிய திறமை குறித்த செய்தி மன்னனின் காதில் எட்ட அவர் அந்த இரு சிறுவர்களையும் அரச சபைக்கு அழைத்தார்.

அவர்கள் அரச சபைக்குள் நுழைந்ததுமே அவருடைய அங்கஹீனத்தைக் கண்டு அங்கிருந்த அனைவரும் பெரியதாக சிரித்து கேலி செய்ய கோபமடைந்த அஷ்டவாக்கரா மன்னனைப் பார்த்துக் கூறினார் “அரசே, நான் இந்நாள் வரை உங்கள் அரச சபையில் படித்த மேதாவிகள்தான் உள்ளனர் என நினைத்திருந்தேன். இங்கு வந்ததும் தெரிகின்றது இந்த அவையில் செருப்பு தைப்பவர்கள்தான் உள்ளனர். ஏன் எனில் அவர்களுக்குத்தானே தோலின் மீது நாட்டம் இருக்கும். எந்த ஒருவனுடைய உருவத்தையும் கொண்டு அவனை எடை போடக் கூடாது அவனுடைய திறமையைதான் சோதித்துப் பார்த்து அவனைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டும்.”

அந்த சிறுவன் கூறியதைக் கேட்ட அனைவரும் வாயடைத்து நின்றனர். சற்றே சங்கடம் அடைந்த மன்னனும் அஷ்டவாக்கராவிடம் அவன் வந்த காரணத்தைக் கேட்க அஷ்டவாக்கரா சற்றும் தயக்கம் இன்றி தான் அரச பண்டிதர் பாண்டியுடன் ஆன்மீகத்தில் வாதம் செய்ய வந்துள்ளதாகக் கூறினார். நீண்ட வாதங்களுக்குப் பிறகு அரசன் அந்த போட்டிக்கு சம்மதித்தார். காரணம் போட்டியின் விதி. போட்டி நடந்தது அரச பண்டிதர் தோற்றுப் போனார். அவருக்கு என்ன தண்டனை தரவேண்டும் என மன்னன் கேட்கவும் அஷ்டவாக்கரா கூறினார் “என் தந்தை மரணம் அடைந்தது போலவே பண்டிதரும் நீரில் மூழ்கடிக்கப்பட்டு மரணம் அடைய வேண்டும்”

பூண்டி கூறினார் “ நான் வருண பகவானின் மகன். ஆகவே நீரில் மூழ்கடித்தாலும் எனக்கு மரணம் கிட்டாது. மேலும் உன் தந்தையின் மரணத்துக்கோ அல்லது மற்றும் பல தோற்றுப் போனவர்களின் மரணத்திற்கோ நான் காரணம் அல்ல. உண்மையில் என் தந்தை ஒரு பெரிய யாகம் செய்து கொண்டு உள்ளார். அதில் பல பண்டிதர்கள் தேவையாக இருந்ததினால்தான் என்னிடம் தோற்றவர்களை அங்கு அனுப்பினேன் ” எனக் கூறியவர் அஷ்டவாக்கராவின் தந்தையை மேலுலகத்தில் இருந்து வரவழிக்க அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் அவருடைய தந்தை சபையில் வந்து நின்றார்.

துன்னுடைய மகனுடைய வாதத் திறமையைப் பற்றிக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை கஹோட் மிக்க மகிழ்ச்சி அடைந்து தன் மகனிடம் சாமங்கா என்ற நதியில் குளித்துவிட்டு வருமாறு கூறினார். அவரும் அந்த நதியில் சென்று குளித்துவிட்டு நீரில் இருந்து எழுந்த பொழுது அங்கஹீனம் மறைந்து போய்விட்டிருந்தது. அதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்து போக ஜனகரும் அஷ்டவாக்கராவையே தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டார். அந்த அஷ்டவாக்கரர் தந்த போதனைகளினால் ஜனகர் மனத் தெளிவு பெற்று ஞானம் அடைந்தாராம்.

Moral story- 5

$
0
0
jpf;Ftha; Kdptu; nrhd;d ePjpf; fij -5
rhe;jpg;gpupah

 
முன்னொரு காலத்தில் கிரேதா யுகத்தில் நிஷாதா என்ற தேசத்தில் ஹேமகுண்டலா என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு வியாபாரி. இரண்டு மகன்கள் இருந்தனர். அவர் பாடுபட்டு பெரும் செல்வம் சேர்த்தார். நிறைய தான தருமங்கள் செய்தார். தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவிகள் செய்தார் ஆனாலும் அளவுக்கு மிஞ்சிய செல்வம் சேர்ந்ததும் வாழ்க்கை அலுத்தது. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார். சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் இரண்டு ஆலயங்களைக் கட்டினார். அதன் பின் அனைத்து செல்வத்தையும் இரண்டு மகன்களுக்கும் கொடுத்துவிட்டு சன்யாசம் மேற்கொண்டு சென்று விட்டார்.

இரு மகன்களுக்கும் கடவுள் பக்தி இல்லை. கூத்தாடினர், சூதாடினர், பெண் பித்தர்களாக இருந்தனர். இரண்டு மகன்களும் ஊதாரித்தனமாக இருந்து செல்வம் அனைத்தையும் கரைத்தனர். ஒரு கால கட்டத்தில் கடனாளிகளாகி ஊரை விட்டு ஓடி விட்டனர். மூத்தவன் காட்டிற்குள் சென்று யமுனை நதி ஓடிக் கொண்டு இருந்த கரையில் தங்கி வாழ்ந்தான். இரண்டாமவனோ மலைப் பகுதிக்குச் சென்று குகைகளில் வாழ்ந்து வந்தான். சில காலம் கடந்தது. இருவரும் மரணம் அடைய யம தூதுவர்கள் அவர்களை மேலுலகுக்கு அழைத்துச் சென்றனர். மூத்தவன் சொர்கத்திற்கும், இளையவன் நரகத்துக்கும் சென்றனர்.

யமுனை நதி உற்பத்தி ஆகும் மலை

அதைக் கண்ட நாரத முனி யமதர்மராஜனிடம் சென்று கேட்டார் ‘இத்தனை கேடு கெட்ட வாழ்க்கையை வாழ்ந்த இருவரில் ஒருவனை மட்டும் சொர்கத்துக்கு ஏன் அனுப்பினீர்கள்?’

யமதர்மராஜர் கூறினார் ‘ முனிவரே உங்களுக்குத் தெரியாததா எத்தனைதான் தீய செயல்களை செய்தாலும் புனிதமான யமுனை நதியில் ஒரு முறை குளித்தாலும் அனைத்து பாபங்களும் போய்விடும் என்பது. மூத்தவன் தனது இறுதி நாட்களில் தினமும் யமுனையில் அல்லவா குளித்து வந்தான். கிருஷ்ணரும் சிவபெருமானும் குளித்த அந்த புனித நதியில் குளித்து விட்டவருக்கு நான் சொர்கத்தைத் தராமல் வேறு என்ன செய்வது?’.


யமுனை நதி மீது உள்ள யமுனாதேவி ஆலயம்

யமுனை சூரியனின் மகள். யமதர்மராஜரின் சகோதரியாம். அவள் சூரியனின் ஒளியை தாங்க முடியாமல் அவருடைய மனைவி ஒரு நாள் தன்னுடைய கண்களை மூடிக் கொண்டபோது கோபமடைந்த சூரியன் மனைவிக்கு சாபமிட்டார். அப்போது பிறந்தவளே யமுனை. அதனால்தான் அவள் நதி என்றும் சலசலப்பாகவே உள்ளதாம்.

நீதி:- இறுதி நாட்களில் செய்யும் புண்ணியம்
இறைவன் அருளை நிச்சயம் பெற்றிடும்

Guru Charithram - 59

$
0
0
 
அத்தியாயம் - 50

சித்த முனிவர் நமதஹரகாவுக்கு இன்னொரு கதையையும் கூறினார் ''தன் வாழ்க்கையில் பல வசதிகள் பெற்று வாழ வேண்டும் என வேண்டிக் கொண்ட ஒரு வண்ணானுக்கு எப்படி ஸ்வாமிகள் கருணை புரிந்தார் என்பதை முன்னமே கூறினேன் அல்லவா, அவன் மரணம் அடைந்தப் பின் அதற்க்கு அடுத்த ஜென்மத்தில் பீதார் எனப்படும் இடத்தில் ஒரு  முஸ்லிம் அரசனாகப் பிறந்தான்.

பீதாரை ஆண்டுவந்த அந்த முஸ்லிம் மன்னன் பூர்வ ஜென்மத்தில் ஸ்வாமியின் பக்தனாக இருந்ததினால் நேர்மையான வாழ்க்கையை மேற்கொண்டு அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்துக் கொண்டு நடு நிலையாக ஆட்சி செய்தான்.  ஆனால் சில  முஸ்லிம் பிரிவினர் அந்த மன்னன் இந்துக்களையும் முக்கியமாக பிராமணர்கள் மற்றும் குருமார்களையும் தம் சமயத்தினருடன் சேர்த்து பாரபட்ஷம் இல்லாமல் நடத்துவதை  ஏற்றுக் கொள்ள முடியாமல் அதைப் பற்றி குறை கூறினார்கள். ஆனால் அவர்களுடைய கருத்து எதையுமே அந்த மன்னன் ஏற்கவில்லை. தன்னைப் பொருத்தவரை அனைவரும் ஒன்றே என்ற கொள்கையில் இருந்து தடம் புரண்டு ஆட்சி செய்ய விரும்பவில்லை. 

தம்மிடம் குறைக் கூறியவர்களிடம் மன்னன் கூறினார் 'என்னைப் பொருத்தவரை அவரவர் தர்மத்தைக் கடைபிடிக்க அவரவருக்கு  உரிமை உண்டு என்பதை நம்புபவன் நான். அவரவர் நம்பும் தெய்வ நம்பிக்கை என்பது நல்  வழிப்பாதைக்கு செல்ல அவரவர் தேர்ந்தெடுக்கும் வழி முறையே தவிர யாரும் யாருக்கும் மேலானவர்களோ இல்லை கீழானவர்களோ கிடையாது. அதற்க்கு உதாரணமே நமக்கு பால் தரும் பசுவையோ அல்லது  எருது ஆகும். அவை தரும் பாலானது வெண்மையாக உள்ளதே தவிர ஒவ்வொரு  மதத்தினருக்கும் ஏற்ப அது பாலின் நிறத்தை மாற்றியா தருகிறது என்பதில் இருந்தே இயற்கை அனைவரையும்  ஒன்று போலவே கருதுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.   ஆகவே எந்த ஒருவன் விவேகம் கொண்டு இருப்பானோ அவன் மத ரீதியாக எதையும் அணுக மாட்டான்.  கடவுள் படைத்துள்ள உலகில் அவரவர் நம்பிக்கையின்படி அவரவர்களை வாழ விடுவான்'. ஆனாலும் அதை முஸ்லிம் மதத்தினரால் ஏற்க முடியவில்லை. ஆனால் அரசனையும்  எதிர்த்து எதையும் செய்யவும் முடியவில்லை.

இந்த நிலையில் அந்த மன்னனுக்கு  திடீர் என ஒருநாள் கால் தொடையில் ஒரு புண் வந்து அது ஆறவே இல்லை. என்ன வைத்தியம் செய்தும் அது ஆறவே இல்லை. நாளாக நாளாக அதன் வலி அதிக வேதனை தந்தது. எத்தனை வைத்தியம் செய்தும் குணம் கிடைக்கவில்லை. ஆகவே அந்த மன்னன் பிராமணப்  பண்டிதர்களை அழைத்து தன்னுடைய ரணம் தீர ஏதாவது உபாயம் உள்ளதா எனக் கேட்டான். அதைக் கேட்டவர்கள்  'மன்னா நாங்கள் இதற்கு பதில் கூறினால் உங்களுக்கு கோபம் வர வாய்ப்பு உள்ளதே'எனக் கூறி மெளனமாக நிற்கையில் அந்த மன்னன் அவர்களிடம் கூறினான் 'பண்டிதர்களே, என் குணத்தை நீங்கள் அனைவரும் முற்றிலும்  அறிந்தவர்கள். ஆகவே தயங்காமல் எனக்கு என்ன உபாயம் செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள். என்னை நம்புங்கள்'என்றார்.

அதைக் கேட்ட பண்டிதர்களும் மன்னனிடம் கூறினார்கள் 'மன்னா இப்படிப்பட்ட சங்கதிகளுக்கு எல்லாம் மருந்து மட்டுமே பயன் தராது. பூர்வ ஜென்ம பாபமும் சேர்ந்து இருந்திருக்கும் என்பதினால் அதற்கு பரிகாரம் செய்தால் ஒழிய வியாதி குணமாகாது என்பார்கள். ஆகவே நீங்கள் அந்த வழியையும் யோசனை செய்யலாமே'என்று கூறினார்கள். மன்னன் அவர்களிடம் கேட்டான் 'பண்டிதர்களே, நான் உங்கள் வார்த்தைகளை முற்றிலும் நம்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தயங்காமல் கூறுங்கள். நான் செய்கிறேன்'என்றார். அவரைப் பொருத்தவரையில் தன்னால் தாங்க முடியாமல் உள்ள நோயின் தாக்கத்தை  குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே.

அதைக் கேட்ட பிராமண பண்டிதர்கள் 'அரசனே, அப்படி என்றால் நீங்கள் பல புண்ணிய ஸ்தலங்களுக்கும் ஷேத்திராடனம் செய்து அங்கெல்லாம் வேண்டிக் கொள்ள வேண்டும். மகா புருஷர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை சந்தித்தும் அவர்களது அருளைப் பெற்றும் வியாதியை குணப்படுத்திக் கொள்ளலாம். மஹாபுருஷர்களை  சந்தித்து அவர்களது ஆசிகளைப் பெற்றுக் கொண்டால் அறுபது வருட பாபங்கள் கூட விலகும் என்பார்கள்'என்று கூறினார்கள். அரசன் அவர்களிடமே யாராவது மகா புருஷர் இருக்கின்றாரா என்று கேட்க அவர்களும் அவரை பாபவினாசி தீர்த்ததுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி  ஸ்வாமிகளை சந்திக்குமாறு ஆலோசனைக் கூறினார்கள்.

அவர்களது யோசனையை உடனடியாக ஏற்றுக் கொண்ட மன்னனும் சற்றும் நேரத்தை வீணடிக்காமல் மறுநாளே அங்கிருந்துக் கிளம்பி பாபவினாசி தீர்த்ததுக்குச் சென்று ஒரு தனிமையான இடத்தில் அமர்ந்து கொண்டு மனதார தெய்வத்தை ஆராதனை செய்தார். அவருடைய சைனியங்களை சற்று தூரத்தில் யாருக்கும் இடைஞ்சல் தராமல்  அமர்ந்து கொண்டு இருக்குமாறு கட்டளை பிறப்பிக்க அவர்களும் அந்த இடத்தில் இருந்து சற்று தொலைவான இடத்துக்கு சென்று அமர்ந்து கொண்டார்கள்.

அவர் அங்கு அமர்ந்து இருக்கையில் ஒரு யதி புருஷர் அந்த பக்கமாக சென்று கொண்டு இருந்தார். மன்னன் தனிமையில் அமர்ந்து கொண்டு இருந்ததைக் கண்டவர் அவரிடம் சென்று அவர் ஏன் சோகமாக அமர்ந்து கொண்டு இருக்கிறார் என்று கேட்டார். மன்னனும் வந்துள்ளவர் யார் என்பதைக் கூட விசாரிக்காமல் தன்னுடைய சங்கடத்தை அவரிடம்  கூறி தனது காலில் இருந்த கொப்புளத்தைக் காட்டி அதனால் தான் தாங்க முடியாத உபாதையுடன் உள்ளதாகவும் அந்த நோயின் தாக்கத்தில் இருந்து தனக்கு நிவாரணம் கொடுக்க யாராவது சத் புருஷர்கள் கிடைப்பார்களா எனத் தேடிக் கொண்டு இருப்பதாகவும் கூறினார்.  அப்படி யாராவது சத்புருஷர்கள் கிடைத்தால் அவருடைய அருளைப் பெற்று அதை குணமாக்கிக் கொள்ளலாம் என்று தாம் தனக்கு பண்டிதர்கள் அறிவுறித்தி உள்ளபடி அங்கு வந்துள்ளதாகக் கூறிவிட்டு அப்படிப்பட்ட சத்புருஷர்  யாரையேனும் சந்திக்க அவரால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்.

அதைக் கேட்ட அந்த யதி புருஷர் 'நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் ஒரு சத்புருஷரைக் காட்டுகிறேன்'என்று கூறிவிட்டு உண்மையான சத்புருஷர்களைக்  கண்டாலே வியாதி விலகும் என்று கூற அவர் 'அதெப்படி, சத்புருஷர்களைக்  கண்டாலே வியாதி உடனே விலகுமா?'என்று மன்னன் கேட்க அந்த யதி புருஷர் அவருக்கு  ஒரு கதையை கூறினார்.

'சுவன்தி என்ற இடத்தில் ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் பல கெட்ட பழக்கங்களைக் கைகொண்டு இருந்தான். அது மட்டும் அல்ல அவன் பிங்களை  என்ற  விலை மாதுவின் வீட்டிலேயே தங்கி இருந்தான். ஒரு நாள் ஒரு முனிவர் அந்த வேசியின் வீட்டின் முன் வந்து நிற்க அவரை அவன் உள்ளே அழைத்துச் சென்று அவருக்கு பாத பூஜை செய்து தான் குளித்து விட்டு வந்து அவருக்கு தனியாக உணவை  சமைத்து போட்டப் பின் அவர் அன்று இரவு அங்கு தங்கிக் கொள்ள தனியான ஒரு அறையும் தந்தாள். நடந்து வந்த கால்களின் வலிக்கு இதமாக இருக்க இரவு முழுவதும் அவருடைய கால்களையும் பிடித்து விட்டபடி அமர்ந்து இருந்தாள். மறுநாள் அவர் எழுந்து சென்று விட்டார். காலம் கடந்து சென்றது.  அந்த பிராமணனும் பிங்களை  என்ற விலைமாதுவும்   இறந்து விட்டனர்.
 
அந்த பிராமணன் ஒரு அரசனின் மூத்த மனைவியான  சுமதி என்ற பெண்ணின் கருவில் புகுந்து கொள்ள வேண்டிய விதி வந்தது. அந்த மன்னனின்  இளைய மனைவியோ அவளுடைய மூத்தவள் மீது பொறாமைக்  கொண்டு அவளுக்கு சாப்பாட்டில் விஷத்தை கலந்துக் கொடுத்து விட்டாள். ஆனால் அந்த விஷம் அந்த அரசியையோ அவள் கருவில் இருந்த குழந்தையையோ கொல்லவில்லை. அதற்கு மாறாக  அந்த விஷத்தை உண்டவளுக்கு உடம்பு முழுவதும் ரணகளமான கொப்புளம் ஏற்பட்டது. ஒன்பது மாத முடிவில் அவள் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்தாள். அவளுக்கு எத்தனை வித வைத்தியம் செய்தும் அவளுடைய  வியாதி குணம் ஆகவில்லை. அது அந்தக் குழந்தையையும் பாதித்து அதற்கும் அதே ரணம் வந்தது.

அதனால் அரசனும்  அவர்களை தனி இடத்தில் தங்க வைத்து இருந்தான். நாளாக நாளாக அவளுக்கும் அந்தக் குழந்தைக்கும் வியாதி முற்றியது. உடல் கறுத்து  இருவரும் அகோர தோற்றத்தைப் பெற்றார்கள். ஆகவே அகோரமான தோற்றத்தைத் தந்து கொண்டு கிட்டவே நெருங்க முடியாமல் இருந்த அவர்களை தம்மோடு அரண்மனையில் வைத்திருக்க அரசனுக்கு விருப்பம் இல்லை என்பதினால்  அவர்களை வண்டியில் ஏற்றி காட்டில் விட்டு விட்டு வந்து விடும்படி அரசன் கூறி விட்டான். ஆனால் அரசனை சார்ந்தவர்கள் அரசனுடைய அந்த செயலை விரும்பவில்லை. இப்படி கருணை இல்லாமல் இத்தனைக் காலமும் தர்ம பத்தினியாக ஒழுக்கமாக அவனுடன் வாழ்ந்து வந்திருந்த மனைவியையும் அவள் குழந்தையையும் ஈவு இறக்கம் இல்லாமல் காட்டுக்கு துரத்தி அடிக்கிறானே என கோபமடைந்தார்கள். ஆனால் அரசனின் இளைய மனைவியோ அரசன் எடுத்த அந்த  நடவடிக்கையை பாராட்டினாள்.
 
காட்டில் கொண்டு விடப்பட்ட சுமதி பல துன்பங்களை சந்திக்க வேண்டி இருந்தது.  காட்டில் கிடைத்தவற்றை உண்டு வாழ வேண்டி இருந்தது. ஒரு நாள் அவளுக்குக் குடிக்கக் கூட நீர் கிடைக்கவில்லை.  அதனால் தாகம் எடுக்க மெல்ல மெல்ல நடந்து சென்று காட்டின் வெளியில் வந்தாள். அந்த வழியாகப் போய்க் கொண்டு இருந்த ஆட்டு இடையர்களிடம் சிறிது தண்ணீர் தருமாறு கெஞ்சினாள். அவர்களும் அவளுடைய நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டு அவளை பக்கத்தில் இருந்த தங்கள் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அந்த கிராமத்தில் கருணை மனம் மிக்க ஒரு நல்ல செல்வந்தனும் வாழ்ந்து கொண்டு இருந்தான். அவளது நிலைமையைக் கண்டு அவள் மீது பச்சாதாபப்பட்டு அவளுக்கு தன்னுடைய இல்லத்திலேயே  தங்க இடம் தந்து தன்னுடைய சகோதரி போலவே நடத்தி வந்தான். ஆனால் விதி விளையாடியது.  ஒருநாள் சுமதியின் குழந்தை இறந்து விட்டது. அவள் அந்த துக்கத்தினால் தானும் தற்கொலை  செய்து கொள்ள முடிவு செய்ய அந்த வீட்டில் இருந்தப் பெண்கள் அவளைத்  தடுத்தனர். ஆனால் துக்கத்தினால் பீடிக்கப்பட்டு இருந்தவளினால் அதை ஏற்க முடியவில்லை.

அந்த சமயத்தில் அந்த கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்தார். அவரை அந்த செல்வந்தன் அன்புடன் வரவேற்று உபசரித்தான். வந்தவர் மாமுனிவர் என்பதினால் வந்த உடனேயே தன் ஞானக் கண்களினால் அங்கு நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருந்த சுமதியை அழைத்து வரச் சொல்லி அவளுக்கு ஆறுதல் கூறினார் 'அம்மணி நீ ஏன் வருத்தம் அடைகிறாய்? பிறப்பதும், மரணம் அடைவதும் காலச்சக்கரத்தின் நியதி அல்லவா. பிறந்த சிலர் நீண்ட ஆயுளோடு உள்ளார்கள்.  சிலர் அல்பாயுசில் மரணம் அடைந்தும் விடுவார்கள். அது பூர்வ ஜென்மத்தின் பாப புண்ணியங்களுக்கு ஏற்ப நேரிடுகிறது. ஒரு ஜீவனுக்கு என்றுமே அழிவில்லை. அது தேவ கணமாகவோ, மனிதப் பிறவியாகவோ, மிருகம், செடி கொடிகளாகவோ பல ஜென்மங்களை எடுத்துக் கொண்டு இருந்தவாறு  பிரும்மனின் நியதிப்படி முடிவில் மேலுலகிலேயே அழியும். மீண்டும் பிறப்பை எடுப்பது இல்லை. ஆகவே நடக்க முடியாததை கற்பனை செய்து கொண்டு மனதை வருத்திக் கொள்வதை விட நமக்கு வந்துள்ள துன்பங்களின் காரணம் பூர்வஜென்ம வினைபயனாகவே  இருக்கும் என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டு அடுத்த பிறவியிலாவது நல்ல நிலையில் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டு ஈஸ்வரனிடம் சரண் அடைந்துவிடு. அதுவே நான் உனக்குக் கூறும் அறிவுரை'என்று பல்வேறு விதங்களில் அந்த முனிவர் அவளை தேற்றினார்.

சுமதியோ தன்னுடைய துயரத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் தனக்கு வந்து வியாதியையும் கூறி தான் அனுபவித்த துன்பங்களைக் கூறினாள். அவள் முனிவரிடம் 'மாமுனிவரே, எனக்கென இருந்த ஒரே ஜீவனும் என்னை விட்டு விலகிய பின்னர் நான்   எதற்காக உயிர் வாழ வேண்டும்? தயவு செய்து எனக்கு ஆசி கூறி  துர்பாக்கியசாலியான  என்னை மரணம் அடைய விடுங்கள்'என்று  அவரை  வேண்டினாள். அதைக் கேட்ட அந்த முனிவரும்  அந்த இறந்து கிடந்த குழந்தை  மீது சிறிது வீபுதியைத் தூவினார். அடுத்த நொடியில் இறந்து கிடந்த அந்தக் குழந்தை மீண்டும் உயிர் பெற்று எழுந்து வந்தது.  அதைக் கண்ட அனைவரும் நடந்தவற்றை அதிசயத்துடன் பார்த்தவண்ணம் நின்றார்கள். உயிர் பெற்று எழுந்த அந்தக் குழந்தை அதி அற்புத அழகுடன் விளங்க சுமதியின் வியாதியும் விலகி அவளும் அற்புதமான உடலழகைப் பெற்றாள். அவளுக்கு வந்திருந்த வியாதியும் மறைந்தது.

அவளும் மீண்டும்  நாடு திரும்ப அவளை அன்புடன் வரவேற்ற மன்னன் நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டான். அவளிடம் மன்னிப்பைக் கோரி, தன் இளைய மனைவியை நாடு கடத்திவிட்டு  சுமதியின் மகன் பெரியவனானதும் ராஜ்ய பரிபாலனத்தை அவனிடம் ஒப்படைத்தார். இப்படியாக சத்புருஷர்களால் மட்டுமே அற்புதங்களை செய்து ஒருவருடைய துன்பங்களை தீர்க்க முடியும்'என்று யதி புருஷர் அந்த முஸ்லிம் மன்னனுக்குக் கூற அவரும் அவருடைய கால்களில் விழுந்து வணங்கி தனக்கு அப்படி ஒரு சத்குருவை அடையாளம் காட்டுமாறு அவரிடம் வேண்டிக் கொள்ள அந்த  யதி புருஷரும் அவரை கனக்பூரில் பீமா நதிக்கு அருகில் இருந்த ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்து  அவரிடம் வேண்டிக் கொள்ளுமாறும் கூறினார்.

