-1-
இந்த ஆலயம் இரண்டாம் குலோதுங்க சோழனால் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்துக்கு இரதினகிரி என்ற பெயரைத் தவிர மாணிக்க மலை, சிவாய மலை, ஐயர்மலை என்று வேறு பெயர்களும் உண்டு. தற்போது மக்கள் வழக்கில் இந்த மலைப் பகுதி ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. பாண்டவ சகோதரர்கள் ஐந்துபேரும் தமது வனவாசத்தின்போது இந்த மலையில் வந்து தங்கியதினால் இந்த மலைக்கு ஐவர் மலை அதாவது ஐந்து சகோதரர்கள் என்ற பெயர் வந்ததாம். அதுவே காலப்போக்கில் ஐயர் மலை என்றாயிற்று.
மலை உச்சியில் அமைந்துள்ள ரத்னகிரீஸ்வரர் ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் சுமார் 1017 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். ரத்னகிரீஸ்வரர் ஆலயம் பல கதைகளை உள்ளடக்கிக் கொண்டது. புராணப் பெருமை பெற்றுள்ள ஸ்தலமாகும். 'காலைக் கடம்பர், மத்தியான சொக்கர், அந்தி திருவேங்கி நாதர்'என்பது கிராமியப் பழமொழி ஆகும். அது ஏன் அப்படிக் கூறப்படுகிறது என்றால் காலை வேளையில் குளித்தலையில் கடம்பவனநாதரை தரிசனம் செய்தப் பின், மதியம் சிவாயமலை எனப்படும் ஐயர் மலையில் சொக்கநாதரை தரிசனம் செய்தப் பின், அந்திப் பொழுதில் (மாலை) ஈங்கோய் மலையில் வேங்கிநாதரை சென்று வணங்க வேண்டும் என்பது ஐதீகம் ஆகும்.
இந்த ஆலயத்தின் மேன்மையை இப்படியாக கூறலாம்:-
1) தமது குல தெய்வம் யார் என்பது தெரியாதவர்கள் இங்குள்ள ரத்னகிரீஸ்வறரை தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு பூஜிக்கலாம். இறைவன் அதற்கு அப்படிப்பட்ட சக்தியை தந்துள்ளாராம்.
2) இங்குள்ள சன்னதியில் பாலைக் காய்ச்சாமல் நெய்வித்தியம் செய்தப்பின் ஸ்வாமிக்கு முன் வைத்து விட்டுச் சென்றால் மறுநாள் அந்தப் பால் கெடாமல், மாறாக தயிராக உறைந்து இருக்குமாம். இந்த அதிசயத்தை வேறெங்கும் காண முடியாதாம்.
3) இந்த மலை மீது யாரையாவது பாம்பு தீண்டினாலும் அதன் விஷம் உடலுக்குள் ஏறாதாம். இது இன்னொரு அதிசயம்.
4) இந்த மலை மீது எந்த ஒரு காகங்களையும் காண முடியாது. அதற்கான காரணக் கதை ஒன்று உள்ளது.
இங்குள்ள சிவபெருமானை ஐயர்மலை ரத்னகிரீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். பொதுவாக இந்த ஆலயம் நாட்டார்கள் எனப்படுபவர்களில் பன்னிரண்டாம் செட்டியார் எனப்படும் பிரிவினர் தமது குல தெய்வ ஆலயமாகவே கருதி போற்றி வணங்கும் ஆலயம் என்றாலும், ஜாதிப் பிரிவினை இன்றி பிற பிரிவினரும் இங்குள்ள ரத்னகிரீஸ்வறரை வழிபட்டு வணங்கி வருகிறார்கள். ஒரு காலத்தில் சமண முனிவர்கள் பலர் காவிரிபூம்பட்டினம் என அன்று கூறப்பட்டு வந்திருந்த இந்த பகுதியில் வந்து மலைகள் மீதிருந்த பல குகைகளில் தவத்தில் இருந்துள்ளார்கள் என்பது வரலாறு. அதனால்தானோ என்னவோ இந்த மலையிலும் சமண முனிவர்கள் தவமிருந்த குகைகள் சில காணப்படுகின்றன.
இந்த மலை தோன்றிய வரலாறும் தேவலோகத்துடன் சம்மந்தப்பட்டதுதான். ஒருமுறை வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் கடும் போர் மூண்டது. அப்போது ஆதிசேஷன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மேரு மலையை சற்றே அசைத்து அங்கு ஒரு இடத்தை அமைத்துக் கொண்டு அந்த மேரு மலையின் அடியில் மறைந்து கொண்டது. அதைத் தேடி வந்த வாயுதேவன் அந்த மலையை பிளக்க அந்த மலை ஐந்தாக உடைந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்துக்கு பறந்து சென்று விழுந்தன. அதில் ஒரு பகுதியே இந்த ரத்னகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மலை என ஆயிற்று. மேரு மலை சிவபெருமானை சார்ந்தது என்பதினால் அதை உடைத்த குற்றத்தை செய்த வாயுதேவன் சிவபெருமானின் சாபத்தைப் பெற்றார். ஆகவே அந்த சாபத்தை போக்கிக் கொள்ள தமக்கு உதவிடுமாறு வாயுதேவன் சிவபெருமானை வேண்டிக் கொள்ள அவரும் வாயு தேவனை வாட்போக்கி (அப்போது இதன் பெயர் வாட்போக்கி என்பதல்ல. அந்தப் பெயர் வந்ததின் காரணக் கதை வேறு உண்டு)எனப்படும் இந்த இடத்துக்குச் சென்று அங்கு வந்து தம்மை வணங்கி துதிக்குமாறு கூற வாயுதேவனும் வாட்போக்கிக்கு வந்து அங்கு ஒரு தீர்த்தம் அமைத்து அதில் பல காலம் நீராடி அங்கேயே தவமிருந்து சிவபெருமானை துதித்து அவர் அருளைப் பெற்று சாப விமோசனம் பெற்றார். இப்படியாக வாயு பகவான் அமைத்த தீர்த்தம் ஒன்று அங்கு உருவானது.
வாயுதேவன்
சிவாயம் மலைப் பிளவில்
சப்தகன்னிகைகளுடன் உள்ளே துர்க்கை
.............தொடரும்