வெள்ளைவேப்பிலை
மாரியம்மன்ஆலயம்
சாந்திப்பிரியா
நான் சமீபத்தில் மாயவரம் சென்று இருந்தபோது இரண்டு அற்புதமான ஆலயங்களைக் கண்டேன். யாருமே எளிதில் நம்ப முடியாத காட்சியுடன் இருந்தது அந்த ஆலயங்கள். இரண்டு இடங்களில் வெள்ளை இலைகளைக் கொண்ட வேப்ப மரத்தின் அடியில் மாரியம்மன் குடி இருக்கிறாள். இரண்டுமே கிராமங்கள்.
முதலாவது ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து திருவாடுதுறை ஆதீனம் செல்லும் வழியில்- ஆடுதுறை செல்லும் சாலையில் மாயவரத்தில் இருந்து சுமார் 17 கிலோ தொலைவில் உள்ள மல்லர்பெட் எனும் கிராமத்தில் இருந்தது. அங்குள்ள மாரியம்மனை 'வெள்ளை வேம்புமாரியாம்மன் 'எனும் பெயரில் அழைக்கிறார்கள். அந்த ஆலயத்தில் ஆலமரத்தைப் போல மிகப்பெரிய வேப்ப மரம் உள்ளது. அதில் ஒரு பக்கம் முழுவதும் வெள்ளை வெளேர் என இலைகள் இருக்க மறு பக்கத்து இலைகள் பச்சை பசேல் என இருந்தனவாம். முன்னர் வெள்ளை இலைகளைக் கொண்டு இருந்த வேப்ப மரத்தின் ஒரு வெள்ளை இல்லை பக்கக் கிளை பட்டுப் போய் இருந்தது. ஆனால் அதன் இன்னொரு கிளையின் வேர் பூமியில் இருந்து சற்று தள்ளிப் போய் பெரிய மரமாக வளர்ந்து இருந்தது. அதன் அடியில் தெற்கு நோக்கிப் பார்த்தபடி மாரியம்மன் அமர்ந்து இருக்கிறாள்.
பட்டுப் போய் இருந்த கிளையின் முறிந்திருந்த பாகம்
மாரியம்மனைப் போல காட்சி அளிக்கிறது
ஆலய மாரியம்மனின் எதிரில் சுமார் பத்து அடி தள்ளி அவளுக்கு எதிரில் அமர்ந்து உள்ள சிம்ம வாகனத்தின் அடி பகுதியில் இருந்த வெள்ளை இலை வேப்ப மரம் பட்டுப் போன மரம் பூமியின் மீது படுத்த நிலையில் தற்போது மரம் உள்ள இடம்வரை சென்று அங்கிருந்து மீண்டும் பெரிய மரமாகி வளர்ந்து உள்ளதாம். ஆகவே அதன் மீதே கல்லினால் ஆன தரைப் போட்டு மரத்தை மூடி அம்மனின் வாகனத்தை வைத்து உள்ளார்கள்.
தெற்கு நோக்கிப் பார்த்து அமர்ந்திருக்கும் மாரியம்மன் வேறு எங்குமே கிடையாது. இங்குள்ள மாரியம்மன் உக்கிரக கோலத்தில் இல்லாமல் யோக வடிவில் யோகா மாரியம்மனாக இருக்கிறாள் என்பது கூடுதல் விசேஷம். இருக்கிறாள். அதன் காரணம் அவளை அங்கு வந்து வணங்கிய சித்தர்கள் அவளை யோக வடிவில் காண ஆசைப்பட்டு இருந்திருக்கிறார்கள். உடல் நலமின்றி இருப்பவர்கள் அந்த வெள்ளை வேம்பு இலையை உண்டால் வியாதிகள் குணம் ஆகி வந்ததினால் அந்த வெள்ளை இலையை பலருக்கும்பிரசாதமாக தந்து வந்துள்ளார்கள். ஆகவே பலரும் அங்கு வந்து இலைகளை பெற்றுக் கொண்டு சென்றதினால் மரம் பட்டு விட்டதாக கூறுகிறார்கள்.
இங்கு வந்து குழந்தை பாக்கியம் பெற வேண்டினால் எத்தனை ஆண்டுகள் குழந்தைகள் இல்லை என்றாலும் குழந்தை பிறக்கும் என்கிறார்கள். இந்த மாரியம்மன் அத்தனை சக்தி உள்ளவளாம். பட்டுப் போய் இருந்த கிளையின் முறிந்திருந்த பாகம் மாரியம்மனைப் போல காட்சி அளிக்கிறது ஒரு அதிசயம்.