அதைக் கேட்ட அந்த மன்னனும் சற்றும் தாமதிக்காமல்  தன்னுடைய பரிவாரங்களுடன் கிளம்பி  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை தேடி கனக்பூருக்கு சென்றான். ஸ்வாமிகளை காண்பதற்கு  தொலை தூரத்திலேயே பல்லக்கில் இருந்து இறங்கிக் கொண்டு காலில் செருப்புக் கூட அணியாமல் அவர் இருந்த இடத்துக்கு நடந்து சென்றான். அவரைப் பார்த்ததுமே ஸ்வாமிகள் 'என்னப்பா உன்னைப் பார்த்தே பல காலமாகிவிட்டது. இன்னும் துணிகளை அந்த நதிக்கரையில்தான் துவைத்துக் கொண்டு இருக்கிறாயா?'என்று கேட்டதும் அந்த மன்னனுக்கு தன்னுடைய பூர்வ ஜென்ம வாழ்கை அப்படியே நினைவில் வந்து நிற்க அவன் அப்படியே ஸ்வாமிகளின்  கால்களில் விழுந்து வணங்கினான்.அவனே பூர்வ ஜென்மத்தில் வண்ணானாக இருந்தவன்.

நமஸ்கரித்து விட்டு எழுந்தவன் 'மகாத்மாவே, என்னுடைய இந்த ஜென்மத்தில் உங்கள் நினைப்பு எனக்கு இத்தனை நாளும் வராமல் இருந்ததின் காரணம் எனக்குத் தெரியவில்லை. நான் இத்தனை நாளும் செல்வத்தில் மிதந்து கொண்டு  இருந்த இந்த வாழ்க்கை அலுத்து விட்டது. இனி இது போதும் மஹானே. என்னால் என் உடலில் வந்துள்ள கொப்புலங்களினால் ஏற்பட்டுள்ள  வேதனையை தாங்க முடியவில்லை. எனக்கு அருள் புரிந்து எனக்கு வந்துள்ள வியாதியை குணப்படுத்தி இனி நான் எந்த நிலையில் பிறந்தாலும் உங்களுடைய நினைவிலேயே இருந்து கொண்டு, உங்களுக்கு சேவகம் செய்து கொண்டு  இருக்கும் வகையில் எனக்கு  முக்தி தர வேண்டும்'என அவரிடம் வேண்டிக் கொண்டான்.

அவன் கூறியதைக் கேட்ட  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி 'உனக்கு கொப்பளத்தினால்  ரணமா, எங்கே உன் உடலில் உள்ள கொப்புளத்தைக் காட்டு'என்று கேட்க அத்தனை நாளும் அவன் அனுபவித்த வேதனை மறைந்து போனது மட்டும் அல்ல உடலிலும் அந்த கொப்புளத்தை காணவில்லை. அதைக் கண்டவன் திகைத்து நின்றான். அவரை மீண்டும் வணங்கிய பின் தன்னுடைய நாட்டிற்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து விட்டு தான் அவருடைய சிஷ்யனாக விரும்புதாகவும் கூறினான்.

ஆனால் அவனது நாட்டில் நிறைய பசுக்கள் கொல்லப்பட்டு வந்ததினால் அவனது வேண்டுகோளை முற்றிலுமாக ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளால்  ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதை அவனிடமும் கூறாமல் தன் மனதில் ஒரு முடிவை எடுத்தார். 'இந்த பூமியில் கலியின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டே போகின்றது. ஆகவே என்னால் நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு மனித உருவில் நீண்ட  நாட்கள் பூமியில் வாழ இயலாது. கௌதமி நதிக்கு யாத்திரை செல்வதாகக் கூறிவிட்டு புஷ்கர மாதத்தில் பிரஹஸ்பதி சிம்ம ராசியில் புகும் பொழுது நான் சங்கமத்தில் குளிக்க இறங்கி விட்டு அங்கிருந்து மறைந்து விட வேண்டும்.  அதன் பின் மக்களின் கண்களுக்கு நான் புலப்படக் கூடாது. நான் சூஷ்மமாக இருந்து கொண்டு அவர்களை ரட்ஷிப்பேன்  '.

ஆகவே அந்த மன்னனின் வேண்டுகோளை ஏற்பது போல காட்டிக்  கொண்டு கோதாவரி நதி யாத்திரையை மேற்கொண்டார். அவரை பல்லக்கில் அமர வைத்து தன் நாட்டிற்கு அழைத்துச் சென்றபோது கனக்பூரில் தான் விட்டுச் சென்ற  அனைத்து  பக்தர்களையும்  தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார். சங்கமத்துக்குச் சென்ற ஸ்வாமிகள் அங்கு ஒரு குதிரை மீது ஏறி மிகவும் லாவகமாக தானே அதை ஓட்டிச் செல்ல அரசனும் மற்ற சிஷ்யர்களும் இன்னம் பல குதிரைகளில் ஏறிக் கொண்டு அவருடைய குதிரையைத் தொடர்ந்து  சென்றனர். ஸ்வாமிகள் மன்னனின் அரண்மனைக்கு சென்றதும் மன்னன் அவரிடம் கூறினான் 'மகாத்மாவே இந்த நாட்டின் அனைத்து செல்வங்களும் உங்களுடையதுதான். நான் உங்கள் சேவகன். நான் என்றும் உங்களுக்குப் பணி செய்து கொண்டு சிஷ்யனாகவே இருக்க விரும்புகின்றேன். ஆகவே இவற்றை ஏற்றுக் கொண்டு தாங்கள் இங்கிருக்க வேண்டும்'.

ஆனால் அதை ஏற்க மறுத்த ஸ்வாமிகள் அவனை நாட்டை நல்ல முறையில் ஆண்டு கொண்டு இருக்குமாறும் அவனுடைய மகன் வளர்ந்து பெரியவன் ஆன பின் அவனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு தன்னுடைய ஆசிரமத்திற்கு வருமாறும்  கூறினார். அதன் பின் அரண்மனையில்  இருந்த அனைவரையும்  தனித் தனியே சந்தித்து ஆசிகள் வழங்கிய பின் கனக்பூருக்கு கிளம்பிச் சென்றார்.

ஆஸ்ரமத்திற்கு திரும்பிய ஸ்வாமிகள் தன்னுடைய சிஷ்யர்களை அழைத்துக் கூறினார் 'இது கலிகாலம் என்பதினால் பாவத்தை அழித்துக் கொள்ள விரைவில் இந்த ஆசிரமத்திற்கு நிறைய மக்கள் வர இருக்கின்றனர். பாபம் செய்த பலரும் இங்கு வந்து என்னிடம் விமோசனம் கேட்பார்கள். ஆகவே  நான்  இனிமேல் எவர் கண்களுக்கும் புலப்படாமல் இருக்க முடிவு செய்து விட்டேன். சத்புருஷர்களுக்கு மட்டுமே காட்சி தருவேன். நான் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து விட்டாலும் என்னுடைய பக்தர்களை பாதுகாத்து வருவேன். நான் பல இடங்களுக்கும் சென்றபடி என்னுடைய பக்தர்களை ரட்ஷித்தபடியேதான்  இருந்து வருவேன்'(இத்துடன் அத்தியாயம்-50 முடிவடைந்தது).

.......தொடரும் . 

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship -1

$
0
0

   1   
வேத காலத்தில் இந்து மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. வேதங்கள் எப்பொழுது படைக்கப்பட்டவை என்பது இன்னும் உறுதியாக கூறப்படவில்லை என்றாலும் வேதங்கள் முதன் முதலாக வியாசரால்தான் தொகுக்கப்பட்டன. இதன் மூலம் தெரிவது என்ன என்றால் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் வேத காலத்துக்கு முன்னர் நிகழ்ந்தவை. இதன் காரணம் மகாபாரதத்தை வியாசர் கூற வினாயகர் எழுதினர் என்பதே.

முன்னர் குல தெய்வம் குறித்து சில கட்டுரைகளை எழுதி உள்ளேன் என்றாலும் அதில் குல தெய்வங்களின் சில முக்கியமான விஷயங்கள் விளக்கப்படாமல் இருந்தது மனதில் நெருடிக் கொண்டே இருந்தது. சிலர் அந்த விஷயம் குறித்து என்னிடம் கேட்கவும் செய்தார்கள். அப்போது உடனடியாக என்னால் அதிக விளக்கம் தர முடியவில்லை. ஆகவே அதை தக்க நேரத்தில் விளக்க வேண்டும் என்பதற்காக செய்திகளை அவ்வபோது சேகரித்துக் கொண்டே இருந்தேன். அது இப்போது நிறைவேறி உள்ளது.

குல தெய்வ வழிபாடு குறித்து ஏற்கனவே விளக்கி உள்ளேன் என்றாலும் இன்னும் சிலவற்றை கூற வேண்டி உள்ளது. ஆகவேதான் குல தெய்வ வழிபாடுகள் துவக்கப்பட்டதின் பின்னணி, அவற்றின் வரலாறு, அவற்றில் பிரிவுகள், அவை வளர்ந்த வரலாறு, அவற்றைக் குறித்த மகான்களின் கருத்துக்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன். முதன் முதலில் குல தெய்வ வழிபாடுகள் கிராமப்புறங்களில் இருந்துதான் துவங்கின என்பது அடிப்படை செய்தியாகும். வேத காலம் முதல் துவங்கிய இயற்கை வழிபாடு மெல்ல மெல்ல மாறி எப்படி உருவ வழிபாடாகியது என்கின்ற நிலைமையை ஓரளவு புரிந்து கொண்டால் மட்டுமே குல தெய்வ வழிபாடு துவக்கப்பட்டதின் வரலாறும் அர்த்தமும் விளங்கும். ஆகவே நாம் வேத காலம் முதல் நடைபெற்றுள்ள  சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள சற்று பின் நோக்கிச் செல்ல வேண்டும்.

வேதங்கள் இன்றளவும் வாய் மொழி வழியாகவே தலைமுறை தலைமுறையாக வழங்கி வந்துள்ளன. வெகு காலத்துக்குப் பின்னரே இது எழுத்து வடிவம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது. வேதங்களை ஆரியர்களே பரப்பினார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக கி.மு 1500 ஆம் ஆண்டில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்தப் பின்னரே பாணினி என்பவர் வாய்மொழியாக இருந்த ஆரியர்களின் மொழியை சமிஸ்கிருத மொழியாக சீர்திருத்தி அமைத்தார் என்றும் அதனால்தான் இன்றைய பீகார் மானிலத்தில் பாடலிபுத்திராவின் அருகில் உள்ள மிதிலையில் கங்கைக் கரையில் யஜுர் வேதம் மற்றும் காயத்திரி மந்திரங்களை ஆரிய வம்சத்தினர் இயற்றியதாகக் கூறி அதற்கு ஆதாரமாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட “Dance Legacy of Pataliputra” என்ற நூலை மேற்கோள் காட்டுகிறார்கள். 
 
வேதங்களை ஆரியர்கள் எழுத்து வடிவில் வைத்திராமல் அநேகமாக அசோகா மன்னனின் ஆட்சி காலம்வரை வாய்மொழியாகவே பரப்பி வந்திருந்தார்கள் என்பது மெஹஸ்தனிஸ் என்ற கிரேக்க தூதுவர் எழுதிய 'இந்தியப் பயண நூலின்'மூலம் அறிய முடிகிறது என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 
 
இதை எதற்காக குறிப்பிட வேண்டி உள்ளது என்றால் இந்தியாவில் வேத வழி வாழ்வு முறை ஆரியர்களின் வருகைக்குப் பின்னர் துவக்கப்பட்டு அதில் கூறப்பட்டு உள்ள தெய்வங்களின் உருவ வழிபாடுகளும் வடநாட்டுப் பகுதிகளில் துவங்கின என்பதைக் காட்டவும், வடநாட்டில் வழிபடப்பட்ட தெய்வங்களும், ஆரியர்களின் வருகைக்கு முன்னரே இருந்திருந்த சிந்து சமவெளி நாகரீக காலத்தில் தென் இந்தியப் பகுதிகளில் வழிபடப்பட்டு வந்திருந்த தெய்வங்களும் வேறுபட்டவை, ஆரியர்களின் வருகைக்கு முன்னரே தென் பகுதிகளில் எதோ ஒரு தெய்வப் பிரிவு வணங்கப்பட்டு வந்துள்ளது என்பதையும் எடுத்துக் காட்டவே. இவற்றைக் குறித்து பின்னர் விளக்குகிறேன்.

வேத காலத்துக்கு பிறகே இந்து மதம் தழைத்தோங்கியது என்பதில் சந்தேகம் இல்லை. வேதகாலம் என்பது மனித நாகரிகம் அடைந்த பிறகு உருவான காலமாகும். அதாவது உலோக காலத்திற்கு பிறகு வந்த காலம். வேதங்களில் முதன்மையான ரிக் வேதம் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னால் மற்றும் அதர்வண வேதம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்க வேண்டும் என்பது ஐதிகம். பல பிரிவுகள் இந்து மதத்திலேயே அமைந்துள்ளது  என்றாலும் சுமார் ஐந்து அல்லது ஆறாயிரம் ஆண்டுகள் பழமையான ரிக் வேத காலத்தில் அந்தணர்கள் மற்றும் அந்தணர்கள் அல்லாதவர்கள் என்ற பிரிவுகள் காணப்படவில்லை. உருவ வழிபாடுகளும் இருந்திடவில்லை. சைவ, வைஷ்ணவ, ஜைன மற்றும் புத்த மதங்களும் இருந்திடவில்லை. 
 
ரிக்வேத காலத்தில் இறை வழிபாடு என்பது இயற்கை வழிபாடாகவே இருந்துள்ளது. அதாவது அக்னி, வாயு, வருணன் போன்றவை எதோ சக்தி உள்ளவையாக பார்க்கப்பட்டு வணங்கப்பட்டு வந்துள்ளன. வேத காலத்தில் சிவன், கிருஷ்ணர், விஷ்ணு, சக்தி போன்றவர்களின் உருவ வழிபாடுகள் இருந்துள்ளதாக தெரியவில்லை. ஆனால் அதே சமயத்தில் அவர்களைப் பற்றிய மறைமுக குறிப்புக்கள் அவற்றில் காணப்படுவதாகவும் கூறுகிறார்கள். ஆகவே உருவ வழிபாடு வெகு காலத்துக்குப் பிறகே துவங்கி உள்ளது என்பதே சரியானது.

    
 வேதகாலத்தைப் பற்றிய சில புத்தகங்கள் 

இராமாயண மற்றும் மகாபாரதம் நிகழ்ந்த காலத்தில் சமிஸ்கிருத மொழியிலும், வேதங்களிலும் வல்லுனர்களாக விளங்கிய ஆரியர்கள் இந்தியாவில் வடக்கு பகுதியில் இருந்துள்ளார்கள். அந்த காலகட்டத்தில் செய்யப்பட்ட யாகங்கள் மற்றும் வேள்விகளில் சமிஸ்கிருத மொழியிலான மந்திரங்களை ஓதியது அவற்றில் ஞானம் கொண்ட பண்டிதர்களே என்பதினால் அந்த பண்டிதர்கள் ஆரியர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதாக நம்புகிறார்கள். இரும்பு உலோகத் தொழிற்கலையில் ஆரியர்கள் சிறந்து விளங்கினார்கள், வேதங்களை நன்கு கற்றறிந்து இருந்தார்கள் என்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதினால்தான் உத்திரப் பிரதேச மானிலத்தின் ஹஸ்தினாபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ள உலோகத்திலான பொருட்கள் மூலம் அந்த காலகட்டத்தில் ஆரியர்கள் அங்கிருந்ததை உறுதி செய்கின்றன. மேலும்  இதன் மூலம் ஆரியர்கள் இராமாயண மற்றும் மகாபாரத காலத்திலும்  இருந்திருக்க வேண்டும் என்பதாக தெரிகிறது.

சிந்து நாகரீகம் தழைத்த இடங்கள் 

அதே சமயம் இன்னும் சில ஆய்வாளர்கள், ஆரியர்கள் இந்தியாவுக்கு வருகைத் தரும் முன் நிலவிய சிந்து சமவெளி நாகரீக காலத்தில் சிவன், மற்றும் கிருஷ்ண வழிபாடு இருந்துள்ளதாக கூறுகிறார்கள்.  இதற்கும் காரணம் வேத காலத்துக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மகாபாரத யுத்தம் நடந்துள்ளது. அப்போது கிருஷ்ணர் துவாரகையில் இருந்துள்ளார். சிந்து சமவெளியில் மதுரா மற்றும் துவாரகையும்  அடக்கம் ஆகும். சிந்து சமவெளி ஆராய்ச்சியில் கிடைத்த சில பொருட்களில் இரண்டு நாகங்கள் படுத்த நிலையில் உள்ள காட்சி காணப்படுவதினால் நாக வழிபாடும் இருந்திருக்கலாம். மேலும் கிருஷ்ணர்  மற்றும்  சிவன் இருவருமே பாம்புகளுடன் சம்மந்தப்பட்டவர்கள்.

மேலும் அந்த கால கட்டத்தில் சிவனை லிங்க உருவில் மட்டுமே வழிபட்டு வந்திருக்க வேண்டும். ஏன் எனில் எந்த புராணத்தைப் படித்தாலும் தெய்வங்களில் வேறு எந்த தெய்வங்களின் உருவத்தையும் பற்றிக் குறிப்புக்கள் இல்லை. ஆகவே லிங்க உருவையே சிவனாக பாவித்து வணங்கி வந்துள்ளார்கள் என்பது தெரியும். சிவலிங்கமே சிவபெருமான் என்பதினால் தெய்வங்களின் உருவமற்ற நிலை இருந்தபோது சிவலிங்க உருவம் மட்டும் தெய்வத்தின் ஒரு வடிவமாக இருந்துள்ளது. அதன் காரணத்தை யாரும் சரியாக விளக்கிடவில்லை என்றாலும் கற்களை எதோ ஒரு தெய்வமாக வணங்கி வந்திருந்த மக்கள் சிவலிங்கத்தை அதன் மகிமை தெரியாமல் எதோ சக்தி உள்ள கல்லாகவே நினைத்து வழிபாட்டு இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

சில கிராம எல்லைகளில் இருந்த வழிபாட்டு சிலைகள் 

லிங்க வழிபாடு தவிர  அரச மர வழிபாடு, மிருக வழிபாடு, பெண் தெய்வ  வழிபாடுகள் போன்றவை இருந்துள்ளன என்பதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. அந்த சிந்து சமவெளியை சார்ந்த மக்கள் பசுபதியை வணங்கினார்கள் எனக் கூறப்பட்டு இருப்பதில் இருந்து  ஆரியர்களின் வருகைக்கு முன்னரே சிவபெருமானையும் தமிழ் மொழி பேசிய மக்கள் வணங்கி  வந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது. சிலர் பசுவை காமதேனுவான பெண் தெய்வமாகவும் வணங்கி இருக்கலாம் என்கிறார்கள். மேலும் சிந்து சமவெளி நாகரீக காலத்தை சேர்ந்தவர்கள் சித்திர எழுத்துக்களையும் அறிந்திருந்தார்கள் என்பதினால் தெய்வ உருவங்களும் அவர்களால் வரையப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.

 
பசுபதியின் உருவம் 

இவை அனைத்தில் இருந்தும் புலனாவது என்ன என்றால் சிவலிங்க உருவே அனைத்து தெய்வ உருவங்களும்  தோன்றுவதற்கு முன் இருந்த ஒரே ஒரு தெய்வ உருவம் என்பதாகும்.  அங்காங்கே சிவலிங்க உருவங்களிலான கற்கள் பலவும் இருந்துள்ளதின் காரணம் இராமாயண மற்றும் மகாபாரத காலத்தில் ராமபிரான் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் சிவபெருமானை லிங்க உருவில் வணங்கி வந்துள்ளார்கள் என்ற உண்மையே.  லிங்க உருவைத் தவிர சிவபெருமானின் வேறு எந்த உருவமும் வரையுறுத்துக் கூறப்படவில்லை.

மகாபாரதத்தின் இரண்டாம் கட்டக் காலத்தில், அதாவது யுத்தம் முடிந்தப் பின் பாண்டவர்கள் ஆண்டு வந்ததாக கூறப்படும் 36 ஆண்டு இடைப்பட்ட காலத்தில் பஞ்சபாண்டவர்கள் இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று தமது தோஷங்களைக் களைய சிவபெருமானிடம் அருள் வேண்டி இருக்கிறார்கள். அவர்கள் வழிபட்ட இடங்கள் பலவும் சிவலிங்கங்கள் இருந்த இடங்களே. அவை அனைத்தும் பிற்காலத்தில் ஆலயங்களாகி உள்ளன. இதன் மூலம் தெரிவது என்ன என்றால் மகாபாரத காலகட்டத்தில் உருவ வழிபாடு இருந்திருக்க வேண்டும் என்பதே. அவர்கள் பூஜித்து வணங்கிய லிங்கங்கள் பிற்கால மனிதர்களினால் எதோ சக்தி பெற்ற கல் என்பதாகவே பார்க்கப்பட்டு இருந்திருக்க வேண்டும்.  பின்னரே அதன் மகிமைகளை புரிந்து கொண்டு ஆலயங்களை எழுப்பி உள்ளார்கள் என்பது தெளிவு.
................தொடரும்

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 2

$
0
0
   2  
ராமனும் ஒரு தெய்வம், ஹனுமான், சீதை மற்றும் கிருஷ்ணரும் தெய்வம் என மக்கள் தற்போது கூறி வணங்கினாலும், இராமாயண மற்றும் மகாபாரத நிகழ்வுகள் நடைபெற்ற காலத்தில் மானிட உருவில் இருந்த அவர்களை யாரும் தெய்வமாக வணங்கிடவில்லை. மாறாக அவர்களும் சிவபெருமானையே வணங்கி வந்துள்ளார்கள். அவர்கள் சிவபெருமானே அனைவருக்கும் மேலான தெய்வம் என்பதை உணர்ந்திருந்தார்கள் என்பதே அதன் காரணம். ஒரு அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் உள்ள அனைத்து தெய்வங்கள், தெய்வ கணங்கள், கிராம தேவதைகள் மற்றும் பிற அனைத்து அவதாரங்களும் பரமாத்மன் எனும் சிவன் மூலம் வெளிவந்த விஷ்ணு, பிரும்மா என்பவர்களில் மூலம்  தோன்றியவர்களே .


இராமாயண காலத்தில் ராவணன்  சிவனை ஆராதித்த கதைகளும், அவர் கட்டியதாக கூறப்படும் வழிபாட்டுத் தலங்களும் ஸ்ரீ லங்காவின் பல இடங்களில் காணப்படுகின்றன.  பிற கடவுட்களைக் குறித்த செய்திகள்- நாரதர் மற்றும் வினாயகர் போன்றவர்கள்- அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே காணப்படுகின்றன.

மகாபாரத யுத்தம் நடந்தது கி.மூ 3139 ஆம் ஆண்டு, அதாவது சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பாக என்று கூறுகிறார்கள்.  அந்த புராணத்தில் தெய்வங்களின் பெயர்களை ஜாடையாக குறிப்பிட்டுள்ளார்களே தவிர அவர்களுக்கு வழிபாடுகள் இருந்தது என்பதைக் கூறவில்லை என்று ஆராய்வாளர்கள் கருதினாலும், மத்தியப் பிரதேசத்தின் மால்வா எனும் பகுதியில்  உள்ள சில ஆலயங்கள் அதற்கு மாறாக உள்ளன.   மஹாபாரத யுத்தத்தில் வெற்றி பெற தமக்கு சக்தி கொடுக்க வேண்டும் என்பதற்காக பாண்டவர்கள் வந்து  வழிபட்டதான சக்தி ஆலயங்கள் சில நதிக் கரைகளில் உள்ளன என்ற செய்தி ஆச்சர்யமாக உள்ளது. அதில் ஒரு ஆலயம் உஜ்ஜயினியைத் தாண்டி நல்கேடா எனும் இடத்தில் நர்மதை நதிக்கரையில் உள்ளது. பாண்டவ சகோதரர்கள் வனவாசம் சென்று இருந்தபோது அவர்கள்  யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் எனில்  கொக்கு முகத்தைக் கொண்ட பகலாமுகிக்கு பூஜை செய்ய வேண்டும் என கிருஷ்ணர் அவர்களுக்குக் கூறியதினால் அவர்கள் யதுஷ்ராரின் தலைமையில் இங்கு வந்து கொக்கு ரூபத்துடன் இங்கு எழுந்தருளி இருந்த பகலாமுகியை பல காலம் பூஜித்தார்கள். அவளும் அவர்களது பூஜையை மனதார ஏற்றுக் கொண்டு அவர்கள் இழந்த நாட்டை மீண்டும் பெறுவார்கள் என்ற வரத்தை தந்ததும் அல்லாமல் அவர்களுக்கு எதிரிகளை அடக்குவதற்காக தனது சக்தியும் அந்த யுத்தத்தில் கிடைக்கும் என்று கூறினாள். அது போலவே அவர்கள் யுத்தத்தில் வெற்றி அடைந்ததும் கிருஷ்ண பகவான் கூறியது போலவே பகலாமுகிக்கு இங்கு ஆலயம் அமைத்தார்கள் என்று ஒரு புராணக் கதையும் நிலவுகிறது.


 கொக்கு முகம் கொண்ட பகலாமுகி
 
ஆகவே மகாபாரத காலத்தில் சில தெய்வ அவதார உருவங்கள்  இருந்துள்ளன என்பதாகவும் நம்ப இடமுள்ளது. இப்படிப்பட்ட மேலும் பல ஆலயங்கள் விக்ரமாதித்தன் ஆட்சியில் கட்டி உள்ளார்கள் என்றாலும், அந்த ஆலயங்களுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த தாந்த்ரீக சக்தி படைத்த சிலைகள் மகாபாரத மற்றும் இராமாயண காலத்தை சேர்ந்த  சிலைகள் என்பதினால் விக்ரமாதித்தன் அங்கெல்லாம் சென்று வழிபாட்டு உள்ளார் என்கிறார்கள். அதே சமயத்தில் மகாபாரதத்தில் கிருஷ்ணரை பிரதான கதாநாயகனாக, மஹா சக்தி மிக்க புருஷராக காட்டி உள்ளார்கள் என்றாலும் அவரையே தெய்வமாக யாரும் வழிபாடு செய்ததாகத் தெரியவில்லை. அதற்கான செய்திகளும் இல்லை.

மகாபாரத காலத்தில் ஹஸ்தினாபுரத்தை ஆண்டு வந்தவர் யுதிஷ்டர். அதே ஹஸ்தினாபுரத்தை பிற்காலத்தில் விக்கிரமாதித்திய மன்னனும் ஆண்டு வந்துள்ளார். அவர்களுக்கு இடையில் எழுபது மன்னர்கள் இருந்துள்ளார்கள். இந்த செய்திகளை கி.பி 1872 ஆம் ஆண்டை சேர்ந்த சில எழுத்துப் பிரதிகள் மூலம் 'வேதிக் பௌண்டேஷன்'என்பதை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பில் இருந்து அறிய முடிகிறது.  இதை எடுத்துக் காட்டுவதின் காரணம்  விக்கிரமாதித்தன் ஆண்ட காலத்தில் அவர் ஆண்ட பூமியில் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டு உள்ளன என்றாலும் அவற்றுள் இருந்த  சிலைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதே.  
 
