திருப்பூவண ஆலய மகிமையைக் குறித்து சூதகர் மேலும் கூறலானார் ''திருப்பூவணத்தில் சிவலிங்கம் ஸ்வயம்புவாகத் தோன்றியதற்கு ஒரு காரணக் கதை உள்ளது. அதைக் கூறுகிறேன் கேளுங்கள்'' எனக் கூறிவிட்டு அதைக் கூறலானார். '' பார்வதியை மகளாக அடைந்த தக்க்ஷன் ஒருமுறை பிரும்மாவின் ஆலோசனைப்படி சிவபெருமானை துதித்துப் கடும் தவம் செய்து அறிய பல வரங்களைப் பெற்றான். அதன்படி அவனுக்கு பார்வதி தேவி மகளாகப் பிறக்க வேண்டும் என்றும் அவள் பிறந்து சிவபெருமானை மணந்தப் பின் அவனுக்கு யாராலுமே மரணம் கிடையாது என்றும் அவன் உலகின் முக்கியத்துவம் பெற்றனாக இருப்பான் என்றும் அவன் நடத்தும் எந்த ஒரு பூஜையிலும், யாகத்திலும் அவனுடைய குடும்பத்தினரே முன்னிலை பெற்று இருப்பார்கள் என்றும் அவர்கள் அளிக்கும் அவிர் பாகத்தை அதிதியாக வந்து முதலில் சிவபெருமானே பெற்றுக் கொள்வார். அவர் வராமல் போனால் அதை பார்வதியே பெற்றுக் கொள்வாள் என்றும் வரம் பெற்றுக் கொண்டான்.
ஒருமுறை சிவபெருமானின் கோபத்தினால் பார்வதி சாபம் பெற அதை நிவர்த்தி செய்து கொண்டு மீண்டும் அவரை மணந்து கொள்ள அவள் இன்னொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அந்த சாபத்தினால் அவள் தக்க்ஷனின் ஆட்சிப் பகுதியில் ஒரு தாமரைத் தடாகத்திலே மலராக இருந்து கொண்டு இருக்க ஒருநாள் அதைப் பறித்த தக்க்ஷனின் கையில் குழந்தை வடிவமாக அவள் மாறிவிட பெண்ண குழந்தை அற்ற அவனும் அந்தக் குழந்தையின் அழகில் மயங்கி அதிக சந்தோஷத்துடன் அவளை தன் பெண்ணாக தத்து எடுத்துக் கொண்டான். அதுமுதல் பார்வதி தக்க்ஷனின் மகளாகவே வளர்ந்தாள்.
அவள் வளர்ந்து பெரியவளாகி சிவபெருமானை துதித்து அவரை மணந்து கொண்டாள். அதன் பின் நடந்த பல நிகழ்ச்சிகளினால் சிவபெருமான் மீது கோபம் அடைந்த தக்க்ஷன் அவரை நிந்திக்கலானான். சிவபெருமானை தன்னை சார்ந்த யாருமே வணங்கக் கூடாது என உத்தரவு இட்டான். (முனிவர்களுக்கு சூதர் தக்க்ஷனின் கதையை விவரமாக எடுத்துரைத்தார். ஆனால் அந்தக் கதையை அனைவரும் அறிவார்கள் என்பதினால் நான் இதில் சுருக்கமாக எழுதி உள்ளேன்-சாந்திப்பிரியா). அதன் பின்னர் அவன் நடத்திய யாகத்துக்கு சிவபெருமானை அழைக்காமல் அவமானப்படுத்த, சிவபெருமானின் அறிவுரையையும் மீறி பார்வதி யாகத்துக்குச் சென்று அங்கு அவமானப்பட்டாள். அவமானத்தினால் துக்கம் அடைந்தவள் யாகத் தீயில் விழுந்து மரணமடைய அதனால் கோபமுற்ற சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பி தக்க்ஷனின் யாகத்தை அழித்து அவனையும் கொன்றார். அப்போது அனைவர் முன்னாலும் ஒரு முக்கிய சந்தேகம் எழுந்தது. பார்வதி தக்க்ஷனுக்குப் பிறந்து சிவபெருமானை மணந்தப் பின் அவனுக்கு யாராலுமே மரணம் கிடையாது என்று சிவபெருமான் கொடுத்த வரம் என்ன ஆயிற்று? சிவபெருமான் வரம் கொடுத்தது பொய்யா என தேவர்களும் அனைவரும் குழம்பியபோது அங்கிருந்த திருமால் சிவபெருமானை வணங்கி துதித்து தன்னுடைய சகோதரியின் தந்தைக்கு உயிர் பிச்சைக் கொடுக்குமாறு வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவனாரும் அறுத்து எறியப்பட்ட தக்க்ஷனின் தலையில் ஆட்டுத் தலையைப் பொருத்தி அவனுக்கு உயிர் கொடுத்தார்.
தக்க்ஷனுக்கு மரணத்தை அளித்த வீரபத்திரரே
அவன் ஆட்டுத் தலைப் பெற்று உயிர் பெற்றதும்
ஆசிகளை வழங்கினார்
ஆனால் சிவபெருமானின் ஆணையை மீறி பார்வதி தக்க்ஷனின் யாகத்துக்கு சென்றதினால் அவளுக்கு பத்தினியை அவமதித்த தோஷம் ஏற்பட்டது. அதற்கு பிராயசித்தம் செய்து கொண்டால்தான் அவளால் மீண்டும் சிவபெருமானுடன் இணைந்து வாழ முடியும் என்பதினால் சிவபெருமான் அவளை திருப்பூவணத்தலத்தில் சென்று தன்னை துதித்து சில காலம் தவத்தில் இருந்து தன்னை பூஜித்தால் அங்கு தான் ஒரு லிங்க உருவில் அவள் முன்னால் தோன்றி அவளை மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்வதாக உறுதி கொடுத்தார். அதனால் பார்வதியும் திருப்பூவணத்தலத்தில் வந்து அங்கு ஒரு பாரிஜாத மரத்தை வளர்த்து அதன் அடியில் அமர்ந்து கொண்டு சிவனை வேண்டித் தவம் இருந்து பூஜிக்க சிவன் அங்கு ஒரு லிங்க உருவில் அவள் முன்னாள் தோன்றி அவளை மீண்டும் கரம் பிடித்தார். ஆகவேதான் இங்கு ஸ்வயம்புவாக எழுந்துள்ள சிவலிங்கம் மிகவும் மகிமை வாய்ந்தது என்றும் இதுவே திருப்பூவணத்தலத்தில் எழுந்துள்ள சிவலிங்கத்தின் கதை'' என்று சூதகர் கூறினார்.
.........தொடரும்