அந்த ஆலய பூசாரியான திரு வீரமணி எனும் பூசாரியின் தகவலின்படி அந்த வேப்ப மரம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஒரு நதியோரம் அமர்ந்திருந்த மாரியம்மன் சுயம்பு தேவியாகும். அந்த வெப்ப மரத்தின் அடியில் பல சித்தர்கள் தவத்தில் இருந்து இருக்கிறார்கள். திருமூலர் எனும் சித்தர் இங்கு வந்து வழிபாட்டு தவத்தில் இருந்திருக்கிறார். தற்போது நதி விலகி சென்று விட, ஆலயத்தின் எதிரில் மஞ்சனாறு எனும் பெரிய நீர் வாய்க்கால் எனும் நதி ஓடுகிறது. அது வீரசோழன் நதியின் கிளை நதியாகும். அந்த மரத்தின் முந்தைய புகைப்படம் - வெள்ளை வெளீர் என்ற இலைகளுடன் இருந்த படம்- ஆலயத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
அங்கிருந்து கிளம்பி மயிலாடுதுறை கும்பகோணம் மெயின் ரோடு வழியில் உள்ள திருவலன்காடு எனும் இடத்துக்குச் சென்று இரண்டாவது வெள்ளை வேப்பிலைக்காரி ஆலயத்தை பார்த்தோம். அங்கு எங்களை திகைக்க வைக்கும் வகையில் அங்குள்ள வேப்ப மரத்தின் அடியில் பாலைப் போன்ற வெள்ளை நிறத்தில் வேப்ப இலை கொத்துக் கொத்தாக இருந்தன. அதைவிட இன்னோர் அதிசயம் அங்கிருந்து சுமார் பத்தடி தூரத்தில் இருந்த இன்னொரு வேப்ப மரத்தின் அடியில் இருந்த இலைகள் மஞ்சளைப் போல மஞ்சள் நிறத்தில் இருந்தத்கைக் கண்டு அதிசயமாக இருந்தது. சிறு குறுகலான வழியில் இருந்த கிராமத்துக்கு உள்ளே ஒரு பெரிய வயல் வெளியில் இருந்தது அந்த ஆலயம். அதையும் வெள்ளை வேப்பிலை மாரியம்மன் என்றே கூறுகிறார்கள். இளம் பச்சைக் கூட இல்லாமல் வெள்ளை வெளீர் என்று கொத்து கொத்தாக வேப்ப இலைகள் இருந்ததைக் கண்டு வியந்து நின்றோம்.
அந்த ஆலயத்தின் கதையும் சுவையானது. மல்லார்பேட்டையில் இருந்த மரத்தின் வெள்ளை இலையை வியாதிகளைக் குணப்படுத்தும் இலையாக கருதி அதை மாரியம்மனின் பிரசாதமாக மக்கள் பறித்துக் கொண்டு சென்றதினால்ப தனது உடல் முழுவதும் ரணமாகி விட வேதனை அடைந்த மாரியம்மன் சமயபுரம் மாரியம்மனை சந்தித்து அவளிடம் அழுதாளாம். அவளும் அந்த வெள்ளை வேப்பிளைக்காரிக்கு அங்கிருந்து இடத்தில் அமர்ந்து கொண்டு விடுமாறு அறிவுறுத்த வெள்ளை இல்லை வேப்ப மரத்தின் அடியில் குடியிருந்த மாரியம்மன் அங்கிருந்து கிளம்பி இங்கு வந்து அமர்ந்து கொண்டாளாம்.
ஆனால் அவள் தனியாக இருப்பதை விரும்பாத அவளது மூத்த சகோதரியான இன்னொரு மாரியம்மன் அவளுக்குக் காவலாக தானும் அங்கு வந்து தங்கினாளாம். அவள் தங்கி இருந்த வேப்ப மரத்தின் இல்லை மஞ்சளாக காட்சி தருகிறது. அவளை மஞ்சள்பூ பாவாடைக்காரி என்று அழைக்கிறார்கள்.
வெள்ளை இலைகளைக் கொண்ட வேப்ப மரம்
அதன் அருகில் உள்ள பாம்புப் புற்றில் ஐந்து தலை நாக உருவில் அவர்கள் இருவரும் வசிக்கிறார்களாம். எந்தவிதமான விளம்பரமும் இன்றி இந்த இடத்து ஆலயத்தை திருமதி சாவித்திரி எனும் பெண்மணி அமைதியாகப் பாதுகாத்து வருகிறார்.
(சிறு குறிப்பு:நான் முன்னரே அம்மன்களில் பல அம்மன்கள் உண்டு என்பதை எழுதி உள்ளேன். பார்வதியின் ஒரு அவதார கோலமே மாரியம்மன் என்பவள். ஆகவே சமயபுரம் மாரியாம்மனுடைய குடும்பத்தை சேர்ந்த அனைவருமே மாரியம்மன் எனப்படுவர். அவர்கள் பல இடங்களில் குடி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மாரியம்மனின் விசேஷ சக்தி அனைத்த்கும் உண்டு.பார்வதியே மாரியம்மனாக பல அவதார ரூபங்களில், முக்கியமாக கிராம தேவதையின் உருவில் காணப்படுகிறாள் என்பது புராணக் கதைகளில் உள்ளன ).