 
வேதிக் பௌண்டேஷன்  பத்திரிகையில் 
வெளியாகி உள்ள எழுத்துப் பிரதி

ஆகவே யுதிஷ்டர் முதல் விக்ரமாதித்தியன் ஆட்சி காலத்துக்குள்ளாக அதாவது சுமார் எழுபது மன்னர்கள் ஆண்டு வந்திருந்த மொத்த 3000 ஆண்டுகளின் இடையில் உருவ வழிபாடு, சிலைகள்  பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டு  உள்ளன என்பது தெளிவாகிறது. இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஹஸ்தினபுரம் இந்தியாவின் வட பகுதி ஆகும். அந்தப் பகுதி முழுவதிலும் வழிபடப்பட்டு உள்ள தெய்வங்கள் பெரும்பாலும் பெண்ணினத்தை சார்ந்த சக்தி தெய்வங்கள் அதாவது  பார்வதி மற்றும் பார்வதியின் பலவிதமான அவதார தெய்வங்கள், ரூபங்கள் மற்றும் லிங்க உருவிலான சிவபெருமான் ஆவர். அபூர்வமாக மட்டுமே விஷ்ணுவின்  வழிபாடு இருந்துள்ளது. அதே சமயத்தில் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரின்  வழிபாடும்  சில இடங்களில் இருந்துள்ளது.

நிற்க, சற்றே  பின்னோக்கிப் பார்க்கும்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. மகாபாரத  காலத்தில் போரில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம் தந்ததாகவும், அதில் அனைத்து கடவுட்களின் உருவங்களையும் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் காட்டியதாக கூறுகிறார்களே. அப்படி என்றால் வேத காலத்துக்கு முற்பட்ட மகாபாரத யுத்த காலத்தில் பல கடவுட்களும் பல ரூபங்களில் இருந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது அல்லவா. அப்படி என்றால் அந்த காலத்தில் அவர்களைக் குறித்த செய்திகள் ஏன் கூறப்பட்டிருக்கவில்லை ?

மகாபாரத மற்றும் இராமாயண காலங்களிலும் வேத காலத்திலும்  உருவ வழிபாடு இல்லை என்கின்றார்களே, அப்படி என்றால் கிருஷ்ணர் காட்டியதாக கூறப்படும் விஸ்வரூப தரிசனங்களில் காட்டப்பட்ட அந்த ரூபங்களை யார் படைத்தது? அவற்றை யார் வணங்கி உள்ளார்கள்? அவர்களது ஆலயங்கள் எங்குள்ளன? புராணங்களின் கூற்றின்படி கிருஷ்ண அவதாரம் என்பது விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம் அல்லவா. அது அவர் கலியுகம் துவங்கியதும் எடுக்க இருந்த அவதாரம் அல்லவா. விஷ்ணுவின் எட்டு அவதாரங்களை அவர் ஏற்கனவே எடுத்து இருந்தார் என்றால்  பல தெய்வ அவதாரங்கள் கிருஷ்ணருக்கு முன்னிருந்த எட்டு அவதார காலத்திலும் இருந்திருக்க வேண்டுமே. அவை என்ன ஆயின ? அவற்றைக் குறித்த செய்திகள் ஏன் இராமாயண மற்றும் மகாபாரத காலத்தில் கூறப்பட்டு  இருக்கவில்லை? இவை அனைத்துமே நியாயமான கேள்விகளே. இந்தக் கேள்விகள் அனைத்துமே அர்த்தம் உள்ளவை. அதற்கான விளக்கம் இது.


இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது நான்கு யுகங்களை பிரும்மா படைத்தாராம். ஒவ்வொரு யுகத்துக்கும் குறிப்பிட்ட அளவில்  ஆயுள் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றில் படைக்கப்பட்ட உயிரினங்கள் எத்தனை என்பது குறித்து சரியான விளக்கங்கள் தரப்படவில்லை. பிரும்மா படைத்தது 84 லட்ஷ உயிரினங்கள் என்று கருட புராணத்தின் மூலம்  அறிகிறோம். பிறக்கும் எதற்கும் அழிவும் உண்டு என்பதே பிரபஞ்ச  தத்துவம். அதற்கேற்ப படைக்கப்பட்டவை அழிந்து கொண்டே இருக்க அதற்கு இணையாக புதுப் பிறவிகளும் புது யுகங்களில் தோன்றிக் கொண்டே இருந்தன. அந்த நான்கு யுகங்கள் சத்ய, த்ரேதா, துவாபர மற்றும் கலி யுகம். இந்த நான்கும் சுயன்று கொண்டே இருக்கும் சக்கரம் போல வந்து கொண்டே இருக்கும்.

விஷ்ணு பகவான் கிருஷ்ண பகவானாக  எடுத்த ஒன்பதாவது அவதாரம் துவாபர யுகத்தின் முடிவில்தான். ஒவ்வொரு யுகமும் முடிந்து (அழிந்து)அடுத்த யுகம் ஆரம்பிக்கும்போது அவற்றில் பழைய யுகங்களை சேர்ந்த நினைவுகளுடன் எவருமே இருக்க மாட்டார்கள்.  அனைத்தும் அழிந்து புது யுகம் மலரும். அனைத்து ஆத்மாக்களும் வெவேறான உடலுடன் பிறப்பு எடுக்கும். ஆகவே முந்தைய யுகங்களில் நடந்தவை எதுவுமே எந்த மனிதருக்கும் தெரியாது.  அது தெய்வ அவதாரங்கள் மட்டுமே  அறிந்த உண்மை ஆகும். அதனால்தான்  அந்தந்த புதிய யுகங்களில் தெய்வ தோற்றங்கள் மூலமே முந்தைய யுகங்களின் நிலைகளை அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு யுகத்திலும் தெய்வம் பல பல அவதாரங்களையும் தன்னுடைய சார்ப்பாக அனுப்பும். அவை அவதார புருஷர்கள்,  பூத கணங்கள் முதல் தேவதைகள், சில தெய்வீக மனிதர்கள், ரிஷி முனிவர்கள் போன்றவர்கள்.

இதனால்தான் முன்னர் இருந்த தெய்வங்களை  பற்றியோ அல்லது தெய்வீக அவதாரங்களைப் பற்றியோ புதிதாக பிறப்பு எடுத்த மனிதர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. விஷ்ணு பகவானின் முதல் எட்டு அவதாரங்களும் முதல் மூன்று யுகங்களில் முடிந்து விட்டன. அந்த யுகங்களின் முடிவோடு அந்த செய்திகளும் மறைந்தே போயின. அவற்றைக் குறித்த அனைத்து  செய்திகளும் புதிய யுகங்களில் தெய்வமே அனுப்பி இருந்த அவதார புருஷர்கள்,  பூத கணங்கள் முதல் தேவதைகள், தெய்வீக மனிதர்கள் மூலமும் ரிஷி முனிவர்கள் போன்றவர்கள் எழுதிய புராணங்கள் மற்றும் வாய்வழிச் செய்திகள் மூலமே தெரிந்துள்ளது. மேலும் அந்தந்த யுகங்களில்  இருந்த பலவும் பூமியிலே புதைந்து மறைந்து விட்டன.

மகாபாரத காலத்தில் ஒன்பதாவது அவதாரமாக வந்த கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம் தந்தார். ஆனால் அவர் அர்ஜுனனுக்கு வெளிப்படுத்தியதாக கூறப்படும் தெய்வங்கள் மகாபாரதம் மற்றும் இராமாயண காலத்தை சேர்ந்த  பிரும்ம, விஷ்ணு, சிவன், வினாயகர், நாரதர், வாயு, அக்னி, ஹனுமான், இந்திரன், நாகங்கள், மற்றும் பல்வேறு மாமுனிவர்கள், ரிஷி முனிவர்கள் போன்றவர்களே. எந்த புராணத்திலுமே கிருஷ்ணர் தனது விஸ்வரூப தரிசனத்தில் இன்னென்ன தெய்வ உருவங்களை வெளிப்படுத்தினார் என்பதான குறிப்புக் கிடையாது. அது மட்டும் அல்ல அவர் காட்டியதாக கூறப்படும் எதிலுமே எந்த பெண் தெய்வமும் கிடையாது. விஸ்வரூப தரிசன படங்கள் எதை வேண்டுமானாலும்  பாருங்கள்,   இந்த உண்மை புரியும்.

 ''பரப்பிரும்மனால் பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது முதலில் வெளிவந்த  தெய்வங்களும், கடந்து போன யுகங்களில் இருந்த பத்து அவதார தெய்வங்களும், ரிஷி முனிவர்கள் மற்றும் இராமாயண, மகாபாரத காலத்தில் இருந்த தெய்வங்களினால் படைக்கப்பட்ட வேறு சில முக்கிய தெய்வங்கள் போன்ற அனைத்து  தெய்வங்களும் ஒரே பரப்பிரும்மனின் அங்கங்கள். தாங்கள்  அனைவருமே  ஒரே ஆத்மனில் இருந்து வெளிவந்தவர்களே''  என்பதை கிருஷ்ண அவதாரத்தில்  விஸ்வரூபத்தைக் காட்டி அதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.

அது மட்டும் அல்லாமல் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை என்பதை வெளிப்படுத்தவே இராமாயண, மகாபாரத நிகழ்வுகள் நடைபெற்ற யுகங்களில் அந்தந்த நிகழ்வுக்கு ஏற்ற வகையில் வினாயகர், ராமர், ஹனுமான், நாரதர், கிருஷ்ணர் போன்ற கடவுட்கள் தோன்றினார்கள். பரப்பிரும்மனால், மும்மூர்த்திகள் மூலம் படைக்கப்பட்ட தெய்வங்கள் எத்தனை, அவர்களின் உருவம் என்ன, அவர்கள் எப்போது அவதரிப்பார்கள் என்பதை எல்லாம் மானிடர்களுக்கு மெல்ல மெல்ல வெளிக் காட்ட வேண்டும் என்பதற்காகவே அப்படி வெளிப்படுத்த இருந்த ரிஷி முனிவர்களையும்  கிருஷ்ணர் தன் விஸ்வரூப தரிசனம் மூலம் வெளிக் காட்டினார்.

அதுவரை இந்த உலகிற்கே தெரியாமல் இருந்திருந்த, முடிந்து போன யுகங்களில் இருந்த  தெய்வ உருவங்கள் கிருஷ்ண அவதாரம் மூலம் விஷ்ணுவினால் வெளிப்படுத்தப்பட அதன் பிறகே ரிஷிகள், முனிவர்களுக்கும் அந்தந்த தெய்வங்களின் தரிசனம் கிடைக்க அந்த உருவங்கள் அவர்களுடைய சீடர்கள் மூலம் மக்களிடையே வாய்மொழிச் சொல்லாக பரவத் துவங்க, அதன் மூலம் உருவ வழிபாடு உலகெங்கும் பரவத் துவங்கியது. பல்வேறு தெய்வ உருவங்களையும் நம்மால் பார்க்க முடிந்துள்ளது. இதில் கிராம தேவதைகள், பூத கணங்கள் மற்றும் அவதார தேவதைகள் என பலவும் அடக்கம். பிற்காலத்தில் சிற்ப சாஸ்திரக் கலை மூலம் அவை  மேலும் விரிவடைந்தது.
.............தொடரும் 

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 3

$
0
0
 
3
மகாபாரத காலத்தைப் போல அல்லாமல் இராமாயண காலத்திலும் சிவ வழிபாடுகள் இருந்துள்ளன. அதனால்தான் ராமபிரான் ராமேஸ்வரத்தில் வந்து கடற்கரையில் சிவபெருமானை பூஜித்ததான புராணக் கதைகள் உள்ளது.


இந்த வழிபாட்டில் ஒரு முக்கிய செய்தியை   கவனிக்க வேண்டும். சிவபெருமானை ராமபிரான் பூஜித்தது என்பது சிவபெருமானின் உருவத்தைக் காட்டும் சிலையை அல்ல. சிவபெருமானை பிரதிபலிக்கும் சிவலிங்கத்தை ராமபிரான் மண்ணினால் செய்து கடற்கரையில் பிரதிஷ்டை செய்து லிங்க வடிவிலான சிலையை பூஜித்தாராம். ஆனால் எந்த புராணங்களிலும் சிவபெருமானை வேறு எந்த உருவவிலும்  வழிபாடு செய்துள்ளதாக செய்திகள் கிடையாது. ராமபிரான் மட்டும் அல்ல  கிருஷ்ணர், ஹனுமான், விஷ்ணு, பிரும்மா, போன்ற பல தெய்வங்கள் கூட சிவபெருமானை லிங்க உருவில் பூஜித்ததான கதைகள் பல புராணங்களில் உள்ளன. அந்த தெய்வங்கள் அப்படி வழிபட்டதிற்கு  ஒரு அடிப்படை காரணம்   உண்டு.
 
''சிவபெருமானே பரப்பிரும்மன் எனும் சக்தியில் இருந்து வெளி வந்தவர். அவர் தனிப்பட்ட சக்தியைக் கொண்டு அவதரிக்கவில்லை. அவர் பரப்பிரும்மனின் சக்தியுடன் வெளி வந்தவர். அதே சமயத்தில்  அவர் பரப்பிரும்மனின்  ஆத்மா போன்றவர் ஆகும்.

பரப்பிரும்மம் என்பது சிவனும் சக்தியும் இணைந்த, ஆணும் பெண்ணும் இணைந்துள்ள உருவமே. ஒருவர் இன்றி மற்றவர் அல்ல என்பதை வெளிப்படுத்தும் தத்துவமே சிவலிங்க வடிவம் என்பது மட்டும் அல்ல. தேவலோகத்தினர் கீழிறங்கி பூமிக்கு  வந்து மனித குலத்துடன் வாழ்ந்து கொண்டு அவர்களை வழி நடத்திச் செல்லும்போது  அவர்களுக்கு மேலும் மேலும் சக்தி தேவையாக  இருக்கும். அப்படிப்பட்ட சக்தியை அவர்களுக்குள் (தேவபுருஷர்களுக்கு)கொடுக்க பரப்பிரும்மமான சிவபெருமானே தேவலோகத்தில் இருந்து கீழிறங்கி வந்து அவர்களுக்குள் புகுந்து அவர்களுக்கு சக்தியைத் தரும் தன்மையைக் காட்டுவதும் அதன் உருவமாகும். ஆகவே அனைத்து தெய்வங்களையும் வெளிப்படுத்திய அந்த பரப்பிரும்மத்தை (சிவலிங்கம்) வழிபட்டால் மட்டுமே மானிட உருவில் இருந்த தெய்வங்களின் சங்கடங்களை  அகற்றி  அவர்களுக்கு அந்த அவதாரத்தில் இன்னும் அதிக சக்தியை   அதே  பரப்பிரும்மம் தரும்'' .



ஆகவேதான் சிவபெருமானுக்கு என்று தனிப்பட்ட வேறு எந்த உருவமும் அந்த காலத்தில் தரப்பட்டிருக்கவில்லை. மகாபாரதத்திலும், ராமாயணத்திலும் காட்டப்பட்டுள்ள ராமபிரானோ, கிருஷ்ணரோ, அனுமானோ, சீதையோ யாரானாலும் சரி அவர்கள் யாருமே தெய்வமாக பூஜிக்கப்படவில்லை. முதலில் பூஜிக்கப்பட்டது  பரப்பிரும்மமான சிவலிங்க உருவில் இருந்த சிவபெருமானே. அனைத்து தெய்வங்களும் சிவனின் உள்ளேயேதான் அடக்கம், அனைத்து தெய்வங்களும் வெளி வந்தது பரப்பிரும்மனில் இருந்துதான் என்ற உண்மையை இது காட்டுவதினால்,  தாம் எந்த  ஆத்மாவில் இருந்து வெளிவந்தோமோ அந்த ஆத்மாவை வணங்கித் துதிப்பதே முறை என்று தெய்வங்கள் கருதியதினால், அந்த உண்மையை மனித குலத்துக்கு உணர்த்த வேண்டும் எண்ணியதினால்  சிவலிங்க வழிபாடு அந்தந்த யுகங்களில் அவதரித்த தெய்வ அவதாரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.

அனைத்து அவதாரங்களும், தேவதைகள், தேவ கணங்கள்   
மற்றும்  பிற கணங்களும் , தெய்வங்களும் பரமாத்மன் 
முதலில் படைத்த  சிவன் ,விஷ்ணு, பிரும்மா என்பவர்களில் 
இருந்து தோன்றியவையே

அடுத்தது விஸ்வரூப தரிசனம் காட்டப்பட்டது பற்றியது. அது நிகழ்ந்தது மகாபாரத யுத்தத்தில். அது வேத காலத்துக்கு முற்பட்ட காலம் ஆகும். யாகங்களை, வேள்விகளை நடத்திக் கொடுத்த மகாபாரத காலத்தை சேர்ந்த மா முனிவர்கள் மற்றும் ரிஷிகளின்  வழி வந்தவர்களே ஆரியர்கள் என்கிறார்கள். மகாபாரதம் நடைபெற்றது குருஷேத்திரத்தில். அது இருந்த இடமும் இந்தியாவின் வடக்கு பகுதியில்தான். ஆகவேதான் அங்கிருந்த ஆரிய வம்சத்தினர் வேத பாடங்களைக் கற்றரிந்தபோது, தெய்வங்களின் உருவ அமைப்பும் அவர்களுக்கு  கிடைத்துள்ளன.

இன்னும் ஒரு படி மேலே சென்று பார்த்தால் அகஸ்திய முனிவரைத் தவிர அனேகமாக அனைத்து மாமுனிவர்களும், ரிஷிகளும் வடநாட்டின் இமயமலைப் பகுதியில்தான் தவம் இருந்து தெய்வ தரிசனத்தைப் பெற்று உள்ளார்கள். அகஸ்திய முனிவர் கூட சில காலம் அங்குதான் இருந்துள்ளார். அவருக்கும் சிவபெருமான் திருமணம் மூலம் அங்கிருந்த பிற தெய்வங்களின் தெய்வ தரிசனமும்  கிடைத்தது. அவர் தென் பகுதிக்கு வந்தபோது முருகப் பெருமானின் தரிசனமும் கிடைத்தது. சிவபெருமானின் ஆணையின்பேரில்தான்  அவர் தென் பகுதிக்கு வந்தார்.

வேத காலத்தில் ரிஷி முனிவர்களுக்கு பெருமளவிலான தெய்வங்கள் - ஆண் பெண் என அனைத்து தெய்வங்களுமே- காட்சி தந்துள்ள கதைகளும் வட இந்திய நிலங்களை சுற்றியே அமைந்து உள்ளது.  அப்படி காட்சி தந்த தெய்வங்களும் பெரும்பாலும் சிவன், பார்வதி, பார்வதியின் பல அவதார ரூபங்களான தேவிகள், விஷ்ணு, கிருஷ்ணர் போன்றவர்களே. இதனால் இந்தியாவின் வட பகுதிகளில் பரவலாக சிவன் ஸ்தலங்களும், சக்தி ஸ்தலங்களும் அமைந்திருந்தன.

அதே நேரத்தில் ஆச்சர்யமாக இந்தியாவின் தென் பகுதி முதல் இலங்கை வரை என்று பார்த்தால் முருகன் தலங்களும், அவர் சம்மந்தப்பட்ட கதைகளும், குடும்பமும் மட்டுமே முன் காலத்தில் இருந்துள்ளன என்பதும் உண்மையாக உள்ளது. இதில் ஒரு சின்ன விளக்கம். தென் பகுதியின் சில இடங்களில் விஷ்ணு பகவானும் சம்மந்தப்பட்டுள்ளார் என்பதின் காரணம் அவர் பார்வதியின் சகோதரர் என்பதினால் அவரும் சிவபெருமானின் குடும்பத்தை சேர்ந்தவராகவே பார்க்கப்பட்டுள்ளார் என்பதே.

நிற்க, அனைத்தையும் பார்க்கும்போது இந்தியாவின் வட பகுதியில் உருவ வழிபாடு துவங்கக் காரணமாக இருந்துள்ளவர்கள் கி.மு 1500 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் தென் பகுதிக்கு வந்த ஆரியர்களே என்பதாகக் நம்ப வேண்டி உள்ளது. ஆரியர்களை இமய மலை அடிவாரத்தில் இருந்தவர்கள், அங்கிருந்து வந்தார்கள் என்கிறார்கள். இமய மலை சிவபூமி என்பதினால் அவர்கள் சைவ உணவை உண்பவர்களாக இருந்திருக்கலாம். சமிஸ்கிருத மொழியை பேசி வந்த ஆரியர்கள் வேத வழிமுறைகளைக் கொண்டவர்கள், காமதேனு என்பதாக பசுவை வணங்கியவர்கள், அஸ்வமேத யாகம் போன்றவற்றை செய்தவர்கள் என்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இன்னும் சிலரோ துவக்க கால இரான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆரியர்கள் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள்.  உண்மையில் ஆரியர்கள் யார் என்பதோ அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதோ சரிவரத் தெரியவில்லை. அது சர்ச்சைக்குரிய விஷயமாகவே உள்ளது. ஆனால் ஆரியர்களின் வருகைக்குப் பிறகே பல வகைகளிலான தெய்வங்களின் உருவ வழிபாடு வெளி வந்துள்ளது என்பதில் அநேகமாக அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்தக் கருத்துடன் இருக்கிறார்கள். இந்த செய்திகளின் அடிப்படையில் இனி அந்த தெய்வங்கள் எப்படி படிப்படியாக வளர்ந்து, அவற்றில் சில எப்படி குல தெய்வங்கள் ஆயின என்ற கதையைப் பார்க்கலாம்.

ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்தப் பின் தென் இந்தியப் பகுதிகளில் சேர, சோழ பாண்டிய மற்றும் சடவாகன மன்னர்கள் போன்றவர்கள் ஆட்சியில் இருந்துள்ளார்கள். தென் பகுதியை ஆண்ட மன்னர்களின் ஆட்சி காலத்தில் தெய்வ வழிபாடுகள் செழித்திருந்தன. ஆலயங்கள் எழுந்தன. பெரும்பாலும் தென் பகுதியில் இருந்தவர்கள் தமிழ் மொழியைப் பேசினார்கள்.


ஆரியர்களின் வருகையினால் வேத வழிமுறைகள் பரவத் துவங்க மெல்ல மெல்ல பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதவர்கள் என்ற பேதமும் தோன்றத் துவங்கிற்று. அன்று ஆண்ட மன்னர்களும் பிராமணர்களை ஆதரித்தார்கள். ஆலயங்களிலும் வேத மந்திரங்களிலான பூஜை முறைகள் மெல்ல மெல்லத் தோன்றலாயின. அதன் பிறகு அந்தணர்கள் இடையே கூட சைவ மற்றும் வைஷ்ணவர்கள் என்ற பிளவு தோன்றியது.  

பொதுவாக பலரும் ஆதிசங்கரர் சைவ மதத்தை சார்ந்த ஆச்சார்யார் என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அவர் சைவ மதத்தை மட்டும் சார்ந்தவர் அல்ல, மாறாக அப்போது இந்தியா மட்டும் அல்லாது பல இடங்களிலும் வேகமாக பரவி வந்திருந்த பௌத்த மற்றும் ஜைன மதங்களின் தாக்கத்தினால் இந்து மதம் நலிந்து விடக் கூடாது என்ற சிந்தனையில் பல பிளவுகளாக இருந்த இந்து மதத்தை சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம் என வகைப்படுத்தி அவற்றில் ஒற்றுமையை ஏற்ப்படுத்தி அவற்றின் மூலம் பல வகைகளிலான பக்தி போதனையை வலுப்படுத்த எண்ணினார். அதனால் அவருக்கு ஷண்மத ஸ்தாபனாச்சார்யர் என்று நாமகரணம் சூட்டி இருந்தார்கள்.

ஆதி சங்கரர் காலத்தில் இந்து மதத்தில் எழுபதுக்கும் அதிகமான பிரிவுகள்  இருந்ததாகக் கூறுகிறார்கள். அப்போது இந்து மதத்திலேயே அரசல்புரசலாக தனித்தனியே தோன்றி இருந்த சிவ- விஷ்ணு வழிபாடுகள், ஆதி சங்கரர் மற்றும் ராமானுஜர் என்ற இரு மகான்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலினால் பெரும் பிளவை அந்தணர்களிடையே (சைவ மற்றும் வைஷ்ணவ பிரிவிகளாக)தோற்றுவித்திருந்தன.  இத்தனைக்கும் ஆதி சங்கரர் எந்த விதத்திலுமே விஷ்ணுவை இரண்டாம் நிலைக் கடவுளாக கூறவில்லை. மாறாக விஷ்ணுவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குக் கூட பாஷ்யம் எழுதி உள்ளார். ஆதி சங்கரர் மற்றும் ராமானுஜருக்கு ஏற்பட்ட பிளவு கொள்கை சம்மந்தப்பட்டதே தவிர தனிநபர் விரோதத்தினால் ஏற்பட்ட பிளவல்ல.   வைஷ்ணவர்கள் பிரிவில் விஷ்ணுவும், விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களும் சேர்க்கப்பட்டன. சைவப் பிரிவிலோ சிவன், முருகன், மற்றும் சிவபெருமானின் அவதாரங்களும் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில் தமிழ் மன்னர்கள் தென் பகுதியை ஆண்ட காலத்தில் வடநாட்டில் ராமாயணம் மற்றும் மகாபாரத காலத்தில்  எப்படி ராமரும், கிருஷ்ணரும் மனிதப் பிறவிகளாக அவதரித்தார்களோ அப்படியே முருகப் பெருமானும் தென் பகுதியில் மனித உருவிலே அவதரித்தார். அப்படி வந்தவர் வனப் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு இருந்தார். முருகப் பெருமான் பார்வதி மற்றும் சிவபெருமானுக்கு மகனாக பிறந்தாலும் (அது தனிக் கதை)அவர்களது ஜீவ அணுக்களில் இருந்த அவருடைய பிறப்பு பூமியிலே நிகழ்ந்தது.  பூமியிலே பிறந்த அவர் சூரபத்மனை யுத்தம் செய்து அழித்தப் பின் வனப்பிரதேசத்தில் இருந்தார். அந்த வனப்பிரதேசம் இலங்கை பகுதியில் தமிழ்நாட்டை ஒட்டி இருந்த கதிர்காமத்தில் இருந்ததாக கூறினாலும் அதற்கான சரியான விளக்கம் இன்னும் தெரியவில்லை. ஆனால் அவர் வாழ்ந்திருந்தது இலங்கையில் இருந்த கதிர்காமத்தில் என்பதாக ஐதீகம் உள்ளது. அங்குதான் அவர் வள்ளி தேவியை காதலித்து மணம் புரிந்து  கொண்டாராம்.

வட பகுதியில் இருந்தவர்கள் ராமரையும், கிருஷ்ணரையும் வழிபட்டதைப் போல தென் பகுதியில் இருந்த மக்களினால் பூமியிலே அவதரித்து இருந்த முருகப் பெருமானும்  வணங்கப்படலானார். தென் பகுதியில் மட்டுமல்லாமல், தென் பகுதியின் கலாச்சாரத்துடன் சற்றே ஒத்து இருந்த ஒரிஸ்ஸா மற்றும் மேற்கு வங்கத்தில் கூட  ஸ்கந்த-கார்த்திகேய வழிபாட்டை ஆரியர்கள் கடைப் பிடித்து உள்ளார்கள்.  ஆனால் ஆரியர்கள் ஸ்கந்த-கார்த்திகேய வழிபாட்டை துவங்கியதற்கு வெகு காலம் முன்னரே தென் பகுதியில் இருந்த தமிழர்கள் முருக வழிபாட்டைக் தொடர்ந்து கொண்டு இருந்துள்ளனர். சங்க காலத்தில் குறிஞ்சி மலையில் இருந்த திணை எனக் கூறப்பட்ட நிலப்பரப்பில் முருகனே முதற் கடவுள் எனப் போற்றப்பட்டு வந்துள்ளார்.
......தொடரும்

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 4

$
0
0
 
4 
இதன் இடையே ஆரியர்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் வந்து அங்காங்கே தங்கலானர்கள்.  அந்தணர்களாக கருதப்பட்ட ஆரியர்கள்  இந்தியாவுக்குள்  வந்த காலத்தில் நகரங்கள் என்பதே மிகக் குறைவானதாகும். அனைத்து பகுதிகளுமே அருகருகில் இருந்த கிராமங்களாகவே இருந்தன. ரிக்வேத காலத்தில் கூட கிராமங்கள் ஒன்றுடன் ஒன்று அதிக தூரத்தில் அமையாமல் பாதுகாப்பிற்காக அருகருகிலேயே அமைந்திருந்தன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து உள்ளார்கள். அதுவே பிற்காலத்திலும் தொடர்ந்து கொண்டிருந்துள்ளது.

காலம் நகர்ந்து கொண்டே இருந்தாலும் பண்டை காலத்தில் நகரங்களை விட கிராமப் பகுதிகளே அதிகம் இருந்தன என்பதினால் பெரும்பாலான மக்கள் விவசாயத் தொழிலை மேற்கொண்டவாறு கிராமப்புறங்களிலேயே வசித்து வந்தார்கள். அந்த இடங்களில் அந்தணர்கள் மற்றும் அந்தணர்கள் அல்லாதவர்கள் என்ற இரு பிரிவினரும் வசித்து வந்தார்கள் என்றாலும் அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே பகுதியில், ஒன்றாக  சேர்ந்து வாழ்ந்திடாமல் தனித் தனி பிரிவாக ஒருவருக்கொருவர் தள்ளி இருந்த இடங்களிலேயே வசித்து வந்தார்கள். அதன் காரணமும் ஜாதி பேதம்தான். ஆனால் ஆலய வழிபாடு என்பதை பொருத்தமட்டில் கிராமங்களில் இருந்த அனைவருமே அந்த ஊரில் இருந்த ஆலயங்களில் ஏதாவது ஒன்றில் சென்று சேர்ந்தே வழிபாடு செய்து வந்துள்ளார்கள். ஆலய வழிபாட்டில் அந்தணர் மற்றும் அந்தணர் அல்லாதவர்கள் என்ற பேதத்தையும் வைத்துக் கொள்ளவில்லை.


கிராமவழிபாட்டுத் தலங்கள் 
அல்லது ஆலயம்  
இந்த நிலையில் காலம் செல்லச் செல்ல உருவ வழிபாடுகள் துவங்கிய பின்னர் அந்தணர்கள் மற்றும் அந்தணர்கள் அல்லாதோர் அவரவர்கள் வணங்கி வந்திருந்த தெய்வங்களைப் இரு பிரிவுகளாக பிரித்து வைத்துக் கொண்டு பூஜிக்கத்  துவங்கினார்கள். அதன் காரணமும் இதுதான்.  அந்தணர்கள் நெய்வித்தியமாகவும், வேண்டுதல் காணிக்கைகளாகவும், பிரசாதங்கள் என்ற பெயரிலும் பழங்களையும் அரிசியினால் செய்த உணவுகளையும் ஆலயங்களில் படைத்தார்கள். ஆனால் அந்தணர்கள் அல்லாதோர் தம் காணிக்கையாக அசைவ உணவை பிரசாதமாக படைத்ததும் அல்லாமல் மிருக பலிகளையும் தந்தார்கள்.

அதை ஏற்க மறுத்த அந்தணர்கள் மிருகபலி மற்றும் அசைவ பண்டங்களை காணிக்கைக் கொடுத்த ஆலயங்களுக்கு செல்வதை தவிர்க்கலானார்கள். சில கிராமங்களில் ஒரே ஒரு ஆலயம் மட்டுமே இருந்தால், அங்கு மிருகபலி மற்றும் அசைவ பண்டங்கள் படைக்கப்பட்டபோது அங்கு செல்வதை அந்தணர்கள் தவிர்த்தார்கள்.

அசைவ உணவையும் மிருக பலியையும் காணிக்கையாக அந்தணர்கள் அல்லாதோர் தந்ததற்கு அடிப்படைக் காரணம்  அவர்களின் உணவுப் பழக்கம்.  எப்படி அந்தணர்கள் தமது உணவுப் பழக்கத்தில் அனைத்து விதங்களிலான இறைச்சி மற்றும் முட்டை போன்றவற்றை உண்பதை தவிர்த்து வந்தார்களோ அது போல அந்தணர்கள் அல்லாதோரில் பெரும் பகுதியினர் இறைச்சி உணவை உண்பவர்களாக இருந்தார்கள். ரிக் வேத காலத்திலேயே பெரும்பாலான மக்கள் (அதில் ஆரியர்களும் உண்டு என்பதே உண்மை)மாமிச உணவுகளையே உண்பவர்களாக இருந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. அதன் காரணம் பசிக்கு உணவு வேண்டும் என்பதே.

அதே சமயத்தில் இரு பிரிவினரும் ஒன்று கலந்து பேசி அவரவர்கள் வழிபாட்டு நேரத்தை அந்தந்த ஆலயத்தில் வரையுறுத்துக் கொண்டார்கள்.  இதுவே  கிராமிய ஆலயங்களில் இரண்டு ஆலயப் பிரிவுகள் தோன்றக் காரணம் ஆயிற்று. மெல்ல மெல்ல அந்தப் பிரிவு தனித் தனி ஆலயங்கள் எழவும் காரணம் ஆயிற்று. இப்படியாக கிராம ஆலயங்கள் மிருக பலிகள் தரப்பட்ட ஆலயங்கள் மற்றும் மிருக பலிகள் தரப்படாத ஆலயங்கள் என இரு பிரிவினைகளாயின. மிருக பலி தரப்பட்டு வந்த, அசைவ உணவு பிரசாதமாக படைக்கப்பட்ட ஆலயங்களுக்கு அந்தணர்கள் செல்வதை முற்றிலும் தவிர்த்தார்கள். மிருக பலி தருவதை எதிர்க்கலானார்கள்.  அப்படிப்பட்ட ஆலயங்களுக்கு அந்தணர்கள் அல்லாதவர்கள் மட்டுமே சென்றார்கள்.

அந்தணர்கள் வணங்காத கிராம 
கோவில்களில் மிருக பலி தரப்பட்டது

ஆரியர்கள் வருகை தருவதற்கு பல காலத்துக்கு முன் தென் இந்தியப் பகுதிகளில் இருந்த பெரும்பான்மையினர் வனப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்திருந்தார்கள். அந்த காலத்தில் விளை நிலங்கள் இருந்த இடங்களில்தான் மக்கள் அதிகம் வாழ்ந்து வந்தார்கள். கட்டிடங்கள் அதிகம் கிடையாது. வனங்களில் கிடைத்தவற்றை உண்டு வாழ்ந்தவர்கள். வனப்பிரதேசம் என்றால் அடர்ந்த காடுகள் என்பதல்ல அர்த்தம். வெற்று நிலங்களை சுற்றி அமைந்திருந்த, அதிக மனித நடமாட்டம் அல்லாத இடங்கள், அடர்ந்த மரங்கள், செடி கொடிகள், ஆறு, குளங்கள் மற்றும் மணல் திட்டுக்களைக் கொண்ட இடங்கள்.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி அங்கெல்லாம் வாழ்ந்திருந்த மக்கள் காட்டில் கிடைத்ததையும், வயலில் விளைந்ததையும்  உண்டபடி வாழ்ந்து கொண்டு  இருந்தாலும், அவை  அவர்களுக்கு போதுமானதாக இல்லை. அதன் மூலம் நிலையாக உணவும் கிடைக்கவில்லை. உணவுகளை பாதுகாத்து வைத்திருக்கும்  வழிமுறைகளையும் அவர்கள் அறிந்திடவில்லை.   ஆகவே இயற்கையாகவே மிருகங்கள், பறவைகள் போன்றவை பிற மிருகங்களின் இறைச்சிகளை உண்பதையும், பாம்பு போன்றவை முட்டைகள் உண்பதையும் கண்டு தமது பசியை போக்கிக் கொள்ள தாமும் அவற்றை உண்ணத் துவங்கியபோது அதுவே வனப்பிரதேசத்தில் வசித்தவர்களின் உணவின் ஒரு பகுதியாக  மாறியது.

அதே நேரத்தில் அவற்றை உண்ணப்  பிடிக்காதவர்கள் பழங்கள், தானியங்கள், கனிகள் மற்றும் காய்கறிகளை சமைத்து உண்டார்கள். இப்படியாக அவரவர் உண்ணத் துவங்கிய உணவே அசைவம் மற்றும் சைவம் என்றாகி  அவரவர் வழிபட்ட தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட பிரசாதம் மற்றும் நெய்வித்தியத்திலும் இடம் பெற்றது.

சைவ உணவை உண்டவர்கள் சாத்வீக குணம் கொண்டவர்களாக இருக்க, வேட்டையாடி உணவை உண்டு வந்தவர்களின் குணம் மூர்கத்தனமாக இருக்க இந்த வேறுபாடு அவர்கள் மன நிலையை வெளிப்படுத்தி ஆலய வழிபாட்டிலும் புகுந்தது. இந்த பிரிவினையினால்தான் அந்தணர்கள் வணங்கிய தெய்வங்கள் சைவ தெய்வங்கள் அதாவது சாந்த தெய்வங்கள் எனவும் அந்தணர் அல்லாதோர் வணங்கிய தெய்வங்கள் அசைவ தெய்வங்கள் அதாவது யுத்த தெய்வங்கள் எனவும் கூறப்படலாயின.

அடுத்து ஆரியர், திராவிடர் என்ற பிரிவு காலப் போக்கில் நுழையத் தொடங்கி அந்த இரு பிரிவினரும் வணங்கத் துவங்கிய தெய்வங்கள்  தமிழ் தெய்வங்கள் மற்றும் ஆரியக் கடவுட்கள் என பார்க்கப்படத் துவங்க, அந்தணர்கள் வணங்கிய தெய்வங்கள் ஆரியர்களின் தெய்வம் எனவும், அந்தணர்கள் அல்லாதவர்கள் வணங்கிய தெய்வங்கள் திராவிட தெய்வங்கள் எனவும் ஆயின.

ஏற்கனவே கூறியது போல அந்தணர்களிலும்  சைவ மற்றும் வைஷ்ணவப் பிரிவும் தோன்றியது. பரப்பிரும்மம் என்பதில் இருந்த மும்மூர்த்திகள் மூன்று தனித் தனி தெய்வங்களாக கருதப்பட்டார்கள். முக்கியமாக அவர்களில் சிவனை ஆராதித்தவர்கள் சைவர்கள் எனவும், விஷ்ணுவை ஏற்றுக் கொண்டவர்கள் வைஷ்ணவர்கள் எனவும் கூறிக் கொண்டார்கள். பிரும்மாவுக்கோ தனித் தன்மை இல்லாமலேயே இருந்தது.

இப்படியான நிலையில்  முன் காலத்தில் ( தற்போதைய நிலைமை வேறு. அதை பின்னர் கூறுகிறேன்)அந்தணர்கள் ஆராதித்த தெய்வங்கள் சிவன், விஷ்ணு, வினாயகர், பார்வதி (அம்பாள் எனப் பொதுவாக கூறினார்கள். ஆனால் அதில் பார்வதியின் அவதாரமான மாரியம்மன் குடும்ப வகையினரை சேர்த்துக் கொண்டது இல்லை), மகாலஷ்மி, சரஸ்வதி, ராமர், ஹனுமான், போன்றவர்களாக இருக்க, அந்தணர்கள் அல்லாதவர்கள் வணங்கத் துவங்கிய தெய்வங்கள் வேடர்களுடன் வாழ்ந்திருந்து வேடர்களால் வளர்க்கப்பட்ட முருகன், பரசுராமன், ஐயப்பன், வள்ளி தேவி, பார்வதியின் அவதாரமான மாரியம்மன் போன்ற பல அம்மன்கள், ரேணுகா தேவி, போன்றவர்கள் ஆவர்.

அந்தணர்கள் வணங்கிய தெய்வங்களை அம்பாள் என்ற பெயரிலும், பிற சமூகத்தினர் வணங்கி வந்த அதே தெய்வங்களை அம்மன் என்றும் பெயரிட்டு உருவங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி அதிலும் அபிப்பிராய பேதத்தை உருவாக்கினார்கள்.  அந்தணர்கள் வணங்காத தெய்வங்களான முருகன், வள்ளி, ஐயப்பன், மாரி அம்மன்கள் போன்றவற்றை  திராவிடர்களின் தெய்வங்கள் என காலப்போக்கில் கருதலானார்கள். இத்தனைக்கும் முருகன் சிவபெருமானின் மகன், மற்றும் வள்ளி தேவி மஹாவிஷ்ணுவின் மகள் ஆவாள். ஐயப்பனோ சிவன் மற்றும் விஷ்ணுவின் இணைப்பால் பிறந்தவர். மாரியம்மன் பார்வதியின் அவதாரம் ஆவாள்.

பொதுவாக கிராமங்களில் இருந்தவர்களுக்கு அவர்கள் வசித்து வந்த பகுதிகளின் அருகிலேயே ஆலயங்கள் அமைந்து இருந்தன. அவற்றை ஆலயங்கள் என்று கூறமாட்டார்கள். அதை கிராமக் கோவில் என்று கூறுவார்கள்.  ஏன் எனில் அவை  பெரிய அளவில் கட்டப்பட்டு இருக்காது.  நான்கு பக்கமும் கல் மற்றும் மண்ணைக்  கொண்டு கட்டப்பட்ட சுவற்றுடன் அவற்றில் சில மேல்கூரைக் கூட இல்லாமல் காணப்படும். சில கோவில்களில் கதவு கூட இருக்காது.   ஒரே ஒரு சிறிய  அறையில், சுமார் மூன்று அல்லது நான்கு அடி உயரம்,  இரண்டு அல்லது மூன்று அடி நீல அகலம் கொண்ட இடத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தெய்வ சிலைக் காணப்படும். இல்லை என்றால் குத்துக் கல்கூட காணப்படும். அதில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் உருவங்கள் வரையப்பட்டு இருக்கும்.



அந்தக் காலங்களில் அநேகமாக பலரும் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்து வந்துகொண்டு இருந்ததினால் தாத்தா, மகன், பேரன் என அனைவருமே ஒரே குடும்பமாக வசித்து வந்தார்கள். அநேகமாக அனைவரும் ஒரே வீட்டில் அல்லது அந்த வீட்டில் அதிக குடும்பத்தினர் வசிக்க இடம் இல்லை எனில் அந்த இடத்தை சுற்றி அக்கம் பக்கத்தில் வாழ்ந்து வந்தார்கள். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல இடங்களில் வசித்து வந்தாலும் ஒரு பண்டிகை என்றால் அனைத்து குடும்பத்தினரும் வீட்டின் பெரியவர் வீட்டில் வந்து ஒன்று கூடி பண்டிகையை ஒன்றாகவே கொண்டாடுவார்கள். அன்று ஒன்றாகவே அனைவரும் கோவிலுக்கும்  சென்று வழிபடுவார்கள். அந்த பழக்கம் பரம்பரைப் பரம்பரையாக தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது. அதனால்தான்  ஒரு பரம்பரையின் மூத்தவர்கள் வணங்கி வந்திருந்த தெய்வமே பரம்பரை தெய்வமாயிற்று. அந்த வார்த்தையே மருவி குல தெய்வம் என்றாயிற்று. 

வேத காலத்தில் ஒவ்வொரு குடும்பங்களின் தலைவராகவும், அந்த குடும்பத்தின் தந்தையே இருந்தார். அவரை மீறி யாரும் செயல்பட மாட்டார்கள். தந்தைக்கு பணிந்து நடப்பதை மரியாதை குறைவாக யாரும் கருதவில்லை. குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் செய்போவரையும் கௌரவ குறைவாக நடப்பவர்களையும் தண்டிக்கும் நிலை இருந்ததே தவிர மற்றப்படி குடும்ப ஒற்றுமையில் பாச பிணைப்புகளே அதிகம் இருந்தற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தகப்பனாரின் மறைவுக்கு பின்பு அவரின் அடுத்த சகோதரரோ அல்லது மூத்த மகனோ குடும்ப தலைவனாக ஆக்கப்பட்டிருக்கிறார். மிகப் பெரிய கூட்டு குடும்பங்களாகவே இருந்த ஒரு குடும்பத்தில் தாத்தா, அவருடைய தாத்தா மற்றும் அவர்கள் வழி மகன்கள் குடும்பத்தினர் என அனைவருமே ஒரே தெய்வத்தை, ஒரு குறிப்பிட்ட கோவிலில்  வணங்கி வந்ததினால் நாளடைவில் அவர்கள் பரம்பரைக்கு அந்த ஆலய தெய்வமே குல தெய்வமாயிற்று.

இதனால்தான் பல குடும்பங்களும் வழிபட்டு வந்த குல தெய்வ ஆலயங்கள் கிராமங்கள், காட்டுப் பகுதிகள், மலை, வயில்வெளி, மற்றும் அதிக சாலை வசதி இல்லாத இடங்கள் போன்றவற்றில் இன்றும் உள்ளன. இதுவே ஒரு பரம்பரையின் குல தெய்வம் அமைந்த வரலாறு. இதற்கும் தெய்வ ரீதியாக காரணம் இல்லாமல் இல்லை. இதையே இயற்கை நியதியாக பிரும்மன்  படைத்திருந்தார். அது என்ன?
..............தொடரும் 

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 5

$
0
0
5
பிரும்ம நியதி புரிந்து கொள்வது கஷ்டமானது அல்ல. ஆனால் இந்தகால கணணி போல அவர் அந்த காலத்திலேயே சில கணக்குகளை வகுத்திருந்தே படைப்புக்களை ஏற்படுத்தி இருந்தார். அதாவது இன்னென்ன இடத்தில் இன்னின்ன தெய்வம், அல்லது தேவதை அல்லது தெய்வ கணம் அல்லது தெய்வமாக்கப்பட்ட ஆத்மாக்கள் அவதரிக்க வேண்டும். அந்த இடத்தில் தம்மை தெய்வமாக ஏற்றுக் கொண்ட பரம்பரையினருக்கு அருள் புரிந்து கொண்டும், ஆறுதல் தந்தவரும், அவர்கள் குலத்தைக் காத்துக் கொண்டும் இருக்க வேண்டும். அந்த இடத்தில் அந்த குறிப்பிட்ட தெய்வ மற்றும் தேவதைகளை வணங்க வேண்டிய பரம்பரையினர் அந்த தெய்வங்களை மதிக்காமல் வேறு ஏதாவது  தெய்வத்தையோ, அல்லது தேவதையையோ அல்லது தெய்வ கணம் அல்லது தெய்வமாக்கப்பட்ட ஆத்மாக்களையோ ஆராதித்தாலும் அங்கு பாத்யை  உள்ள தெய்வ அல்லது தெய்வ கணங்களைத் தவிர வேறு எந்த தெய்வமும்  அந்தப் பரம்பரையினருக்கு  அருள் புரியலாகாது என்ற கண்டிப்பான நியமங்கள் வரையுறுக்கப்பட்டு  இருந்தன. இதை மீறும் தேவகணங்களும், தெய்வங்களும் நாளடைவில் தமது சக்தியை இழக்கும். பெயரளவில் மட்டுமே தெய்வமாக தோற்றம் தந்தாலும் அவர்களுக்கு உண்மையான சக்தி இருக்காது.  இது பிரும்ம நியதியாகும்.


உதாரணமாக சேந்தமங்கலம் எனும் கிராமம் மேல் காணும் Sr No-1 என வைத்துக் கொள்வோம். அதில் 200 அல்லது 300 குடும்பங்கள் உள்ளது எனவும் பிரும்ம  நியதிப்படி அந்த கிராமத்தில்  ஐந்து தெய்வங்கள், நான்கு கிராம தெய்வம் அல்லது தேவதைகள், நான்கு ஆத்மாக்கள் அல்லது பூத கணங்கள் அவதரிக்க  வேண்டும் என்பது நியதி என்றும் உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். அந்த  அனைவருமே ஒரே காலத்தில் அங்கு  எழுந்தருள வேண்டும் என்ற நியதி   இருக்கலாம். ஒன்றன் பின் ஒன்றாக தோன்ற வேண்டும் என்ற நியதியும் இருக்கலாம்.  அவற்றில் ஏதாவது ஒன்று முதலில் அங்கு சென்று வசிக்கத் துவங்கலாம். அதன் பின் இத்தனைக் காலம் பொறுத்து இன்னொன்று, இத்தனைக் காலம் பொறுத்து இவை இவை, அடுத்து இத்தனைக் காலம் பொறுத்து இவை இவை என தெய்வங்கள் வரிசைக்கிரமமாக அவதரிக்க வேண்டிய நியதி வரையுறுக்கப்பட்டு இருக்கும்.  அதற்கேற்ப அவை அந்த எல்லைக்குள், அதாவது Sr No-1   என்பதில் எங்கு வேண்டுமானாலும் எழுந்தருளும். ஆனால் Sr No-1 எல்லையைத் தாண்டி அவை அடுத்த பகுதிக்குள்(Sr No 2, 3, 4)  அவதரிக்காது.  அவ்வப்போது Sr No 2, 3, 4 போன்ற இடங்களுக்குச் சென்று தன்னை சேர்ந்த பரம்பரையினர் அங்கிருந்தால் அவர்களை வழி நடத்தி வரலாம்.

அடுத்து அந்த கிராமமான Sr No-1 என்பதில் இத்தனை மக்கள்  இருப்பார்கள். அவர்களில் இன்னின்னாருக்கு இன்னென்ன தெய்வங்கள், கிராம தேவதைகள் அல்லது வீர மரணம் புரிந்தவர்களின் தெய்வகணமாகி விட்ட ஆத்மாக்களே குல தெய்வமாக அமையும் என்றெல்லாம் நியதி வைக்கப்பட்டு இருக்கும்.

 உதாரணமாக குப்புஸ்வாமி என்பவரின் பரம்பரையினருக்கு Sr No-1 என்பதில் உள்ள தெய்வம் No 8 என்பதே குல தெய்வமாக இருக்கும் என்பதான விதியாக இருக்கும். சின்னகருப்பன்  என்ற பரம்பரையினருக்கு Sr No-1 என்பதில் உள்ள தெய்வம் No 9 என்பதே குல தெய்வமாக இருக்கும் என்பதான விதி இருக்கும். அவர்கள்  Sr No-1 என்பதில் உள்ள மற்ற   தெய்வங்கள் அல்லது தெய்வகணங்களை வணங்கி வந்தால் கூட அவரவருக்கு விதிக்கப்பட்டு உள்ள குல தெய்வத்தைத் தவிர மற்ற தெய்வங்களுக்கு அவர்களுடைய ஏழேழு வம்சத்தினரையும் பாதுகாத்து அருள் புரியும் சக்தி இருக்காது. அவர்களுக்கு பொதுவான அருள் மட்டுமே தர இயலும். இதை விதிப் பயன் அல்லது பூர்வ ஜென்ம வினைத் தொடர்ப்பு என்பார்கள்.

இப்படியாக Sr No-1 என்பதில் உள்ள ஒவ்வொரு தெய்வமும், கிராம தேவதையும், வீர மரணம் புரிந்தவர்களின் தெய்வ கணமாகி விட்ட ஆத்மாக்களும்  அவரவருக்கு  தரப்பட்டுள்ள  பரம்பரையை பாதுகாக்கும், அருள் பாலிக்கும். அவற்றை மீறி அவை செயல்படாது.  அதுவே அந்தந்த தெய்வங்களின் சக்தி பீடம் ஆகும்.  இது மாற்ற முடியாத நியதியாகும்.


இந்த நிலையில் Sr No-1 என்பதில் உள்ள தெய்வங்கள், கிராம தேவதைகள் அல்லது வீர மரணம் புரிந்தவர்களின் தெய்வகணமாகி விட்ட ஆத்மாக்கள் தமது எல்லையான  Sr No-1ணை  தாண்டி Sr No 2, 3, 4 என்ற இடங்களில் எல்லாம்  சென்று தற்காலிகமாக வசித்தாலும்  அங்கு  அவற்றுக்கு பொதுவான அருள் தரும் சக்தி  மட்டுமே இருக்கும்.   மற்ற பரம்பரையை பாதுகாக்கும், அருள் பாலிக்கும் சக்திகள் இருக்காது.

சில நேரத்தில்  தெய்வங்கள், கிராம தெய்வம் அல்லது தேவதைகள்,  ஆத்மாக்கள் அல்லது பூத கணங்கள் இரண்டு அல்லது மூன்று இடங்களிலும் கூட சென்று தங்கி  (Sr No 1, 2 அல்லது Sr No 1, 2, 3 அல்லது Sr No 1, 3, 4 போன்ற இடங்களில்)அங்குள்ளவர்களுக்கு அருள் பலிக்கும் வகைக்கு ஏற்ப அவற்றின் படைப்புக்கள் இருக்கலாம். அதற்கேற்ப அவற்றுக்கு சக்தி தரப்பட்டு இருக்கும். இதைப் புரிந்து கொள்ள கீழ் காணப்படும் அட்டவணைப்  பார்க்கவும்.


இதை இப்படியாக விளக்க முடியும். ஒரு இடத்தில்  அவதரிக்க வேண்டிய தெய்வம் என்பதில் 1 முதல் 19 வகைகளில் உள்ள ஒரு சில தெய்வங்கள் மட்டுமே  என வைத்துக் கொள்வோம். அவர்களில் 8 என்ற தெய்வத்தின் அதிகார வரம்பு கிராமம்  No 1 என்பதில் உள்ள ஒரு ஆலயம் என்ற நியதி உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.  அங்குதான் அதனுடைய சக்தியும் இறக்கி வைக்கப்பட்டு இருக்கும்.  அந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில்  உள்ள மண்ணில்தான் அதன் அருள் புரியும் மூல சக்தியும் அடங்கி இருக்கும். அந்த தெய்வம் Sr No 1 எனும் இடத்தைத் தவிர Sr Nos  2,3,4 என மற்ற இடங்களில் உள்ள சில ஆலயத்தில் குடி இருந்தாலும்  அவற்றுக்கு அந்த ஆலயங்கள் சக்தி பீடங்கள் இல்லை என்பதினால் அங்கெல்லாம் அவற்றுக்கு   சங்கல்ப சக்தி மட்டுமே இருக்கும். அந்த சங்கல்ப சக்தி கொண்ட தெய்வத்தின் நிலை எவ்வாறாக இருக்கும் ?

உதாரணமாக  குப்புஸ்வாமி என்ற குடும்பத்தின் பரம்பரையினர்  கிராமம் Sr No 1 என்பதில் தெய்வம் Sr No 8 என்பதை வணங்கி வந்துள்ளார்கள். அதுவே அவர்களது குல தெய்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தது என்று வைத்துக் கொள்வோம். குப்புஸ்வமியின் பரம்பரையினர் சிலர் பிற்காலத்தில் பணிகள் காரணமாக   Sr No 1 என்பதைத் தவிர  Sr No 2 அல்லது Sr No 3 அல்லது Sr No 4 என்ற பல இடங்களில் சென்று வசித்து வந்தாலும் அவர்களது குல தெய்வ ஆலயம் அதன்  அதிகார வரம்பில் உள்ள கிராமம் 1 என்பதுதான்.  Sr No 2 அல்லது Sr No 3 அல்லது Sr No 4 என்ற இடங்களில்   அந்த 8 எனும் எண் தெய்வத்தின் ஆலயங்களும் இருக்கலாம். அவர்கள் Sr No 8 என்பதைத் தவிர Sr Nos 1,4,5,6,7 என்ற  தெய்வத்தையும் கூட வணங்கி வரலாம். ஆனால் அந்த குப்புஸ்வாமி  பரம்பரையின் குல தெய்வம் Sr No 8 என்பது  மட்டுமே.

இந்த நிலையில்  Sr No 2 அல்லது Sr No 3 அல்லது Sr No 4  கிராமங்களில் குடி இருக்கும் குப்புஸ்வாமி குடும்பத்தின்  பரம்பரையினர் நமது குல தெய்வம்தான்  அதே அவதாரத்துடன் இங்கு ஆலயத்தில் உள்ளதே என நினைத்துக் கொண்டு இனிமேல் நாம் ஏன் Sr No 1 என்ற இடத்துக்குச் சென்று அந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?  இங்கேயே நம் குல தெய்வ பிரார்த்தனை ஏன் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணலாம். தெய்வ நியதிப்படி அப்படி செய்ய முடியாது. அப்படி அவர்கள் அங்கெல்லாம் குல தெய்வ வழிபாடு  செய்தாலும் அந்த குல தெய்வம் அதை ஏற்காது. ஏன் என்றால் இடங்கள் Sr Nos 2,3,4 என்பவை அதன் சக்தி பீடங்கள் அல்ல. ஆகவே குப்புஸ்வாமி பரம்பரையினர் தமது குல தெய்வ பிரார்த்தனையை கிராமம் Sr No 1 எனும் இடத்தில் உள்ள தெய்வம் Sr No 8 என்பதின் ஆலயத்தில்தான் சென்று பிரார்த்தனையை செய்ய வேண்டும்.

அதற்கு மாறாக அவர்கள் குடியுள்ள கிராமங்களில் உள்ள அவர்களது குல தெய்வ அவதாரம் கொண்ட ஆலயத்திலேயே  குல தெய்வத்தை வணங்கித் துதிக்கலாமே என நினைத்து அவர்கள் வழிபட்டால் அதை அந்த குல தெய்வம் ஏற்க மறுத்து  அவர்களுக்கு எடுத்துரைக்கும் 'பக்தனே, இப்போதைக்கு உன்னுடைய  நலத்தை இந்த இடத்தில் நான் தற்காலிகமாக மட்டுமே பாதுகாக்க முடியும். ஆனால் என்னை குல தெய்வமாக கொண்டுள்ள நீ என்னை என்னுடைய மூல சக்தி பீட  ஆலயத்துக்கு வந்து எனக்கு கொடுக்க வேண்டிய பிரார்த்தனையை நிறைவேற்றினால் மட்டுமே அதை நிரந்தரமாக வைத்திருக்க முடியும்.  இல்லை எனில் இங்கெல்லாம் உள்ள உனக்கு பல தொல்லைகளும், தடங்கல்களும், தொல்லைகளும் வந்து சேரும்போது என்னால் உன்னை பாதுகாக்க முடியாது. உன்னுடைய பிற்கால குடும்பத்தினரான பிள்ளைகளும், பெண்களும் அவர்கள் குடும்ப வாழ்வில் மன அமைதியோடு இருக்க மாட்டார்கள்'. இதைதான் சங்கல்ப சக்தியுடன் செயல்படும் குல தெய்வத்தின் நிலை என்பதாக பண்டிதர்கள் கூறுகிறார்கள். குல தெய்வ பிரார்த்தனை என்பதை  வாழ்க்கையில் குறைந்த பட்ஷம்  நான்கு முறை முறை செய்தால் நல்லது என்பார்கள்.

அதாவது அந்தணர்களுக்கு  பூணூல் வைபவம், தத்தம் திருமணம் முடிந்ததும், ஆணோ அல்லது பெண்ணோ எதுவானாலும்  முதல் குழந்தைப் பிறந்து அதற்கு ஒரு வயது வரும்  முன்னர் அல்லது முதலாம் வயது தோன்றும்  நட்ஷத்திர மாதத்தில் (ஆண்டு  நிறைவு மாதத்தில்)அல்லது  முதல் குழந்தையின் முடி இறக்கும் வைபவத்தில் என்கிறார்கள். அதன் பின் அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு அது கட்டாயம் இல்லை. அந்தணர்கள் அல்லாதவர்களுக்கு பூணூல் வைபவம் இருந்தால் அந்த நேரம், திருமணம் முடிந்ததும், மற்றும் ஆணோ அல்லது பெண்ணோ எதுவானாலும் முதல் குழந்தைப் பிறந்து அதற்கு ஒரு வயது வரும்  முன்னர் அல்லது முதலாம் வயது தோன்றும்  நட்ஷத்திர மாதத்தில் (ஆண்டு  நிறைவு மாதத்தில்)அல்லது  முதல் குழந்தையின் முடி இறக்கும் வைபவத்தில் என்கிறார்கள்.  இன்னும் சில பண்டிதர்கள் பெண்ணுக்கு வயது வந்தப் பின் ஒரு வருடத்துக்குள் அவளை ஒருமுறை அழைத்துச் செல்ல வேண்டும் என்கிறார்கள். அப்படி அந்தந்த காலத்தில் செல்ல முடியாவிடில் அந்தந்த வைபவத்தில் குலதெய்வத்துக்கு காணிக்கையை முடிந்து வைத்து விட்டுச் செய்வது குல தெய்வத்தை திருப்திப்படுத்தும். அதன் பின் முடிந்தபோது அந்த காணிக்கையை எடுத்துக் கொண்டு போய் குல தெய்வ ஆலயத்தில் பிரார்த்தனையை முடித்துக் கொள்ளலாம் என்பார்கள். ( இது பற்றிய மேலும் பல விவரங்களை  பின்னர் எழுத உள்ளேன்)

அந்த கால கிராம ஆலயங்களில் தனி அர்ச்சகர்கள் அல்லது பண்டிதர்கள் இருக்க மாட்டார்கள். ஊரில் உள்ள அந்தணர் அல்லது வேறு யாராவது ஆலயத்துக்கு தினமும் காலையில் சென்று ஆலயத்தை சுத்தம் செய்து பூஜித்து வழிபடுவார்கள். அவர்களில் யார் முதலில் அங்கு செல்வார்களோ அவர்களே அந்த சிலைக்கு பூஜை செய்து விட்டுப் போவார்கள். எனவே வழிபாட்டு முறை எளிதாக இருந்து வந்தது. இதனால் கிராமங்களில் இருந்த ஆலயங்கள் ஆகம வழியிலான, ஆசார முறையிலான பூஜை முறைகளைக் கொண்டு அமைந்து இருக்கவில்லை.

ஆனால் அந்த நிலைமை வெகு காலத்துக்கு நீடித்து இருக்கவில்லை.  முன்னரே நான் கூறி இருந்தவாறு அந்தணர்கள் வணங்கி வந்திருந்த ஆலயங்களில் மெல்ல மெல்ல வேத முறையிலான வழிபாடுகளைத் துவக்கினார்கள்.  மந்திரங்களை ஓதினார்கள். ஆசாரங்களைக் கடைப் பிடித்தார்கள். உடை விஷயங்களில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள்.  அந்தணர்களைத் தவிர மற்றவர்களை சன்னதிகளில் நுழைந்து சுத்தம் செய்யக் கூட  அனுமதிக்கவில்லை.  அந்தணர்களைத் தவிர வேறு யாரையும் பூஜைகளை செய்ய அனுமதிக்கவில்லை. அப்படி பூஜைகளை செய்ய வேண்டும் என்றால் வேதம் படித்திருக்க வேண்டும், மந்திரங்களை ஓதத் தெரிந்து இருக்க வேண்டும், குளித்து விட்டு இன்னென்ன முறையில் உடையை அணிந்திருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள்.   இப்படி எல்லாம் மெல்ல மெல்ல மாறத் துவங்கிய நிலைமையினால் சில பிரச்சனைகள் எழுந்தன.


நான் முன் பாகம் 4 ல் குறிப்பிட்டு இருந்தபடி இப்படிப்பட்ட நிலைமை அந்தணர்கள், அந்தணர்கள் அல்லாதவர்கள் வணங்கிய ஆலயம், சைவ ஆலயம், அசைவ ஆலயம் மற்றும் ஆரியர்   ஆலயம் மற்றும்  திராவிடர் அல்லாதவர் ஆலயம் என்ற பிளவுகளை மேலும் அதிகமாக்கியது. கிராமங்களில் நிலவி வந்திருந்த சமூக ஒற்றுமைக் குறைந்து அந்தணர்கள் வாழ்ந்திருந்த பகுதிகள் அக்ரஹாரங்கள் எனக் கூறப்படலாயின. அந்தணர்கள் மற்றும் அந்தணர்கள் அல்லாதவர்கள் இடையே நிற்கும் இடத்தின் தூரம் கூட  குறைந்த பட்ஷம் இத்தனை இருக்க வேண்டும் என்றெல்லாம் தமகுத்தானே  வரையுறுத்திக்  கொள்ள அவரவர் இருந்த ஜனத் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப மற்றவர்கள் கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்து செல்லத் துவங்கினர். அந்தந்த கிராமங்களில் விலை நிலமற்ற அந்தணர்கள்  பிழைப்பை நாடி நகரங்களை நோக்கிச் செல்லத் துவங்கினார்கள்.

பல  கிராம ஆலயங்களில் இருந்த தெய்வங்களை அந்தணர்கள் மற்றும் அந்தணர்கள் அல்லாதவர்கள் என்ற இரு பிரிவினரும் தமது குல தெய்வமாகவே ஏற்றுக் கொண்டு கூட்டாக வணங்கி வந்திருந்த காலம் மாறி ஆலயங்களில் செல்வதை தவிர்த்து வரத் துவங்கிய பின் வழிப் வம்சத்தினர்  தமது குல தெய்வத்தை மறக்கலாயினர். அவர்கள் பின் வழி பரம்பரையினருக்கு அவர்களுடைய சொந்த ஊரும் தெரியவில்லை, அவர்களது குல தெய்வமும் யார் என்பது  தெரியாமல் போகலாயிற்று.  குல தெய்வம் என்ற கருத்தையே மறந்தார்கள்.   வேறு பல தெய்வங்களை வழிபடத் துவங்கி அந்த தெய்வங்களை தமது குல தெய்வம் போல வழிபடலாயினர். பின் நாட்களில் அவர்களுக்கு இன்னென்ன கிராமத்தில் இருந்த தெய்வங்களே தமது குல தெய்வம் எனத் தெரிய வந்தபோதிலும் அதை ஏற்க மனமில்லாமல் இருந்தார்கள். 

இந்த நிலையில் முக்கியமாக பாதிக்கப்பட்டது அந்தணர் சமூகத்தினரே அன்றி அந்தணர்கள் அல்லாதவர்கள் அல்ல.  அந்தணர் சமூகத்தினர் பலரும் படித்து விட்டு வெளி இடங்களில் வேலைத் தேடிச் செல்லத்  துவங்கியதும், அந்தக் குடும்பங்களின் பின் வழி வம்சத்தினர் குக்கிராமங்களில் மற்றும் நகர எல்லைகளில்  இருந்த ஆகம விதி முறையில் பூஜிக்கப்படாத ஆலயங்களில்  உள்ள தெய்வங்கள் நமக்கு எப்படி குல தெய்வமாக இருந்திருக்கும்  என்ற அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டார்கள். மந்திர பூஜைகளை செய்திராத அந்த தெய்வங்களுக்கு என்ன சக்தி இருக்கும், அந்தந்த தெய்வங்கள் இரண்டாம் நிலைக் கடவுட்கள் அல்லவா, தெய்வ கணம் மட்டும்தானே, இந்தக் கடவுளைவிட அந்தக் கடவுள் அதிக சக்தி கொண்டவர் அல்லவா என்ற எண்ணங்களைக் கொண்ட குதர்க்கம் மனதில் தோன்றியது. மந்திரங்கள் மட்டுமே சக்தியே ஏற்றும் வல்லமைப் படைத்தது என்பதாக எண்ணலானார்கள்.

அவர்கள் ஒன்றை நினைத்துப் பார்க்க மறந்தார்கள்.  ஆலயங்களில் பிளவு வெகு காலத்துக்கு பின்னரே தோன்றி உள்ளது. அதற்கு முன்னர் அனைவருமே ஒற்றுமையோடு இருந்தல்லவா வழிபாட்டு இருந்துள்ளார்கள். ஆலயத்தில் ஏற்பட்ட ஆரிய, திராவிட பிளவுகளும் வழிபாட்டு முறையினால் ஏற்பட்ட பிளவே. அவை  செயற்கையாக தோன்றிய பிளவே தவிர மற்றபடி எதுவும் இல்லை. தெய்வங்கள் அனைத்துமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. அவை படைக்கப்பட்டபோதே  பரப்பிரும்மனிடம் இருந்து அவை சக்தி பெற்று வந்தவை. ஆகவே அதிக சக்தி மற்றும் குறைந்த சக்தி பெற்றக் கடவுட்கள் என்ற பேதத்தை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்? (தெய்வங்களின் சக்தி , அவற்றின் தத்துவம் என்பது குறித்தும் விளக்கமான கட்டுரை ஒன்றை எழுத உள்ளேன்).

ஆகம மற்றும் ஆகம வழிமுறையில் இல்லாத ஆலயங்களுக்கு செல்வது அவரவர் விருப்பம். ஆனால் தெய்வங்களில் ஏன் வேற்றுமைப்படுத்திப் பார்க்க வேண்டும்? தெய்வங்கள் கிராம தேவதை என்ற பெயரில் இருந்தால் என்ன, தெய்வம் என்ற பெயரில் இருந்தால் என்ன, எந்த உருவத்தில் இருந்தால்தான் என்ன என்ற எந்த சிந்தனையுமே செய்யாமல் இருக்கத் துவங்கிய அந்தணர்கள் வணங்காத மனமில்லாத தெய்வங்களில் கிராம தேவதைகளான சுடலை மாடன், காத்தவராயன், பேச்சாயி, கருப்பஸ்வாமி, சீதளமாதா, காவேரியம்மன், ஐயனார், அங்காளம்மன், முனீஸ்வரன் மற்றும் தெய்வங்களில் வீரபத்திரர், பத்ரகாளி, மாரியம்மன்,  முருகன், வள்ளி தேவி போன்ற பல தெய்வங்களும் அடக்கம் ஆயின. இத்தனைக்கும் அவர்கள் அனைவருமே சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் படைப்புக்கள், அவதாரகணங்கள் . தத்தம் பரம்பரையினருக்கு அருள் புரிவதில் ஒரே அளவிலான சக்தியுடன் வெளியானவை.
........................தொடரும் 

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 6

$
0
0

6
ஒரு குலம் என்பது அந்தந்த வழிக் குடும்ப பாரம்பரியத்தைக் குறிக்கும். அந்த கால வம்சத்தினர் தமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை வைத்துக் கொண்டு இருந்தார்கள். தமக்கு காவல் தேவை, தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் போன்றவற்றுக்காக குல தெய்வ வழிபாட்டை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இருந்தார்கள். மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. குலம் தழைக்க வேண்டும், முன்னோர் சாந்தி அடையவேண்டும், பின்னோர் செழிக்க வேண்டும் என்று நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும் என்ற நம்பிக்கைகள் பரவி இருந்தன.
 
ஒவ்வொரு வம்சத்தினரும் தமது கிராமங்களில், காட்டுப் பகுதிகளில், நகரங்களை விட்டு வெகு தொலைவில் அவரவர்கள் குடி இருந்த பகுதிகளில் இருந்த ஏதாவது ஒரு இடத்தில் இருந்த ஆலயத்தில் சென்று குல தெய்வத்தை வழிபட்டார்கள். ஆனால் காலம் மாறிக் கொண்டே இருக்க  மெல்ல மெல்ல முன்னர் நான் கூறிய நிலைகளினால் குல தெய்வ வழிபாடுகளும்  மறையத் துவங்கி இருந்தன. அது கலி காலத்தின் ஆரம்ப நிலையையே குறித்தது.

ஆமாம் குல தெய்வ ஆலயங்கள் எப்படி கிராமங்களில் தோன்றின? அவற்றில் இருந்த தெய்வங்கள் எப்படி அங்கு வந்தன என்பதே அடுத்த முக்கிய கேள்வியாகும்.

புராணங்களைப் படித்தோம் எனில் பல தெய்வங்கள் தமக்கு ஏற்பட்ட சாபங்களை நிவர்த்தி செய்து கொள்ள பூமியில் பிறப்பு எடுத்து அங்கு வந்து அவரவர்களுக்கு தரப்பட்டு இருந்த விதிப்படி சிவனையோ, விஷ்ணுவையோ, இல்லை பிற கடவுளையோ வழிபாட்டு அவர்களுடைய தரிசனத்தைப்  பெற்று தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டு மீண்டும் பழைய தெய்வீக உடலை அடைந்தார்கள் என்ற கதைகள் பலவும் உண்டு. அவை உண்மையானவை. அப்படி தெய்வங்கள் பூமிக்கு வந்து மனித உருவிலே வாழ்ந்து தமது சாபங்களை விலக்கிக்  கொண்டப்  பின்னர் தாம் மனித உடலில் இருந்த அந்த உடலை பூமிக்குள் புதைய  வைத்து விட்டே சென்றன. ஆனால் அந்த மனித உடலைத் துறந்து சென்றபோது தமது உண்மையான உருவத்தை அதற்குள் பதிய வைத்து விட்டே சென்றிருந்தன என்பதினால் பூமிக்குள் புதைந்து கிடந்த தேவ மனிதர்களின் உடல்கள் சிதைந்து போகாமல் காலப் போக்கில் கற்களாகி விட்டன.


மனித உடல்களுக்குள் தேவ உடல்கள் புகுந்தபோது அந்த உடல்கள் தேவ உடல் அமைப்புடன் இருந்தது என்பதின் காரணம் ஒரு அச்சு போல அவை அந்த பாறைகளில் பதிந்தன. அதனால்தான் பின்னர் கற்களாக மாறிய சிலைகள் தேவ உருவத்துடனேயே அமைந்து இருந்தன. மக்களுக்கும் அந்தந்த தெய்வங்களின் உருவங்கள் இப்படி இருக்கும் என்பதும் தெரிய வரலாயிற்று.

இன்னும் சில தெய்வங்கள் பூமிக்கு வந்து வனப்பகுதிகளில் தவம் செய்தவாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்து சாப விமோசனம் அடைந்தன. தெய்வங்கள் குடி இருந்திருந்த உடல்கள் சீரழிந்து போவதில்லை என்பதினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒரே இடத்தில் அமர்ந்து  தவமிருந்த நிலையில் இருந்த அவர்களது உடல் அந்த நிலையிலேயே கல்லாகி விட அதனுள் இருந்த அவர்களது ஆத்மா மட்டுமே சாப விமோசனம் பெற்று தேவ லோகம் சென்றன. அதனால் தெய்வங்கள் எந்த நிலையில் அமர்ந்திருந்தனவோ அந்த அமர்ந்திருந்த நிலையிலான சிலைகள் பிற்காலத்தில் கிடைத்தன. அது அந்தந்த தெய்வங்களின் உருவ அமைப்பும் ஆயிற்று.

கல்லாகிக் கிடந்திருந்த இன்னும் சில தெய்வங்களின் உடல்கள்  வெள்ளங்கள் வந்தபோது நதிகளில் மூழ்கி மறைந்து இருந்தன. இப்படியாக கல்லாகி கிடந்த சிலை உருவிலான உடல்கள், பூமிக்குள் புதைந்து கிடந்த உடல்கள் மற்றும் நதிகளில் மூழ்கிக் கிடந்த உடல்கள் என அனைத்துமே காலப்போக்கில் பல யுகங்களிலும் அங்காங்கே வெளியில் வந்தன. மனிதர்களால் கண்டெடுக்கப்பட்டன. பிற்காலத்தில் அங்கெல்லாம் அந்தந்த தெய்வங்களின் கோவில்கள் எழுந்தன. இதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் புராணங்களில் காணப்படுகின்றன.

திருப்பதி  வெங்கடாசலபதி சரித்திரத்தில் 
பூமியிலே விஷ்ணு புதைந்து கிடந்தார் 
எனக் கூறப்பட்டு உள்ளது

திருப்பதி வெங்கடாசலபதி லஷ்மி தேவியைத் தேடி அலைந்து தன்னை மறந்து பூமிக்குள் புதைந்து  இருந்து தவமிருந்துள்ளார். அவரே சேஷாசலத்தில்  ஸ்வயம்புவாக சிலை உருவில் எழுந்தருளினார்.

ஆலகால விஷத்தை முழுங்கிய சிவபெருமான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ரிஷிகேசத்தின் நீலகண்ட மகாதேவர் மலைப்பிரதேசத்தில்  மயங்கி  சிவலிங்க உருவிலான அமைப்பில் கல்லாகிக்  கிடந்துள்ளார்.   அங்கு அவருடைய ஆலயம் எழுந்துள்ளது. சிவனுடைய தோற்றத்தைக் காட்டும் ஸ்வயம்புவான சிலைகள்  காணப்பட்டது இல்லை என்ற அதிசயத்தின் காரணம் அவரால் தனித்து இயங்க முடியாது என்பதினால் சிவனும் சக்தியும் இணைந்திருந்த உடல் அமைப்பான சிவலிங்க உருவிலேயே அவர் அனைத்து இடங்களிலுமே சிலைகளானார் என்பது ஐதீகம்.

இலங்கையில் கதிர்காமத்தில் இருந்த முருகனும் வள்ளியை மணந்து கொண்டப் பின் சில காலம் அங்கேயே தங்கி இருந்தப் பின்  பூமியில் மறைந்து போய் வேல் உருவில் நிற்க அங்கு அவரது ஆலயம் எழுந்தது. தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் அருகில் உள்ள திருப்பாற்கடலில் மஹாவிஷ்ணு ஸ்வயம்புவாக எழுந்துள்ளார்.

வடநாட்டின் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத்தில் உள்ள சிவலிங்கங்கள் பூமியில் இருந்து கிடைத்ததே. அது மட்டும் அல்லாமல் மாடு உருவில் இருந்த சிவபெருமானை பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமன் பிடித்து விட சிவபெருமான் அங்கேயே சிவலிங்கமாகி  விட்டார். மயிலையில் உள்ள மல்லீஸ்வரர் ஆலயத்திலும் ஸ்வயம்பு சிலைகளே உள்ளதென தல புராணம் மூலம் அறிகிறோம். கல்லாகிக் கிடந்த அகலிகை ராமரின் ஸ்பரிசத்தினால் மீண்டும் உயிர் பிழைத்து எழுந்தாலும், அவளது உடல் அங்கு கல்லாகிக் கிடந்தது.

இதைப்  போல பார்வதி, லஷ்மி போன்ற பல பெண் தெய்வங்கள் பல அவதாரங்களில் பூமியில் பல இடங்களில் மனித உருவில் தோன்றி தவமிருந்து சாப விமோசனம் பெற்று தேவ லோகத்துக்கு திரும்பிச் சென்றபோது அவர்களது உடல்கள் அவரவர்கள் இருந்த உருவத்திலேயே கல்லாகி பூமியிலே புதைந்து இருந்தன. சில அம்மன் சிலைகள் பாம்புப் புற்றில் கண்டெடுக்கப்பட்டன. அவை சிலைகளாகி கிடந்தன.

இப்படியாக ஆயிரக்கணக்கான தெய்வ சிலைகள் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டாலும் அவற்றில் சிலவற்றுக்கு மட்டுமே தனி ஆலயங்கள் எழுந்தன.  அவை பெரும்பாலும் கிராமப் பகுதியிலேயே இருந்தது என்றாலும் பின் காலத்தில் அந்த கிராமங்கள் பலவும் நகரங்களாகி விட்டன. ஆகவே கிராம ஆலயங்களாக இருந்தவை பல மன்னர்கள் ஆண்ட காலத்தில், அந்த மன்னர்கள் அவற்றை இன்னும் விசாலப்படுத்தி பெரிய பெரிய ஆலயங்களாக நகரத்துக்குள் எழுப்ப அவை நகர எழுந்த ஆலயங்களாயின. இப்படியாக  ஸ்வயம்புவாக எழுந்த சிலைகளில் அமைந்திருந்த ஆலயங்கள் பலவும் சில பரம்பரையினரின் குல தெய்வங்கள் ஆயின.

இன்னும் சில கிராம ஆலயங்கள் ஸ்வயம்புவாக எழுந்த சிலைகளினால், வீர மரணம் எய்திய கிராமத்தினரின்  சிலைகளினால், வீரச் செயல் செய்த பெண்களினால், கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்களின் சிலைகளினால்,  ஊரைக் காத்த வீரர்களின் சிலைகளினால், தெய்வமாகி விட்டவர்களின் சிலைகளினால் மற்றும் அகால மரணமடைந்தவர்களின் சிலைகளினால் உருவாக்கப்பட்டு அவை அந்தந்த கிராமத்தினருக்கு காவல் தெய்வமாக அமைந்தப்பின் சில காலம் பொறுத்து  தேவ கணமாக மாறிய அவை சிலரது வம்ச குல தெய்வமாக அமைந்து விட்டிருந்தன.

சில கிராமங்களில் முந்தைய நூற்றாண்டில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனிக் கோயில்  அமைக்கப்பட்டு இருக்கும். அதையே அவர்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள். உதாரணத்துக்கு சில குல தெய்வ ஆலயங்களை கீழே தந்துள்ளேன்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஊர் செட்டிமல்லன்பட்டி என்ற ஊரில்  இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்தை  சேர்ந்தவர்கள்  வழிபடும் குல தெய்வ ஆலயமான  துர்க்கை அம்மன் கோயில் உள்ளது .

தமிழ்நாடு, கரூர் மாவட்டத்தில், கரூர் நகரத்திற்கு மேற்கே வாங்கல் என்னும் ஊரில் உள்ளது கொங்கு வேளாளர் சமுதாயத்தின் குல தெய்வ ஆலயமான  புதுவாங்கலம்மன் கோவில்  என்பது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள தாமரைக்குளம் எனும் ஊரில் வாணியர் இனத்தவர் குல தெய்வமாக வணங்கும்  சீலக்காரியம்மன் கோயில் உள்ளது. அந்த ஆலயத்தில் சீலக்காரியம்மன் மூல தெய்வமாக இருக்க, பத்ரகாளி, மாரியம்மன், கணபதி, முருகன், பைரவர் போன்ற தெய்வங்களும் வணங்கப்படுகின்றன. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த பெண்கள் இறந்த கணவன் உடன் அழிக்கப்படும் சிதையில் உடன்கட்டை ஏறி உயிர்விடும் வழக்கம் இருந்து வந்தது. இப்படி உடன்கட்டை ஏறிய சில பெண்கள் தெய்வங்களாக இருந்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுவதாக ஒரு நம்பிக்கை அன்றைய மக்களிடையே இருந்து வந்தது. அப்படி உயிரைத் துறந்த பெண்கள்  தம்மைக் காக்கும்  தெய்வங்களாக ஏற்கப்பட்டார்கள். அவர்கள் கிராம தெய்வங்கள் ஆயினர். அப்படி தெய்வமானவளே   சீலக்காரியம்மன் என்கிறார்கள்.  சில பிரிவு நாடார்கள் மற்றும் பிள்ளைமார்களும்  அவளை தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.  சீலக்காரிக்கென தனியாக சிலை எதுவுமின்றி அவள் இறந்த போது அணிந்திருந்த ஆடை, அணிகலன்களை ஒரு பெட்டியில் வைத்து அடைத்து அதையே தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் சலுப்பபட்டி கிராமத்தில் உள்ள அக்கினி வீரண்டாள் கோவில் என்பது  அகமுடையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ள கோயிலாகும். பதினேழாம் நுற்றாண்டின் இறுதியில் சாப்டூர் பாளையக்காரர் படையில் இருந்தவாறு எதிரிகளுக்கு எதிராக வீரப்போர் புரிந்து வீர மரணம் அடைந்த  ஒரு தளபதியின் மனைவி வீரக்காள் என்பவர் பாளையக்காரரிடத்தில் சந்தனக்கட்டையை பெற்று தீ மூட்டி அக்கினியில் குதித்து தன் உயிர் நீத்ததாகவும், ஆனால் அவரது சேலை மட்டும் தீயில் எரியவில்லை என்றும் அதனால் அவளை அக்கினி வீரண்டாள் எனப் பெயரிட்டு தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளார்கள் என்கிறார்கள். 

அதைப் போல ராஜ கம்பளம் சமூகத்தினரின்  குல தெய்வ ஆலயமான சோலை சாமி ஆலயம் என்பது  தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள  எப்போதும் வென்றான் எனும் கிராமத்தில்  உள்ளது. அங்குள்ள  தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் சமூகத்துக்கும் அதுவே குல தெய்வ ஆலயமாம்.

தொட்டிய நாயக்கர் எனும் இனத்தவரால் வழிபடப்படும் குல தெய்வமே ஜக்கம்மா தேவி என்ற தெய்வம். அவள் போயசம்மா, எல்லம்மா, ஜக்கும்மா, போலேரம்மா, பொம்மம்மா போன்ற பெயர்களினால் அழைக்கப்படுகிறாள். அவளை குல தெய்வமாக ஏற்று இருந்த மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனும்  ஒருவராவார். 

பெரியாண்டிச்சி எனும் பெண் தெய்வம்   தமிழ்நாட்டில் வன்னியர்களில் ஒரு பிரிவினரால் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும்.  சேலம் மாவட்டத்திலும், தருமபுரி மாவட்டத்திலும் அதிகமாக பெரியாண்டிச்சி கோயில்கள் உள்ளன.

இப்படியாக பல்வேறு இடங்களிலும் பல்வேறு சமூகத்தினரின் குல தெய்வமாக உள்ள கிராம மற்றும் நகர ஆலயங்கள் உள்ளன. அவற்றில் சில  ஆகம வழிமுறையிலான பூஜை முறைகளைக் கொண்டவை.  சிலஆகம வழிமுறையிலான பூஜைகளைக் கொண்டிருக்கவில்லை. சில ஆலயங்களில் பல்வேறு ஆதீனத்தார்களின் முயற்சியினால் தமிழ் மொழியிலான மந்திரங்களை ஓதி பூஜைகள் செய்யப்படுகின்றன.  இன்னும் சிலவற்றில் வேத பாடங்களைக் கற்றறிந்த அந்தணர் மற்றும் அந்தணர்கள் அல்லாதவர்கள்  அர்ச்சகர்களாக இருந்தவாறு  பூஜைகளை செய்கிறார்கள்.
..........தொடரும்

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 7

$
0
0
7
குலதெய்வ வழிபாட்டில் பல்வேறு தெய்வங்கள் உள்ளன. அவற்றில் ஆண்  மற்றும் பெண் தெய்வங்கள் என்று பார்த்தால் ஆண்களை விட பெண் தெய்வங்களே  அதிகம் உண்டு.  ஆண்களை விட பெண் தெய்வங்களில் அதிக அவதார தெய்வங்கள்  உண்டு. அதன் காரணமும் புராணங்களில் இருந்து அறிந்திடலாம். எந்த ஒரு யுத்தத்திலும் ஆண் தெய்வத்தை விட அதிகமாக யுத்தங்களில் பங்கேற்றவை பெண் தெய்வங்கள் ஆகும். தேவலோகத்தை துன்புறுத்தி வந்த, ரிஷி முனிவர்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்திருந்த பல அரக்கர்களையும் அசுரர்களையும் அழித்தது பெண் தெய்வங்களே. அவை பல ரூபங்களை எடுத்து யுத்தம் செய்துள்ளன. அதன் காரணம் ஆண்  தெய்வங்களை விட பெண் தெய்வங்கள் அதிக சக்தி வாய்ந்தவை என்பதாகும். யோக சக்தி நிறைந்தவை. மாந்த்ரீக சக்தி கொண்டவை. இதன் காரணம் பரப்பிரும்மனின் மூல சக்தியே பெண் சக்தியாகும். அதுவே ஒரு தாயாரைப் போல படைப்பைக் கொடுக்க வல்லது என்பது பரப்பிரும்ம  தத்துவம்.

இதற்கான உதாரணங்கள் காளி தேவி, மஹிஷாசுர மர்தினி,  தசவித்தியாவின் பத்து தேவிகள், சப்த கன்னிகைகள்,  அஸ்வாரூடா தேவி,  துர்க்கை, ஜ்வாலமுகி, சின்னமஸ்தா, சாமுண்டா, வைஷ்ணவி போன்றவை. அறுபத்தி நான்கு யோகினிகள் என்ற தந்திர மந்திர சக்தி படைத்த தெய்வங்களும் யுத்தங்களில் பங்கேற்றுள்ளர்கள். அவர்கள் ஆலயம் ஒரிஸ்ஸா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ளது. அதனால்தான் குல தெய்வங்களிலும், கிராம தெய்வங்களிலும் அதிக பெண் தெய்வங்கள் உள்ளதைப் பார்க்கலாம்.
 

சிவன் என்று பார்த்தால், அவருக்கு நூற்றுக்கணக்கான பெயர்கள் மற்றும் அவதாரங்கள் இருந்தாலும் கூட உருவம் எனும்போது சிவலிங்கம், தத்தாத்திரேயர், ருத்திரன், பைரவர், தக்ஷிணாமூர்த்தி  போன்ற மிகக் குறைந்த அளவிலான உருவங்கள் மட்டுமே உண்டு. ஸ்வேடஸ்வதார உபநிஷத் என்பதில் சிவபெருமானுக்கு நான்கு அவதாரங்கள் மட்டுமே உள்ளதாக கூறப்பட்டு உள்ளது  என்றாலும் அவருக்கு பத்தன்பொது (19)  அவதாரங்கள் உள்ளன என்று பிற நூல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவருக்கு உருவம் எனும்போது மேல் கூறப்பட்ட ஐந்து ரூபங்களே பூஜிக்கப்படும் உருவில் உள்ளன.   அது போல விஷ்ணுவின் ரூபமும் தசாவதார  உருவங்களைத்  தவிர  ராமர், கிருஷ்ணர், வெங்கடசலபதி, நரசிம்மர் போன்றவர்களே மனதில் வருவார்கள்.

 ஆனால்  பெண் தெய்வங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பார்வதியின் அவதாரமே லஷ்மி மற்றும் சரஸ்வதி என்று கூறப்பட்டாலும் பார்வதியின் பல உருவங்களும், ரூபங்களும், அவர் உடலில் இருந்து வெளிவந்த சக்தி தேவிகளும்   அங்காள  பரமேஸ்வரி, மாரியம்மன்கள், தச வித்யாவில் காணப்படும் பல ரூபங்களைக் கொண்ட தேவிகள், காளி  தேவி, துர்க்கை, மஹிசாசுரமர்தினி, சாமுண்டா, கோலவிழி அம்மன், முண்டைகண்ணி அம்மன், சயயபுரம் அம்மன், அகிலாண்டேஸ்வரி, பச்சையம்மன், பச்சைவாழியம்மன், லலிதாம்பிகை என நூற்றுக்கணக்கான உருவங்களைக் கூறலாம்.  எந்த ஒரு பெண் தெய்வத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் பெரும்பாலும் பார்வதியின் அவதாரங்களாகவே இருக்கிறார்கள். 

பார்வதி தேவியின் பல்வேறு அவதாரங்கள் , கணங்கள்

விஷ்ணு  புராணம் மற்றும் தேவி பாகவதம் போன்றவை மனுவின் வாழ்வும் அவருடன் படைப்பெடுத்த அனைத்து தேவ கணங்களும் மடிந்து புதிய பிறப்பு எடுப்பார்கள் என்பதாகக் கூறுகின்றன. அதன்படி பிரும்மாவே பிறந்து, அழிந்து, மீண்டும் பிறப்பு எடுப்பவராம். நான்கு யுகங்களே ஒரு சதுர யுகம் என்பதாகும். அப்படியாக 71 சதுர்யுகம் முடிந்ததும் ஏற்படும் பிரளய காலத்தில் பிரும்மாவும், அவருடன் படைப்பு பெற்ற அனைத்து தேவ கணங்களும், அதில் உள்ள தேவலோக அதிபதியான பன்னிரண்டு பிறவிகள் எடுத்திருந்த இந்திரன்  உட்பட அனைவரும் அழிவார்கள், மறு பிறப்பு எடுப்பார்கள் என்கிறது. இது எடுத்துக் காட்டுவது என்ன புரிகிறதா?


மீண்டும் மீண்டும் பரப்பிரும்மம் படைப்பை எடுப்பதில்லை, அவரால் பிறப்பிக்கப்பட்ட பிரும்மா மட்டுமே மரணத்தை அடைகிறார்.  பிரும்மாவினால் படைக்கப்பட்ட கடல்  பிரளயத்தை ஏற்படுத்தும். அந்தப் பிரளயம்தான் அவருக்கு மரணத்தை சம்பவிக்கின்றது என்பதினால் பிரளயத்தைத் தரும் கடலும் அழியவில்லை, பூமியும் அழியவில்லை.  அனைத்து தேவலோகப் படைப்புக்கள்  மட்டுமே அழியும் என்பதில் இருந்து அந்த பிறப்புக்கள் எதோ ஒரு உருவில் இருந்து அழிந்துள்ளன என்பது புரியும்.  அவை யுக யுகமாக கல்லாகிப் போய் புதைந்து கிடக்க,  பின்னர் வந்த யுகத்தில் அவை கண்டெடுக்கப்படுகின்றன, வழிபடப்படுகின்றன. அவையே தெய்வங்களுக்கு பல்வேறு யுகங்களில் இருந்த உருவங்களைக் காட்டின. மீண்டும் யுக முடிவில் மறைகின்றன.  இது வண்டிச் சக்கரம் போலத் தொடர்கின்றன.

அவை எப்படி வெளித் தெரியலாயின? ஒன்று தாமாகவே பூமியில் இருந்து வெளி வந்து அமர்ந்தன. இல்லை யாராவது ஒருவர் கனவில் வந்தோ, நேரில் தோன்றியோ தான் இன்னென்ன இடத்தில் உள்ளதாக தெரிவித்து அவர்கள் மூலம் கண்டெடுக்கப்பட்டன? இல்லை ரிஷி முனிவர்கள் மூலம் தெரிய வந்தன.   இதைக் குறித்து  ரஹஸ்யஸ்துதி என்ற நூலில்  பிரும்ம ரிஷி நாரதருக்கு  ஸ்ரீமான் நாராயணன் கூறியதான கதை உள்ளது என்று சில பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

பல செய்திகளும் பரம்பரை பரம்பரையாக கூறப்பட்டு வந்துள்ள வாய்வழி செய்திகளாகவே கதைகள் மூலம் கூறப்பட்டு வருகின்றன. அதன் காரணம் அந்த காலத்தில் எழுதுகோல் மற்றும் சாதனங்கள் இருந்திடவில்லை. சில வாய் மொழி செய்திகள் மன்னர்கள் ஆண்ட காலத்தில் கல்வெட்டில் செதுக்கப்பட்டு உள்ளன. அவற்றைத் தவிர ஓலைகளில் எழுதப்பட்டிருந்த பல செய்திகளும் பல நூல்களும் அழிந்து விட்டதும் அவற்றின் இன்னொரு காரணமாக இருக்கலாம். இப்படியாக புராணக் கதைகளைக் கொண்ட பல அற்புதமான படைப்புக்கள் மற்றும் செய்திகள் அதிசயமாக இலங்கையில் இருந்துள்ளன. அதன் காரணம் தெரியவில்லை.  முக்கியமாக சிவன் மற்றும் முருகனைக் குறித்த புராணங்கள் அதிகமாக இலங்கையில் காணப்படுகின்றன.  ஆனால் அவற்றில் பல நூல்கள் நூலகங்களில் கூட கிடைப்பது  இல்லை.
 
நாரத முனிவருக்கு விஷ்ணு 
பகவான் அருளுரை

அந்த காலத்தில் எல்லாம் ஆலயம் என்பது தற்கால ஆலயங்களைப் போல பெரிய கோபுர மற்றும் கட்டிட அமைப்பில் அமைந்திருக்கவில்லை. தெய்வங்கள் மரங்களின் அடியில் திறந்த வெளியில் சிலை வடிவிலோ அல்லது ஏதாவது உருவ அமைப்பிலோ இருந்துள்ளது. அவற்றை இன்ன தெய்வம் என கற்பனை செய்து கொண்டு (சிலருக்கு சாமி ஆடுவதில் இப்படியான எண்ணம் வந்துள்ளது) வழிபட்டு வந்துள்ளார்கள். இல்லை என்றால் யார் மூலமாவது இன்ன, இன்ன தெய்வம் இங்கு குடி உள்ளது என்ற செய்தி பரவி அந்த சிலை வடிவே அந்த தெய்வத்தின் வடிவு என்றும் நம்பப்பட்டு அதுவே குல தெய்வத்தின் வழிபாட்டுக்குரிய இடம் எனவும் ஆயிற்று. அப்படி அவர்கள் வழிபட்ட இடங்கள் பின்னர் சிறு வழிபாட்டுத் தலங்களாக உருவெடுத்தன.

உதாரணத்துக்காக  கூற வேண்டும் என்றால் இதே பின்னணியில்தான் எங்கள் குல தெய்வமான சித்தாடி காத்தாயி அம்மனின் கதையும் உள்ளது.   நன்னிலம் எனும் கிராமத்தின் அருகில் உள்ள சித்தாடி எனும் கிராமத்தில் ஓடிய முடிகொண்டான் எனும் நதியில் மிதந்து வந்த வள்ளி தேவியான காத்தாயியின் சிலை ஒரு முனிவருக்குக் கிடைக்க அவர் எழுப்பிய மரத்தடியில் இருந்த வழிபாட்டு இடம் இன்று பெரிய ஆலயமாகிவிட அந்த ஆலயத்தில் எழுந்தருளி இருக்கிறாள் வள்ளி தேவி. அவளே சித்தாடி கிராம மக்களுக்கு குல தெய்வமானாள். ஒரு காலத்தில் அந்த கிராமத்தில் மற்றும் அதை சுற்றி இருந்த இடங்களில் குடியிருந்தவர்கள் அந்த காத்தாயி அம்மனை குல தெய்வமாக வைத்துக் கொண்டு வழிபாட்டு வந்துள்ளார்கள். அது பரம்பரைப் பரம்பரையாக தொடர்கிறது.

சித்தாடி கிராமத்திலும்  மற்றும் அதன் அக்கம்பக்கத்திலும்  பண்டைய காலத்தை சேர்ந்த சில  காத்தாயி அம்மன் ஆலயங்கள் உள்ளன. இது  எடுத்துக் காட்டுவது என்ன என்றால் விஷ்ணு பகவானின் புதல்வியான  சுந்தரவல்லி எனும் வள்ளி தேவியானவள் முருகனை மணக்க வேண்டும் என்பதற்காக அந்த இடத்து பூமியில் வந்து தவமிருந்து  சாப விமோசனம் பெற்று இருக்கிறாள்.  அதனால்தான் அவள் கல்லாகிக் கிடந்த சிலை, நதியில் மூழ்கிக் கிடந்துள்ள சிலை பின்னர் அங்கேயே கிடைத்து, எங்கே அவள் தவம்  இருந்திருந்தாளோ  அதே இடத்தில்  அமைந்த ஆலயத்தில் சிலையாகி நிற்கிறாள்.
 
வள்ளி தேவி மற்றும் 
காத்தாயி அம்மன்

இதில் ஒரு வேதனை என்ன என்றால் அந்த காலத்தில் வள்ளி தேவி மற்றும் அவளை மணந்து கொண்ட முருகப் பெருமான் குறவர்கள் இனத்துடன் தொடர்ப்பு கொண்டு இருந்ததினால் அந்தப் பழக்குடி மக்களில் வாழ்ந்திருந்த முருகனையோ அல்லது வள்ளியையோ மனதார குல தெய்வமாக ஏற்க  சிலருக்கு தயக்கம் இருந்தது. அவர்களை ஆகம வழியில் பூஜிக்கப்படாத தெய்வங்கள் என நினைத்தார்கள். ஆனால் அதே முருகனை சமிஸ்கிருத மொழியில் ஸ்கந்தன் என்றால் அதை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டார்கள்.  இந்த நிலை அந்தணர் மற்றும் அந்தணர் அல்லாதவர்கள் இடையே நிலவிய பேதத்தினால்  இன்னும் அதிகமாகியது.

கார்த்திகேயர்

வடநாட்டு ஸ்கந்த முருகன்   
  
Valli Teyvanai Samedha Sri Murugan

தமிழ் முருகன்   வள்ளி-தெய்வானையுடன்
                                                                                                                       
இந்த பூமியிலே நடைபெறும் தெய்வ சம்மந்தப்பட்ட அனைத்து  நிகழ்வுகளுமே  குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டவை.  மனிதர்களைப் படைத்ததும், அதே தெய்வங்களைப் படைத்ததும்  ஒரே பரப்பிரும்மனே என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே  எடுத்துக் காட்டி உள்ளதைப் போல ஒவ்வொரு வம்சத்துக்கும் பிரும்மனால் ஒவ்வொரு தெய்வ வழிபாடு தரப்பட்டு உள்ளது. அதை மனதார ஏற்றுக் கொள்வதே அவசியம். அவர்கள் வழி மூலமே வாழ்வுக்கு தேவையான அருள் கிடைக்கும் என்பது விதியாக இருக்கும்போது அலை பாயும் மனதுடன் இருப்பது ஏன்? இதை புரிந்து கொண்டால் மனம் தெளிவடைந்து விடும். 

 அந்த காலங்களில் வழிபடப்பட்ட தெய்வத்தின் சிலைகள் சில ஸ்வயம்புவாக தோன்றியவை, யாராவது ஒருவரால் எங்காவது கண்டு பிடிக்கப்பட்டு எடுத்து வந்தவை. இன்னும் சில மரங்களில் அடியில் வெறும் கற்களாக இருந்தவை. அதன் மீது ஒரு உருவம் வரையப்பட்டு இன்ன இன்ன தெய்வம் என்று கூறப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தவை என்பதெல்லாம் பிரும்ம நியதியினால் நிகழ்ந்தவையே ஆகும் .வெகு காலத்துக்குப் பிறகு தெய்வத்தின் வடிவமைப்பு தோன்றத் துவங்க, அந்த உருவங்கள் ஆராதிக்கப்பட்டு, அதே உருவிலான தெய்வ சிலைகள் பல ஆலயங்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணம் தெய்வங்களின் உருவ அமைப்பு ரிஷிகள் மூலம் மற்றும் முனிவர்கள் மூலமே வாய் மொழியாக கூறப்பட்டு அவர்கள் கூறிய வடிவமைப்பில் வெகு காலத்துக்குப் பிறகே சிற்ப சாஸ்திர முறையில் அமைக்கப்பட்டு இருந்ததுதான்.

ஸ்வயம்புவாக தோன்றிய தெய்வங்களின் சிலைகள் சிலவற்றில் உருவங்கள் இருந்தன. ஆனால் பலவற்றிலும் அவை யாரால் சிலை வடிவாக்கப்பட்டது என்ற விவரமே தெரியவில்லை. உதாரணமாக அங்கொன்றும், இங்கொன்றுமாக பூமிக்கு அடியில் புதைந்து கிடந்தவை கண்டு பிடிக்கப்பட்டபோது அவை எந்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை கூறினார்களே தவிர யாரால் வடிவமைக்கப்பட்டது என்பது விளக்கப்படாமல் உள்ளது. இதை எந்த ஆராய்ச்சியாளரும் விளக்க முடியவில்லை. வேத காலத்தில் கூட அதாவது கி.மு 1500 ஆண்டுகளில் சிலை அமைப்பு வடிவங்களில் தெய்வச் சிலைகள் இருந்ததாக தெரியவில்லை. யாகங்கள் மற்றும் பூஜைகள் மட்டுமே செய்யப்பட்டு வந்துள்ளன. உருவ அமைப்புக்கள் வெகு காலம் பொறுத்தே வந்துள்ளன.
........தொடரும்

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 8

$
0
0
8
குலதெய்வ வழிபாடு  என்பது இன்று நேற்றல்ல, மகாபாரத  மற்றும் இராமாயண  காலங்களில் இருந்தே நடைமுறையில்  இருந்துள்ளது என்பதும்,  தெய்வங்கள் எப்படி தம்மை தானாகவே வெளிப்படுத்திக்  கொள்ளும் என்பதற்கும் பல புராணக் கதைகள் உள்ளன.

மகாபாரத யுத்தம் முடிந்து தர்மர் ஆட்சியில் அமர்ந்தார்.  அவர் சுமார் 36 ஆண்டுகள் நாட்டை  ஆண்டு வந்தார். அவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் கிருஷ்ணர் துவாரகைக்கு சென்று விட்டார். அப்படி இருக்கையில் ஒருநாள் தர்மர் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு தன்னை நீக்கிக் கொண்டார் என்ற செய்தியைக் கேட்டு துயர் அடைந்தார்கள். கிருஷ்ணர் இன்றி  இனி தமக்கும் இந்த உலகில் வாழ அருகதி இல்லை என துயரம் கொண்டவர்கள் அவர்களது ராஜ்யத்தை அர்ஜுனனின் பேரனான பரிஷித்திடம் ஒப்படைத்து விட்டு தாங்களும் சிவபெருமானின் பாதங்களுடன் கலந்து சிவலோகப் பிராப்தி அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு தமது வாழ்க்கையை முடித்துக் கொள்ள இமயமலையை நோக்கி பயணம் செல்லத் துவங்கினார்கள். அவர்கள் அனைவருமே  ஆராதித்து வழிபாட்டு வந்திருந்தது சிவபெருமானே என்பதினால் சிவபெருமான் அவர்களுடைய வம்சத்துக்கு குல தெய்வமாகவே  இருந்தார்.


அவர்கள் இமயமலையை அடைந்தபோது அடர்ந்த காடுகளைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது.  அவர்கள் சென்று கொண்டிருந்த பாதை  அடர்ந்த காடு என்பதினால் தடம் மாறிச் சென்று மிருகங்களிடம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது என்ற கவலை அடைந்த சிவபெருமான்  அவர்கள் எப்போதெல்லாம் தவறான வழியில் நுழைய இருந்தார்களோ அப்போதெல்லாம் அந்த  தவறான பாதையை அடைப்பது போல மலையில் இருந்து உருண்டு விழும் பெரிய பாறைக் கல்லைப் போல விழுந்து அந்த பாதையை அடைந்துக் கொண்டு நின்றவாறு  அவர்கள்  மாற்று வழியில் செல்ல வழி வகுத்துக் கொண்டே இருந்தார்.

நடப்பது என்னவென்பதை அறியாமல்  'இதென்னடா மலை மீது இருந்து மீண்டும் மீண்டும் பாறை உருண்டு விழுந்து கொண்டிருந்தவாறு பாதையை மறைக்கிறதே'என தவறாக எண்ணிய பாண்டவ சகோதரர்கள் அந்த கற்பாறையை  தவிர்த்து விட்டு வேறு வழியில் நுழைந்து நடந்து   கொண்டே இருந்தார்கள். அப்படியாக நடந்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர்கள் நுழைய இருந்த தவறான பாதையை தடுக்க வேண்டும் என்ற நினைப்பில் மீண்டும்  சிவபெருமான் தன்னை மீண்டும் ஒரு பெரிய கல்லாக மாற்றிக் கொண்டு மேலிருந்து உருண்டு விழுந்து அவர்கள் சென்று கொண்டு  இருந்த பாதையை மறைந்து நின்றார்.

சிவபெருமானே உருண்டு விழுந்த 
பாறைகளாகி  பாதையை மறைத்தவாறு நின்றார் 

தனது சகோதரர்கள் மற்றும் திரௌபதியுடன் நடந்து கொண்டிருந்த பீமன் மேலிருந்து விழுந்த பாறைக் கண்டு கோபமுற்றார்.  தன்னை மறந்து கோபத்தில் அந்த பாறையை பிளக்க தனது கதையை ஓங்கியபோது அவர்கள் முன் சிவபெருமான் பிரசன்னமானார்.  தமது தவறை உணர்ந்த பீமனும் அவரது சகோதரர்களும் அப்படியே கீழே விழுந்து சிவபெருமானை நமஸ்கரித்து அவரிடம் மன்னிப்புக்  கேட்டார்கள். தமக்கு முக்தி தருமாறு அவரிடம் வேண்டினார்கள். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான் அவர்களுக்கு முக்தி தந்தப் பின் அங்கேயே சிவலிங்க உருவமாக மாறினார். அப்போது  பூர்வ ஜென்மத்தில் சாபம் பெற்று பூமியில் பிறந்து இருந்த திரௌபதி  சிவபெருமானைக் தரிசித்தவுடன் சாப விமோசனம் பெற்று அப்படியே மறைந்து போக பாண்டவ சகோதரர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். அவர்களை தேற்றிய சிவபெருமானும் அவர்களுக்கும்  சிவலோக பிராப்தி தந்தார். அடைந்து அது மட்டும் அல்ல இனி பாண்டவர்கள் வம்சத்தை சேர்ந்த பின் வழி வம்சத்தினர் திரௌபதியை அவர்களது  குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வாழ்வார்கள் என்ற அருளும் புரிந்தார்.  இப்படியாக அவர் அவர்களுக்கு காட்சி தந்த இடமே கேதார்நாத் ஆலயமாகும்.  அது மட்டும் அல்லாமல் அவர்களை சென்ற வழியை  மறைத்துத் கொண்டு தடுக்க அவர் எடுத்த உருவமான கற்கள் எல்லாம் அங்காங்கே சிவலிங்கம் ஆயின. அங்கெல்லாம் சிறிய ஆலயங்களும்  எழுந்தன.  இன்னும் சில கதையின்படி சிவபெருமானை தேடி அலைந்த பாண்டவர்களுக்கு சிவபெருமான் மாடாக காட்சி தர அவரை அடையாளம் கண்டு கொண்ட பீமன் அந்த மாட்டைப் பிடித்து அப்படியே பூமியில் அழுத்த அவனிடம் இருந்து தப்பிய மாட்டு உருவில் இருந்த சிவபெருமான் அங்கேயே சிவலிங்கமானார். அதுவே கேதார்நாத் சிவலிங்கம் என்றும் கூறுகிறார்கள்.

இப்படியாகவே தெய்வங்கள் தாம் எங்கெங்கு  தெய்வமாக அமர்ந்திருக்க வேண்டும் என நினைத்தனவோ அங்கெல்லாம்  தமக்கு  ஒரு ரூபத்தை எடுத்தன. அந்தந்த இடங்களில் அவர்களை ஆராதித்த வம்சங்களின் குல தெய்வம் ஆயின.

நிற்க பாண்டவர்கள் மறைந்தப் பின் அவர்களுக்கு இலங்கையில் மட்டக்கிளப்பு அருகில் உள்ள பாண்டி இருப்பு எனும் கிராமத்தில் ஒரு வழிபாட்டுத் தலமும்  அமைந்தது. அதை தாதன் கோவில் என்கிறார்கள்.  அந்த ஆலயம் எழும்பும் முன்னர் ஒரு காலத்தில் ஐந்து  சன்யாசிகள் ஒன்று சேர்ந்து கதிர்காமன் ஆலய தரிசனத்துக்காக இலங்கைக்கு சென்று கதிர்காமனில் வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டு இருந்தபோது ஒவ்வொருவரும் வழியில் இருந்த ஒவ்வொரு கிராமத்தில் தங்கி விட்டார்கள். அப்படி தங்கிய ஐந்து கிராமங்களில் அவர்கள் தமது குல தெய்வ வழிபாட்டிற்காக  சிறு கோவிலைப் போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அந்த கிராமத்தில் இருந்தவர்களுக்கு குல தெய்வ வழிபாட்டின் மேன்மையை விளக்கிக் கூறி குல தெய்வ வழிபாட்டை ஏற்க வைத்தார்கள்.  இப்படியாக ஒவ்வொரு இடத்திலும் ஐந்து ஆலயங்களை நிறுவிய ஐவரில் ஒரு சன்யாசி பாண்டி இருப்பிலும் திரௌபதியின் ஆலயத்தை நிறுவ அங்கிருந்த கிராம மக்களினால் திரௌபதியே குல தெய்வமாக ஏற்கப்பட்டாள். அவர் பாண்டவ வம்சத்தை சேர்ந்தவராம். இப்படியாக திரௌபதியை தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் எழுப்பிய ஆலயங்கள் பிற இடங்களிலும் தொடர்ந்தது. பின் வழி பாண்டவர்களின் பரம்பரையினர் தமிழ்நாடு, பெங்களுர் போன்ற பல இடங்களிலும் திரௌபதியின் ஆலயங்களை எழுப்பி உள்ளார்கள். அவளை குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

இதை கூறியதின் காரணம் பண்டைக் காலம் முதலேயே குல தெய்வங்கள் எப்படி ஏற்பட்டன மற்றும் தெய்வ உருவங்கள் எப்படி ஸ்வயமாக எழுந்துள்ளன என்பதை எடுத்துக் காட்டவே.

 திரௌபதி அம்மன் ஆலயம் 

திரௌபதி அம்மன்

குல தெய்வ வழிபாட்டை மனித உருவில் இருந்த தெய்வங்கள் கூட கடை பிடித்து வந்துள்ளன என்பதை வால்மீகி ராமாயணத்தில் காணலாம். ராவணனைக் கொன்ற பின் அயோத்தியாவுக்கு திரும்பிய ராமபிரான் விபீஷணனை இலங்கையின் அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டளை இட்ட பின்னர் இப்படியாகக் கூறினாராம் "விபீஷணா, ராவணனது ராஜ்யத்தில் கடைசி பிரஜைகள் உள்ள வரை நீயும் அதே இலங்கையில் இருப்பாய். இந்த பிரபஞ்சத்தில் சந்திர, சூரியன் உள்ளவரை, என் புராணம் உலகில் நிலவும் வரை, நீயும் உன்னுடைய ராஜ்யத்தில் ஸ்திரமாக இருந்தவாறு கடைசிவரை ராஜ்ஜியத்தையும் நல்லமுறையில் ஆண்டு கொண்டு இருப்பாய். இந்த கட்டளையை தட்டாமல் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரஜைகளை நெறி தவறாது நீதி பாலனம் செய். ராக்ஷஸ ராஜனே, நீ இக்ஷ்வாகு குல தெய்வமான ஜகந்நாதனை மறந்திடாமல் எப்பொழுதும் ஆராதனை செய்து வர வேண்டும். அவரே எங்கள் குல தெய்வமும் ஆகும்.''
.........தொடரும்

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 9

$
0
0
9
குலதெய்வங்கள் நகர மற்றும் கிராமப்புறங்களில் ஆலயங்கள் பல்வேறு பெயர்களில் அதாவது கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், சிறு ஆலயங்கள் போன்றவை மரத்தின் அடிகளில், நதி மற்றும் ஆற்றுப் பகுதி போன்ற இடங்களில் இருந்தன என்றாலும் அந்த தெய்வங்களும், தேவதைகளும் ஒரே தெய்வத்தில் இருந்து அனுப்பப்பட்டவையே. அவை சில குறிப்பிட்ட காரணங்களுக்காக சில இடங்களுக்கு அனுப்பப்பட்டவை. அவை அனைத்தும் ஒரே அளவிலான சக்திகளைக் கொண்டவை. அவை அனைத்துமே தம்மை ஆராதிக்கும் பக்தர்களின் வேண்டுகோட்களை மூல இடத்துக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து அவர்களுக்கு அருள் கிடைக்க வழி செய்பவை என்பதையெல்லாம் முன் பாகங்களில் விளக்கி உள்ளேன்.

ஒரு விதத்தில் பார்த்தால் அவை அனைத்துமே குறிப்பிட்ட தெய்வங்களின் நாடி நரம்புகள் என்று கூடக் கூறலாம். எப்படி ஒரு மனித உடம்பில் நரம்புகள் ஒன்றுடன் ஒன்று கலந்து ரத்தத்தை செலுத்தி உயிர் தருகிறதோ, எப்படி மனித உடலில் உள்ள எலும்புகள் இணைந்து செயல் திறனை தருகின்றனவோ அப்படித்தான் தெய்வங்களின் பல்வேறு அவதாரங்களும், கணங்களும் ஒன்று சேர்ந்து உள்ள அமைப்பே தெய்வ அமைப்பாகும்.


அது போலவேதான் மூலக் கடவுள் தன்னுடைய சக்தியை கோடிக்கணக்கான அணுக்களாக மாற்றி பல்வேறு காரணங்களுக்காக பல இடங்களிலும் அனுப்பி இருக்கிறார்கள். அவை அனைத்தும் கலந்ததே ஒரு தெய்வம் ஆகும். ஆகவே தெய்வங்களில்  மூல தெய்வம், அவதார தெய்வம், கிராம தெய்வம் என்ற வேறுபாட்டைக் காண்பது தவறாகும். தன்னுடைய இந்த அணுக்களைக் கொண்ட தெய்வம் இன்னின்னவற்றைக் காத்து வரவேண்டும், அதில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்பதான கட்டளையுடன் அவை அனுப்பப்படுவதினால் அவற்றை வழிபட்டு வந்திருந்த சந்ததியினர் அவற்றை விட்டு விலகினால், உதாசீனப்படுத்தினால் சொல்லொண்ணாத் துயரங்கள் ஏற்படுகிறது.  இதுவே குல தெய்வ வழிபாட்டின் தத்துவம் ஆகும்.

ஒவ்வொரு குல தெய்வமும் குடியிருக்கும் ஆலயத்தையும், வழிபாட்டுத் தலங்களையும் சுற்றி மறைந்து விட்ட பல சித்தர்களும் முனிவர்களும் தேவகணங்களாக மாறியிருந்து மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாமல் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அது போல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த இடத்தில் சில ரிஷி முனிவர்கள் தவம் செய்து கொண்டு இருப்பார்கள். அவர்களது உடல் அழிந்திருந்தாலும், அவை அங்கு தவத்தில் இருக்கும். அவர்களுடன் முன்னோர்களில் தெய்வ கணங்களாகி விட்டவர்களும் அங்கிருப்பார்கள். அவர்களும் மற்றவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் அனைவரும் அங்குள்ள தெய்வத்துக்கும், தேவதைகளுக்கும் பரிவார கணங்களாக இருக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளவர்கள். இப்படியாக அந்த இடத்தை சுற்றிக் கொண்டே இருக்கும் அவர்கள் அந்த தெய்வத்தை ஏற்றுக் கொண்டு அங்கு வழிபட வந்துள்ள பக்தர்களுக்கு  ஆசிகளை அளித்தபடி இருக்க பக்தர்களின் கர்ம வினைகள் விலகத் துவங்கும்.

கர்ம வினைகள் என்பதற்கு உருவம் உண்டா? அவை எப்படி மனிதர்களைத் தொடர்கின்றன? அவற்றுக்கு அளவு கோல் உள்ளதா?

ஒவ்வொரு மனிதரும் தத்தம் வாழ்க்கையில் பல விதங்களில் பாவங்களை செய்தவாறு  இருக்கும்போது அவர்களுக்கு ஏற்ப்படும் ஒவ்வொரு பாவமும் கர்மாவும் சிறிய சிறிய அணுக்களாகி அவரவர் உடலுக்குள் அமர்ந்து கொள்வதினால் லட்ஷக்கணக்கில் அவரவர் உடலில் கர்மாக்களின் அணுக்கள் அமர்ந்துவிடும். அவை வெளியேறும்வரை வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் தடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.

மனிதர்களுக்குள்ளே  தீய மற்றும்
 நல்ல அணுக்களிடையே நிகழும் போர்

அது போலவே அவரவர் செய்யும் புண்ணிய காரியங்களும் சிறு சிறு அணுக்களாகி உடலில் அமர்ந்து விடும். புண்ணிய காரியங்களை செய்ததினால் தோன்றும் புண்ணிய அணுக்கள் பாவங்களினால் ஏற்பட்ட அணுக்களை விரட்டியடித்துக் கொண்டே இருக்கும். ஆனால் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் உடலில் இத்தனை அணுக்கள்தான் வாழ முடியும் என்பது நியதியாக உள்ளது. அது ஒவ்வொருவருக்கும் இடையே அவரவர் படைப்பைப் பொறுத்து மாறுபடும். ஆகவே மொத்தம் இருக்க முடிந்த அணுக்களில் புண்ணியத்தினால் ஏற்படும் அணுக்கள் தீய அணுக்களை விரட்டி அடித்தவாறு இருப்பதினால் வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும், தர்மமும் நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதன் காரணம் மேலே கூறப்பட்ட அணுக்களின் செயலினால்தான்.

அணுக்கள் என்பதை இறைஜீவன்கள் என்பார்கள். அந்த இரண்டு வித அணுக்களும் மனித எண்ணங்களில் கலந்து விடுவதினால் பாவ அணுக்களை சுமப்பவர்களினால் நல்ல எண்ணங்களை நினைக்க முடியாமல்  தீய அணுக்கள் தடை போடுகின்றன. அது அவர்களை மேலும் மேலும் பாபங்களை செய்யத் தூண்டும். அதனால்தான் அந்த தீய எண்ணங்கள் கொண்ட அணுக்களை அகற்றி நல்ல எண்ணங்களைக் கொண்ட அணுக்களை சுமக்க வைக்க ஒவ்வொருவருக்கும் பக்தி, தியானம், யோகா மற்றும் ஆலய வழிபாடு போன்றவற்றை நிர்ணயித்து உள்ளார்கள்.

தர்ம காரியங்களை செய்யாதவர்களின் பாபங்கள் எப்படி விலகுகின்றன? பாவ அணுக்களை சுமந்து கொண்டு செல்லும் பக்தர்கள் பொதுவாக ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை மனதார வழிபடும்போது அங்குள்ள தெய்வங்கள் தமது சக்தியினால் பக்தர்களிடம் உள்ள தீய அணுக்களில் ஓரளவு பாவ அணுக்களை வதம் செய்கின்றன. அதனால் தற்காலிகமாக சென்று வழிபடுபவர்களின் மனம் அமைதி அடைகிறது.  ஆனால் பூரண அமைதி கிட்டுவதில்லை. அதே சமயத்தில் அந்த வழிபாட்டு தலங்களில்  உள்ள தெய்வங்களினால் அவரவருக்கு  பூர்வ வினையினால் ஏற்ப்பட்டிருந்த  தீய அணுக்களை அழிக்க முடியாது. அதற்காக உள்ளவை  அவர்களின் குல தெய்வங்கள். அவற்றை குல தெய்வங்களினால் மட்டுமே செய்ய இயலும்.

மேலே கூறியுள்ளபடி அவரவர் குல தெய்வ ஆலயத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்யும்போது அங்கு கண்களுக்குத் தெரியாமல் உலவிக் கொண்டு இருக்கும் அந்த குல தெய்வத்தின் பரிவார தேவதைகள் மற்றும் சித்தர்களும், அந்தந்த பரம்பரையினரின் இறந்து போன, பாபங்கள் அகன்று தேவ கணமாகிவிட்டிருந்த முன்னோர்களும் அந்த பக்தர்களின் பாவ அணுக்களை தம்மிடம் கிரகித்துக் கொண்டு அவர்களுக்கு நிகழும் தீமைகளைக் குறைக்கும் விதத்தில் தம்மிடம் உள்ள நல்ல அணுக்களை அவர்களுக்குள் செலுத்துகின்றன. அந்த பரிவார கணங்களுக்கும் சித்தர்களுக்கும் ஒவ்வொரு நாளும் இத்தனை இத்தனை பாவ அணுக்களை தம்முள் கிரகித்துக் கொண்டு அவற்றை மீண்டும் நல்ல அணுக்களாக்க மாற்ற இயலும் என்ற சக்தி இருக்கும். அது அவர்களுக்கு தெய்வம் கொடுத்துள்ள வரம்.


ஆகவேதான் ஒருவர் எத்தனை முறை குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வழிபடுவார்களோ அத்தனைமுறையும் அங்கு கண்களுக்குத் தெரியாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் அந்தந்த பரம்பரையின் தெய்வ ஆத்மாக்களும், சித்தர்களும் அவர்களிடம் உள்ள பாவ அணுக்களை கிரகித்துக் கொண்டு தம்மிடம் உள்ள நன்மை தரும் அணுக்களை அவர்களுக்குள் அனுப்பி வைப்பதினால், பாவ அணுக்கள் அவர்களிடம் இருந்து குறையத் துவங்கி, நன்மை தரும் அணுக்கள் அவர்கள் உடலில் புகுந்து கொள்ள அவர்களது வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும், வாழ்வில் வளமும் அதிகமாகும். அதனால்தான் குல தெய்வ வழிபாடு முக்கியம் என்பார்கள்.

அப்படி என்றால் மற்ற ஆலயங்களில் சென்று வழிபடும் பக்தர்களுடைய பாபங்கள் அகலுவதில்லையா என்பது அடுத்த கேள்வியாகும். ஒவ்வொருவருக்கும் இரண்டு விதங்களிலான பாபங்கள் உள்ளன. முதலாவது  சுமந்து வந்த பாபங்கள்,  இரண்டாவது உடன் வரும் பாபம் என்பது. சுமந்து வந்த பாபம் என்பது பூர்வஜென்ம வினைப்பயனால் ஏற்படும் நிலை. இரண்டாவது வாழும்போது அவரவர் செய்யும் நன்மை மற்றும் தீமையினால் ஏற்படுபவை. முதல் வகையிலான பாபங்களை அதை அகற்றும் சக்தியுடன் அனுப்பப்பட்டுள்ள குல தெய்வங்களினால்  மட்டுமே அகற்ற முடியும் என்பது தெய்வ நியதி. ஆகவே  மற்ற ஆலயங்களில் உள்ள எத்தனை சக்தி  தெய்வத்தினாலும் அவற்றை நிவர்த்தி செய்ய இயலாது.  இப்படிப்பட்ட தெய்வ நியதியினால் உடன் வரும் பாபம், அதாவது அவ்வபோது தாம் செய்யும் தீய காரியங்களினால் தம்மிடம் அமர்ந்துள்ள பாவ அணுக்களை மட்டுமே வழிபடப்படும் பிற தெய்வங்களினால் அகற்ற முடியும். அவர்களினாலும் அவற்றை முற்றிலுமாக அகற்றிக் கொள்ள முடியாது. ஓரளவு மட்டுமே தற்காலிகமாக  நிவர்த்தி செய்து  கொள்ள முடியும். அவற்றை முற்றிலுமாக விலக்க  வேண்டும் எனில்,  இன்னென்ன பாவ அணுக்களை துரத்த இத்தனைக் காலம் தேவை என்ற கணக்கு இருப்பதினால் வேண்டுதல் செய்ய ஆலயத்துக்கு செல்பவர்களை குறிப்பிட்ட கால வகையிலான விரதங்கள், பூஜைகளை செய்யுமாறு கூறுவார்கள். அதே சமயத்தில் அந்த பாபங்களின் விளைவுகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள குல தெய்வத்தையே நாட வேண்டும்.

அப்படி என்றால் பிற ஆலயங்களில் சென்று வழிபடும் பக்தர்களுடைய பாபங்கள் அகலுவதில்லையா? குல தெய்வத்திடம் சென்று பிரார்த்தனை செய்து கொண்டால் அத்தனை பாப அணுக்களும் ஒரேடியாக அழிந்து விடும் என்பது நிச்சயமானதா? அப்படி என்றால் குல தெய்வ ஆலயம் சென்று வழிபடுபவர்களுக்கும் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுகிறதே , அது ஏன்? பிறந்த அனைவருக்குமே குல தெய்வம் உண்டா?  அப்படி குல தெய்வம் இல்லாதவர்களின் கர்ம வினைகளை அகற்றுவது யார் ?  ஒரு குல தெய்வத்தை எத்தனை குலங்களோ அல்லது பரம்பரையினரோ வழிபட முடியும்? அதற்கு கட்டுப்பாடு உள்ளதா? குல தெய்வம் இல்லாதவர்கள் உண்டா? அவர்கள் யாரை வழிபடுகிறார்கள்? இதை அடுத்த பாகத்தில் விளக்குகிறேன்.
 
ஒருமுறை கிருஷ்ண பகவான் உத்தவ முனிவருக்கு கூறினார் 'முனிவரே அவரவர் செய்த கர்ம வினையினால் ஏற்படும் பாபங்களை சுமந்து கொண்டு செல்லும் மனிதர்களுடைய கர்ம வினையை அகற்றும் பொறுப்பு அவரவர் சார்ந்த தெய்வங்களுக்கே தரப்பட்டு உள்ளது. அதில் தலையிட மற்ற தெய்வங்களுக்கு அதிகாரம் கிடையாது என்பதினால், மற்ற தெய்வங்கள் அந்த மனிதர்களுடைய வாழ்க்கையில் வெறும் சாட்சி பூதமாக மட்டுமே  நின்று கொண்டு இருக்கும்'.  அப்படி என்றால் சாட்சி பூதம் என்ற நிலை என்ன?

....தொடரும் 

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 10

$
0
0
10
அப்படி என்றால் பிற ஆலயங்களில் சென்று வழிபடும் பக்தர்களுடைய பாபங்கள் அகலுவதில்லையா?
 
 நான் அப்படிக் கூறவில்லை. எந்த ஒரு ஆலயத்திலும் சென்று வழிபட வேண்டியதில்லை என்பது அர்த்தம் அல்ல.  மானிடர்களாகப்  பிறந்த அனைவருக்கும் குல தெய்வம் உள்ளது என்பதும் அர்த்தம் அல்ல. பல பரம்பரைகள் குல தெய்வங்கள் இல்லாதவை. அவர்கள் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் அல்லது எந்த ஆலயத்திலும் சென்று வழிபடலாம். அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்கு அந்தந்த தெய்வங்கள் நிவர்த்தி செய்யலாம். ஆனால் அவற்றையும் அந்த தெய்வங்களினால் முழுமையாக நிவர்த்தி செய்ய இயலாது என்பதின் காரணம் அவரவர் செய்துள்ள பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களுக்கேற்ப அவற்றின் பலனை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும் என்பது நியதி.
 
அந்த காலத்தில் எந்த ஒரு பரம்பரையிலும் முதல் ஐந்து  பரம்பரையினர்  எந்த தெய்வத்தை வழிபட்டு வந்துள்ளார்களோ அந்த தெய்வமே அந்த பரம்பரையின் குல தெய்வம் ஆகும் என்பதை ஏற்றுக் கொண்டு இருந்தார்கள். ஐந்து என்பதின் காரணம் ஐந்து விரல்களைக் கொண்டதே ஒரு முழுமையான கை ஆகும். அருள் பொழியும் அந்தக் கையின் சைகை மூலமே தெய்வங்களின் ஆசி கிடைப்பதினால் முதல் ஐந்து பரம்பரையினர் என்ற நியதி வந்திருந்தது. சாதாரணமாக எந்த ஒரு பரம்பரையினருமே 13 வம்சங்களுக்கு மேல் வம்சாவளியினரைக் கொண்டிராது என்பது ஒரு நடைமுறை உண்மையாக உள்ளது. யாருக்கு குல தெய்வம் இருக்கும், யாருக்கு குல தெய்வம் இருக்காது என்பது கீழே உள்ள அட்டவணைப் பார்த்தால் புரியும்.



ஆனால் குல தெய்வம் என ஒரு தெய்வத்தை ஏற்றுக் கொண்டுள்ள பரம்பரையினர் அவரவர் குல தெய்வங்களை உதாசீனப்படுதும்போது குல தெய்வத்தின் அனுமதி இல்லாமல் பிற தெய்வங்களினால் அந்த பரம்பரையினருக்கு  நேரும் கஷ்டங்களில் எந்த ஒரு முழுமையான நிவர்தியையும் தர இயலாது.

ஒவ்வொருவருக்கும் இரண்டு விதங்களிலான பூர்வ ஜென்ம கர்மாக்கள் அமைத்துள்ளன அவை:
  • மூதையோர் செய்திருந்த பாப புண்ணியங்களின்  விளைவினால் எழும் நன்மை தீமைகள்.
  • அவரவர் வாழ்கையில் செய்திருந்த பாவ புண்ணியங்களின் விளைவினால் ஏற்படும் நன்மை தீமைகள்.
மூதையோர் செய்திருந்த பாப புண்ணியங்களுக்கு  பின் வழி சந்ததியினர் எப்படி பொறுப்பாக முடியும்? மூதையோர் செய்திருந்த பாப புண்ணியங்களுக்கு பின் வழி சந்ததியினர்களுக்கு ஏன் தண்டனை தர வேண்டும் ?  அதற்கான காரணத்தை தத்தாத்திரேயர் தன்னை நாடி வந்த யதுகுல மன்னன் ஒருவனுக்கு கொடுத்த விளக்கத்தில் காண முடியும்.

கிருஷ்ண பரமாத்மாவின் முந்தைய காலத்திலேயே  தெய்வ வழிபாடுகள் இருந்துள்ளன என்பதற்கு  தத்தாத்திரேயர் அவதாரம் ஒரு உதாரணம்.  அவர் யோக புருஷராக வாழ்ந்திருந்து பலராமர் முதல் பலருக்கும் அருள் பாலித்து இருக்கிறார் என்பது அவர் வாழ்க்கை சரித்திரத்தைப் படித்தால் தெரியும்.  அவர் கிருஷ்ணருக்கும் முற்பட்ட காலத்தை சார்ந்தவர்.  ஒருமுறை அவர் தனது பக்தரின் வீட்டில் நடைபெற்ற வருடாந்தர திவசத்தில் ஒரு புரோகிதராக சென்று போஜனம் செய்து அந்த அந்தணரின்  முன்னோர்களின் ஆத்மா  சாந்தி அடைய அருள் புரிந்தவர் . 

அவர் அவதரித்து இருந்த  காலத்தில் யதுகுல மன்னன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் ஆழ்ந்த ஆன்மீக ஞானம் கொண்டவன். சில காலம் ஆட்சியில் இருந்தவனுக்கு காரணம் இன்றி  மனதில் அமைதி இல்லை. அவன் குடும்பத்திலும் அமைதி இல்லை. அவன் ஆண்ட ராஜ்யத்திலும் குழப்பம். யாராவது ஒருவர் எனக்குள்ள சங்கடங்களுக்கான காரணத்தைக்  எடுத்துரைக்க மாட்டார்களா என யோகிகளை தேடி அலைந்தான். அவனை குரு தத்தாத்திரேயரை தேடி அலைந்து அவரிடம் சரணடைந்து அவன் படும் வேதனைகளுக்கான காரணத்தை தெரிந்து கொள்ளுமாறு அவனது ராஜ குருக்கள் கூற அவன் தத்தரை தேடி பல காலம் இடம் இடமாக அலைந்தான். பார்வதியின் அவதாரமான ரேணுகா தேவி என்பவளே அவனது மூத்தோர்கள் வணங்கி வந்திருந்த தெய்வம்.  அவளே லோக மாதா. ஸ்தூலம், நிராகாரம் மற்றும் ஜேஷ்ட எனும்  மூன்று சரீரங்களைக்  கொண்டவள்.  அவளை தத்தத்திரேயரை படைத்தவளுமான சக்தி தேவி. முடிவாக பெரும் சோதனைக்குப் பிறகு தத்தாத்திரேயரை கண்டுபிடித்து அவரிடம் முழுமையாக சரண் அடைந்து தனது மன அமைதிக்கு வழி கேட்டான்.


தத்தர் கூறலானார் 'யதுகுல மன்னனே, நீ யார் என்பதை   முதலில் புரிந்து கொள். உன்னுடைய  மன அமைதிக்குக் காரணம்   என்ன?  உள்ளுக்குள்ளே உள்ள அந்தராத்மாவும், அதை இயக்கும் சக்தியான எண்ணங்களையும் தவிற மற்ற அனைத்தும்  தசைகளுடன் கூடிய ஒரு  உடலே.  அந்த  தசைப் பிணமோ  மேலும் மேலும் பல உடல்களை தேடி ஓடிக் கொண்ட வண்ணம் உள்ளது.  இன்னமும் வேண்டும், இன்னமும் வேண்டும்  என  ஜடப்  பொருட்கள் மீது வைத்து  விட்ட அளவற்ற பற்று, அளவற்ற ஆசை அதன் கடமையை மறக்க வைத்து விட்டது.  இதுவே உனக்குள்ளும் உள்ளது, உன் மூதையோர்களிடமும் இருந்தது. ஒவ்வொரு வம்சத்துக்கும்  ஒவ்வொரு தெய்வக் கடமை உள்ளது. உலகப் பற்று அதைக் கூட மறக்கடித்து விடுவதினால்தான் அந்த தெய்வங்களின் சாபத்தினால் அவர்கள் பிற்கால சந்ததியினர் மகிழ்ச்சியற்ற வாழ்கையை மேற்கொள்ள வேண்டி உள்ளது.

முதியோர் பாவ புண்ணியங்கள் செய்திருந்தாலும் அவரவர் வம்சாவளியாக வழிபட்டு வந்திருந்த தெய்வங்களை வழிபடாமல் அவர்களை  அவமதிப்பது போல உதாசீனப்படுத்தினால் அந்த தெய்வங்களின் சாபத்துக்கு ஆளாகும் அவர்களின் மரணத்துக்குப் பிறகு அவர்களது சந்ததியினர் தண்டிக்கப்படுவார்கள். அதற்கு  தண்டனையாக அந்த தெய்வங்கள் தருவது என்ன தெரியுமா? அவர்களது சந்ததியினரின் வாழ்க்கையில்  முன்னோர்களின் தெய்வ அவமதிப்பிற்கான பாவச் சுமையை அது ஏற்றும்.

உன் மன அமைதிக்கு  காரணமும்  உன்னுடைய மூதையோர்களான யதுகுல மன்னர்கள் என் அன்னையான ரேணுகா தேவியை வணங்க மறுத்து  அவமதித்ததுதான். உதுகுல மன்னனே, உன்னுடைய நல்ல கர்ம வினையினால் நீ என்னை நாடி வந்துள்ளாய். நான் யார் என்பது உனக்கு தெரிய வேண்டுமா....இப்போது கூறுகிறேன் கேள்....'என்று கூறியபடி அவர் தன்னை பற்றிக் கூறத் துவங்கினார்.

அவர் காலடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறக் கூற அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தவன் தன்னை மறந்தான், தன மூத்கையோர் செய்திருந்த பிழைகளை உணர்ந்தான். தனது அமைதியின்மைக்கான காரணமும் புரிந்தது.  இனி அதை தன்னால் நிவர்த்திக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.  மனதில் மெல்ல மெல்ல அமைதி தோன்றியது.

இது எடுத்துக் காட்டுவது என்னவென்றால் ஒவ்வொரு சந்ததியினரும் அடையும்  மன வேதனை, வாழ்க்கைத் துயர் மற்றும் எண்ணற்ற சோதனை மற்றும் வேதனைகளின் பாதி காரணம்   அவர்களது முன்னோர்கள் செய்த தெய்வப் பிழையினால் வந்தவைதான்.  தம் குடும்பத்தினர் அவதிப்படும்போது எப்படி தாய் மற்றும் தந்தையினால் அந்த கொடுமையை பார்த்துக் கொண்டு இருக்க முடியும்? அதனால்தான் மரணம் அடைந்து விட்டவர்களின் ஆத்மாக்கள் தாம் செய்த தெய்வ அவமதிப்புக் குற்றத்தினால் தம் சந்ததியினர் அனுபவிக்கும் வேதனைகளைக் கண்டு, அவர்களது குடும்ப மகிழ்ச்சிக்காக தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என  யமலோகத்தில் நரக வேதனையில் மனம்  புழுகியபடி  கிடப்பார்கள்.

அவரவர் செய்த பாவ புண்ணிய  பலன்களோடு
முதையோர்  மூலம் வந்த கர்ம வினைகளையும் 
சுமந்து  செல்பவர்கள் எண்ணற்ற 
துன்பங்களை அனுபவிக்க  நேரிடுகிறது

சோதனையிலும் வேதனையிலும் உழலும் மரணம் அடைந்து விட்ட ஆத்மாக்களின்  சந்ததியினர் வாழ்க்கையில் வெறுப்புற்று தமது முன்னோர்களுடைய ஆத்மா சாந்தி அடைந்து நல்ல கதி அடைய வேண்டும் என்ற நினைப்பை தன்னுள் வளர்த்துக் கொள்வது இல்லை, அவர்களது வேதனையில் முதியோர் நினைவு கூட அவர்கள் உள்ளத்தில் இருந்து மறையத் துவங்கும்.  அவரவர் தமது வாழ்க்கைப் போராட்டத்திலேயே இருந்து வருவார்கள். வருடாந்திர திதிகளைக் கூட எதோ ஒரு தீராத கடமை போல செய்வதினால், அந்த திதியின் பயன் கூட அந்த ஆத்மாக்களின் நற்கணக்கில் போய்  சேருவதில்லை என்பதினால் யமதேவன்  அந்த ஆத்மாக்களை நல்ல விதமாக நடத்துவதில்லை. 

இதனால் மரணம் அடைந்து மறு பிறப்பு எடுக்கும்வரை அல்லது தேவகணமாகும்வரை   அந்தரத்தில் ஆத்மாக்களாக  சுற்றி அலைந்து கொண்டிருப்பவை  தமது சந்ததியினர் மன வேதனையுடன் வாழ்வில் வசந்தம் இன்றி துடிக்கும்போது அவர்கள் படும் வேதனையை  துடைக்க தம்மால் உதவிட முடியவில்லையே, அதனால் தமக்கும் அவர்களால் உதவி கிட்டவில்லையே  என அலறித் துடிக்கும்.

 தமது சந்ததியினர் படும் வேதனையை 
துடைக்க  முடியவில்லையே  என 
மேல் உலகில் சுற்றித் திரியும்  மூதையோர் 
ஆத்மாக்கள் துடிதுடிக்கும் 

அகவே யமவதை தாங்க முடியாமல் துடிக்கும் ஆத்மாக்கள்   தாம் உயிருடன் இருந்தபோது உதாசீனப்படுத்திய தெய்வத்திடமே தமது பிழையை மன்னித்து அருளுமாறு வேண்டிக் கொள்ளும். தாம் உதாசீனப்படுத்திய அந்த தெய்வங்களை  தமது சார்ப்பில் தமது சந்ததியினர் வழிபட்டு தாம் செய்த பாபங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய அவர்களுக்கு  அருள் புரிய வேண்டும் என  வேண்டி நிற்கும்.

தொடர்ந்து அந்த ஆத்மாக்கள் வேண்டிக் கொண்டே இருக்கும்போது அதைக் கண்டு அந்த தெய்வங்களும்  மனம் இறங்கி அவர்களுக்கு கருணைக் காட்டும் விதத்தில் துடிதுடித்து அலையும் ஆத்மாக்களின் சந்ததியினருக்கு சில சமிக்கைகளை அனுப்பி அவர்களுக்கு நல் வழிப்பாதையை காட்டி தம்மை சரணடையுமாறு கூறும். அதைப் புரிந்து கொண்டு  அந்த  சந்ததியினர் தம் முன்னோர்கள் உதாசீனப்படுத்தி வந்திருந்த அவர்களது   வம்ச தெய்வத்தை மீண்டும் வணங்கத் துவங்கி ஆராதிக்கும்போது  அந்த வம்சத்து தெய்வமும் மனம் இறங்கி வந்து அவர்கள் சுமக்கும் முன்னோர்களின் கர்ம வினையை அவர்கள் வாழ்வில் இருந்து அகற்றும். அதன் மூலம் அந்தந்த சந்ததியினருக்கு முன்னோர்களினால் ஏற்பட்ட   பாவ பளுக்கள் குறையும்.

முன்னோர்கள் பெற்றிருந்த தெய்வ சாபங்களினாலும், அவர்களது கர்மாக்களினாலும் ஏற்படும் பாவச் சுமைகள் ஒருவர் வாழ்வில் குறைந்தாலே வாழ்க்கையில் ஏற்படும் பாதி துன்பங்களும் துயரங்களும் குறைந்து விடும். மீதி பாதி வாழ்வு  நிம்மதியில் அமைந்திருக்கும்.

அதே நேரத்தில் அந்தந்த ஆத்மாக்களின் சந்ததியினர் செய்யும் குல தெய்வ பிரார்த்தனை அவர்களது முன்னோர்களின் ஆத்மாவுக்கும் யமதேவனால் தரப்படும் வேதனைகளை குறைக்க வைக்கும்.  அந்தந்த ஆத்மாக்களின் குல தெய்வங்களின் கட்டளையை மீற முடியாத யமதேவரும் அந்த ஆத்மாக்களை அவர்களுக்குள்ள விதிப்படி  மீண்டும் மறுபிறவி எடுக்கச் செல்ல அனுமதிப்பார், அல்லது அவை தேவகணமாகி அவர்களது வம்ச தெய்வங்களின்   சேவையில் ஈடுபடச் செல்ல அனுப்பி வைப்பார்.

அதனால்தான்  மேலுலகில் திரியும் மூதையோரின் சந்ததியினர் அவர்களது வம்ச குல தெய்வங்களை அந்தந்த ஆலயங்களில் சென்று வணங்கித் துதிக்கும்போது அங்கு சுற்றித் திரியும்  முன்னோர்களது ஆத்மாக்கள் அவர்களை  சூழ்ந்து கொண்டு அவர்களுடைய தீய கர்மாவெனும் அணுக்களை கிரகித்துக் கொண்டு, தம்மிடம் உள்ள நல்ல அணுக்களை அவர்களுக்குள்  செலுத்த அந்த ஆத்மாவின் சந்ததியினர் வாழ்வில் ஆனந்தம் அடையத் துவங்குவார்கள்'.   
மூதையோர் மூலம் ஏற்பட்டிருந்த பாவ மூட்டைகளை 
குல தெய்வம் முழுமையாக  அகற்றி விடுகிறது.  அதன்  பின் 
அவரவர்  செய்திருந்த பாபா புண்ணியங்களுக்கு ஏற்பவே 
வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் நேரிடும் 

குல தெய்வத்திடம் சென்று பிரார்த்தனை செய்து கொண்டால் அத்தனை பாப அணுக்களும் ஒரேடியாக அழிந்து விடும் என்பது நிச்சயமானதா? அப்படி என்றால் குல தெய்வ ஆலயம் சென்று வழிபடுபவர்களுக்கும் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுகிறதே, அது ஏன்?

குல தெய்வ ஆராதனை செய்கையில் முன்னோர்களினால் ஏற்பட்டிருந்த பாவச் சுமைகள் முற்றிலும் அழியும். ஆனால் அதை பிற தெய்வங்களினால் செய்ய முடியாது என்பது தெய்வ நியதியாகும்.  பிற தெய்வங்களை சென்று ஆராதிக்கையில் அவரவர்  துன்பங்கள்  குறைவது  போல உணரலாம்.  மனதில் அமைதி கிடைக்கலாம். சில கர்மாக்கள் விலகலாம்.   ஆனால் அவை அனைத்துமே  தற்காலிகமான நிலையே. ஆனாலும்   மீண்டும் மூதையோர்களின் தெய்வ அவமதிப்பினால் ஏற்பட்ட  பாவச் சுமை அவர்களது  வாழ்க்கையில் அவர்களை துரத்திக் கொண்டே இருக்கும். முன்னோர்களினால் ஏற்பட்டிருந்த பாவச் சுமைகளை குலதெய்வ வழிபாட்டினால் மட்டுமே அகற்ற முடியும்.  அதே நேரத்தில் குல தெய்வ ஆராதனை செய்தாலும் அவரவர் செய்திருந்த பூர்வ ஜென்ம கர்மாக்களின் பலனை இந்த ஜென்மாக்களில் அவரவர்  அனுபவித்தே ஆக வேண்டும்.

அவரவர் செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கேற்ப நேரிடும் துன்பங்களைக் குறைத்து குடும்ப அமைதி நிலவுவதற்கு குல தெய்வத்திடம் சென்று முறையிடும்போது அவை அந்த கர்மாக்களின் விளைவாக ஏற்படும் துன்பங்களை குறைக்கும், அவற்றை எளிதாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை தரும். அந்த கர்மாவின் விளைவினால் உடல் நலம் பாதிக்கப்பட்டால், உடல் ரோகமுற்றால் அவற்றின் அவதி காலத்தை தன் சக்தியைக் கொண்டு குறைத்திடும். அதற்கான விதி முறைகள் என்னென்ன, அவை எப்படி ஏற்படுகின்றன என்பதெல்லாம் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்பதினால் அதன் விளக்கத்தை   இதோடு முடித்துக் கொள்கிறேன். 
.............தொடரும்

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 11

$
0
0
11
குலதெய்வத்தைக் குறித்த சந்தேகத்துக்கான விடையை திரேதா யுகத்தில் ஏகலவ்யனகரா என்ற ராஜ்யத்தை ஆண்டு வந்த ஸ்ருதாதாரா என்ற கந்தர்வ புருஷனுக்கு சிவபெருமானே கூறியதான கதை உண்டு.

திரேதா யுகத்தில் ஏகலவ்யனகரா என்ற ராஜ்யத்தை ஸ்ருதாதாரா என்ற கந்தர்வ புருஷன் ஆண்டு வந்தான். அவன் பரம்பரையினர் சிவபெருமானின் பக்தர்கள். வம்சவம்சமாக சிவபெருமானை வழிபட்டு வந்தார்கள். பெரும் கொடையாளிகளாகவும் இருந்தார்கள். பூமியை ஆண்டாலும் அவர்களால் கந்தர்வ லோகத்திலும் இருக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் அவனுடைய பாட்டனார் காலத்தில் அவர்கள் சிவ வழிபாட்டை மறந்து தாமே கந்தர்வ புருஷர்கள், இனி அவர்கள் யாரையும் வழிபடத் தேவை இல்லை, தாங்கள் செய்யும் தர்மமும், தானமும் தங்களைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் பல காலம் சிவபெருமானின் நினைவே இல்லாமல் இருந்து விட்டார்கள். அவருக்கு செய்ய வேண்டிய பாராம்பரிய வழிபாடுகளை மறந்தனர். 

இப்படியாக இருந்த பரம்பரையில் அவர்களின் பின் வழியில் வந்த வம்சத்தை சேர்ந்தவனே ஏகலவ்யனகரா ராஜ்யத்தை ஆண்டு வந்த ஸ்ருதாதாரா எனும் இன்னொரு கந்தர்வ புருஷன். அவனுக்கு சத்யதாரா மற்றும் சீலாதாரா என்ற இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஸ்ருதாதாரா மரணம் அடைந்த பின்னர் அவரது மகனான சீலாதாராவை இன்னொரு மகனான சத்யதாரா விரட்டி அடித்து விட்டு ஆட்சியைக் கைபற்றிக் கொண்டான். தந்தையின் மரணத்துக்குப் பின் சத்யதாரா மற்றும் சீலாதாரா என்ற இருவரும் கந்தர்வ புருஷ நிலையில் இருந்து சாதாரண மானிடர் நிலைக்கு வந்திருந்தார்கள்.

சீலாதாராவுக்கு சிவபெருமானை
வேண்டி தவம் செய்யுமாறு
முனிவர் அறிவுரை தந்தார்

சீலாதாரா தனது சகோதரனிடம் இருந்து தப்பி ஓடி காட்டிற்கு சென்று அங்குமிங்கும் சுற்றி அலைந்தபடி என்ன செய்வது என்ற வழி தெரியாமல் அலைந்து கொண்டு இருந்தான். அப்போது அவன் அசிதேவ மகரிஷி என்ற முனிவரை சந்தித்தான் (புராணங்களில் இம்முனிவர் பெயர் வேறு சில இடங்களில் காணப்படுகின்றது. அவரே அகஸ்திய முனிவரின் முன் பிறவி என்றும் சிலர் கூறுகிறார்கள்). அவரிடம் சீலாதாரா தனது நிலையைக் கூறி அழுததும் அவர் கொடுத்த அறிவுரைப்படி அந்த வனத்தில் பல காலம் இருந்தபடி சிவபெருமானை வழிபாட்டு வர அவன் தவத்தினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அவன் முன் தோன்றினார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை அவன் சிவபெருமானிடம் கூறி அழுதபோது அவர் கூறினார் 'மகனே உனக்கு வந்துள்ள கஷ்டம் எல்லாம் உன்னுடைய பரம்பரையினர் செய்த தவறினால் வந்தவைதான். உன் முந்தைய பரம்பரையினர் காலம் காலமாக என்னை வழிபட்டு வந்திருந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் உன்னுடைய தந்தை வழி பாட்டனார் என்னை அவமதிப்பது போல என்னை முற்றிலும் உதாசீனப்படுத்தி விட்டு தன் இச்சையாக வாழ்ந்து வந்தார். எவன் ஒருவன் இப்படி தான் வணங்கி வந்த தெய்வத்தை உதாசீனப்படுத்துவார்களோ அவர்கள் தனது பெற்ற தாயாரையே உதாசீனப்படுத்தியது போலாகும். ஆகவே அவர்களுடைய அடுத்த ஏழு சந்ததியினருக்கும் நல்ல வாழ்க்கை அமையாது.

நான் உன்னுடைய முந்தைய பரம்பரையை காத்து வந்தவன் என்றாலும் அவர்களில் சிலர் என்னை அவமானப்படுத்துவது போல உதாசீனப்படுத்தினார்கள். ஆகவேதான் உங்கள் குடும்பத்தின் இந்த நிலைமையும். ஆனால் நீ அந்த தவறை உணர்ந்து என்னை வேண்டி தவம் இருந்துள்ளாய். ஆகவே உன்னுடைய மூதையோரில் சிலர் என்னை உதாசீனப்படுத்தியதினால்தான் நீங்கள் இந்த துயரங்களை அனுபவிக்கிறீர்கள் என்றாலும் என்னை வேண்டி நீ மனதார பிரார்த்தனை செய்ததினால் உனது வம்சத்தினர் அனுபவிக்கும் துயரங்கள் உன் இந்த பிறவியுடன் முடிவடையும் என அருள் புரிகிறேன். நீயும் அடுத்த ஜென்மத்தில் ஒரு அரசனாக பிறப்பாய். உன்னை நாட்டை விட்டு துரத்திய உன் சகோதரனும் உன்னுடன் பிறப்பான். அந்த ஜென்மத்தில் நீ அவனை வஞ்சம் தீர்ப்பாய். அதோடு உங்களுடைய வம்சத்துக்கு ஏற்பட்ட சாபமும் தீரும். நீயும் கந்தர்வ புருஷனாகி விடுவாய்'என்று ஆசிர்வதித்தப் பின் மறைந்து விட்டார். அடுத்தகணம் சீலாதாரா மரணம் அடைந்தான். அதே நேரத்தில் ராஜ்யத்தில் ஆண்டு வந்திருந்த அவனது சகோதரன் சத்யதாராவும் ஒரு கயவனால் கத்திக் குத்தப்பட்டு மரணம் அடைந்தான்.

 
அடுத்த பிறவியில் சீலாதாராவும், சத்யதாராவும் மீண்டும் பூமியில் இரண்டு ராஜ்யத்தில் அரசர்களாகப் பிறந்தார்கள். சீலாதாரா ஒரு ராஜ்யத்தில் பீமபாதா என்ற பெயரில் ராஜ்யத்தை ஆள, சத்யதாராவும் சாமரபத்ரா எனும் பெயரில் அரசன் ஆயினான். அடுத்த சில காலத்திலேயே அவர்களுக்கு இடையே மூண்ட யுத்தத்தில் இருவருமே காட்டுப் பகுதியில் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு போய் சண்டை இட்டபோது பீமபாதா அவனை துரத்தி வந்த சகோதரனான சாமரபத்ராவைக் கொன்றான். அவன் மடிந்து விழுந்ததும் பீமபத்திரா ஒரு யானையாக மாறி விட்டான். அப்படி அவன் யானையாக மாறியதும் அவன் முன் சிவபெருமான் தோன்றிக் கூறினார் 'பீமபத்ரா நீ முன் பிறவியில் சீலாதார என்பவனாக இருந்தாய். உன் பூர்வ ஜென்ம பரம்பரையினர் என்னை உதாசீனப்படுத்தியதினால் ஏற்பட்ட கர்ம வினைகள் அனைத்தும் உனக்கு இதோடு மறைந்து விட்டது. இனி நீ மீண்டும் கந்தர்வ புருஷனாக மாறி இன்னொரு பிறப்பு எடுத்து ஒரு ராஜ்யத்தின் மன்னனாவாய். அப்போது நீ மீண்டும் உனது குலத்தினர் வணங்கி வந்திருந்த தெய்வமான என்னை மீண்டும் வழிபடத் துவங்குவாய். மீண்டும் நானும் உனது குலத்தைக் காத்து வந்திருந்தபடி வாழ்வில் மகிழ்ச்சியை கொடுப்பேன்'என ஆசிர்வதித்து விட்டு சென்று விட்டார். இது எடுத்துக் காட்டுவது என்ன என்றால் ஒரு பரம்பரையினர் தொடர்ந்து வழிபட்டு வரும் தெய்வமே ஒருவரது பரம்பரை தெய்வமாகி விடுகிறது. அதுவே அவர்களது குல தெய்வம் என்பதாகி விடுகிறது. அதை உதாசீனப்படுத்தினால் அவர்கள் வம்சத்தினர் துயரங்களை அனுபவிப்பார்கள் என்பதையே.
.............தொடரும்

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship -12

$
0
0
12
குல தெய்வ வழிபாடு என்பது எத்தனை முக்கியமானது என்பதை வலியுறுத்தும் இன்னொரு முக்கியமான கதையையும் சமாதியாகி விட்ட காஞ்சி மகாபெரியவா வாழ்க்கை சரித்திரத்தில் இருந்து அறிய முடிகிறது.



............ ''பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி, ''சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.

குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.

சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”

சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”

ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”

அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”

ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”

அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”

காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”

அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?” - பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது. இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.

ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.

(நன்றி :http://rightmantra.com/?p=4396 )


இவை அனைத்தையும் படிக்கையில் எந்த உண்மை புலப்படுகிறது? காலம் காலமாக பல்வேறு நிலைகளில் வளர்ந்து  வந்துள்ள குல தெய்வ வழிபாட்டுக்குப் பிறகுதான் வேறெந்த தெய்வ வழிபாடும் இருக்க முடியும் என்பதும், குல தெய்வ வழிபாட்டை உதாசீனப்படுத்துவது குடும்பத்தில் அமைதி இன்மை மற்றும் துன்பங்களை கொண்டு சேர்க்கும் என்பதே.

முற்றும் 

The origin of Sringeri Saradha Peedam

$
0
0
சிருங்கேரி சாரதா பீடம் 
ஸ்தாபிக்கப்பட்ட வரலாறு

சாந்திப்பிரியா  



பகவான் ஸ்ரீ ஆதி சங்கரர் வடநாட்டில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கு சங்கர மடங்களை ஸ்தாபனம் செய்தப் பின் தென் நாட்டு யாத்திரையை மேற்கொண்டு கொண்டு இருந்தார். அப்போது சிருங்கேரி அருகில் துங்கா நதிக்கரையில் அமர்ந்திருந்த அவர் அந்த நதிக் கரையில் ஒரு நாகமும் தவளையும் இருந்ததைக் கண்டார். அடுத்து ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கர்ப்பிணித் தவளை ஒன்று ஒரு குஞ்சை பிரசவித்து இருந்தது. கடுமையான வெய்யிலினால் தாய் தவளையும் அதன் குஞ்சுத் தவளையும் தவிப்பதைக் கண்ட நாகம் ஓடோடி அதன் அருகில் சென்று அவற்றின் மீது வெயில் படாமல் இருக்குமாறு குடைப் போல தன் தலையை விரித்து படமெடுத்து நின்றது. சற்று நேரம் கழிந்தப் பின் அதன் பின் அந்த தவளையும் நாகமும் அங்கிருந்து சென்று விட்டன. தவளையை கண்டால் அதைப் பிடித்து விழுங்கி விடும் நாகம் அதற்குக் குடை பிடித்து நின்ற இடம் தெய்வீகம் நிறைந்த இடமாக இருக்க வேண்டும் என அந்த அதி அற்புதமான காட்சியைக் கண்ட சங்கரர் நினைத்தார்.



சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்து தமது ஞான திருஷ்டியினால் அந்த இடத்தில்தான் மாமுனிவரான ரிஷ்யசிங்கரின் ஆத்மா பல்லாயிரம் வருடங்கள் ஆன பின்னும் அங்கேயே ஸ்திரமாக இருந்துகொண்டிருப்பதை கண்டார். அந்த அருள் ஒளியினால் அங்கு தெய்வீகம் நிறைந்துள்ளதைக் கண்டு தென் திசையில் தாம் தவமிருந்து மடத்தை ஸ்தாபிக்க சரியான இடம் அதுவே என்பதையும் உணர்ந்தார். பன்னிரண்டு ஆண்டுகள் அங்கேயே தவமும் இருந்தார். தென் பகுதியில் ஒரு சங்கர மடத்தையும் நிறுவினார்.  இப்டியாகத்தான் சங்கர மடங்களில் ஒன்றாக சிருங்கேரி மடமும் ஸ்ரீ ஆதி சங்கரால் ஸ்தாபிக்கப்பட்டது. 

 அங்கு ஸ்ரீ ஆதி சங்கரருக்குப் பின்னர் அவருடைய முதல் சீடராக ஸ்ரீ சுரேஸ்வராச்சாரியார் எனும் குரு அந்த மடத்தின் குருபீடத்தில் அமர்ந்தார். அபார ஞானம், தூய பக்தி மற்றும் பல்வேறு நற்குணங்களைக் கொண்டிருந்த குரு ஸ்ரீ சுரேஸ்வராச்சாரியாரின் மனைவியான பாரதி மீது ஸ்ரீ ஆதி சங்கரர் மட்டற்ற மரியாதையும் நல்லெண்ணமும் அன்பும் கொண்டிருந்தார். அந்த மேன்மையான குரு பரம்பரையை வெளிப்படுத்தும் விதமாகவே எட்டாம் நூற்றாண்டு முதல் இன்றளவும் சிருங்கேரி மட குருமார்கள் தமது பட்டப் பெயரில் 'பாரதி தீர்த்த'எனும் பட்டதை சூட்டிக் கொள்வது வழக்கமாக அமைந்தது .
Viewing all 460 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>